பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 34



ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்
ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே
தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்‘ என்னும்
துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி
‘வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்’ என்ன
வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்
போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து
போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.
சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் தலத்தில், வேளாளர் குலத்தில் தோன்றியவர். சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ள குடும்பம் இவருடையது. ஏயர்கோன் கலிக்காமர் சிவபக்தியிலும் சிவனடியார் திருத்தொண்டிலும் சிறந்து விளங்கியவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்தில் அளவில்லாத திருப்பணிகள் செய்தவர். “ஏயர்கோன்” என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.
ஏயர்கோன் கலிக்காமர் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு சிறப்பாகத் தமது இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இக்காலகட்டத்தில் ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தமது இல்லத்தரசியான பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டிக் கொண்டதால் சிவபெருமானும் அவ்வண்ணமே அவரிடம் சென்றார். இதைப் பற்றி கேள்வியுற்ற, சிவனையே முழுமுதற் பொருளாகப் போற்றிய ஏயர்கோன் கலிக்காம நாயனார், இத்தகைய காரியத்தைச் செய்து, தன்னை அடியார் என்று கூறிக்கொள்ளும் சுந்தரர் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறார். சிவபெருமானே இதற்கு இசைந்திருந்தாலும் சுந்தரர் செய்த இந்தக் காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவராய், இப்படிப்பட்டச் செய்தியை கேட்ட பின்னும் தன்னுயிர் போகவில்லையே என்று வருந்தி சுந்தரமூர்த்தி நாயனார் மீது சொல்லொணா துயரமும், கடுங்கோபமும் கொண்டார். இதையறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வருந்தி, அவர்தம் சினத்தை தணித்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் பணிந்து வேண்டினார். அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்கிய இடமும் இதுதான்.
சூலை நோயை உண்டாக்கி ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு ஆறாத வலியைக் கொடுத்தார் எம்பெருமான். கலிக்காம நாயனாரும் என்ன செய்தும் தம் வலி குறையவே இல்லையே என்று வருந்தி அதனைப் போக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியவர் அப்படியே மயங்கினார். அந்த மயக்கத்தில் சிவபெருமான் தோன்றி, இந்த சூலை நோயால் ஏற்பட்டுள்ள வலியைத் தீர்க்க வல்லவன் சுந்தரன் மட்டுமே என்று கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டு கொதித்துப் போனார் கலிக்காமர். ஆனால் கலிக்காமரோ, சுந்தரர் வந்துதான் என் வயிற்று நோய் தீரும் என்றால் அந்நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவனார் மறைந்தாலும் அவர் அத்தோடு நிற்கவில்லை. ஆரூரரிடம் சென்று, தம்முடைய ஆணையை ஏற்று கலிக்காமரின் சூலையைத் தீர்க்க வேண்டும் என்று பணித்துவிட்டு மறைந்தார். எம்பெருமானின் கட்டளையை ஏற்று நம்பியாரூர் ஏயர்கோன் உற்ற பிணியைத் தீர்ப்பதற்குத் தாம் வருகின்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.
ஆனால் ஏயர்கோன் தம் மனைவிக்காக எம்பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு வருகிறார் என்றால், அவர் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு முன் தான் மாய்ந்து விடுவதாகக் கூறி, சூலை உள்ள வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் என்று தன் உடைவாளை எடுத்துக் குத்திக்கொண்டு உயிர் துறந்தார். வேகமாக வந்த ஆரூரரை வெளியே சென்று மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார் அவருடைய துணைவியார்.
சுந்தரர் தான் வந்த காரியத்தைக் கூற, கலிக்காமர் அவ்வாறு நோயால் வருந்தவில்லை என்றும், அவருக்கு நோயுமில்லை துன்பமுமில்லை, அவர் உறங்குகிறார் என்று கூறி தன் கணவரின் இறப்பை மறைக்க முயன்றார். சுந்தரர் விடாது தன் மனம் தடைபடுவதைக் கூறி அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்தவே வேறு வழியின்றி தன் கணவரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு கலிக்காமர் இரத்த வெள்ளத்தில் வயிறு கிழிந்து, குடல் வெளிப்பட்டு இறந்து கிடப்பதைச் சுந்தரர் கண்டார். நடந்த எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்று வருந்திய சுந்தரமூர்த்தி நாயனார் தம்மிடம் உள்ள வாளால் குத்திக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த்தெழுந்தார்.
இறையருளால் உயிர்த்தெழுந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரை அன்பினால் தழுவிப் பிரியாத நண்பர்களானார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சில நாட்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் தங்கி திருப்புன்கூர் திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் திருவாரூர் சென்று சில நாட்கள் தங்கியிருந்து தியாகராசரை வணங்கி மகிழ்ந்தார். பின்னர் ஏயர்கோனார் திருப்பெருமங்கலம் திரும்பி வந்து சிவப்பணி செய்து சிவனடி சேர்ந்தார்.
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் சொல்லும் கருத்து
மெய்ஞ்ஞானம் உற்றார்க்குப் பக்தி பொதுவாயினும் அவரவர் ஆன்ம எழுச்சியின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவர் பக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை திருத்தொண்டர் புராண வரலாறுகளின் மூலம் அறியலாம்.
“தந்தம் பெருமைக்களவாகிய சால்பினிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்” – மூர்த்தி நாயனார் புராணம்.
“ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியலதொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரமென்னால் விளம்புந் தகையதோ” – திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
தீது ஒன்றுமில்லை என்று தன் கணவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மாண்டதையே மறைக்கத் துணிந்த அவருடைய பத்தினியின் மாண்பைப் போற்றினாலும், தம் மனம் தடைப்பட ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என எண்ணிய ஆரூரர் அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்த அவர் இருந்த அறையினைக் காட்ட, அங்கு அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தம்பால் வந்த கோபத்தினால் ஏயர்கோனார் இந்த முடிவுக்கு வந்தார் என்றால் அவர் சென்ற இடத்திற்கே தானும் செல்லப்போவதாகக் கூறி, ஏயர்கோன் கலிக்காம நாயனார் தம் உடைவாளினால் தமது வயிற்றைத் தாமே குற்றிக் கிழித்துக் கொள்ளப் போனார். இதனை கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்,
“பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்
புயன்மறந்த கன்னன்மை தீரப்புனிற்றுக்
கலிக்காமற் கன்று புன்கூர் மன்னு
மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே” என்றும்
திருத்தொண்டர் புராணத்தில்,
“பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வரும்பெருமைக் கலிக்காமனார்” எனவும்
சுந்தரர் தேவாரத்தில்,
“வையகம் முற்றும் மாமழை துறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகேம்
உய்யக்கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளுஞ்
செய்கைகண்டுநின் திருவடியடைந்தேன்
செழும்பொழிற்றிருப் புன் கூருளானே”
எனவும் வருபவற்றால் அறியப்படும்.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தம் பத்தினி பரவைபால் தூதனுப்பிய செய்தியைக் கேட்டமாத்திரத்தே, அதிசயித்து எரிச்சலுற்றவர் இவரெல்லாம் ஒரு தொண்டரா, எத்தகையதொரு பெரிய பாவத்தைச் செய்துள்ளார். இச்செய்தியைக் காதால் கேட்கவும் இயலவில்லை என்னால் என்று புலம்புகிறார்.
“நம்பியாரூரர் நெஞ்சினடுக்கமொன்றின்றி நின்று
தம்பிரானாரைத் தூது தையல்பால்விட்டா ரென்னும்
இம்பரின் மிக்கவார்த்தை யேயர்கோனார்தாங் கேட்டு
வெம்பினாரதிசயித்தார் வெருவினார் விளம்பலுற்றார்”
“நாயனை அடியானேவுங் காரியம் நன்று
சால ஏயுமொன்றிதனைச் செய்வான்
தொண்டனாமென்னே பாவம் பேயனேன்
பொறுக்கவொண்ணாப் பிழையினைச் செவியார்
கேட்ப தாயின பின்னும் மாயா திருந்ததென் ஆவியென்பார்”
மற்றும்
“நம்பர்தா மடியாராற்றாராகியே நண்ணினாரேல்
உம்பரார்கோனும் மாலு மயனுநேருணரவொண்ணா
எம்பிரானிசைந்தாலேவப் பெறுவதே யிதனுக்குள்ளங்
கம்பியாதவனை யான்முன் காணுநா ளெந்நா ளென்று”
என வரும் சேக்கிழார் பெருமானின் பாடல்களால் அறியலாம்.
குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை முப்பொழுதும் வணங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் திருக்கோளிலி என்னும் திருத்தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார். அந்த அன்பின் காரணமாக அவருக்காக பரவையார் திருமாளிகைக்கு, செந்நெல், பருப்பு போன்ற பொருள்களைத் தவறாமல் அனுப்பி வரும் கடமையைக் கொண்டிருந்தார். ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் வழமைபோல் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் வருந்தியவர், உணவு உண்ணாமல் உறங்கச் சென்றார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி “ஆரூரன் தனக்கு உன் பொருட்டாக நெல் கொடுத்தோம் என்று அருள்பாலித்தார். காலையில் எழுந்து பார்த்தபொழுது குண்டையூர் முழுதும் நெல் மலை குவிந்திருந்தது. நெல்மலையைக் கண்டு வியந்தவர், திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றைக் கூறினார். குண்டையூர்க்கிழார் அந்நெல்மலையைப் பார்த்து இது மனிதர்களால் எடுத்து வரும் அளவினதன்று. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்றார். அப்போது சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து,
நீள நினைந்தடி யேனுமை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே.
என்னும் திருப்பதிகம் பாடி நெல்லை எடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி விண்ணப்பித்துக்கொண்டார். அன்றிரவு தம்முடைய பூத கணங்களைக் கொண்டு பரவையார் இருந்த வீதியில் நெல்லைக் கொண்டுவந்து குவித்தார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்தவர் பரவையார்க்கும் அந்த நற்செய்தியை தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
ஆரூர்ப் பெருமானைப் பரவையாரிடம் தூதனுப்புதல்:
சுந்தரர் எம்பெருமானை வணங்கச் சென்ற பொழுது அவருடைய பரிசனங்களில் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சங்கிலியாரை மணந்த சுந்தரரின் செய்கையை முன்பே அறிந்திருந்த பரவையார் அவர்களைத் தடுத்த செய்தியினை சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்தவர், பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தும், அவர்கள் பலவாறு எடுத்துக் கூறியும் சினந்தணியாமல் பரவையார், மீண்டும் பேசினால் தன்னுயிர் இழப்பது உறுதி என்று கூறினார். அதனால் மனம் வருந்திய சுந்தரர் உறங்காது சிவபிரானை எண்ணி வேண்டினார். அடியார் துயர் பொறுக்காத எம்பெருமான் நள்ளிரவில் சுந்தரர் முன் வந்தணைந்தார். சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி தன்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் அப்போதே பரவைபால் தூது செல்ல இசைந்தார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக் காண வேண்டுமென்ற திருவிளையாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார். சுந்தரர் எம்பெருமானை எதிர்கொண்டு வணங்கி விவரம் கேட்டவரிடம், எம்பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்` என்று கூறினார். அச்சொற்கேட்டு நடுங்கிப் போனவர், பரவையிடம் தன்னைக் கூட்டவில்லை என்றால் தன்னுயிர் நீங்குவது உறுதி என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.
சிவபெருமானும் நம்பியாரூரரைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை தூது சென்று அவர்தம் குறையை தீர்த்து வைப்பதாகக் கூறியவர் பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்து உழலும் எம்பெருமானின் கருணையை வியந்து, இசைவுற்றதால் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார். சிவபெருமான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்த பின்னர் திருக்கோயிலினுள் புகுந்தருளினார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.
தங்கக்கட்டியான செங்கல்
திருவலிவலம் பெருமானின் திருவடிக் காட்சியைக் கண்டு களித்த ஆரூரர், திருவாரூர் சென்று அங்கு தங்கியிருந்தார். பங்குனித் திருவிழாவிற்கு ஆகும் பெருஞ்செலவில் தம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் , இல்லையென்றால் பரவையார் முகம் வாடிவிடுமே என்று வருந்தியவர், பணம் பெறுவதற்காக திருப்புகலூர் சென்று பொன் வேண்டிப் பாடினார். திருக்கோயிலை வலம் வந்து வழிபாட்டினை நிறைவு செய்து புறப்படும் சமயம் அயர்ச்சியில், அங்கு அக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வைத்து அதன்மீது தமது துண்டினை விரித்து அப்படியே கண் அயர்ந்து உறங்கி விட்டார். தூக்கம் விழித்து துண்டை எடுத்தவர் அதிசயித்துப் போனார். துண்டின் கீழிருந்த அச்செங்கல் தங்கக்கட்டியாக மாறியிருந்த்தே அதன் காரணம். இன்றும் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இந்த அரிய திருப்பாசுரத்தைப் பாடினால் இறைவன் வேண்டிய பொருளை அளிக்க வல்லான் என்ற நம்பிக்கை அடியவர்களிடம் உண்டு என்பதும் சத்தியம்! அப்பாடல்,
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்
சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும்
ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே.
திருச்சிற்றம்பலம்.
