63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

 

திருஞானசம்பந்தர் வரலாறு

`வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

என்று சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், இவர் வரலாற்றை முதன்முதலில் குறிப்பிட்டு அருளியதோடு, திருஞானசம்பந்தர் பெருமைகளைத் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களிலும் போற்றிப் பாடியுள்ளார். நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர் வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் தெளிவுற விளக்கியுள்ளார். பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவரான திருஞானசம்பந்தர் பெருமானின் அருள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்.

சிவநெறி செழித்தோங்கிய சீர்மிகு திருப்பதியாம் சீர்காழி எனும் அருள் நகரில் அவதரித்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகள். ஊழிக்காலத்தே உலகெலாம் அழிந்தாலும், பன்னிரண்டு ஊழியிலும் அழியாது அடியாருக்கு அருள் சுரக்கும் அருட்பதியாகி நின்றமையால், பிரமபுரம், புகலி, வேணுபுரம், தோணிபுரம், சீரபுரம், சீர்காழி, வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம் எனும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டது இவ்வூர்!

 

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

அந்தணர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர், அவர்தம் அருமைத் துணைவியார் பகவதியார் எனும் இல்லறத்தை நல்லறமாகக் கருதி, இறைவழிபாடு, அடியார் வழிபாடு, குருவழிபாடு ஆகிய முத்திற வழிபாட்டிலும் சிறந்து விளங்கும் அருட்பேராற்றல் பெற்ற இணையருக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தவர், திருஞானசம்பந்தர். வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்த தமிழகத்தில் அப்போது சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. இதனைக் கண்டு மனம் நொந்த சிவபாத இருதயர் இந்த மன்பதை வாழ, சிவநெறி உலகெலாம் பரவி தமிழ்ச் சமுதாயத்தை தழைத்தோங்கச் செய்யவும், தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் காக்க நல்லதொரு ஞானக்குழந்தை ஒருவரைத் தங்களுக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டித் தவம் புரிந்தனர். இறைவனின் இன்னருளால் பகவதியாரும் கருக்கொண்டு, சைவமே அவ்வம்மையார் மணி வயிற்றில் உருக்கொண்டது!

வேத நெறி தழைத்து ஓங்க

  மிகு சைவத் துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியப் புனித

  வாய் மலர்ந்து அழுத

சீத வள வயல்

  புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக் கொண்டு

  திருத் தொண்டு பரவுவாம்

ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ் மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அனைத்துயிர்களும் மகிழ்வுற்றன. திருப்பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் போன்று அனைத்துச் சடங்குகளும் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் அத்தெய்வக் குழந்தைக்கு  இறையன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி வளர்த்து வந்தார். குழந்தையின் அழுகையை சேக்கிழார் பெருமான் புனிதவாய் மலர்ந்தருளினார் என்று அழகாகக் குறிப்பிடுகிறார். ஆளுடையப் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார். நீடுதுயில் கொண்டுள்ள சைவத்தைச் சிவநெறியைத் தட்டி எழுப்பித் தரணிக்கெல்லாம் பரப்ப வந்த செந்தமிழ்ச் செல்வனுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தால் சிவநெறி தழைக்க, சைவம் சிறக்கக் கால தாமதமாகும் எனக் கருதியதால் சேக்கிழார் பெருமான் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கவில்லை போலும்!

ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வழக்கம்போல் தம் வழிபாட்டு நெறியினைச் செய்வதற்கு, வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்.

கண் மலர்கள் நீர் ததும்பக்

  கைம் மலர்களால் பிசைந்து

வண்ண மலர்ச் செங்கனிவாய்

  மணி அதரம் புடை துடிப்ப

எண்ணில் மறை ஒலி பெருக

  எவ் உயிரும் குதூகலிப்ப

புண்ணியக் கன்று அனையவர்

  தாம் பொருமி அழுதருளினார்

தந்தையாரும் தம் மைந்தனை உடனழைத்துக் கொண்டு சென்று பிரம்ம தீர்த்தக்கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தையைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து அழுதருளினார். அருளுடையப் பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளிய வேளையில் எம்பெருமான் உமையம்மையிடம் `அழுகின்ற பிள்ளைக்குத் தன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டப் பணித்தார். அம்மையாரும் அவ்வாறே சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார்.

குளித்து முடித்து வந்த தந்தை குளக்கரையில் தங்கள் தவச்செல்வன் கையில் பொற்கிண்ணத்துடன், எச்சிற்பால் உண்ட வாயும், இன்ப நடம் புரியும் பாங்கைக் கண்டு சினந்தவர், அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்த எச்சில் பால் இது என்று வெகுண்டு கையை ஓங்கினார்.

போதையார் பொற்கிண்ணத்து

அடிசில் பொல்லாதென

தாதையார் முனிவுறத்

தான் எனை ஆண்டவன்

காதையார் குழையினன்

கழுமல வளநகர்ப்

பேதையாள் அவளொடும்

பெருந்தகை இருந்ததே

 

எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி

உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)

அண்ணலை அங்கு அழுகைதீர்த்து

அங்கணனார் அருள்புரிந்தார்.

 

 

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்

உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்

தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

எனச் சேக்கிழார் பெருமான் போற்றி உரைத்தலைக் காணலாம்.

தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

        காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ

        னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

        பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே”

சிவஞானச்சம்பந்தப் பெருந்தகையார், தலைக்குமேல் கையைத் தூக்கி வேண்டியபடி தம் சிறு விரல்களால் எதனாலும் கட்ட முடியாத பரம்பொருளைச் சுட்டிக்காட்டி தம்மெதிரேத் தோன்றிய தோணிபுரத்து இறையை தம் தந்தையாருக்கு அடையாளம் காட்டினார். ஞானக்குழந்தை தாம் பாடிய முதல் பதிகத்தின் முதல் அடியிலேயே தமிழ் மொழியைத் தலைக்கேற்றி மந்திரங்களுக்கெல்லாம் மூலக்கூறாகிய, ‘ஓம்’ எனும் ஓங்காரத்தினைத் தமிழ் என்றும் பெயரின் முதல் எழுத்தாம், ‘த’ மெய்யுடன் இசைத்துத் ‘தோ’ எனத் தொடங்கிப் பாடினார். தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தனக்கு ஞானப் பாலளித்த உமை அம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் `தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அதனைக் கேட்ட தந்தையார் சிவபாத இருதயர் தாம் அடிப்பதற்காக ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழும் வண்ணம் வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தப் பெருமானை அழைத்துக்கொண்டு ஆலயம் சென்று  எம்பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார். இச்செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் தம் இல்லம் சென்றடைந்தார்.

உமையம்மையார் அளித்த ஞானப்பாலை உண்ட திருஞானச்சம்பந்தர் திருநெறியத் தமிழ் பாடி தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்தவர் மறுநாட் காலையில் துயிலெழுந்து நீராடி ஈசனை வணங்கிப் போற்றி, தன் தாய்வழிப் பாட்டனார் ஊரான நனிபள்ளி முதலிய ஊர்களை வணங்கி பின்பு சீர்காழி சேர்ந்தார். `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீர்காழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரையாகும்.

 

சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை எழ அத்தலத்தை தம் தந்தையாரின் தோளில் மீதேறி அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தை அழகுற தம் பிஞ்சுக் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். அதனால் பிள்ளையார் தம் பிஞ்சுக்கரங்கள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம்பந்தப் பெருமானார்க்கு அளித்தருளினார். அவரும் அத்தாளத்தைத் தலைமேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிய அத்திருத்தலமே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தல யாத்திரையாகும். அவ்வாறு திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தப் பெருமான் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் பரவியவர் பின்னர் தம் மாளிகையைச் சென்றடைந்தார். நம் தமிழ்ச் சமுதாயத்திற்குச் சிவனடி பரவும் ஒரு நெறியே தம் திருநெறி எனப் போர்முரசு கொட்டி வழிப்படுத்தினார்.

 

திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புதத்தைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீர்காழிப் பதியை அடைந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீலகண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து மகிழ்ந்தார். பின்னர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றடைந்தார். தென் திசைவாயில் வழியே ஆலயத்திற்குள் சென்றவர் பேரம்பலத்தைக் கண்டு வணங்கியவர், `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

செல்லும் வழியில் திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தை அடைந்தபோது திருநீலகண்ட யாழ்ப்பாணர் அப்பதி அவருடைய பதி எனக் கூறக் கேட்ட சம்பந்தப் பெருமான் மாதவம் செய்த பதி அது என்று கூறி மகிழ்ந்தார்.

ஞானசம்பந்தர் எருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் திருபெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல்வாயில் அரத்துறை செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல் அமர்ந்து செல்ல மனம் இன்றித் திருவடி நோக நடந்தே வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறை அணுகியபோது மாலை நேரம் நெருங்க, வழி நடந்த களைப்பு ஏற்பட்டதால் ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார்.

அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் களைப்பை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி `ஞானசம்பந்தன் தம்மைக் காண வருகிறான் என்றும், அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளதாகவும், அவற்றை எடுத்துச் சென்று கொடுத்து பாலகனை அழைத்து வரப் பணித்தார். எம்பெருமான் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி தாம் அளிக்கும் பொருள்களை ஏற்றுக்கொண்டு வருக` எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப்பொருட்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து “எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால், இறையருளை வியந்து அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார்.

 

தொடரும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.