இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

0
1

நைஜல் ஃபராஜ் மற்றும் Reform UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.

பிரிட்டிஷ் அரசியலைப் பற்றி எழுதும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் ஒருவராக நைஜல் ஃபராஜை குறிப்பிடாமல் முன்னேற முடியாது.

ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஆட்சியில் இருந்தால்தான் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டியதில்லை. சிலர் எதிர்க்கட்சியில் இருந்தபடியே நாட்டின் அரசியல் திசையையே மாற்றிவிடுவார்கள். நைஜல் ஃபராஜ் அப்படிப்பட்டவர்.

அவர் பிரிட்டிஷ் அரசியலின் மையக் கேள்விகளாக மாற்றியவை குடியேற்றம், தேசிய இறையாண்மை மற்றும் பிரிட்டிஷ் அடையாளம்.

பல ஆண்டுகளாக இந்தக் கருத்துக்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்டாலும், அவற்றை பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாற்றியவர்களில் ஃபராஜுக்கு முக்கியமான இடமுண்டு.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பலர் அரசியல் கனவாகவே கருதினர்.

ஆனால் அந்தக் கனவு மக்களின் வாக்காக மாறியது.

பிரெக்சிட் வாக்கெடுப்பின் பின்னணியில் ஃபராஜ் வகித்த பங்கு, பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயமாகவே இருக்கும்.

பிரெக்சிட்டிற்குப் பிறகு அவரது அரசியல் முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தனர்.

ஆனால் அரசியலில் வெற்றிடங்கள் நீண்ட காலம் காலியாக இருப்பதில்லை.

மக்களின் புதிய அதிருப்திகளை உணர்ந்த ஃபராஜ், ரீபோர்ம் யூகே என்ற கட்சியை தேசிய அரசியலின் முக்கிய சக்தியாக மாற்றத் தொடங்கினார்.

ரீபோர்ம் யூகேவின் பலம் என்ன ?

எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு.

மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவதில்லை.

ஆனால் அவர்கள் தாங்கள் கேட்கப்படவில்லை என்று உணரும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியைத் தேடுகிறார்கள்.

இன்று ரீபோர்ம்ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது இதுவே.

வாழ்க்கைச் செலவு உயர்வு…

வரி சுமைகள்…

குடியேற்றம் தொடர்பான கவலைகள்…

தேசிய சுகாதார சேவையின் நீண்ட காத்திருப்பு…

அரசியல்வாதிகளின் மீது குறைந்து வரும் நம்பிக்கை…

பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பகுதி மக்களிடையே உருவாகிவரும் அச்சம்…

இந்த அனைத்தையும் ஒரே அரசியல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது Reform UK.

அவர்கள் பேசும் மொழி மிகவும் நேரடியானது.

அரசியல் அலங்காரச் சொற்கள் குறைவு.

அதனால்தான் பாரம்பரிய அரசியலில் விரக்தியடைந்த சில வாக்காளர்களை அவர்கள் ஈர்க்க முடிகிறது.

2024 பொதுத்தேர்தலில் Clacton தொகுதியில் ஃபராஜ் 21,225 வாக்குகளைப் பெற்று, 46.2% வாக்கு பங்குடன் வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜைல்ஸ் வாட்லிங்ஸ் 12,820 வாக்குகளைப் பெற்றார்.

அது ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல.

“ரீபோர்ம் யூகேஐ இனி புறக்கணிக்க முடியாது” என்ற அரசியல் செய்தியாகவும் அது அமைந்தது.

ரீபோர்ம் யூகேவின் பலவீனம் என்ன ?

ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் மற்றொரு உண்மையையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

மக்களின் கோபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு விஷயம்.

ஒரு நாட்டை நிர்வகிப்பது வேறு விஷயம்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொள்கைகளை விமர்சிப்பது எளிது.

ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முடிவும் பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பாதிக்கும்.

அங்கேயே எந்த புதிய அரசியல் இயக்கமும் தனது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டும்.

ரீபோர்ம் யூகே இன்னும் அந்தச் சோதனையை முழுமையாக எதிர்கொண்டதாக நான் கருதவில்லை.

ஒரு அரசியல் கட்சியின் உண்மையான வலிமை, அது எவ்வளவு சத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்பதில் மட்டும் இல்லை.

அதிகாரம் கிடைத்தால் அந்த எதிர்ப்பை நடைமுறை அரசாக மாற்றும் திறன் அதற்கு இருக்கிறதா? என்பதில்தான் உள்ளது.

£5 மில்லியன் விவகாரம்  ஃபராஜின் அரசியலைச் சூழ்ந்த புதிய கேள்வி

இங்கேதான் நைஜல் ஃபராஜின் சமீபத்திய அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

2024ஆம் ஆண்டு, ரீபோர்ம் யூகேக்கு நிதியுதவி செய்த கிரிப்டோ முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹாபோர்ன் என்பவரிடமிருந்து ஃபராஜ் £5 மில்லியன் பெறுமதியான தனிப்பட்ட பரிசைப் பெற்றார்.

இது சாதாரண அரசியல் நன்கொடை விவகாரம் அல்ல.

ஏனெனில், அந்தத் தொகை தொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

ஃபராஜ் ஆரம்பத்தில், இந்தப் பணம் தனது வாழ்நாள் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்காக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

பின்னர் அவர் அதனை Brexit-க்காக மேற்கொண்ட தனது அரசியல் முயற்சிகளுக்கான ஒரு வகையான “பரிசு” எனவும் விளக்கியுள்ளார்.

இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

விசாரணை நடைபெறுவது என்பது ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டார் என்பதல்ல.

ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வழங்கப்பட்டது, அது ஏன் உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை, நாடாளுமன்ற விதிகளுக்கு அது உட்பட்டதா என்பவை நிச்சயமாக பொதுமக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளாகும்.

மேலும், இந்த விவகாரம் வெறும் அரசியல் வதந்தியாக இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளை கண்காணிக்கும் அமைப்பின் விசாரணைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

இதன் காரணமாக ஃபராஜின் அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது:

“அதிகார வர்க்கத்தைஎதிர்த்து பேசும் ஒருவர், தன்னுடைய அரசியல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறார்?”

அதுதான் இன்றைய பிரச்சினையின் அரசியல் மையம்.

பதவி விலகலும் கிளாக்டன் இடைத்தேர்தலும்

இந்த நிதி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை 7 அன்று ஃபராஜ் கிளாக்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை.

மாறாக, தனது பதவி விலகலின் மூலம் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை உருவாக்கி, அதில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

அவர் இதனை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான தேர்தல்” என்ற அரசியல் சவாலாக முன்வைத்தார்.

அதாவது,

“என்னைப் பற்றிய தீர்ப்பை நாடாளுமன்ற விசாரணைகள் வழங்க வேண்டாம்; கிளாக்டன் (Clacton) மக்கள் வழங்கட்டும்” என்பதே அவரது அரசியல் நிலைப்பாட்டின் சாரமாக இருந்தது.

இது ஃபராஜின் அரசியல் பாணியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஒரு பிரச்சினையை அவர் சட்டரீதியான அல்லது நாடாளுமன்ற நடைமுறை விவகாரமாக மட்டும் பார்க்கவில்லை.

அதை உடனடியாக “மக்கள் எதிர் அதிகார வர்க்கம்” என்ற அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்.

இதுதான் அவரது பலமும்.

அதே நேரத்தில் இதுவே அவரது அரசியல் பலவீனமாகவும் மாறக்கூடும்.

ஏனெனில், ஒவ்வொரு நிர்வாக அல்லது ஒழுங்குமுறை விசாரணையையும் “அதிகார வர்க்கத்தின் சதி” என்று மாற்றிவிட்டால், உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான அபாயம் உள்ளது.

ஆனால் நடந்தது என்ன?

ஃபராஜ் எதிர்பார்த்திருந்தது ஒரு மிகப்பெரிய அரசியல் மோதல்.

ரீபோர்ம் யூகே  ஒருபுறம்.

லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் போன்ற பாரம்பரிய அரசியல் சக்திகள் மறுபுறம்.

ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தன.

லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ரீஸ்டோர் பிரிட்டன் கட்சியும் போட்டியிடவில்லை.

இதன் அரசியல் காரணம் தெளிவானது.

அந்தக் கட்சிகளின் பார்வையில், ஃபராஜ் தனது சொந்த நிதி மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தலை உருவாக்கியிருந்தார்.

கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடனொக் இதனை “போலி இடைத்தேர்தல்” என்றும் “தன்முனைப்பு போட்டி” என்றும் விமர்சித்தார்.

லேபர் இதனை ஒரு “சர்க்கஸ்” எனக் கருதி போட்டியிடவில்லை.

லிபரல் டெமகிரட்ஸ் தலைவர் எட் டேவி, இதனை ஃபராஜின் “அகங்கார அரசியல்” என்று விமர்சித்ததுடன், அதற்கு அரசியல் ஆக்சிஜன் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

கிறீன்ஸ் கட்சியும் இறுதியில் போட்டியிடாமல் விலகியது.

இதில் ஒரு சுவாரசியமான அரசியல் முரண்பாடு உள்ளது.

ஃபராஜ் விரும்பியது:

“அரசியல் வர்க்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம்”

முக்கியக் கட்சிகள் உருவாக்கியது:

“ஃப்ராஜுக்கெதிரான ஃப்ராஜின் போராட்டம்”

அதாவது, அவர் எதிர்பார்த்த பெரிய அரசியல் போராட்ட மேடை உருவாகவில்லை.

34 வேட்பாளர்கள்  ஆனால் உண்மையான போட்டியாளர் யார்?

முக்கியக் கட்சிகள் விலகியதால் கிளாக்டன் தேர்தல் வெறுமையாகிவிடவில்லை.

மாறாக, வரலாற்றில் மிகவும் விசித்திரமான தேர்தல்களில் ஒன்றாக மாறியது.

மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இது ஒரு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மிகப்பெரிய வேட்பாளர் எண்ணிக்கையாக அமைந்தது.

அவர்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நகைச்சுவை அரசியல்வாதியான கவுண்ட் பின்வேஸ்(Count Binface).

இது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், பிரிட்டிஷ் அரசியலின் மீதான மக்களின் விரக்தி, நகைச்சுவை, எதிர்ப்பு மற்றும் அரசியல் நாடகத்தின் கலவையாக மாறியது.

ஆனால் இதன் அடிப்படை உண்மை ஒன்றுதான்:

பெரிய கட்சிகள் இல்லாத தேர்தல், உண்மையான தேசிய அரசியல் ஆதரவை அளக்கும் வழக்கமான அளவுகோலாக இருக்க முடியாது.

ஃபராஜ் மீண்டும் வென்றார் – ஆனால் அதன் அர்த்தம் என்ன?

2026 ஆகஸ்ட் 13 அன்று நடந்த கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றார்.

அவர் 22,239 வாக்குகளையும், சுமார் 62.8% வாக்குகளையும் பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக இருந்த கவுண்ட் பின்வேஸ் (Count Binface) சுமார் 9,455 வாக்குகளைப் பெற்று 26.7% பெற்றார். வெற்றி மிகப் பெரியது.

ஆனால் இங்கே ஒரு அரசியல் நுணுக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

2024 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் வாக்குகள் சேர்ந்து அந்தத் தொகுதியில் மிகப் பெரிய வாக்குத் தளத்தை வலதுசாரிக் கட்சிகளுக்கு உருவாக்கியிருந்தன.

2026 இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவே இல்லை.

எனவே, இந்த வெற்றியை “பிரிட்டன் முழுவதும் ஃபராஜுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு” என்று எடுத்துக்கொள்வது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தலாகிவிடும்.

இது முதன்மையாக கிளாக்டன் தொகுதியில் ஃபராஜின் தனிப்பட்ட அரசியல் ஆதரவையும் ரீபோர்ம் யூகேயின் உள்ளூர் வலிமையையும் காட்டுகிறது.

ஆனால் அது அவருக்கு ஒரு முக்கியமான அரசியல் மூலதனத்தை மீண்டும் வழங்கியுள்ளது:

நாடாளுமன்ற இருக்கை.

ஆனால் £5 மில்லியன் கேள்வி முடிந்துவிட்டதா?

இல்லை.

இதுதான் இந்த இடைத்தேர்தலின் மிக முக்கியமான அரசியல் உண்மை.

ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய விசாரணை முடிவடைந்துவிடவில்லை.

மாறாக, அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால் அந்த விவகாரம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் போன்ற சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

இதனால் Clacton மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

“நாங்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.”

ஆனால் அது மற்றொரு விஷயத்தைச் சொல்லவில்லை:

“நாடாளுமன்ற விதிமுறைகள் தொடர்பான விசாரணை தேவையில்லை.”

இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.

ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு ஒரு அரசியல் ஆணையை வழங்குகிறது.

ஆனால் சட்டமும் நாடாளுமன்ற விதிகளும் தங்களுடைய நடைமுறையில் தொடர்கின்றன.

புலம்பெயர் தமிழனாக என் பார்வை

இந்த இடத்தில் நான் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, குடியேற்றம் குறித்து பேசப்பட்டது.

இன்று குடியேற்றமே தேர்தல்களின் மையக் கேள்விகளில் ஒன்றாக மாறியுள்ளது.

அப்போது விவாதம் வேலை வாய்ப்பைப் பற்றியது.

இன்று விவாதம் தேசிய அடையாளத்தையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் பற்றியது.

அப்போது,

“எத்தனை பேர் வருகிறார்கள்?”

என்ற கேள்வி இருந்தது.

இன்று,

“பிரிட்டன் எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது.

இந்த மாற்றத்தை நான் ஐம்பத்தொரு ஆண்டுகளாக நேரில் பார்த்திருக்கிறேன்.

ஒரு குடியேறிய தமிழனாக, இந்த நாட்டின் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், வாய்ப்புகளையும் மதிக்கிறேன்.

அதே நேரத்தில், இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களின் உணர்வுகளையும் நான் புரிந்துகொள்கிறேன்.

ஒரு நாட்டிற்கு மனிதநேயமும் தேவை.

அதே நாட்டிற்கு ஒழுங்கும் தேவை.

ஒரு நாட்டிற்கு அகதிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இதயமும் தேவை.

அதே நேரத்தில், அதன் குடியேற்றக் கொள்கைக்கு தெளிவான விதிகளும் தேவை.

இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது எந்த அரசுக்கும் மிகவும் கடினமான அரசியல் பணியாகும்.

ஆனால் அதைவிட முக்கியமானது இன்னொன்று.

குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது குடியேறியவர்களைப் பற்றிய வெறுப்பையும், குடியேற்றம் குறித்து கவலைப்படுபவர்களைப் பற்றிய அவமதிப்பையும் ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

அரசியல் விவாதம் மனிதர்களை எதிரிகளாக மாற்றாமல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடும் வழியாக இருக்க வேண்டும்.

கன்சர்வேடிவ் கட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை

எனது பார்வையில் ரீபோர்ம் யூகேயின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் பெற்றிருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல.

கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் மொழியையே மாற்றியிருப்பதுதான்.

ஒரு காலத்தில் வலதுசாரி வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி, இன்று தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ரீபோர்ம் யாகூ நோக்கி இழந்துள்ளது.

இது சாதாரண வாக்கு மாற்றமல்ல.

இது அரசியல் நம்பிக்கையின் இடமாற்றம்.

கிளாக்டன் இதற்கு ஒரு குறியீடு.

ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு இங்கே இன்னொரு கேள்வியும் உள்ளது:

ரீபோர்ம் யூகேவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா?

அல்லது ரீபோர்ம் யூகே எடுத்துக்காட்டும் மக்களின் உண்மையான கவலைகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?**

இரண்டாவது வழியே நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.

லேபர் கட்சிக்கும் இது ஒரு சோதனை

ரீபோர்ம் யூகேவின் வளர்ச்சியை கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

லேபர் கட்சிக்கும் இது ஒரு சவால்.

ஏனெனில் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, என்.எச்.எஸ், வீடமைப்பு, வேலைவாய்ப்பு, பொது சேவைகள் போன்ற கேள்விகள் வலதுசாரிகளின் சொந்த பிரச்சினைகள் அல்ல.

அவை சாதாரண மக்களின் வாழ்க்கைக் கேள்விகள்.

Labour அவற்றுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், அந்த இடத்தை ரீபோர்ம் போன்ற இயக்கங்கள் நிரப்பும்.

அதேவேளை,ரீபோர்மை எதிர்ப்பதற்காக அதன் கடுமையான மொழியை அப்படியே ஏற்றுக்கொள்வதும் லேபருக்கு தீர்வாக இருக்காது.

மக்களின் அச்சத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த அச்சம் ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வதே அரசியலின் முதிர்ச்சி.

லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் புதிய அரசியல் இடைவெளி

Liberal Democrats-க்கு இங்கு வேறொரு வாய்ப்பு உள்ளது.

கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் இடையிலான வலதுசாரி போட்டி தீவிரமடையும் போது, மிதவாத மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் இடம் உருவாகிறது.

ஆனால் அந்த இடத்தை லிபரல் டெமகிரட்ஸ் எவ்வளவு திறமையாக நிரப்புகின்றனர் என்பதுதான் கேள்வி.

கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டைத் தந்திருக்கலாம்.

ஆனால் எதிர்காலத்தில் ரீபோர்ம் யூகே வளர்ந்துகொண்டே சென்றால், அதன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தளத்தை யார் உருவாக்கப் போகிறார்கள்?

இதுவும் ஒரு முக்கியமான கேள்வி.

ஃபராஜ் – ஒரு தலைவர் மட்டுமா? அல்லது ஒரு அரசியல் அறிகுறியா?

நைஜல் ஃபராஜை ஒருவர் விரும்பலாம்.

வெறுக்கலாம்.

அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

மறுக்கலாம்.

ஆனால் அவரை அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரிட்டனின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.

அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் ஒரு பகுதியின் மனநிலையை வெளிப்படுத்தும் அரசியல் நிகழ்வு.

அந்த மனநிலை ஏன் உருவானது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

அதை வெறுமனே “வலதுசாரி கோபம்” என்று நிராகரித்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

அதே நேரத்தில், அந்தக் கோபத்தை அரசியல் அதிகாரமாக மாற்றும் ஒவ்வொரு முயற்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

அதுதான் ஜனநாயகத்தின் சமநிலை.

கிளாக்டன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

இந்த இடைத்தேர்தல் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவூட்டுகிறது.

மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒவ்வொரு செயலும் சரி என்று தீர்ப்பு வழங்குவதாக அர்த்தமல்ல.

அதேபோல்,

ஒரு அரசியல்வாதி மீது விசாரணை நடைபெறுவது, அவர் அரசியல் ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார் என்பதையும் அர்த்தப்படுத்தாது.

கிளாக்டன் மக்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இப்போது அவரது பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

அவர் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகச் சொன்னால், அதனை விமர்சிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மை ஆகியவற்றிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.

ஏனெனில் அதிகாரத்தை விமர்சிப்பது எளிது.

அதிகாரத்தின் முன் நின்று தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் கடினம்.

முடிவாக…

நைஜல் ஃபராஜின் அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

மாறாக, அது இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

பிரெக்ஸிட் அவரை வரலாற்றில் பதித்தது.

ரீபோர்ம் யூகே அவரை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

கிளாக்டன் அவருக்கு நாடாளுமன்ற இருக்கையைத் தந்தது.

ஆனால் £5 மில்லியன் விவகாரம் அவருக்கு ஒரு புதிய சோதனையை உருவாக்கியுள்ளது.

அந்தச் சோதனை வெறும் ஃபராஜுக்கானது அல்ல.

அது பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான சோதனையும் கூட.

ஒரு அரசியல்வாதியின் மக்கள் ஆதரவும், அவரது அரசியல் பொறுப்பும் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா?

மக்களின் கோபத்தை அரசியல் மாற்றமாக மாற்ற முடியும்; ஆனால் அந்த மாற்றத்தை நல்லாட்சியாக மாற்ற முடியுமா?

ரீபோர்ம் யூகே எதிர்ப்பின் சக்தியாக மட்டுமே தொடருமா, அல்லது ஒருநாள் ஆட்சிக்குத் தயாரான மாற்று அரசாக உருவெடுக்குமா?

கன்சர்வேடிவ் கட்சி தனது பாரம்பரிய வாக்குத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புமா?

லேபர் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அச்சங்களுக்கு நம்பகமான பதிலை வழங்குமா?

லிபரல் டெமகிரட்ஸ் இந்த புதிய அரசியல் இடைவெளியை நிரப்புவார்களா?

இவைதான் இனி பிரிட்டிஷ் அரசியலின் முக்கியக் கேள்விகள்.

நான் இந்த நாட்டில் ஐம்பத்தொரு ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழனாக இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தோன்றுவது ஒன்றுதான்:

பிரிட்டன் மாறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் மாற்றத்தின் திசையை இன்னும் யாரும் முழுமையாகத் தீர்மானித்துவிடவில்லை.

அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம்.

தலைவர்கள் வரலாம்.

போகலாம்.

வாக்காளர்கள் கட்சிகளை மாற்றலாம்.

ஆனால் இறுதியில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அதன் மக்களின் மனநிலையும் அவர்கள் செலுத்தும் வாக்கும்தான்.

அந்த மனநிலை எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே, பிரிட்டிஷ் அரசியலின் நாளைய முகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

நைஜல் ஃபராஜ் அந்த மாற்றத்தின் காரணமா?

அல்லது ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சமூகத்தின் வெளிப்பாடா?

இதற்கான பதில் இன்னும் வரலாற்றின் கைகளில்தான் உள்ளது.

மீண்டும் அடுத்த மடலில்
அன்பன்

சக்தி சக்திதாசன்
லண்டன்

(தொடரும் – பகுதி 4: கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலம், மற்றும் பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை.)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.