Illustration of a Vasco De Gama

இன்று, ஜூலை 8, இதே நாளில்  1497- இந்தியாவை நோக்கி வாஸ்கோடகாமாவின் பயணம் தொடங்கிய நாள்!

பண்டைய காலத்திலேயே யவனர்களோடு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என பலப்பல பொருட்களை வணிகம் செய்தது நமது இலக்கியங்கள் மூலம் எளிதாக அறிய முடிகின்றது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின், அந்தப் பொருட்கள் கிடைக்கும் நாடுகளைத் தேடி அலைந்தவர்களில் பாரசீகர்களுக்கு முதலிடம் என்றால், போர்ச்சுகீசியர்களுக்கு அதற்கடுத்த இடம் உண்டு .

நன்நம்பிக்கை முனையை 1497 இல் கடந்தவர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகம் ஆன வாஸ்கோடகாமா. பின்னர் அவர் அங்கிருந்து, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைகிறார். மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்திருந்த – அதன் காற்றையும், அதன்

வீச்சையும் நன்கறிந்த அங்கிருந்த ஒரு மாலுமி – அஹ்மத் இபின் மஜித் என்பவரின் துணையைப் பெறுகிறார். இதில் தமிழர் ஒருவரின் பங்கும் இருந்ததாகவும் தகவல்கள் உண்டு. வாஸ்கோடகாமா. 1498 இல், அஹ்மத் இபின் மஜித்தின் துணையுடன் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே

இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு விரைவாக வந்து சேர்ந்தது சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர்திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான மற்றுமொரு பாதையை சாத்தியப்படுத்திக் காட்டினார் வாஸ்கோடகாமா.

 

பழங்காலத்தில் போர்த்துக்கீசியர்களுடன் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். போர்த்துக்கீசியர்களுக்கான அவர்களின் முக்கிய ஏற்றுமதி மிளகு. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் வரக் காணவில்லை. அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் தெற்கிலிருந்து வந்தார்கள் என்பது மட்டும்தான் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியும். அவர்களிடமிருந்து விட்டுப் போன வணிக உறவைப் புதுப்பிக்க நூறு ஆண்டுகளாகத் தேடி அலைந்து கடைசியாக வந்து இங்கு வந்து சேர்ந்தவர்தாம் வாஸ்கோட காமா. அப்படிப் போர்த்துக்கீசியர்களுக்கு பண்டையகாலத்தில் தொடர்ந்து மிளகு ஏற்றுமதி செய்து வந்த அந்த மக்கள் தமிழர்தாம். அவர்கள் இடையில் தமிழ் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதால் மன்னர்களின் ஆதரவு அயல்நாட்டு வணிகத்திற்கு கிடைத்ததால் வணிகத்தை இழந்தனர். அவர்கள் செல்லாததால் ஐரோப்பியர் அவர்களைத்தேடி இங்கு வந்தனர். இங்கு தேடிவந்த வந்த ஐரோப்பிய தந்திரக்காரர்களுக்கு இந்தியா ஒரு வேட்டைக்காடாக மாறியது .

வாஸ்கோடகாமாவிற்குப்பின் வந்த அஃபோன்சா டி அல்புகியர்கியூ என்பவர், இந்தியாவில் போர்ச்சுகீசிய ஆக்கிரமிப்புக்கு வழிகோலிட கோவா என்றொரு போர்சுகீசிய பிரதேசம் உருவாகி, பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்து 14 ஆண்டுகள் வரையிலும் கூட அது போர்ச்சுகீசியர்கள் கையில் தான் இருந்தது. வாஸ்கோடகாமாவின் முதல் பயணத்திலேயே வரப்போகிற ஆபத்தை உணராமல் விட்டு வைத்ததன் விளைவு எத்தனை நூற்றாண்டுகளுக்கு எத்தகைய இன்னல் விளைவித்தது என்பதை வரலாறு நமக்கு நன்கு உணர்த்துகின்றது. நன்னம்பிக்கை முனைவழியாக வரும் வழி தங்களுக்கு மட்டுமே உரியது என்று போர்ச்சுகல் அப்போதைய போப்பிடம் உரிமையும் கோரியதாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன . ஆனால் வாஸ்கோடகாமாவுக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு தமிழர்தான் இந்த வழியை

சொல்லிக்கொடுத்ததாகவும் ஒரு கட்டுரை செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நூற்றாண்டு முழுவதும் அந்த வழியை அதிகம் போர்ச்சுகல் மட்டுமே பயன்படுத்தியது . அது

இரகசியமாகவே இருந்தது. அப்போதெல்லாம் அத்தகைய வரைபடங்கள் புதையல் இருக்கும் வழி காட்டும் வரைபடங்களை விட மதிப்பு மிக்கதாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுடன் ஆன வணிகம் ஐரோப்பியர்களுக்கு அத்தனை மதிப்பு மிக்கது. அவர்களின் வாழ்நாள் இலட்சியமாக இருந்தது இந்தியாவிற்கு வருவது என்பதுதான். இதில் குறிப்பிடும் பல வரலாற்று செய்திகள் அந்நியர்கள் எழுதி வைத்த கையேட்டுக் குறிப்பு போன்ற ஆவணங்களில் இருந்துதான் கிடைக்கின்றன.

இந்தியாவின் வரலாறு என்பது பெரும்பாலும் இங்கு பயணம் மேற்கொண்ட அந்நியர்களால் எழுதப்பட்டவற்றில் இருந்து உருவாக்கப்பட்டதுதான். பிரித்தானியருக்கு முன்னால் கிரேக்க, சீனப் பயணிகள் எழுதிய குறிப்புகளை வைத்துதான் தட்சசீலா, நாலந்தா பற்றிய கல்விக்கூடங்கள், பண்டைய பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்திகள் கிடைத்திருக்கின்றன.

இசுலாமியர்களால் எழுதப்பட்ட சில வரலாறுகளும் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் வருகை 15-16-ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்திய வாழ்க்கை முறை, தத்துவங்கள், கலைகள், கல்வி என நம் வாழ்வின் பன்முக அம்சங்கள் குறித்த எந்தவித புரிதலும் இல்லாதவர்கள் அவர்கள். முற்றிலும் அந்நியமான தேசத்தில் இருந்து வந்து தங்களுடைய முன்முடிவுகள், புரிதலுக்கு ஏற்ப நம்மைப் பற்றி அவர்களுக்கு என்ன

புரிந்ததோ அதை எழுதி வைத்தார்கள் ஆனால் நமக்கு வேறு வழி இல்லாததால் அவைகளை வைத்தே ஆங்காங்கே கிடைக்கும் உண்மை செய்திகளை தேடிக் கோர்க்க வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் தென்னாட்டிற்குத்தான் ஐரோப்பியர்கள் முதலில் கடல் வழி வந்தனர். இங்கு வந்த சிறிது காலத்திலேயே அவர்களுக்குப் புரிந்து போனது அவர்கள் நினைத்தது போல இந்தியர்கள் நாகரீகமற்றவர்கள் அல்ல. அவர்கள் நாகரீகத்திலும் அறிவியலிலும் மிக மேன்மை கொண்டிருந்தனர். அதில் பலவற்றை ஐரோப்பியர்கள் அப்போது கற்பனை கூட செய்தது கிடையாது. எனவே மெக்ஸிகோ பெரு போன்ற நாடுகளில் செய்ததுபோல் அழித்தொழிப்பு செய்யாமல் இந்தியாவில் என்னென்ன இருக்கின்றன என்பதை முழுவதுமாகப் பதிவு செய்யவேண்டும் என முனைந்தனர். அவற்றில் இருந்து எதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருந்தது. எங்கெல்லாம் வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. ஆதியில் வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில்நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.