சுருக்கெழுத்துகளால் சிதையும் தமிழ்

0
PS1

அண்ணாகண்ணன்

இன்றைய நாளிதழில் எஸ்.பி.கோயில் என்ற பெயரைக் கண்டேன். சிங்கப்பெருமாள் கோவில் என்ற அழகிய பெயரைத்தான் இப்படி எழுதியிருக்கிறார்கள். தியாகராய நகர் என்ற பெயர் தி.நகராகி, பலர் நாவில் டி.நகர் ஆகிவிட்டது. கலைஞர் கருணாநிதி நகர், எப்போதோ கே.கே.நகர் ஆகிவிட்டது. வியாசர்பாடியில் மகாகவி பாரதி நகர், எம்.கே.பி. நகர் ஆகிவிட்டது.

அரியலூரில் தாதம்பேட்டை பழூர் என்ற ஊர், தா.பழூர் ஆகி, டி.பழூர் ஆனது. கோவையில் பாப்பநாயக்கன் பாளையம், பி.என்.பாளையம் ஆனது. குப்பைக் கோனான் புதூர், கே.கே. புதூர் ஆனது. மதுரை மாவட்டத்தில் தேவன்குறிச்சி கல்லுப்பட்டி என்ற ஊர், தே.கல்லுப்பட்டி ஆகி, பிறகு டி.கல்லுப்பட்டி ஆனது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான ஊர்களும் சாலைகளும் சுருக்கெழுத்துகளால் அடையாளம் இழந்துள்ளன.

பல ஊர்களில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற முன்னொட்டுகளுடன் ஊர்ப்பகுதிகளும் வீதிகளும் உள்ளன. இவை அனைத்தும் இன்று ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத் என வாய்க்கு வாய் பேசப்படுகின்றன.

இடங்கள் மட்டுமில்லாமல், மனிதர்களின் பெயர்களும் இன்று சுருக்கப் பெயர்களாகி வருகின்றன. முதலெழுத்து மட்டுமின்றி, முழுப் பெயருமே ஆங்கிலச் சுருக்கெழுத்துகளால் அழைக்கப்படுகின்றன. பதவிப் பெயர்களும் பட்டப் பெயர்களும் கூட இதே போல் சுருங்கிவிட்டன. கட்சிப் பெயர்களும் தலைவர்களின் பெயர்களும் கூட ஆங்கிலச் சுருக்கெழுத்துகளால் அழைக்கப்படுகின்றன.

இணைய உரையாடல்களின் சுருக்கெழுத்துகள், பெரும்பாலும் ஆங்கிலத்தில் கோலோச்சுகின்றன. அன்றாடம், புதுப் புதுச் சுருக்கெழுத்துகள் தீயாய்ப் பரவுகின்றன. திரைப்படங்களின் பெயர்களும் கூட இவ்வாறே சுருங்குகின்றன. பொன்னியின் செல்வன் பி.எஸ். ஆகிறது.

உலகம் நம் உள்ளங்கைக்குள் சுருங்கி வருவதில் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால், நம் மொழியும் அவ்வாறு சுருங்கிவிடக் கூடாது. இடத்தின், பொருளின், தொழில்நுட்பத்தின், உயிர்களின், நபர்களின் முழுப் பெயரையும் வாயார அழைப்போம். ஒருவேளை சுருக்கினாலும் தமிழில் சுருக்குவோம்.

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.