63 நாயன்மார்கள் வரலாறு – 35 கழறிற்று அறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் ‘கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்’ என்று போற்றும் பெருமை பெற்றவர் இளவரசர் பெருமாக்கோதையார். சேர நாட்டின் தலைநகரமான மகோதை என்னும் கொடுங்கோளூரில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தின் பெரும் புண்ணியங்களின் பயனாய் தோன்றிய இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் பெருமாக்கோதையார். இளம் வயதிலேயே அவர் மனம் நாளும் சிவ சிந்தையிலேயே ஈடுபட்டு வந்தது.  திருஅஞ்சைக்களத்து ஈசன் பால் பேரன்புடையவராய் விளங்கிய இவர், பொழுது புலரும் முன்பே எழுந்து புனித நீராடி ஆலயத்தைத் தூய்மை செய்து திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் அயராது பணி செய்து இறைவனை வழிபட்டு வந்தார். இளவரசனாக இருந்தும் அரச போகங்களில் அதிகாரச் செழிப்பில் அவர் மனம் ஈடுபடாமல், திருத்தொண்டு செய்வதே நிலையான பேரின்பம் என்று வாழ்ந்து வந்தார். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார்.

செங்கொற்பொறையன் என்னும் மன்னன் அப்போது சேர நாட்டை ஆண்டு வந்தான். நிலையற்ற வாழ்வில் இறைவன் திருவடியை அடைவதே உத்தமம் என்று எண்ணிய அவன் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொள்ள கானகத்தை நோக்கிச் சென்றான். அமைச்சர் முதலானோர் ஆய்வு செய்து சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரே அரசு உரிமை புரக்கும் உரிமை உடையார் என்று அறிந்து அவரை அணுகி அரசுரிமை ஏற்று அம்மலை நாட்டு மக்களை காத்தருள வேண்டும் என்று அழைத்தனர்.

சேர நாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்க வேண்டும் என்பதை அவருக்குத் திருவருள் உணர்த்திற்று. பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். சேர நாட்டு மன்னரானதால் சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

சேரமான் பெருமானுக்கு முடிசூட்டு விழா முடிந்தது. திருவஞ்சைக்களத்து  இறைவனை வழிபட்டு பட்டத்து யானை மீது  அரச மாளிகைக்குச் சென்று கொண்டிருந்தார் அரசர். அப்போது உவர் மண் மூட்டையோடு  ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான். அவன் சுமந்து வந்த அந்த உவர் மண் அவன் உடல் முழுவதும் சிதறிப் படர்ந்து முழு நீறு பூசிய முனிவர் போன்று தோற்றமளிக்கச் செய்தது. அவனைக் கண்ட சேரமான் பெருமான் சிவனடியார் என்றே கருதியவர் சற்றும் தயங்காமல் யானையினின்றும் கீழே இறங்கி அந்த ஏழைத் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கினார். பதறிப்போன அந்த சலவைத் தொழிலாளி அச்சம் கொண்டு, தான் மன்னருக்கு அடித்தொழில் புரியும் ஒரு சலவைத் தொழிலாளி என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.

மத்த யானை ஏறி மன்னர்

  சூழவரு வீர்காள்

செத்த போதில் ஆரும் இல்லை

  சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

  வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

  என்ப தடைவோமே. 

என்று ஆரூரர் தம் பாடலில் அழகாக விளக்குகிறார்.

கழறிற்றறிவார் மனதில் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் பிடி சாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வு, தமது அரச வாழ்வு நிச்சயமல்ல என்பதையும் உணர்த்தியதால் அவ்வேடத்திற்கு உரிய வகையில் வணங்கினார் சேரமான் பெருமான். எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்கி மக்கள் வாழ்வில் இன்பம் பெருக அரசு நடத்தினார். மன்னர் நாள்தோறும் தன் ஆன்மார்த்த மூர்த்தியான, ‘திருஅஞ்சைக்களம் சபாபதி’ என்ற கூத்தப் பெருமான் திருமேனியை உள்ளம் நெக்குருக வழிபாடு செய்வார். பெருமானும் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வகையில் பாதச் சிலம்போசை அளிப்பார். ஓசை கேட்ட பின்பு வழிபாட்டினை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

ஒரு நாள் சிவபெருமான் கழறிற்றறிவார் நாயனாரைச் சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பை மேற்கொண்டார். அன்று நாள்தோறும் அவருடைய பூசை முடிவில் கேட்கும் சிலம்பொலியைக் கேட்கப் பெறாததால் நாயனார் மிக வருந்தி இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணி உயிர்விடத் துணிந்தார்.

அப்போது எம்பெருமான், தில்லையம்பதியில் சுந்தரர் தம்மைப் பாடிக் கொண்டிருக்கும் அப்பாடலில் ஒன்றிப்போனதால் சேரமானின் பூசையை ஏற்க சிறிது தாமதம் நேர்ந்தது என்று கூறுகிறார். இறைவனின் அருளை வியந்துப் போற்றியவர்,  தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வென்தொண்டரையும் காண்பேன் என்று சோழ நாடு செல்லத் தயாரானார். தில்லைத் திருக்கோயிலை அடைந்து கூத்தப்பெருமான் திருநடம் பயிலும் பேரம்பலத்தை அடைந்து புலனும் உளமும் ஒன்றாகி வழிபாடு செய்தார். பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடினார். கூத்தப் பெருமானும் பாடல் கேட்டு மகிழ்ந்து பாதச் சிலம்போசை கேட்பித்தார்.

வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன்
மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி

சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்தவர், அவர் திருவாரூர் சென்றதை அறிந்து தாமும் திருவாரூருக்குச் சென்று சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். பின் தியாகராசரையும் வணங்கி, “திருமும்மணிக்கோவை” என்னும் பிரபந்தத்தால் சிவபெருமானைப் போற்றினார்.

‘என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பு ஒன்னும்’ என்று சேக்கிழார் பெருமான் என் நெகிழ்ந்துரைக்கும் அளவிற்கு, ஆரூரரைக் கண்ட சேரமான் பெருவிருப்புடன் தாழ்ந்தார், விழுந்தார், வணங்கினார். அவரை வாரியெடுத்துத் தழுவினார் நம்பியாரூரர்.

மதுரையில் வறுமையால் வாடிக்கொண்டிருந்த பாணபத்திரர் எனும் புலவரைக் கண்ட சொக்கநாதர் பாணபத்திரரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டார். ஆதலால் ‘மதிமலி புரிசை’ என்ற பாடலை ஓர் திரைச்சீலையில் எழுதி, ‘இத்திருமுகத்தை சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் பரிசில் வழங்குவான்’ என்று குறிப்பித்தார்.

பின்னர் எம்பெருமானார் சேரமான் பெருமான் நாயனாரின் கனவில் தோன்றித் தம் அடியவனான பாணபத்திரன் அவரைக் கண்டு பொருள் பெறும் நோக்கில் வந்துள்ளதால் அவருக்கு வேண்டும் அளவு பொருள் கொடுத்தனுப்புமாறு திருவாய் மலர்ந்தருளினார்.

திருமுகத்தைப் படித்துப் பரவசமடைந்த சேரமான் பெருமான் அதனைத் தலையில் வைத்துக் கொண்டு ‘எம்பெருமானின் திருமுகம் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததே’ என்று ஆனந்தக் கூத்தாடினார். பாணரைப் பணிந்து, தமது அனைத்து சொத்துகள் மட்டுமின்றி அரசாட்சியும் அவருக்கே உரியது என்றார் கழறிற்றறிவார் நாயனார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரரோ நாயனாரின் உயர் குணத்திற்குத் தலை வணங்கியதோடு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்ட பாணரை பரிசுப் பொருட்களுடன் யானைமீது அமர்த்தி  அன்புடன் வழியனுப்பி வைத்தார் கழறிற்றறிவார் நாயனார்.

சேரமான் பெருமான் நம்பியாரூரரைப் பார்த்து மதுரை சென்று அங்கையற்கண்ணி உடனமர் சொக்கலிங்கப் பெருமானை வணங்க விருப்பம் தெரிவிக்க  இருவரும் பாண்டி நாடு சென்று மதுரை சொக்கலிங்கப் பெருமானை வணங்கி மகிழ்ந்தனர். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர் புடைசூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்.

அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்று

அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்

பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
என்று ஆரூரர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.

திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்களுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்று இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர். ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து சென்று ஐயாறப்பரை வழிபட்டப் பின்னர் இருவரும் மலைநாடு நோக்கிச் சென்றனர். இவர்கள் வருகை அறிந்து நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து தோரணம் அமைத்துப் பல்வேறு நலன் செய்தனர். நாடே விழாக்கோலம் பூண்டது. சுந்தரர் திருவஞ்சைக்களம் இறைவனை ‘தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.
சிலநாட்களுக்குப் பிறகு சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடைப் பெற்றார். சேரமான் பொன்னும், மணியும், பூந்துகிலும் இன்ன பிற பொருட்களையும் வாரி வழங்கி  சுந்தரரை வழியனுப்பினார்.

எம்பெருமான் ஆரூரரின் பாசத்தளையை நீக்கி அருள் புரிய எண்ணம் கொண்டவர், இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி அவரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார். அக்கணம் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்த தேவர்கள் எம்பெருமானின் அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரரும் இறையாணையை ஏற்றவர், சேரமானையும் மனத்தில் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மேல் ஏறி

தானெனை முன்படைத் தானத

  றிந்துதன் பொன்னடிக்கே

நானென பாடலந் தோநாயி

  னேனைப் பொருட்படுத்து

வானெனை வந்தெதிர் கொள்ளமத்த

  யானை அருள்புரிந்து

ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

  தான்மலை உத்தமனே

என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக்கயிலாயம் சென்றார்.
ஆனால் சேரமான் பெருமான் சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்தவர், தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று ஆரூரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் எண்ணம் கொண்டார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டபோது, தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ எனும் திருமந்திரத்தைக் கூறியவர், வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்தவர், அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

ஆரூரர் திருக்கயிலையினுள் சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றியவர், சேரமான் வருகையையும் எம்பெருமானிடம் விண்ணப்பித்தபோது பெருமானும் சேரமான் பெருமானை உள்ளே அழைத்துத் தாம் அழையாமல் எதற்கு வந்தார் எனக் கேட்கிறார். சேரமானும் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் தன்னையும் ஈர்த்துக் கொணர்ந்து வந்து அங்கே நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளதாகவும், அதனைச் செவிமடுத்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். சிவபெருமான் அதனைச் சொல்லக் கேட்டுத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக்கயிலையில் எம்பெருமான் முன்னர் அரங்கேற்றி ஆனந்தமடைந்தார். எம்பெருமான் ஆரூரரோடு சேரமானையும் சிவகணத் தலைவராய் தம்பால் நிலை பெற்றிருக்கப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து மீப்பெருவாழ்வு அடைந்தார்.

கழறிற்றறிவார் நாயனார் குருபூசை தினம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவஞ்சைக்களம் என்ற ஸ்ரீவாஞ்சி குளம் கோயிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் இங்கு தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சேரமான் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். இறைவனும் அவர்தம் பேரருளால் “யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் இரக்க உள்ளமும் தண்டாத கொடையும் காவல் மன்னர்க்குரியனவும் எல்லாம் கைவந்துறப் பெற்றார்”.

பிற உயிர்கள் பேசும் மொழிகளை அறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். கழறுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமையால் கழற்றிற்றறிவார் என்ற பெயர் பெற்றார். சேர நாட்டு மன்னரானார். எனவே சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள்

சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

திருக்கைலாய ஞானவுலா, ஆதிஉலா என்றும் வழங்கப்படுகிறது. உலாவில் சிவபெருமான் போற்றப்படுகிறார். திருக்கயிலையில் தேவர்கள் கூடிச் சிவபெருமான் உலா வந்து காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால், எம்பெருமானும் அதற்கிசைவளிக்க, உமையவள் சிவனாருக்கு அனைத்து அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் பணிந்து வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ள நூல் இது. காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.

‘உலா’ எனும் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது இந்நூல். அந்த வகையில் இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

திருவாரூர் மும்மணிக்கோவை என்ற நூல் சிவனடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை அறிய முடிகின்றது. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றி மாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்ட இந்நூலும் புதிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோலவே, சிவபெருமானைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியங்களாக மலர்ந்தன.

பொன் வண்ணத்து அந்தாதி எனும் நூல் பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

சேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்களும் தோன்றின.

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.