Category: சட்ட ஆலோசனைகள்

சட்ட ஆலோசனைகள் நாகபூஷணம்

  • சட்ட ஆலோசனைகள் (20)

     

    மோகன்குமார்
     
    கேள்வி: கார்த்திகேயன்
     
     
    ஐயா,

        வணக்கம், என்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீட்டை இரு பங்குகளாக தாத்தாவும் அவருடைய அண்ணனும் பிரித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் செல்ல ஒரு பொதுப் பாதை அமைத்துக் கொண்டார்கள். தாத்தாவின் அண்ணன் அப்பாதையை (பெரிய தாத்தா) பத்திரத்தில் குறிப்பிட்டு பிரிவில்லாத பாதி பாத்தியம் என்று எழுதி இரண்டு பத்திரங்களாக பதிவு செய்தனர். இப்போது என்னுடைய தாத்தாவின் அண்ணன் (பெரியதாத்தா) மகள் அவர்களுடைய பாக வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கும் போது எங்களிடம் கேட்கவில்லை. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அந்தப் பாதையை பின்னால் இருக்கும் எங்கள் வீட்டின் வாசல் முடிவு வரை உரிமை கோர முடியுமா? அல்லது அவர் வாங்கிய வீட்டின் அளவு வரை பாதையை உரிமை கோர முடியுமா? ஏனெனில் அவருக்கு ரோட்டின் மீது வாசல் உள்ளது ஆனால் எங்களுக்கு அப்பாதைதான் ஒரே வழியாக உள்ளது. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அப்பாதையை எதுவரை உரிமை கோர முடியும்? அல்லது பாதி அளவு மறைக்க உரிமை உள்ளதா? சட்டம் அதற்கு என்ன சொல்லுகிறது.
     
    பதில்:
     
    உங்கள் வீட்டருகில் முன்னே உள்ள இடத்தை வாங்கிய நபர் நீங்கள் செல்ல முடியாத படி முழுதும் மறைத்து கட்டிடம் கட்ட முடியாது. இரண்டு வீட்டுக்கும் பொதுவான நடைபாதை மீது இருவரும் செல்ல உரிமை உண்டு. இதற்கு பெயர் ஈஸ்ட்மென்ட்  உரிமை. இதன்படி நடந்து செல்ல இருக்கும் வழியை மறித்து ஒருவர் தனக்கான வீடு கட்டிக் கொள்ள முடியாது
     
    மேலும் முதலில் இரு வீடாக பிரித்த பார்டிஷன் டீடை எடுத்து படித்துப் பார்க்க வேண்டும். அதிலேயே இந்த நடைபாதை இருவருக்கும் பொதுவானது என்று குறிக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்படி குறிப்பிட்டிருந்தால், முன்னர் வீடு வைத்திருக்கும் நபருக்கு தனது வீட்டுக்கு முன் உள்ள இடத்துக்கு முழு உரிமை கிடையாது. குறிப்பாய் அங்கு பில்டிங் கட்ட உரிமை வராது.
     
    மேலும் விபரங்களுக்கு உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரை இது சம்பந்தமான டாக்குமெண்டுகளுடன் அணுகுங்கள்

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (19)

    மோகன் குமார்

    கேள்வி: முரளி தரன், மடிப்பாக்கம் 

    எங்கள் தந்தை ஒரு கிரவுண்டில் வீடு வைத்திருந்தார். அவர் மரணத்துக்கு பின் அந்த வீட்டை அண்ணன்- தம்பியான நாங்கள் இருவரும் பிரித்து கொண்டோம். இப்போது வீடு எங்கள் இருவர் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டில் நான் மட்டும் குடியிருக்கிறேன். எனது அண்ணன் இன்னொரு இடத்தில் உள்ளார். 

    இந்த வீடு பழசாகி விட்டதால், இதனை இடித்து விட்டு புதிதாக இங்கு வீடு கட்டி கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால் எனது அண்ணன் தற்போது வீடு கட்டி கொள்ள போவதில்லை. 40 X 60  உள்ள இந்த இடத்தை வீட்டுடன் சேர்த்து நாங்கள் பிரித்து கொள்ள முடியுமா? 

    பதில்:  

    உங்கள் தந்தை இறந்த பின் அவரது உயில்படி, வீடு அவரது வாரிசுகளுக்கு வந்துள்ளது. அதை நீங்கள் ஏற்கனவே உங்கள் இருவர் பெயருக்கும் மாற்றி கொண்டு விட்டீர்கள். இப்போது அதே சொத்தை சரி பாதியாக பிரித்து கொள்ள நினைக்கிறீர்கள். 

    இப்படி பிரிக்கும் போது ஒரு பக்கம் வீட்டின் கட்டிடம் அதிகமாகவும், இன்னொரு பக்கம் காலி இடம் அதிகமாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதில் அண்ணன் -தம்பிக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றால் நீங்கள் நிலத்துடன் இருக்கும் ஒரு கிரவுண்ட் வீட்டை அப்படியே இரு பாதியாக பிரித்து கொள்ளலாம். உங்கள் இருவருக்கும் இடையே ஒரு அக்ரிமென்ட் போல் போட்டு அதில் அனைத்து தகவல்களும் சொல்லி இருவர் பெயரிலும் தனித்தனியே பிரித்து எழுதி கொள்ளவும்.

    இதனை பிறகு ரிஜிஸ்டரும் செய்து விட்டால் இடம் இருவருக்கும் தனித்தனியே கிடைத்து விடும். 

    மேலும் சந்தேகம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை அணுகவும் 

     

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (18)

    மோகன் குமார்

    கேள்வி: விஸ்வேஷ்  , ராமாபுரம் 

    நாங்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒரு பில்டரிடம் புக் செய்தோம். அப்போது அட்வான்ஸ் பணம் தருமாறும் அரசுடைமை ஆன வங்கி மூலம் லோன் பெறலாம் என்றும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் முதல் அட்வான்ஸ் பணமும் பின் அடுத்தடுத்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்து வந்தோம்.

    இப்போது குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பிளான் அப்ரூவல் இல்லை என்றும், அதனால் அரசுடைமை ஆன வங்கிகள் லோன் தராது, தனியார் வங்கியில் லோன் பெற்று தருகிறேன் என்கிறார். எங்களுக்கு பிளான் அப்ரூவல் இல்லாமல் அந்த வீட்டை வாங்க விருப்பமில்லை. நாங்கள் இதுவரை பத்து லட்சத்துக்கும் மேல் பணம் தந்து விட்டோம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? 

    பதில்:  

    வீடு புக் செய்யும் போது பிளான் அப்ரூவல் பற்றி என்ன கூறினார்? அப்போது பிளான் அப்ரூவல் உள்ள கட்டிடம் என்று எழுத்தில் தந்துள்ளாரா?  

    பிளான் அப்ரூவல் ஆகாத வீட்டை உங்களுக்கு விற்க முயல்வதும், அந்த தகவலை உங்களிடம் முதலில் மறைத்தும் அவரது தவறு தான்.  பிளான் அப்ரூவல் இல்லாத வீட்டை வாங்க  விருப்பம் இல்லை என்றும், நீங்கள் கட்டிய பணத்தை உடன் வட்டியுடன் திருப்ப தருமாறும் அவருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்புங்கள். 

    அவர் அதன் பின் உங்கள் பணத்தை தராவிடில் நீங்கள் கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நீங்கள் போட்ட அக்ரீமென்ட் செல்லாது என்றும், தவறான தகவல்கள் தந்து உங்களுக்கு இந்த வீட்டை விற்றுள்ளார் என்றும் நிரூபிக்க வேண்டியிருக்கும். 

    உடனடியாக நீங்கள் இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் உங்களுக்கு நம்பிக்கையான வழக்கறிஞரை அணுகவும்.

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (17)

    மோகன் குமார்

    கேள்வி : சுதாகர் சென்னை 

    வணக்கம். என் பெயர் சுதாகர். என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டைஇடுகிறான். அதனால் அந்த சொத்தை என் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்று கொடுக்கும் படி கூறினார். தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான். தயவு செய்து உரிய ஆலோசனை கூறவும்.

    பதில் : 

    ஒரு தந்தை சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார். இன்னொரு மகன் அங்கு இருந்து கொண்டு காலி செய்ய மாட்டேன் என்று சொத்தில் உரிமை கோருகிறார். 

    தற்போது சொத்து உங்கள் தந்தை பெயரில் உள்ளது என்கிறீர்கள். உங்கள் தந்தை குறிப்பிட்ட நபரை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அவர் ஒரு Permissive occupier தான். அவரை தற்காலிகமாக தான் அங்கு தங்க அனுமதி தரப்பட்டது என்றும், உடனடியே தங்கள் உபயோகத்துக்கு தேவை என்பதால் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்புதல் நலம்.  

    அவர் காலி செய்யாத பட்சத்தில்  Ejection -க்கு   வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும். முதலில் செய்ய வேண்டியது அவருக்கு நோட்டிஸ் அனுப்பவது தான். 

    நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கவும். 

    **********

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (16)

    மோகன்குமார்
     
    கேள்வி: ரவிச்சந்திரன் சென்னை
     

    வணக்கம்.  எனது தந்தையின் தந்தை (தாத்தா)வின் பெயரில் ஒரு வீடு உள்ளது.  அதில் எனது அண்ணன் தற்காலிகமாக குடிஇருந்தார். அப்போது அவர் வீட்டு வரி கட்டினார். அதில் வரி கட்டியவர் என அவர் பெயர் போட்டு, பின்பு அவர் பெயர் மட்டும் வருவது போல் செய்து இருக்கிறார். தற்போது அந்த வீட்டை தனக்கே உரிமை என்றும் அவருக்கே தர வேண்டும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார்.  

    நாங்கள் நான்கு  சகோதரர்கள். என்ன செய்வது? 

    பதில்: 

    உங்கள் தாத்தா சொத்தில் உங்கள் அண்ணன் இருந்து கொண்டு அவர் பெயரில் வரி கட்டுவதாக கூறி உள்ளீர்கள். உங்கள் தந்தை பற்றி ஏதும் சொல்லவில்லை. உங்கள் தாத்தா உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என கருதுகிறேன். 

    மற்ற சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து சொத்தை பாகப்பிரிவினை செய்து தரச் சொல்லி அவர் மேல் வழக்கு தொடர்வது தான் இதற்கு சிறந்த வழி. இப்படி வழக்கு தொடர்ந்தாலே அவர் இறங்கி வர வாய்ப்புண்டு. 

    வழக்கு நடக்கும் போது அவர், தான் தான் வரி கட்டுவதாகக் கூறினால். அவர் தான் மூத்த  மகன் எனில் வரி அவர் பெயரில் கட்ட நீங்கள் தற்காலிக அனுமதி தந்ததாகக்  கூறலாம். 

    நீங்கள் அவசியம் உங்களுக்கு தெரிந்த நல்ல வழக்கறிஞரை நாடி உடனே வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள்.

    Share