63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

எலும்பைப் பெண்ணாக்கியது

மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

 

இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

 

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

 

எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

 

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

 

எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

காழிவேந்தருக்குக் கடிமணம்!

 

ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

 

சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

 

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

 

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

 பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

 

 “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

 

 “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

 “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

வாய்மைநீ அறத்தினுளன்புநீ

மறத்தினுள் மைந்து நீ வேதத்து

மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

அனைத்தினுட் பொருளுநீ”

என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

அகண்டாகாரசிவ போக மென்னும்

பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

இனியெடுத்த தேகம் விழுமுன்

புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

  1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

 

  1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

 

  1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

 

  1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

 

சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

 

வழிபாட்டு நெறிகள்

  1. சிவ வழிபாடு செய்தல்
  2. திருநீறு அணிந்து மகிழ்தல்
  3. ஐந்தெழுத்து ஓதல்

ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

திருஞானசம்பந்தர் துதி

பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

திருச்சிற்றம்பலம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.