image0 (1)

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

நீண்டநாள் வாழ நெஞ்சம் நினைக்கிறது
வேண்டாத வினைகள் வில்லங்கம் தொடர்கிறது
தூண்டா மணிவிளக்காய் துலங்கிடும் தூமணியே
நீண்டநாள் நிலைக்கவே நீயருள் புரிந்திடுவாய்

கொடியவர் கொன்றிடுவார் கொள்ளையும் அடிப்பார்
கடுகளவும் கருணை காருண்யம் காட்டார்
நினைவெல்லாம் நிட்டூரம் நிறைத்துமே வைப்பார்
நீண்டநாள் வாழுவது நியாயமா சொல்நிமலா

அறமற்றார் அரசியலை ஆட்டிப் படைக்கின்றார்
அறங்கூறும் இடமெல்லாம் அரக்கரே நிறைகின்றார்
உயிர்காக்கும் மருத்துவர்கள் உணர்விழந்து நிற்கின்றார்
உயர்பொரு ளாயிருப்பவனே உனக்கொன்றும் தெரியாதா

சன்மார்க்கம் மறக்கின்றார் சமத்துவம் தகர்க்கின்றார்
எஞ்ஞான்றும் பொய்யுரைத்து ஏற்றமிலா செய்கின்றார்
வஞ்சனையை நெஞ்சிருத்தி வாழ்வாரை வதைக்கின்றார்
இவரெல்லாம் இவ்வுலகில் எப்படிநீ இருக்கவிட்டாய்

துட்டரைத் துரத்தவேணும் கெட்டாரைத் திருத்தவேணும்
மட்டில்லா மதுகுடிப்பார் மனம்மாற வைக்கவேணும்
அட்டகாசம் செய்வாரை அடக்கியே வைப்பதற்கு
ஆயுளை நீடித்து அளித்திடுவாய் ஆண்டவனே

அன்னதானம் செய்யவேணும் அறப்பணிக ளாற்றவேணும்
ஆதரவற்றோரை அரவணைத்துப் பார்க்க வேணும்
மெலியாரை வருத்தும் வலியராரை திருத்தவேணும்
நிலமீது எனக்கிறைவா நீண்டநாள் தந்திடுவாய்

தளராத மனம்வேணும் அன்பகலா நிலைவேணும்
உளமுழுதும் பழுதில்லா உயர்குணமே வேணும்
வழுவில்லா நாளெல்லாம் வாழவே வேணும்
மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.