பார் வியக்க வாழ்வோம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

பெரு வெள்ளம் வந்தால்
பெரு அணையும் உடையும்
பெரு ஆசை வந்தால்
பெரு வாழ்வு சிதையும்

பசி வயிறு மிகுந்தால்
வறுமை தலை விரிக்கும்
வறுமை தலை விரித்தால்
வாடி விடும் உலகு

பொய் ஆட்சி செய்தால்
மெய் மயங்கி நிற்கும்
மெய் மயங்கி நின்றால்
பொய் எழும்பி ஆடும்

பொய் ஆடி நின்றால்
மெய் விழிக்க நினைக்கும்
மெய் விழிக்கும் வேளை
வெளிச்சம் அங்கே விரியும்

கண் கருணை இழந்தால்
மண் சிறக்க மாட்டா
மண் சிறக்க வேண்டில்
மனம் சிறக்க வேண்டும்

கல்வி எனும் பயிரை
கிள்ளி விடல் கூடா
கல்வி எனும் சொத்து
எழு பிறப்பும் இருக்கும்

பல நூற்கள் படிப்போம்
படித்த படி நடப்போம்
பகுத் தறிவு பெறுவோம்
பார் வியக்க வாழ்வோம்  !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *