ஒப்பீட்டு நோக்கில் மகாகவிகளின் பாடுபொருட்கள்

0

முனைவர் த. ராதிகா லட்சுமி
இணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
நல்லமுத்துக் கவுண்டா் மகாலிங்கம் கல்லூரி,
பொள்ளாச்சி

இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் சுப்பிரமணிய பாரதியார், இரவீந்திரநாத தாகூர் என்ற இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள். தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்து ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்ற கொள்கையோடு கவிஞனாக வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் நாமகளின் திருவருளால் சொல்வளத்தில் சிறந்தாரே தவிர திருமகளின் திருவருள் கிடைக்காததால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடி தவித்தார்.  வங்காளத்தின் ஜெஸ்சூரில் பிறந்து நோபல் பரிசு பெற்றவர் இரவீந்திரநாத தாகூர். திருமகளின் செல்வத்துடன் நாமகளின் சொல்வளமும் ஒருங்கே பெற்றவர். தாகூரின் குடும்பம் சர்வதேச அளவில் கலையுலகத் தொடர்புடையது. தாகூர் பலமுறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

பாரதி, தாகூரின் படைப்புகளில் தேசப்பற்று, பிரபஞ்ச சக்தி, தெய்வம் எங்கே?, இறைவேண்டல், ஒளி குறித்த வருணனை, பெண் முன்னேற்றம் யந்திரங்களின் வளர்ச்சி, மற்றும் காலனை மதித்தலும், மிதித்தலும் போன்ற சிந்தனைக் களங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசப்பற்று:

சுப்பிரமணிய பாரதியார் மானிடத்தேவைகள் அனைத்திலும் மிக முக்கியமான சுதந்திரத்திற்காக அதிகமாகப் போராடுகிறார். இதற்காக போற்றுவதற்குரிய சுதந்திரதேவியின் பாதத்தில் எத்தகைய தியாகத்தைப் புரியவும் தயாராக இருக்கிறார். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை’ என வருத்தமுற்றப் பாட்டிலும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தாகத்தை உருவேற்ற முயலுகிறார்.

‘தேவி! நின்னொளி பெறாத
தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்க ளுண்டோ?
பாவிய ரன்றோ நிந்தன்
பாலனம் படைத்தி லாதார்? ‘

‘சுதந்திர தேவியின் துதி’ என்ற பாடலில் தேசம், உயிர், அறிவு, ஆக்கம், காவியநூல்கள், கலைகள் என அனைத்தும் வேண்டுமென்றால் சுதந்திரம் வேண்டும் என்று தேசபக்தியை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைக்க முற்படுகிறார். ‘அச்சமில்லை! அச்சமில்லை!’ என்று அச்சத்தை நீக்கும் தாரக மந்திரத்தை முழங்குகிறார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே! இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு’ என நம்பிக்கையை மனதில் துளிர்விடச் செய்கிறார்.

அச்சமின்றி தலைநிமிர்ந்து நிற்கும் இதயம், அறிவு வளர்ச்சிக்கான பூரணவிடுதலை, குடும்பத்தின் குறுகிய தடைகளால் குலையாத உலகின் ஒருமைப்பாடு, மெய்ந்நெறிகளின் அடிப்படையில் உருவாகும் வாய்ச்சொற்கள், விடாமுயற்சியுடன் பூரணத்துவத்தை நோக்கி செல்லுதல், தெளிந்த அறிவோட்டம், பாழடைந்த பழக்கத்தால் வறண்ட பாலையை நோக்காத, வழிதவறாத பயணம் என்பதுடன்

‘நோக்கம் விரியவும்
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்’

என்று தன் தேசம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை இரவீந்திரநாத தாகூர். கீதாஞ்சலியில் பதிவுசெய்துள்ளார். விடுதலையான பூமி சுவர்க்க பூமியாக அதாவது மகிழ்ச்சியின் குறியீடாக அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு இதயமும் ஆக்கப்பூர்வமாக, தனித்துவமாக, அச்சமின்றி ஒருமைப்பாட்டுடன் செயல்படவேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்துகிறார்.

பிரபஞ்ச சக்தி:

பாரதியார் பிரபஞ்சத்தைச் சக்தியின் வடிவமாக நோக்கியவர். துன்பமில்லா நிலை, தூக்கமில்லாத கண்விழிப்பு, அன்பு கனிந்த கனிவு, இன்பமுதிர்வு, முக்திநிலையின் முடிவு, சொல்லில் விளங்கும் சுடர், தெய்வத்தை எண்ணும் நினைவு, பாட்டினில் வந்த களிப்பு, வாழ்வைப் பெருக்கும் மதி, மாநிலம் காக்கும் மதி, ஊழ்வினை நீக்கும் உயர்வு, உள்ளத்தில் ஒளிரும் விளக்கே சக்தி என்று சக்தியின் வடிவங்களை மனக்கண்ணில் நிறுத்துகிறார். இச்சக்தியிடமே பாரதியார் காணிநிலம் வேண்டும் என்றும், மோகத்தைக் கொன்றுவிடு என்றும் தன் வேட்கைகளை முறையிடுகிறார்.

‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்…
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?’

என்று வினா தொடுக்கும் அளவிற்கு பாரதி பிரபஞ்ச சக்தியிடம் நெருக்கமானப் பிணைப்பைக் கொண்டிருக்கிறார். இவ்வுலகத்தை இயக்கும் சக்தியின் மேல் பாரதிக்கு இருந்த நிலைப்பாடு புலனாகின்றது.

இயற்கையையும், ஐம்பூதங்களையும் சக்தியாக காணும் பாரதியார் ஓரிடத்தில் இவை அனைத்தும் மாயைகளோ? என்று தளர்ந்து போனதை ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாடலில் காணமுடிகிறது. சொற்பனங்களாக, தோற்ற மயக்கங்களாக, அற்பமான மாயைகளாக, கானல்நீராக, காட்சிப்பிழைகளாக, கண்முன் உள்ள காட்சிகள் மறைந்து தோன்றுவது ஏன்? என உலகை நோக்கி வினவுகிறார்.

‘காண்பதுவே உறுதி கண்டோம்
காண்பதல்லால் உறுதி இல்லை
காண்பது சக்தியாம் இந்தக்காட்சி நித்தியமாhம்’

என்ற இறுதியடிகளின் வாயிலாக உலகின் இயக்கமாக சக்தியைக் காண்பது உறுதி என பாரதியார் கூறுவது திண்ணம்.

இரவீந்திரநாத் தாகூர் இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக்கரையில் உள்ள படகு வீட்டில் தனிமையோடு வாழ்ந்தவர் என்பதால் இயற்கைக்கூறுகளே அவருக்கு துணையாக இருந்திருக்கின்றன. தனிமையில் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்ததன் விளைவாகவே கீதாஞ்சலி தோன்றியதாக தாகூர் குறிப்பிடுகிறார்.

‘சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்றமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்கு கேட்கும். எனக்கு இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல்களும், பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்களைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.’

என்ற தாகூரின் உரை அவர் இயற்கையை உள்வாங்கிய விதத்தை வெளிப்படுத்துகிறது. தனிமையில் இருந்தபடி இயற்கையை ரசித்து. அனுபவித்து, உண்டு அவற்றில் தன் பிரம்மச் சக்தியைக் கீதங்களின் வாயிலாக நிரப்பி கீதாஞ்சலியை உலகுக்கு அளித்துள்ளார்.

காற்றினிலே வருமென் கீதம், வானத்து விண்மீன், புல்லின் இலை, புல்லாங்குழலின் ஓசை, அகண்ட கடல், ஆனந்தப்பறவை, நித்திய ஒளி, மெல்லிசை போன்ற சொற்களின் மூலம் தாகூர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதன் வாயிலாக உலகை அறிய முற்படுகிறார். அதனால் சக்தியை நோக்கி வினாக்களைத் தொடுக்காதவராக அன்பு, கருணை, ரசனை என இன்பங்களை அமைதியாக உட்கொண்டவராக திகழ்வதைக் காணமுடிகிறது.

தெய்வம் எங்கே? :

பக்தியையும். மனிதாபிமானத்தையும் இணைத்து நோக்கிய பார்வையால் இரு மகாகவிகளுமே உழைப்பவர்களிடத்தில் தெய்வத்தின் திருவுருவைக் காணமுற்படுகின்றனர்.

‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!’

என்று பாரதியார் பிரமதேவனின் கலையாக தொழில் செய்பவர்கள் இருப்பதாக பாடுகிறார். தாகூர் ‘இறைவன் எங்கிருக்கிறான்’ என்ற பாடலில் துதி பாடி, சுலோகம் கூறி. ருத்திராட்சம், ஜெபமாலை உருட்டி, கோயிலில் சென்று காரிருளில் இறைவனைத் தேடாதே! இறைவன் அங்கில்லை!

‘மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
கூடவே குடியுள்ளான் இறைவன்!’

தியானத்தை விடுத்து, நறுமணப்புகைகளைப் புறக்கணித்து விட்டு வியர்வையைச் சிந்திடும் உழைப்பாளியிடம் இணைந்து நில்! என்று பாடுகிறார். உழைப்பவர்களின் உருவில் தெய்வத்தைக் காணும் போக்கில் இருகவிகளிடமும் வேறுபாடு உண்டு. பாரதியார் உழைப்பாளர்களைச் சிருஷ்டி கர்த்தாக்களாக காண தாகூர் உழைப்பாளர்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதைக் காணமுடிகிறது

இறைவேண்டல்:

இரு மகாகவிகளுமே இறைவனை நேசித்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள். தாகூர், நெஞ்சில் உதிக்கும் தாழ்வான எண்ணங்களை வேரோடு அழிப்பாயாக! இன்பதுன்பத்தைத் தாங்கும் பொறுமையை அளிப்பாயாக! நற்பலன்களைத் தரும் பணிகளைச் செய்வேனாகுக! வழியோரை என்றும் மறக்காமல், நெறியற்ற மூர்க்கரை வணங்காதிருக்கும் வைராக்கியத்தைத் தந்திடுவாயாக! தெய்வமிடும் பணிக்கு நான் பாசமோடு உழைக்கும் சக்தியைத் தருவாயாக!

‘தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
மனம் அப்பால் சென்று
எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
மனத்தெளிவைத் தந்திடு!’

என இறைவனிடம் வேண்டுவதில் தன் மனிதப்பண்பை மேம்படுத்த விரும்புவதை நோக்கமுடிகிறது. ஆனால் பாரதியோ,

          ‘எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லனவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்’

என்பதில் எண்ணங்களின் தோற்றுவாய், உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம், நற்சிந்தனைக்கான நல்லறிவு போன்றவற்றை நல்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார். இங்கு இருமகாகவிகளின் எண்ணவோட்டங்கள் ஒரே அலையில் பயணிப்பதைக் கண்கூடாக அறியமுடிகிறது.

ஒளி குறித்த வருணனை:

‘ஒளியே நீ யார்?
ஞாயிறின் மகளா?
அன்று நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்’

ஞாயிற்றின் வடிவம் என்பது ஒரு உடல். ஓளியாகிய நீ தான் உயிர்? உன் தோற்றம் எப்போது?

உன்னை யார் படைத்தார்? நீ அறிவின் மகளா? உறங்கிக் கிடக்கும் தெளிவா? உனக்கும், வானவெளிக்குமான பழக்கம் எத்தனை காலம்? எத்தகைய அன்பு? எவ்வாறு வானவெளியில் இரண்டறக் கலக்கிறாய். உன்னைப் படைத்த விந்தைக்கரிய மோஹினியைத் தொழுகிறோம் என பாரதியார் ஒளியைக் கண்டு வியப்படைந்து வினாக்களைத் தொடுக்கிறார். இறுதியில் சக்தியே ஒளியைப் படைத்ததாகக் குறிப்பிட்டு தலைவணங்குகிறார். ஓளியின் அழகைத் தாகூர் ஒளியின் நர்த்தனமாக உவமித்துப் பாடுகிறார்.

‘மின்னொளியே!
என்னரும் ஒளியே!
உள்ளத்துக் கினிய ஒளியே!
விழிகள் முத்தமிடும் ஒளியே!
உலகை மூழ்கடிக்கும் ஒளியே!
நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்
என் கண்மணியே!

வானத்தின் வெடிச்சிரிப்பே மின்னல், பட்டுப்பூச்சிகள் ஒளிக்கடலில் மிதக்கும் படகுகள், ஒளியலையில் அல்லியும், மல்லியும் ஊர்திகள், முகிலில் பொன்னிறக்கதிர்கள் என ஒளியை வருணிக்கிறார். உள்ளத்தின் களிப்பு ஆகாயக் கங்கையால் வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது என ஆனந்தத் தாண்டவமிடும் ஒளியின் அழகைக் குறிப்பிடுவதில் இருமகாகவிகளின் உள்ளமும் ஒளிக்கு அடிமையாகியிருப்பதை அறியமுடிகிறது.

பெண் முன்னேற்றம்:

‘பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமா?’

என்று கேட்டதுடன் பெண்ணடிமையுற்றிருப்பதால் இந்திய மக்களும் அடிமையுற்றிருப்பதில் வியப்பில்லை. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் இருப்பது இயல்பு. அதனால் வீட்டில் பெண்களின் அடிமை நிலை மாறவேண்டும் என்று பாரதியார் ‘தாய் மாண்பு’ என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

‘சமூகத்தில் தாங்களே முக்கியமானவர்கள், தங்கள் ஆதிக்கமே ஓங்கியிருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணி வந்தது … பெண்கள் அறியாமையிருளிலும், குருட்டு நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் வரை நம் இஷ்டம் போல் ஆடலாம். பெண்களுக்கு இடங் கொடுத்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியாதே என்பதே அவர்கள் கருத்து”

என தாகூர் கூறியதில் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக பெண்களை அடிமைப்படுத்தும் நிலையைச் சுட்டுகிறார். இருவருமே பெண்களை மதிக்கவேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றனர். தாகூர் தன் பெரிய தமக்கை முதல்முதலாக பல்லக்கில் ஏறி பள்ளிக்குச் சென்றபோது பெரியமனிதர்கள் தங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டதாக கருதியதைத் தாகூர் குறிப்பிடுகிறார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் என புதுமைப்பெண்ணிற்குரிய வரையறையாக பாரதியாரும் பெண்கல்வியை முன்னிறுத்துகிறார். இதன்வாயிலாக பெண்குல விடுதலையே மானிடகுல விடுதலை என்பதை இரு மகாகவிகளும் உணர்ந்து செயல்பட்டதை அறியமுடிகிறது.

யந்திரங்களின் வளர்ச்சி:

இன்றைய உலகின் தவிர்க்க முடியாத இயக்கச் சாதனங்களாக தொழில் வளர்ச்சியையும், எந்திரங்களையும் குறிப்பிடலாம். யந்திரத்தின் வருகையைப் பற்றி பாரதியும் தாகூரும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியார் ‘கைத்தொழில் போற்று’ என்றும் ‘கூடித்தொழில் செய்’ என்றும் புதிய ஆத்திச்சூடியில் இயற்றியுள்ளார். ‘பாரததேசம்’ என்ற பாடலிலே பல தொழில்கள் குறித்துப் பாடுகிறார்.

‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்…
வானையளப் போம், கடல் மீனையளப்போம்
சந்திர மண் டலத்தியல் கண்டு தெளிவோம்’

குடைகள், உழுபடைகள், இரும்பாணிகள், வண்டிகள், கப்பல்கள்   செய்வோம் என்று தொழிலுக்கு வந்தனை செய்கிறார். இன்று சந்திர மண்டலத்தில் விண்கலம் ஏவிவிடுதலை எதிர்நோக்கி அன்றே பாடியுள்ளார். புதிய இந்தியாவிலே கைத்தொழிலின் வளர்ச்சி, தொழில் செய்ய யந்திரங்கள் , அவற்றை இயக்கும் மனிதர்களின் அறிவு வளர்ச்சி சிறக்கவேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் எதிர்காலத்தை நோக்கி குறி சொல்லும் விதத்திலே

‘குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது…
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது: சூத்திரம் தெரியுது:
யந்திரம்; பெருகுது: தந்திரம் பெருகுது’

என புதிய கோணங்கி பாடலில் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளியையும், யந்;திரங்களையும் குறித்து பேரானந்தத்தோடு பாடுவதை உணரமுடிகிறது. 1916 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய ‘புதிய உயிர்’ என்ற கட்டுரையிலே உலகம் மேன்மையுற கைத்தொழில்கள் பெருகவேண்டும், இவற்றில் சாத்தியமில்லை என்றுரைப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜப்பான் தொழிற்கல்வி’ என்ற கட்டுரையிலே நம் இந்தியப் பிள்ளைகளை ஜப்பானிற்கு அனுப்பி பலவிதமான தொழில்களும், சாஸ்திரங்களும் கற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும். மேலும் கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே என குறிப்பிட்டிருப்பதில் பாரதியின் தேசபக்தியை அறியமுடிகிறது.

யந்திரங்களை அணுகிய விதத்தில் பாரதிக்கு நேர்முரணான கருத்தைத் தாகூர் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் அவர் நிகழ்த்திய ‘இந்தியாவில் தேசியம்’ என்ற சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்.

‘இன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் ஸ்தாபனங்களிலே எனக்கு நம்பிக்கையில்லை, அவை குருபமாக இருப்பதே சிருஷ்டியமைப்புக்கு முரணாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் மகத்தான சக்தியானது பயங்கரத்தில் தோற்றமளிப்பதில்லை. அழகிலேயே காட்சி தருகிறது. யந்திர நாகரிகமானது இன்பத்தைப் பலியிட்டுப் பணத்தைத் திரட்டுகிறது. தான் நிறுவும் (யந்திர) கருவிகளுக்கு அதிகபட்ச இடமளிப்பதற்காக மனிதன் தனது மனிதப்பண்பைக் குறைந்தபட்ச அளவு ஒடுக்கிக் கொள்கிறான். மனித உணர்ச்சிகள் யந்திரங்களை இலகுவில் ஏற்க மறுப்பதால் – யந்திரங்களின் பாதையை மறிப்பதால் – அந்த நல்லுணர்ச்சிகளை ஏளனம் பண்ணுகிறான் மனிதன்’

என்பதில் இயற்கையின் மடியிலே பிறந்து வளர்ந்த தாகூர் இயற்கைக்கு முரணான யந்திரங்களையும், புகை கக்கும் ஆலைகளையும் விரும்பாதது இயல்பே. எனினும் வறுமையில் வாடும் மக்களின் வளர்ச்சிக்காக சிந்திக்காமல் யந்திரங்களை வேண்டாம் என்று கூறியது ஆச்சரியத்தையே அளிக்கிறது.

பாரதியார் ஜப்பான் நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து நூல்களில் படித்தும், பிறர் சொல்ல கேள்விப்பட்டதையும் கொண்டு நம் இந்திய இளைஞர்கள் ஜப்பான் சென்று தொழில்நுட்பத்திறமை பெறவேண்டும் என்றார். ஆனால் தாகூரோ பல முறை ஜப்பானுக்கு சென்று அக்காட்சிகளையே நேரிலே கண்டவர். அதனால் ஜப்பான் நவீன மயமானதில் மானுடச்செல்வங்கள் அழிந்ததாக குறிப்பிடுகிறார். இரு மகாகவிகளின் இவ்வேறுபட்ட   சிந்தனைக்குக் காரணத்தை நுணுக்கமாக கவனித்தால் இருவரும் வளர்ந்த சூழல் மாறுபாட்டைக் குறிப்பிடலாம். பாரதியார் நாட்டின் வளர்ச்சிக்கு யந்திரங்களின் இன்றிமையாமையைக் கருத்தில் கொண்டு பாடியதில் அவருடைய இந்திய தேசியப்பற்றை அறியமுடிகிறது. ‘மனிதன் மனிதனே யந்திரம் யந்திரமே என்றுமே இணையமுடியாது’ என்ற கருத்துடைய தாகூர் நாட்டைவிட மனிதகுலப் பண்புகளையும், இயற்கையையும் நேசித்ததை அறியமுடிகிறது. யந்திரங்கள் உலகில் ஒருசிலரிடம் மட்டுமே இருந்து போட்டி, பொறாமைகளை உருவாக்கி மனிதனை அழிப்பதைக் கண்கூடாகக் கண்ட தாகூர் யந்திரங்களை நிராகரிக்க பாரதியார் சமத்துவம், வேலைக்குத் தகுந்த கூலி என்றதோடு யந்திரங்களை வரவேற்றதில் இருமகாகவிகளின் உள்ளுணர்வும் புலனாகின்றது.

காலனை விரும்புதலும், எதிர்த்தலும்:

மரணம் என்பது ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்படக்கூடியது. தவிர்க்கமுடியாதது என பாரதியார் பல பாடல்களில் குறிப்பிட்டிருப்பினும்,

‘பார் மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்
சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி’

என்பதில் பாரதியார் மரணபயத்தைத் தவிர்க்க விரும்புபவராகவும், சாகாவரத்தைத் தெய்வத்திடம் கேட்பவராகவும் காணப்படுகிறார். இதன் பொருட்டே பாரதியார் தமது இறுதியாண்டுகளின் போது மரணம் என்ற சிந்தனையில் உழன்று அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில்,

‘காலா உன்னைச் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன்
காலருகே வாடா! சற்றே உன்னை மதிக்கிறேன்’

என்று காலனின் மீது வெகுண்டெழுகிறார். ஆனால் தாகூரோ மரணதேவனை வரவேற்கிறார். இறைவனின் பணியாளான மரணதேவன் கடல்கடந்து என் வீட்டிற்கு வர காரிருள் சூழ்ந்த இரவில், நெஞ்சில் அகத்தடன் கையில் தீபமேந்தி வாசலைத் திறக்கிறேன்.

          ‘வரவேற்கிறேன் நான்
சிரம் தாழ்த்தி
மரணதேவனை!’

நான் கரங்களைக் குவித்து, இதயத்தை அர்ப்பணிக்க மரணதேவன் ஒருநாள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி செல்வான். என் தனி ஆன்மா மட்டும் இறைவனுக்கு இறுதிக்கொடை என தாகூர் ‘மரணதேவனுக்கு வரவேற்பு’ பாடல் பாடியுள்ளார். ஒவ்வொரு நாளும் மரணதேவனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதாக ‘மரணதேவனுக்கு மணமாலை’ கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு இளம்வயதில் உயிரினைத் தொலைக்க முற்பட்ட சுப்பிரமணிய பாரதியார் காலனை மிதிக்க, முதுமைப்பருவத்தில் உயிரினைத் துறக்க முற்பட்ட தாகூர் மரணதேவனை வரவேற்று பரிசினையும் நல்குவதில் இரு மகாகவிகளின் இறப்பு குறித்த எண்ணங்கள் புலப்படுகின்றது.

தொகுப்புரை:

சமகால கவிஞர்களான பாரதியும், தாகூரும் ஒவ்வொரு இந்தியரிடத்தும் தேசப்பற்றை உருவாக்கவும், மனித மனதின் எண்ணங்களில் தெளிவை ஏற்படுத்தவும் விழைந்தனர். பிரபஞ்ச சக்தியிடம் பாரதி உரிமையுடன் வினாக்களைத் தொடுக்க தாகூர் இயற்கையை அமைதியுடன் உட்கொள்வராய் திகழ்கிறார். இருவருமே தெய்வத்தை உழைப்பாளரிடத்தில் வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றனர். மனித குலப்பண்புகளை மேம்படுத்த இறைவனிடம் வேண்டுவதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பெண் முன்னேற்றத்திலும் ஒத்த சிந்தனையே கொண்டுள்ளனர். யந்திரங்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றப் பார்வையில் பாரதி நோக்க, தாகூரோ மானிடகுலப்பண்புகளை அழிப்பதாக கருதுகிறார். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த தாகூர் முதுமைப்பருவத்தில் காலனை வரவேற்க, தன் விருப்பங்கள் நிறைவேறாத பாரதியார் காலனை மிதிக்க எண்ணுகிறார்.

பாரதியார் உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத. வறுமையில் வாடினும் மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தான். தாகூர் வங்காளத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து, பல வெளிநாடுகளுக்கு செல்கின்ற வாய்ப்புகள் பெற்றவர். ஆங்கிலமொழி பாண்டித்தியமும், வெளிநாட்டு மக்களின் தொடர்பும் நட்புறவும் பெற்றிருந்ததால் உலக அரங்கில் தன் கீதங்களை எடுத்து செல்லும் வல்லமை கிட்டியது. அதனால் நோபல் பரிசு வெல்லும் வாய்ப்பும் பெற்றார். பாரதியின் பாடல்கள் எழுச்சி மிக்கதாக, கோபத்துடன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம் அவர் வாழ்ந்த சூழலேயாகும். தாகூரின் பாடல்கள் கனிவுடன் மென்மையான இறகுகளால் வருடுவதைப் போன்றிருப்பதற்கு காரணமாக அவருடைய தனிமையையும், பொருளாதார நிறைவையும் குறிப்பிடலாம். இரு மகாகவிகளுமே தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்நோக்கி வழிகாட்டுபவராக திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கக்கவிஞரான தாகூருக்கு சற்றும் சளைத்தவரல்ல நம் தமிழகக்கவிஞர் பாரதியார் என்பது திண்ணம்.

துணைநூல்கள்:

      1.பாரதியார் கவிதைகள் – ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

  1. பாரதியார் கட்டுரைகள் – பாரதி புத்தக நிலையம்
  2. கீதாஞ்சலி – இரவீந்திரநாத தாகூர் மொழிபெயர்ப்பு – ஜெயபரதன்
  3. ரவிந்திரர் கட்டுரைத்திரட்டு – தமிழாக்கம்- த.நா.குமாரஸ்வாமி
  4. பாரதி என்றென்றும் – தொகுப்பாசிரியர் பொன்னீலன்
  5. இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புக்கள் – பதிப்பாசிரியர்கள் முனைவர்அ.பிச்சை, முனைவர் பா. ஆனந்தகுமார்
  6. மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் – பதிப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  7. இரு மகாகவிகள் – க.கைலாசபதி
  8. மகாகவி பாரதியார் – வ.ரா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.