பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 45

63 நாயன்மார்கள் வரலாறு – 39 புகழ்ச் சோழ நாயனார்

பொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்

    போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே

யழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே

    லடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த

தழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன்

    சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்

கழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த

    கனன்மூழ்கி யிறைவனடி கைக்கொண்டாரே.

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில், “பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்” என்று புகழ்கிறார்.

 இமயமலையின் நெற்றியின் செங்குத்துப் பாறைகளில் தங்கள் புலிக் கொடியைப் பறக்கவிட்டு தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியவர்கள் சாகசப் பிரியர்களான சோழர்கள். சோழ மன்னர்களின் பல தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய திருச்சிக்கு அருகிலுள்ள உறையூர், உறந்தை, கோழியூர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.

தலைநகரமாக இருந்த உறையூரில், நான்கு படைகளைக் கொண்ட அரசப் படையின் தொடர்ச்சியான நடமாட்டம் இருந்தது. அந்த நகரம் அழகிய உயரமான வீடுகளின் வரிசைகளையும், வணிகத் தெருக்களையும், யானைகள் பல உடைய சாலைகளையும், உயர்ந்த மதில்கள், கூட கோபுரங்கள், தேவர்கள் உலா வரும் சாலைகள் போன்ற சிறப்புகளைக் கொண்டிருந்தது. இந்த நகரத்தின் மையத்தில், ஒரு கிரீடத்தைப் போல, பிறை அலங்கரிக்கப்பட்ட கடவுளான பஞ்சவர்ணேசுவரர் கோயில் இருந்தது. அவர் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணங்களில் காட்சியளித்தார். இது இப்போது திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த புகழ்ச்சோழர் கருவூரில் எழுந்தருளியிருக்கும் ஆனிலை என்ற கோயிலுக்குச் சென்று பசுபதீச்சுரரை இடையறாது வழிபட்டு திருப்பணிகள் பல செய்து வந்தார்.

தில்லையம்பதியில் எண்ணிலாத் திருப்பணிகள் செய்து புகழ் பெற்றவரான, அனபாயச் சோழனுடைய திருக்குலத்திற்கு மூதாதையாக விளங்கியவர் புகழ்ச் சோழர் என்ற மாமன்னர். புகழ்ச் சோழ நாயனார் சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுப்பித்து, அன்றாட வழிபாடுகள் சிறக்கவும் ஏற்பாடு செய்து வந்தார். தொண்டர்களின் உதவியால் திருத்தொண்டுகள் பலவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட இத்திருத்தலம் ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றது. இவர் கொங்கு நாட்டிலும், மேல் திசையில் உள்ள ஏனைச் சிற்றரசர்களும் கப்பங்களைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதனால் சோழர்களின் உரிமைத் தலைநகரங்களின் ஒன்றான கருவூரைத் தன் சுற்றத்துடன் அடைந்தார். கரூரில் பசுபதீசுவரரை பல காலம் வழிபட்டார். அதன் பின்னர் அரண்மனை சென்று அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளினார். சிற்றரசர்கள் கொண்டு வந்த யானைகள், குதிரைகள், பொன்மணிகள் முதலிய திறைப் பொருட்களையெல்லாம் கண்டார். நிறைகொண்டு வந்த மன்னர்களின் நிலைக்கு ஏற்ப செயல் உரிமைகளைத் தந்தார். அந்த சிற்றரசர்களைப் பார்த்து, தமது ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருக்கின்ற அரசர்கள் இருந்தால், அவர்கள் யார் என்ற விவரம் அளிக்குமாறு கேட்டார். அதற்கு அவ்வரசர்கள், முறையாகத் திறை செலுத்தாத மன்னன் அதிகன் என்பவன் என்றனர். பெரிய மதில்கள் சூழ்ந்த நகரில் இருந்துகொண்டும் திறை செலுத்தவில்லை என்றனர். அவன் தனது நான்கு மடங்கு படையை எதிரியின் கோட்டையை ஆக்கிரமிக்கக் கட்டளையிட்டான். புகழ்ச் சோழனின் வலிமையும் வீரமும் நிறைந்த படை, கோட்டையையும் எதிரியையும் எளிதாகக் கைப்பற்றியது. அதிகன் காட்டில் ஓடி ஒளிந்தான்.

 அவர்கள் தங்கள் வீரத்தை மன்னனுக்குக் காட்டுவதற்காகக் குவியல் குவியலாகத் தலைகளைக் கொண்டு வந்தனர். அந்தத் தலைகளின் நடுவே ஒரு தலையில்  சிவ பக்தனின் அடையாளமான சடைமுடியும், திருநீறும் கண்டார்.

கண்ட பொழுதே நடுங்கி

  மனம் கலங்கிக் கைதொழுது

கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து

  எதிர் சென்று அது கொணர்ந்த

திண்டிறலோன் கைத் தலையில்

  சடை தெரியப் பார்த்தருளிப்

புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து

  இழியப் புரவலனார்.

செங்கோலின்வழி நிற்பச் சிவநெறி தழைக்க அரசு புரிந்தவர், சடைமுடியைக் கண்ட மாமன்னர் மனம் நடுங்கினார். அருவியென கண்களில் நீர் பொழிந்தது. சடாமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்ட புகழ்ச் சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. தாம் திருநீற்று நெறி காத்து ஆண்ட அழகு இதுவல்லவே என்று தம்மையே இகழ்ந்து கொண்டார். தாம் அரசாட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டதாகப் புலம்பியவர், அமைச்சர்களை நோக்கி, “இந்நாட்டை ஆளுமாறும், சிவத்தொண்டைத் தவறாது நடத்துமாறும் என்னுடைய மகனுக்கு முடிசூட்டுங்கள்” என்றார். தாம் செய்த இந்த பழிக்குத் தீர்வு தாமே காரணமாகி அக்கினியை வளர்ப்பித்தார். தம் உடல் முழுதும் திருநீறு பூசிக்கொண்டு, திருச்சடையையுடைய தலையை பொற்தட்டில் கிடத்தி தலைமேல் அத்தட்டைச் சுமந்து கொண்டு திருவைந்தெழுத்தினை ஓதிக்கொண்டு அக்கினியை வலம் வந்து மகிழ்ச்சியுடன் அக்னி பிழம்பினுள் இறங்கினார். இறையருளால் அப்போது வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச் சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்து முக்தி அடைந்தார். சைவ நெறி தழைக்கத் தம் உயிரையே தியாகம் செய்த இந்த மகான் நாயனார் என்று போற்றப்படுகிறார்!

புகழ்ச் சோழ நாயனார் புராணம் சொல்லும் கருத்து!

ஒரு நாள் சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் சிவனுக்குச் சாத்தக் கொணர்ந்த பூக்குடலையைப் பட்டத்து யானை சிதறிய குற்றத்திற்காக அந்த யானையையும், பாகரையும் கொன்று நின்ற எறிபத்த நாயனாரை அடைந்து தம்முடைய உடைவாளைத் தந்து “யானை செய்த குற்றம் என்னையே சேரும். ஆகவே என்னையும் கொல்லும்” என்று எறிபத்த நாயனாரிடம் உறைவாளை வழங்கினார். அப்போது இறைவன் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். யானையும் பாகரும் உயர் பெற்றெழும்படி புகழ்ச் சோழ நாயனார் பக்தியில் சிறந்து விளங்கினார்.

அக்கால மன்னர்கள் போரிட்டு தங்கள் இராச்சியங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவது வழமையான செயல் என்றாலும், சடைமுடியுடன் ஒரு அடியாரின் தலையைப் பார்த்த பிறகும், தன் புகழ் களங்கப்பட்ட நிலையில் தான் எப்படி அதன் பிறகும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று புகழச் சோழன் குற்றவுணர்வில் மூழ்கினார். மிகுந்த துயரத்துடன், தன் மகனான புதிய மன்னனுக்கு முடிசூட்டி, அவனை இறைவனின் நெடுவழியில் வழிநடத்துமாறு கட்டளையிட்டார். அமைச்சர்களும், குடிமக்களும் பெரும் துயரத்துடன் இருக்கும் வேளையில் தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் தீர்மானித்தார். பெயருக்கு ஏற்றவாறு தன் புகழ் உச்சத்தை அடைந்த நிலையில் இறைவனின் திருவடிகளை அடைந்தார்.

அரசனாக இருப்பினும், இறைமை என்பது தன்பரிசனம், பகைவர், கள்வர், தீவிலங்குகள் போன்றவற்றால் குடிமக்களுக்குத் தீங்கு நேராமல் காப்பதே சிறந்த அறமாகும். அது,

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர் காக்குங்காலைத்

தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மா லானபய

மைந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ”

என வரும் மநுநீதி கண்டபுராணச் செய்யுளால் விளங்குகிறது.

சிவன் பண்பே தம் பண்பாகக் கொண்டு உலாவும் நடமாடும் சிவங்களாகிய சிவனடியார்களுமே தம் வாழ்வின் பெருந்தவம் என்று எண்ணுபவர்கள்,  இவற்றுக்கு நேரும் நிந்தை முதலிய தீங்குகள் நேரடியாகவே அரசன் கேட்டிற்குக் காரணமெனப்படுதலினாலும் அது வலுவுறும். அவ்வாறாதல் திருமந்திரத்தில்,

முன்னவனார்கோயிற் பூசைகள் முட்டிடின்

மன்னற்குத் தீங்குள வாரி வளங்குன்றும்

கன்னங்களவு மிகுத்திடுங் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத்தானே”

என்று உரைக்கப்படுகிறது.

திருவாதவூரடிகள் புராணத்தில், வையைப் பெருக்கினால் தளர்வுற்ற பாண்டிய மன்னனைப் பற்றி சொல்லும்போது,

 “ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை

பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ

நீதியாந் தவத்தின் மிக்கார் நெஞ்சம் புழுங்க மண்மேல்

நீதியாஞ் செய்ததுண்டோ செப்புமினமைச்சரென்றான்”

என்று வருவதால் அறியப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று புகழ்ச் சோழ நாயனாரின் குருபூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *