63 நாயன்மார்கள் வரலாறு – 38 பொய்யடிமை இல்லாத புலவர்
சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகை ஏழாம் திருமுறைப் பதிகத்தில் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற புகழ்பெற்ற வரியை அருள்கின்றார். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பதின்மரைப் பற்றி பாடியுள்ளார். ‘பொய்யடிமையில்லாத புலவர் புராணம்’ என்பது அவற்றில் ஒன்று.
செய்யுள் நிகழ் சொல் தெளிவும்
செவ்விய நூல் பல நோக்கும்
மெய் உணர்வின் பயன் இதுவே
எனத் துணிந்து விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார்
மலர் அடிக்கே ஆளானார்
பொய் அடிமை இல்லாத புலவர்
எனப் புகழ் மிக்கார்.
பொய்யடிமை இல்லாத புலவர்கள் என்பவர்கள் அடியார்களும் சிவனருட் செல்வர்களுமாவர். பொய்யடிமை இல்லாத புலவர்கள் நுண்ணிய நூல்கள் பலவற்றை ஆராய்ந்தும், செவ்விய நூல்கள் பலவற்றைக் கற்றும் மெய்யுணர்வின் பயன் இதுவே என்று உணர்ந்தவர்கள். மிகுந்த அர்ப்பணிப்புடன் சித்தத்தை சிவன் பால் வைத்து வாழும் பெருமை மிக்கவர்கள். திருக்கயிலைப் பெருமானுக்கே ஆளானவர்களான இவர்கள் பாடல்களின் சொற்களுக்கு மிகத் தெளிவாகப் பொருள் உரைப்பவர்கள். அறிவார்ந்த அடியார்களான இப்புலவர்கள் கற்றவர்களுக்கு மட்டுமே வரம்பாக நிற்பவர்கள். நூல் பல கற்று நுண்மதி படைத்தோர் மெய்யுணர்வு கொண்டோரான இவ்வடியார்கள் சிவபெருமானை அன்றி வேறு எப்பேர்ப்பட்ட பொருளாயினும் பெரிதாக எண்ணாதவர்கள். மெய்யன்புடன் எம்பெருமானுக்கு அடிமை பூண்டவர்கள். பக்தி நூல்களை ஓதி உணர்ந்து உருகி, ஒருமைப்பட்டு நிற்பவர்கள். மெய்யன்புடன் சிவனடிக்கேத் தொண்டு பூண்ட அவர்கள் திருவருள் நெறி நின்று பெற்ற பெருமை அளவிடற்கரியது. அதுமட்டுமின்றி தவறாது வேத முறைப்படியிலான வேள்விகளைச் செய்து சிவனை வழிபட்டு வருபவர்கள். சிவபெருமானை அன்றி, வேறு எவரையும் புகழ்ந்து பாடாத சொற்திறம் மிக்க பெருமைக்குரியவர்கள்.
பொற்பு அமைந்த அரவாரும்
புரிசடையார் தமை அல்லால்
சொற்பதங்கள் வாய் திறவாத்
தொண்டு நெறித் தலைநின்ற
பெற்றியினில் மெய் அடிமை
உடையாராம் பெரும் புலவர்
மற்றவர் தம் பெருமையார்
அறிந்து உரைக்க வல்லார்கள்.
ஆங்கு அவர் தம் அடி இணைகள்
தலை மேல் கொண்டு அவனி எலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம்
செய்த தவம் அனையார்
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை
உணர் செயல் புரிந்த
பூங் கழலார் புகழ்ச்
சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்.
திருச்சிற்றம்பலம்
பொய்யடிமை இல்லாத புலவர்கள் புராணம் சொல்லும் கருத்து
ஏழாம் பாடலில், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!’ என்று சுந்தரர் கூறியுள்ளது தனியடியார்களையா? தொகையடியார்களையா? என்கிற ஆய்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.1,300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ வரிக்கு உரியவர் யார் என்ற தேடல் இன்றும் தொடர்கிறது.
‘வேண்டுவோர்க்கு வீடுபேறளிக்கும் அற்புதத் திருத்தலமான திருப்புகலூர் ஆலயத்தில் செங்கற்கள் பொன்கட்டிகளாக மாறிய திருவருள் அதிசயம் நடந்தது. அதையே சான்றாகக் கொண்டு, பூவுலகில் மண்ணாளும் வேந்தர்களைப் புகழ்ந்துபாடி வீணாய் பொழுதைக் கழிக்காமல் புகலூரில் உறைந்துள்ள இறைவனைப் பாடுங்கள், எண்ணியதைப் பெறலாம்’ என்ற வேறொரு பாடலில் சுந்தரர் பெருமானின் விளக்கமே விடையாகிறது.
இது குறித்து பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம், அவர்களின் விளக்கத்தையும் அறிவோம்:
முதற் செய்யுளின் பொருள்: பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் யார் என்றால், தாம் அருளிய செய்யுளில் தோன்றும் ஒவ்வொரு சொல்லும் (நிகழ் சொல்) பொருள் தெளிவுடன் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து) உரைப்பவரும், செவ்விய நூற்கள் பலவும் உணர்த்த முயலும் பயன் சிவபெருமான் திருவடிப்பேறே என்று விளங்கி உணர்ந்து, அம் மைஅணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானவர் அவர் ஆவார்.
இரண்டாம் செய்யுளின் பொருள்: ‘அப்பொய்யடிமை இல்லாத புலவர், பொற்பமைந்த புரிசடை வள்ளல்‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ வாழ்வோரில் முதன்மையானவராம் பேறு பெற்றதால், மெய் அடிமை உடைய பெரும் புலவர் ஆவார்; அன்னாரின் பெருமையை அறிந்து உரைக்க யாரால் இயலும்?’ என வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற திருவாக்குக்கு, ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்’ என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் பாடலை ஏற்றுக் கொள்ளாத சேக்கிழார் பெருமான், அவர்தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபட, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்” என்று தம் சொற்பதங்களால் பரமனைப் பாடுவதற்கல்லால் வாய்திறவா தொண்டுநெறி வாழ்வோரில் முதன்மையானவர் அம் மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று உறுதிபடக் கூறியதால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ தனியடியாரே என்று திண்ணமாகக் கூறிவிட்டார் சேக்கிழார் பெருமான்.
இயற்பெயரைக் குறிக்காது, ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ என்ற சிறப்புப் பெயரால் சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருத்தொண்டர் தொகை’யில் சிறப்பித்துப் பாடியது ஒரு தனியடியாரையே என நிறுவிய சேக்கிழார் பெருமான், அப்பொய்யடிமையில்லாப் புலவரின் சிறப்புத் தகுதிகளை விரித்தும் விளக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் தம் ‘திருத்தொண்டர் தொகை’யில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் வேறு தனியடியார்களை இயற்பெயர் குறிக்காது சிறப்புப் பெயரால் குறித்துள்ளாரா என்ற இயல்பான கேள்விக்கான விடைகளே சேக்கிழாரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் செய்திகளாம். நாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘திருத்தொண்டர் தொகை’யிலேயே இக்கேள்விக்கான விடையைத் தேடலாம்.
‘திருத்தொண்டர் தொகை’யை உற்று நோக்கினால், இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப்போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று அந்நாயன்மார்களின் அரும்பெரும் செயல்கள், இயல்புகளால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறித்துள்ளதைக் காணக் கிடைக்கின்றன. இங்ஙனம் தனியடியார்கள் பலரையும் இயற்பெயரால் குறிக்காமல் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார் என்பது முக்கியமான செய்தியாகும்.
திருச்சிற்றம்பலம்

Leave a Reply