சட்டம் ஆலோசனைகள் (19)
மோகன் குமார்
கேள்வி: முரளி தரன், மடிப்பாக்கம்
எங்கள் தந்தை ஒரு கிரவுண்டில் வீடு வைத்திருந்தார். அவர் மரணத்துக்கு பின் அந்த வீட்டை அண்ணன்- தம்பியான நாங்கள் இருவரும் பிரித்து கொண்டோம். இப்போது வீடு எங்கள் இருவர் பெயரில் இருக்கிறது. இந்த வீட்டில் நான் மட்டும் குடியிருக்கிறேன். எனது அண்ணன் இன்னொரு இடத்தில் உள்ளார்.
இந்த வீடு பழசாகி விட்டதால், இதனை இடித்து விட்டு புதிதாக இங்கு வீடு கட்டி கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால் எனது அண்ணன் தற்போது வீடு கட்டி கொள்ள போவதில்லை. 40 X 60 உள்ள இந்த இடத்தை வீட்டுடன் சேர்த்து நாங்கள் பிரித்து கொள்ள முடியுமா?
பதில்:
உங்கள் தந்தை இறந்த பின் அவரது உயில்படி, வீடு அவரது வாரிசுகளுக்கு வந்துள்ளது. அதை நீங்கள் ஏற்கனவே உங்கள் இருவர் பெயருக்கும் மாற்றி கொண்டு விட்டீர்கள். இப்போது அதே சொத்தை சரி பாதியாக பிரித்து கொள்ள நினைக்கிறீர்கள்.
இப்படி பிரிக்கும் போது ஒரு பக்கம் வீட்டின் கட்டிடம் அதிகமாகவும், இன்னொரு பக்கம் காலி இடம் அதிகமாகவும் இருக்க வாய்ப்புண்டு. அதில் அண்ணன் -தம்பிக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றால் நீங்கள் நிலத்துடன் இருக்கும் ஒரு கிரவுண்ட் வீட்டை அப்படியே இரு பாதியாக பிரித்து கொள்ளலாம். உங்கள் இருவருக்கும் இடையே ஒரு அக்ரிமென்ட் போல் போட்டு அதில் அனைத்து தகவல்களும் சொல்லி இருவர் பெயரிலும் தனித்தனியே பிரித்து எழுதி கொள்ளவும்.
இதனை பிறகு ரிஜிஸ்டரும் செய்து விட்டால் இடம் இருவருக்கும் தனித்தனியே கிடைத்து விடும்.
மேலும் சந்தேகம் இருந்தால் ஒரு வழக்கறிஞரை அணுகவும்