ஆதிகால தெய்வ வழிபாடு!
தமிழ்க்கடவுளான முருகன் மலைத் தெய்வம் என்று போற்றப்படுபவன். ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் போற்றி படைக்கப்பட்டிருக்கலாம் என்பர்.

வேலன் வெறியாடல், குன்றக்குரவை, வெறியாட்டு என்பன சிறப்பிடம் பெற்றன. இவ்விழாக்களின் போது ஆட்டைப் பலியிட்டு, முருகனுக்கு உகந்த பண்டங்களான தேன், திணைமாவு போன்றவற்றைப் படைத்து ஆடிப்பாடி வழிபட்டனர். இவற்றை மரபு சார் வழிபாட்டு முறைமைகள் எனக்கொள்ளலாம். ஆதி காலந்தொட்டு முருகன் என்பவன் மலை நிலத்துக்குரிய தெய்வமாகவும் தமிழ் கடவுளாகவும் வழிபடப்பட்டுள்ளான். அதே பண்புகளுடன் இன்றைய கலியுகத்திலும் சர்வதேசக் கடவுளாகத் தமிழ்க் கடவுளாக முருகன் திகழ்கின்றான்.
கி.மு. 300 வாக்கில் எழுதப்பட்ட தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது. சேயோன் (சேய் = மகன்) மிக வலிமையான கொற்றவை எனும் தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு வருகிறான். முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத்
தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்றும் கருத முடிகின்றது. மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து.
விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ; என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.
ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். ’குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பது மக்களின் நம்பிக்கை. குறிஞ்சிப் பகுதிவாழ் குமரனே முருகன் என்பது மானுடவியலாளரின் ஆய்வாளர்களின் கருத்து. இதன் அடிப்படையில் இவனே தலைவனாய் இருந்து காப்பவன்!
பன்னிருதோள்களும், பன்னிரு உயிர்கள் பதினெட்டுக் கரங்களும் பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துகள். அவனது கூரிய வடிவேல் ஆயுத எழுத்து. ;முருகு; என்ற சொல்லில் ;மு; மெல்லினம் ;ரு; இடையினம் ;கு; வல்லினம் என்ற சுவையான தகவல்களையும் வழங்குகின்றனர் தமிழறிஞர்கள். இவனே தமிழ்க் கடவுள். முருகு என்பதன் பொருள் அழகு. அழகானவன் முருகன்!
மயிலில் முருகன் ஏறியதற்கு கூறப்படும் ஒரு காரணம்: மவுரியர் என்பதன் பொருள் மயில். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்குப் பின் வந்த குசான மன்னர்களான குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது.
கிபி 150ஆம் ஆண்டு காலகட்டத்தில் குசான மன்னன், குவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில், ;ஸ்கந்த கொமானோ பிசாகோ; (விசாகோ) என கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக்
கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக்
கொள்ளலாம். குப்தர் அரசவைப் புலவரான காளிதாசனின், குமார சம்பவம், முருகனின் வரலாறை நூலாக எழுதி அவனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான். ஆக இவர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகளையும் சேர்த்தே காவியம் படைத்திருப்பார்கள்
என்பது தெளிவு.
