தெய்வச்செயல் (சிறுகதை)
ஜெ. ஜெயகுமார்
சென்னை
கத்தார் நாட்டு தலைநகரான தோஹாவில் ஐம்பது வயது அக்கவுண்டன்ட் அப்துல்லா வழக்கம்போல் அன்று அலுவலகம் நுழைந்தார்.
லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கேரளாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மனித வெள்ளத்தின் ஒரு துளியாக, வருடக்கணக்கில் குடும்பம் மறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்துல்லா ஒரே ஒரு நிமிடத்தில் அன்று லட்சக்கணக்கில் கடனாளியாவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
குடும்பத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தரப்படும் ஒரு மாத விடுமுறைக்காக, முதலாளியின் அனுமதி கடைசி நாளில் கிடைத்து, அவசர கதியில் ஏர்போர்ட் வந்து, “டியூட்டி ஃப்ரீ”யில் சாக்லேட், பெர்ஃப்யூம், நெருங்கிய சினேகிதர்களுக்கு ஒரு “ரெட் லேபிள் ஜானி வாக்கர்” வாங்கிக்கொண்டு ஒரு சராசரி மலையாளியாக பட்டணம்திட்டா வந்து குடும்பத்துடன் ஒரு மாத தேனிலவு லௌகீக வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து அயலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அப்பாவி மனிதர் அப்துல்லா.
இன்றிரவு கேரளா செல்ல வேண்டும் என்பதால் காலையிலிருந்தே அரக்கப் பரக்க அலைந்து கொண்டிருந்தார் அப்துல்லா. விடுமுறையில் அவருடைய பணியை செய்யப் போகும் பிஜூவையும் பாங்க்கிற்கு அழைத்து சென்றார்.
அன்று அனைத்து நிறுவனப் பிரிவுகளின் ஊழியர்க்கு சம்பள நாள்.
ரியால் வெள்ளம்.
பாங்க் அருகே பார்க்கிங் கிடைக்காததால் பின்புறத்தெருவில் காரை நிறுத்திவிட்டு பாங்க்கில் மூன்று லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் அறுபது லட்சம் ரூபாய்) கட்டுக் கட்டாகப் பெற்றுக்கொண்டு சூட்கேஸ்சில் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு சர்வ ஜாக்கிரதையாக இருவரும் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து சூட்கேஸ்சை வைத்து கதவை சாத்திவிட்டு திருப்தியுடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர்.
பாங்க்கிலிருந்து வந்த பத்தான் உடையணிந்த ஒருவர் அப்துல்லாவைப் பார்த்து, “ஜீ! பாங்க் மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்; ஏதோ “செக்”ல பிரச்சனையாம் ” என்று ஹிந்தியில் சொல்லிக்கொண்டே தன் கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தார்.
“நல்லபடியாக ஊர் செல்லவேண்டும்” என்று நினைத்துக்கொண்டே அப்துல்லா காரைப் பூட்டி விட்டு பிஜுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வங்கிக்கு விரைந்தார்.
சில நிமிடம் கழித்து வங்கியிலிருந்து வந்த மற்றொரு பத்தான் ஆசாமி, பிஜுவைப் பார்த்து ”யாரோ ஒரு மல்பாரி “டை-வாலா” (டை அணிந்த மனிதன்) பாங்க்கில் மயங்கி விழுந்து விட்டார்; போய்ப் பாருங்கள்; ஹார்ட் அட்டாக் போலிருக்கிறது என்று அனுதாபத்துடன் ஹிந்தியில் சொல்லிக்கொண்டே சென்றார்.
அப்துல்லா “டை” அணிபவர் என்பதாலும், அவருக்கு “ஹார்ட்” பிரச்சனை உள்ளது என்பதாலும் பூட்டப்பட்ட காரின் சாவி அப்துல்லாவிடம் உள்ளது என்பதாலும் வேலைக்கு புதிது என்பதாலும் “ஒருக்கால் அவர் மயங்கி விழுந்திருந்தால் அவருக்கு உதவி செய்யலாமே” என்ற பதைபதைப்பாலும் படபடப்புடன் பாங்க் விரைந்தார் பிஜு.
அப்துல்லா பாங்க் மேனேஜருடன் உரையாடிவிட்டு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு அப்துல்லாவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பிஜு.
“நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்று அப்துல்லா திடுக்கிட்டு வினவ, வந்த காரணத்தை பிஜு சொல்லிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். “அப்படி யாரும் பாங்க்கில் மயங்கி விழவில்லையே” என்று துணுக்குற்று பதிலுரைத்த அப்துல்லா மனதில் எங்கோ அபாயமணி அடித்தது.
“என்னை பாங்க் மேனேஜர் கூப்பிடவேயில்லை” என்று பிஜூவிடம் சொல்லிக்கொண்டே வந்தவர் அதிர்ந்து உறைந்து நின்றார்.
காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மூன்று லட்சம் ரியால் சூட்கேஸ் களவாடப் பட்டிருந்தது.
இந்த ஜன்மத்தில் இனிமேல் குடும்பத்தைப் பார்க்கப் போவதில்லை என்ற மின்னல் அப்துல்லாவை வெட்ட கார் பக்கவாட்டில் சரிந்தார்.
அக்கம்பக்க அனுதாபங்கள், வயிற்றைக் கலக்கும் சைரனுடன் “லாண்ட் க்ரூய்ஸ்சர்” காரில் போலீஸ் வருகை, அவர்களின் அதிகார தோரணை, அரபி மொழி விசாரணை என்று உச்சக்கட்ட யுத்தக்கள களேபரம் அரங்கேறியது அங்கே.
“இருபத்தி ஐந்து வருட அர்ப்பணிப்பு, உழைப்பு, எல்லாம் இரண்டே நிமிடங்களில் மண்ணோடு மண்ணாயிற்றே” என்று அப்துல்லா கூக்குரலிட்டு குமுறியது முதலாளி “ஷேக்”கையே ஒருகணம் நெகிழச் செய்தது.
“கம்பெனி சார்பில் இரண்டு பேர் சென்றும் பணம் பறிபோயிற்றே” என்று மன உளைச்சல் அடைந்த ஷேக் சில கணங்களில் தன்னை மீட்டுக் கொண்டார்.
அப்துல்லாவின் நேர்மையான உழைப்பின் முன்னால் அது பெரிய இழப்பு இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவருக்கு தன் நாட்டு காவல் துறையின் மீது அபார நம்பிக்கை, எப்படியும் பணத்தை மீட்டு விடுவார்களென்று.
அப்துல்லாவை நோக்கி “ நீ ஊர் சென்று வா! அதற்குள் நம் பணம் கிடைத்து விடும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
இந்தப் பிறவியில் நாம் இந்தியா திரும்பப் போவதில்லை என்று நினைத்திருந்த அப்துல்லா, ஷேக்கின் பெருந்ததன்மையை நினைத்து கண்ணீர் மல்க நன்றி கூறி ஏர்போர்ட் வந்தடைந்தார்.
தன் அலுவலக மொபைல் ஃபோனை பிஜூவிடம் ஒப்படைத்துவிட்டு “செக் இன்” செய்ய “புறப்பாடு” உள்ளே நுழைந்தார்.
அவ்வளவு மன உளைச்சலிலும் தான் வழக்கம்போல் செய்யும் ஒரு காரியத்தை செய்து விட்டு விமானம் ஏறினார்.
வீடு சேர்ந்த கணவனிடத்தில் இயல்பான உற்சாகம் மிஸ்ஸிங், மாறாக எதையோ பறி கொடுத்தது போல் இருக்கிறாரே என்பதை அறிந்த மனைவி கேள்விகளால் துளைக்க, மனைவியிடம் மெள்ள விஷயத்தை சொல்ல அது இடியாக இறங்கியது அவள் தலையில்.
கணவனின் தலைக்குள் இருக்கும் சுமையை படுக்கை அறையில் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள் பெண்கள். அதுவும் ஒரு வருடமாக தனித்திருந்த, பசித்திருந்த அப்துல்லாவின் ஆக்ரோஷம் கலந்த அபரிமிதமான தாம்பத்திய தாகத்தை வருடா வருடம் அந்த ஒரு மாத தேனிலவு வாழ்க்கையின்போது தணித்துக் கொண்டவள்தானே அவள்.
“இனி தோஹா போக வேண்டாம்; போனால் அவ்வளவுதான், திரும்ப மாட்டீர்கள்; வேலை போனால் போகிறது, மளிகைக் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்” என்ற மனைவியின் புலம்பலால் அப்துல்லாவின் மனம் அலைக்கழிந்தது.
சில நாட்கள் கழித்து, அப்துல்லாவின் கத்தார் மொபைல் ஃபோனிலிருந்து பிஜூவின் குரல் உற்சாக வெள்ளத்தில் ஒலித்தது.
“சாரே! “டியூட்டி ஃப்ரீ”யில் நீங்கள் வாங்கின லாட்டரி சீட்டிற்கு பத்து லட்சம் ரியால் “ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றார் பிஜு கும்மாளத்துடன்.
அப்துல்லாவால் நம்பவே முடியவில்லை.
“ஒருக்கால் பொய்யோ,” “தன்னை திரும்பவும் கத்தார் கொண்டு வருவதற்கு ஒரு சதியோ” என்று சந்தேகித்த அப்துல்லாவை, தோஹா நண்பர்கள் தொலைப்பேச்சு, “கல்ஃப் டைம்ஸ்” நாளிதழ் செய்தி. ”டியூட்டி ஃப்ரீ அதாரிட்டி”யின் கடிதம், அனைத்தும் பரிசுச் செய்தியை உறுதி செய்தன.
நாட்கள் பரபரப்புடன் பறந்தன. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வரவேண்டும், மீண்டும் கணவர் வீடு திரும்ப வேண்டும் என்று கண் கலங்கிய மனைவியைத் தேற்றிவிட்டு விமானம் ஏறி தோஹா வந்து “டியூட்டி ஃப்ரீ” அலுவலகத்தில் தன் பரிசு சீட்டைக் காண்பித்து அவர்கள் கேட்ட அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து பத்து லட்சம் ரியால் பரிசுத் தொகை செக்”கை நடுங்கும் கரங்களில் பெற்றுக் கொண்டார்.
முதல் வேலையாக ஷேக் ஆபீஸ் சென்று சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொண்டு அவரிடம் “ஷேக்! அல்லாவின் கருணைக்கு அளவில்லை! மீதி இருக்கும் ஏழு லட்சம் ரியால் (ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்) எனக்கு போதும்” என்று சொல்லி மூன்று லட்சம் ரியாலுக்கு ஒரு செக்கை எழுதி அவரிடம் கொடுத்தார்.
அப்துல்லாவை ஷேக் பாராட்டிவிட்டு “என் பணம் போனது போனதுதான்! அதை அல்லா எனக்கு எப்படியும் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”
அப்துல்லாவை நோக்கி “இது உன் பணம்! உனக்கு அல்லா அளித்தது; பணத்தை இழந்தபோது எந்த அளவிற்கு நரக வேதனை அனுபவித்திருப்பாய் என்பதெல்லாம், இறைவனுக்குத்தான் தெரியும்;” என்று கூறி மூன்று லட்சம் ரியால் செக்கை அப்துல்லாவிடமே திருப்பிக் கொடுத்தார்.
இப்படிப்பட்ட மனிதரிடம் நாம் வேலை செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிய அப்துல்லாவின் “பணியில் தொடர்கிறேன்” என்ற முடிவு அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது.
நாட்கள் நகர்ந்தன.
திருட்டு வழக்கில் தீவிரம் காட்டிய போலீஸ் முதற்கண், அனைத்து “மனி எக்ஸ்சேஞ்ச்” எனப்படும் அந்நியச் செலாவணி நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி கண்காணிக்க ஆணையிட்டனர்.
ஒருவரின் மொபைல் எண், “பதாக்கா” எண் போன்ற அத்தியாவசிய தரவுகள் சிறு பணப்பரிவர்த்தனைக்கும்கூட அவசியம் என்பதாலும், ஒரு மனிதனின் அனைத்து பணப்பரிவர்த்தனையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டதாலும் ஒற்றர்களின் ஒத்துழைப்பாலும் போலீசின் மதிநுட்பத்தாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவு பணம் மீட்கப்பட்டு ஷேக்கிடம் ஒப்படைக்கபட்டது.
அனைத்தும் முடிந்த பின்னரே செய்தி குற்றவாளிகளின் கண்கள் மறைக்கப்பட்ட படங்களுடன் ஊடகங்களில் வெளியாயின.
செய்தி அறிந்த அப்துல்லா, “ஷேக்! மிக்க மகிழ்ச்சி; இப்போதுதான் என் இதயபாரம் இறங்கியது; “நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.
அதை எதிர்பார்த்த ஷேக் “உனக்கும் வயதாகிறது! இனிமேலாவது வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவி” என்று நன்றிப் பெருக்குடன் விடை கொடுத்தார்.
ஏர்போர்ட்டில் “டியூட்டி ஃப்ரீ”யில் தேவையானதை வாங்கிக்கொண்டு விமானம் ஏறினார்.
இறுதியாக. ஆனால் இந்த முறை அவர் லாட்டரி டிக்கெட் வாங்கவில்லை.
