நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

2

-மேகலா இராமமூர்த்தி

துணிச்சலான அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதற்காக அன்றைய அரசியல் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli).

மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் ஏதோ பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அன்று அரண்டு போனதுண்டு. கிறித்தவ மதகுருமார்கள் மாக்கியவெல்லியைப் ‘பிசாசு’ என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு ’நிக்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு ‘நிக்’ என்ற புதிய பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவரைப் பற்றி அன்று பேசியோர் உண்டு. மாக்கியவெல்லியனிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் என்றும் அரசியல் கொடுமை என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கு ஆளாகும்படி என்ன செய்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், தம் மனத்தில் தோன்றிய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னார்; அவ்வளவுதான்! ”யதார்த்தவாதி வெகுஜன விரோதியாக இருப்பதில் வியப்பில்லைதானே?”

”மன்னர்கள் கொடுங்கோலர்களாக இருக்கவேண்டும் எனச் சொன்னார் மாக்கியவெல்லி” என்று கூறுகின்ற பலர் அவர் எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு இருக்கச் சொன்னார் என்பதனைக் குறிப்பிடுவதில்லை. ஓர் அரசு நிலைப்பதற்காக அதற்கு எதிராகச் சதி செய்கின்ற ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் அவ்வாறு கொல்வது தவறன்று என்று குறிப்பிடுகின்றார் மாக்கியவெல்லி.

”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”
(550) என்று நம் பேராசான் வள்ளுவர் கூறியிருப்பதை மாக்கியவெல்லியின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லது மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக ஓர் அரசன் தொடக்க காலத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் கொடுஞ்செயல்கள் புரிவதில் பிழையில்லை என்பதே மாக்கியவெல்லியின் கருத்தாக இருந்திருக்கின்றது.

அரசியல் அறிஞராகவும், அரச தந்திரியாகவும் விளங்கிய நிக்கோலோ மாக்கியவெல்லி நாடகாசிரியர், இசைக் கலைஞர் எனும் வேறுபல திறன்களும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாளன்று பெர்னார்டோ (Bernardo) மாக்கியவெல்லி என்பவருக்கு மகனாக இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் நகரிலே பிறந்தவர் நிக்கோலோ மாக்கியவெல்லி. இவர் பிறந்தபோது பிளாரன்சில் குடியாட்சி நடைபெற்று வந்தது.

1494-ஆம் ஆண்டு தம்முடைய இருபத்தைந்தாவது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் மாக்கியவெல்லி. பொதுவாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவர் குடியரசு அரசாங்கத்தின் செயலர் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவராகவும் ஆனார். இப்பதவிகளில் பதினைந்து ஆண்டுகள் அவர் நிலைத்திருந்தார்.

இதற்கிடையில் இத்தாலியில் உள்ள சிறிய அரச சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளின் தலைநகரங்களுக்கும் பிளாரன்ஸ் அரசாங்கத்தின் தூதராகச் சென்றார் அவர். அவருடைய சாதுரியமான செயல்திறனால் பிளாரன்ஸ் குடியாட்சி பல நன்மைகளைப் பெற்றது. அவரும், பல நாடுகளுக்கும் பயணங்கள் சென்றுவந்த அனுபவத்தின் பயனாய் அரசியல் குறித்தும் ஐரோப்பிய நாடுகள் குறித்தும் நன்கு அறிந்துகொண்டார்.

1503-ஆம் ஆண்டு இத்தாலிய அரசியல்வாதியான சீசர் போர்ஜியாவிடம் (Cèsare Borgia) தூதுசென்று திரும்பியபின்னர், தம்முடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தார் மாக்கியவெல்லி. இராணுவத் துறையில் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டபிறகு, 1506ஆம் ஆண்டு அவருக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது. பிளாரன்ஸ் அரசாங்கத்திற்கென்று மக்கள்படை ஒன்றை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட சிறப்புப் பிரிவிற்கு அவர் செயலராக நியமிக்கப்பட்டார். புகழின் உச்சிக்கு மாக்கியவெல்லி சென்ற காலமது. அதே சமயத்தில் அவருக்கு எதிரிகளும் உருவானார்கள்.

1512-ஆம் ஆண்டு பிளாரன்சில் குடியாட்சி அகற்றப்பட்டு பழைய அரச வம்சத்தினரான மெடிசி குடும்பத்தை (Medici family) சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு பிளாரன்ஸ் மீண்டும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி தம் பதவியினின்றும் நீக்கப்பட்டார்.

மெடிசி குடும்பத்தினருக்கு எதிராய், அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அப்போது ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் மாக்கியவெல்லியின் பெயரையும் சேர்த்துவிட்டார்கள் அவருக்கு வேண்டாதவர்கள். அதனை உண்மையென்று நம்பிய மெடிசி அரச குடும்பத்தினர், மாக்கியவெல்லியைப் பிடித்து 1513-ஆம் ஆண்டு விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவரென்று உணர்ந்து விடுவித்தார்கள். ஆனபோதும் மீண்டும் அரசியல் பணியில் அவரை அமர்த்தவில்லை.

மாக்கியவெல்லியின் வாழ்வில் துன்பங்களின் சாயை மெல்லப் படர ஆரம்பித்தது. அவர்பட்ட துன்பங்களைத் தம்முடைய நண்பரும் உரோம் நகரத்தின் தூதருமான பிரான்செஸ்கோ வெட்டோரி (Francesco Vettori) என்பவருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

அக்கடிதத்தில் தம்முடைய நாள் எவ்வாறு தொடங்கி எவ்வாறு கழிகின்றது என்பதை உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கின்றார் மாக்கியவெல்லி. அதன் ஒரு பகுதியிது…

“சூரியன் உதிக்கும்பொழுதே நான் எழுந்துவிடுவேன். எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கின்றேன். அங்கு மரம் வெட்டுபவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாய்ப் போவேன். அங்கிருந்து தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகா கவிகள் தாந்தே (Dante), பெட்ரார்க் (Petrarch) ஆகியோரின் நூல்களாகவோ, கவிஞர் டிபுல்லஸ் (Tibullus), ஓவிட் (Ovid) ஆகியோரின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக் கனவுகளையும், காதல் கதைகளையும் படித்து, அவற்றை என் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப் பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்.

மாலைக்காலம் வந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிச்சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் புழுதியும் நிறைந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, அரசாங்க உடைகளை அணிந்துகொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் புத்தக சாலைக்குள் நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். எனக்கே சொந்தமான உணவுகளை நான் அவ்விடத்தில் உண்பேன். எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கின்றேனோ அவற்றை நான் உண்பேன்.

பிறகு ஊக்கத்துடன் நான் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் வினாக்களுக்குப் பதிலளிப்பார்கள்; அந்த நான்கு மணி நேரமும் என் மனக் கவலைகளையெல்லாம் நான் மறந்திருப்பேன். அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு அஞ்சமாட்டேன்; சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

தாம் பழங்காலத்து அறிஞர்களின் நூல்களைப் படிப்பதையும் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுவைப்பதையுந்தான் மாக்கியவெல்லி, இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கின்றார்.

இக்கடிதம் அவருடைய வறுமையின் ஆரம்ப காலத்தில் அவர் தம் நண்பருக்கு எழுதியது. வறுமையின் உச்சக் கட்டத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே! நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் எவரும் இல்லையே!” என்று தம் கடிதங்களில் வேதனையோடு விளம்பியுள்ளார்.

வரும்படிக்கு வழியில்லாமல் வறுமையில் உழன்றுகொண்டிருந்த அந்தக் காலத்தில்தான் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தார் மாக்கியவெல்லி. அவை: லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி (The Discourses on the First ten of Titus Livy), அரசன் (The Prince), மற்றும் போர்க் கலை (The Art of War) என்பன.

‘லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி’ என்ற நூலில் உரோம் நகரத்தின் புகழ்பெற்ற வரலாற்றறிஞரான டைடஸ் லிவியின் முதல் பத்துப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

இந்த நூலில் உரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகின்றார் அவர். தம் காலத்தவர்கள், வரலாறு படிக்காத காரணத்தினால்தான், புகழ்வாய்ந்த அந்தக் காலத்துப் பேரரசர்கள், பெரியோர்களின் பாதையை விட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் சமூகத்திற்குப் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

’போர்க் கலை’ என்ற தலைப்பில் ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் மாக்கியவெல்லி.  அவற்றில் போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்கள், சாமர்த்தியங்கள், கொள்கைகள் ஆகியவை விளக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

மாக்கியவெல்லியின் நூல்களில் அவருக்குப் பெரும் புகழையும், கடுமையான விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுத்தந்த நூல் ’அரசன்.’

அரசன் என்ற நூலில் முடியரசுகளைப் பற்றி ஆராய்கின்றார் மாக்கியவெல்லி. அரசறிவியல் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிய புதுமையான சிந்தனைகளை முதன்முதலில் இந்த நூலில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு முன்பு அரசியல் குறித்து இப்படிச் சிந்தித்தவர்கள் யாரும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இந்நூலில் விதைத்திருக்கின்றார் அவர்.

அவற்றிலிருந்து சில கருத்துக்கள்…

”ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. ஏனெனில், ஆதிக்கஞ் செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர்க்கலை ஒன்றுதான்!

போர்களற்ற காலத்திலும்கூட அரசன் போர்ப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் அதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகப் பயிற்சியை நடாத்துவதற்கு, அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் கடின உழைப்பில் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அரசன் வேட்டைக்குச் செல்வதால் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகின்றான். இவ்வாறு ஒரு நாட்டின் அமைப்பைப் பற்றிய இயற்கையறிவைப் பெற்ற ஒருவன்தான் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றியும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பு பற்றிய அறிவு நிரம்பிய அரசன், தன் எதிரியை எவ்வாறு கண்டுபிடிப்பது, எவ்வாறு களம் அமைப்பது, படை நடத்துவது, போர்த்திட்டம் வகுப்பது, கோட்டையைப் பிடிப்பது என்பன போன்ற விஷயங்களையும் நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதுதான். ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச்சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைக்குத் தக்கபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வோர் அரசனும் தான் கொடுங்கோலனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆயினும், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.”

இவ்வாறு, ஓர் அரசன் வெற்றிகரமாக ஆட்சிசெய்வதற்கு வேண்டிய பல யோசனைகளும் உத்திகளும் இந்நூலில் பேசப்படுகின்றன.

அரசியல் வெற்றிக்காகச் சூழ்ச்சிகளையும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும்…ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று மாக்கியவெல்லி இந்நூலில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லையென்றாலும், வீழ்ச்சியடைய விரும்பாத ஓர் அரசன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கு ஆட்படுகின்றபோது அவை(யும்) ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே இருக்கின்றன.

இந்த நூலைப் படிக்கின்றபோது, வரலாற்று நூலைப் படிப்பதுபோன்ற சுவையற்ற உணர்வோ,  ஆராய்ச்சி நூலைப் படிப்பது போன்ற அலுப்போ ஏற்படுவதில்லை. மாறாகத் துப்பறியும் கதையைப் படிப்பதுபோன்ற விறுவிறுப்போடு செய்திகளைத் தந்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

நிலைத்த நல்லரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் எனும் நோக்கத்தை மையமாக வைத்துத்தான் மாக்கியவெல்லி ’அரசன்’ என்ற நூலை எழுதினார். ஆனால் அரசாங்கத்திற்கு வழிகாட்டும் நூலாக அமைவதற்குப் பதிலாக அது கொடுங்கோலர்களுக்குத் துணைபோகும் நூலாகக் கருதப்பட்டது வருந்தத்தக்கதே!

1527-ஆம் ஆண்டு பிளாரென்ஸ் நகரம் மீண்டும் முடியாட்சியிலிருந்து விடுபட்டுக் குடியாட்சிக்கு மாறியது. ஆனால் மாக்கியவெல்லியின் வாழ்வில் அது மலர்ச்சியைத் தரவில்லை. குடியாட்சியினர் அவருக்கு எந்தப் பதவியையும் அளிக்கவில்லை. அதே ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் வயிற்றுவலியின் காரணமாய்த் தம் உலக வாழ்வை நீத்தார் அரசியல் அறிஞரான மாக்கியவெல்லி.

உலகிற்குப் புதிய அரசியல் சித்தாந்தங்களை விட்டுச்சென்ற அவர் தம் குடும்பத்துக்கு விட்டுச்சென்றதென்னவோ கொடிய வறுமையை மட்டுமே. எனினும், நவீன அரசறிவியலை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள் வரிசையில் நிக்கலோ மாக்கியவெல்லியின் பெயர் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. https://en.wikipedia.org/wiki/Niccol%C3%B2_Machiavelli

2. https://www.history.com/this-day-in-history/niccolo-machiavelli-born

3. https://www.encyclopedia.com/people/social-sciences-and-law/political-science-biographies/niccolo-machiavelli.

4. https://courses.washington.edu/hsteu401/Letter%20%20to%20Vettori.pdf

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

  1. வணக்கம்! அரிய வரலாற்றுச் செய்திகளை எளிய, தரமான மொழியில் பதிவு செய்வது எல்லாராலும் இயலாது. கட்டுரையாளர்க்கு அது கைவந்திருக்கிறது. இத்தாலியைக் காதல் மொழி என்பார்கள். அங்கே இவ்வளவு கரடுமுரடான சிந்தனைகளும் இருந்திருக்கின்றன என்பதைத் தமிழ் இளைஞர்கள அறிந்து கொள்வதற்கு இக்கட்டுரை உதவக்கூடும். உதவ வேண்டும். பயன் தெரிவார் சிலரே ஆனாலும் கட்டுரை வரவேற்கத்தக்கது. நான பயன் தெரிந்தவர்களில் ஒருவன். அதனால் பாராட்டி வரவேற்கிறேன். கட்டுரையாளர்க்கு வாழ்த்துக்கள்!

  2. தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா!

    -மேகலா இராமமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *