பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 46

63 நாயன்மார்கள் வரலாறு – 40 நரசிங்கமுனையரைய நாயனார்

“மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் திருத்தொகையில் புகழாரம் சூட்டுகிறார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றைப் பெற்றவர் இவர். குறுநில மன்னராக நடுநாட்டை ஆண்டவர் நரசிங்கமுனையரைய நாயனார். பழங்காலத்தில் திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என்று பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. திருமுனைப்பாடி நாட்டை முனையரையர் என்னும் வீரம் செறிந்த மன்னர்கள் ஆண்டனர். அதனால் முனைப்பாடி என்னும் பெயர் வந்தது. அந்த முனையரையர் என்னும் மரபிலே திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்கமுனையரைய நாயனார்.

நம்பிஆருரரை அன்பினால் மகன்மைக் கொண்டவரான இந்நாயனார் சிவபெருமான் மீது பெரும் பக்தியும், சிவனடியார்கள் மீது மதிப்பும், அன்பும் கொண்டிருந்தவர். தம் நாட்டின் அனைத்து சிவாலயங்களிலும் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார். கோயில் செல்வங்களைப் பெருக்கி, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார்.

வீரத்திலும் சிறப்பாக இருந்த இவர் நாட்டையும் பகைவரிடமிருந்து பேணிக்காத்து வந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு புரிவதையும் பெரும் பேறாகக் கருதி வந்தார். திருவாதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்வதோடு, நூறு பொன் நிதி தருகின்ற நியதியையும் கொண்டொழுகினார்.
ஒரு திருவாதிரைத் திருநாளன்று நரசிங்கமுனையரைய நாயனார் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிக் கொண்டிருந்தபோது நெற்றியில் திருநீறு அணிந்த சிவனடியார்கள் பலர், நரசிங்கமுனையரைய நாயனாரிடம் பரிசு பெற வேண்டி பூசையில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். அப்படி வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் தீராத நோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்ட ஒருவரும் இருந்தார். அவர் திருநீறு அணிந்திருந்தாலும் அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றதால் அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார்.
அந்த சிவனடியாரைக் கண்ட நரசிங்கமுனையரைய நாயனார், திருநீறு அணிந்த அந்த அடியாரின் புறத்தோற்றத்தைக் குறித்து எந்த விதமான கவலைகளும் கொள்ளாமல், அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவர் அணிந்திருந்த திருநீற்றுக்கு உரிய மரியாதையை வழங்கியவர், அவருக்கு நூறு பொன் காசுக்குப் பதிலாக அந்த அடியாருக்கு இருநூறு பொன் காசுகள் கொடுத்து, அவரை வணங்கி, இன்சொற்களால் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

சீலம் இலரே எனினும்

  திருநீறு சேர்ந்தாரை

ஞாலம் இகழ்ந்து அருநரகம்

  நண்ணாமல் எண்ணுவார்

பாலணைந்தார் தமக்கு அளித்தபடி

  இரட்டிப் பொன் கொடுத்து

மேலவரைத் தொழுது இனிய மொழி

  விளம்பி விடை கொடுத்தார்

திருநீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவனடியார்களுக்கு பணிசெய்தும், சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் பேறு பெற்றமையாலே, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து, மீளா நிலை பெற்றார்.

நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

நம்பிஆருரரை அன்பினால் மகன்மைக் கொண்டவர் நரசிங்கமுனையரைய நாயனார். ஒரு சமயம் நரசிங்கமுனையரைய நாயனார் திருநாவலூர் பெருமானைத் தரிசித்து விட்டு வீதிவலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சிறு தேர் உருட்டி விளையாடும் குழந்தையாக சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டார். சுந்தரமூர்த்தி நாயனாரின் அழகில் தன் உளம் பறிகொடுத்தவர், அந்த தெய்வக் குழந்தையை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற பேராவல் அவர் மனதில் உதித்தது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பெற்றோர்களான சடையநாயனாரும், இசைஞானியாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி, அதை திருநாவலூர் பெருமானின் விருப்பம் என்று வியந்து அவருடன் தங்கள் மகனை முழு மனதோடு தத்துக் கொடுத்து, அனுப்பி வைத்தார்கள். நரசிங்க முனையரைய நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணப் பருவம் அடையும்வரை சீறும் சிறப்புமாக வளர்த்து வந்தார்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *