சந்தா ஓ சந்தா பாடலில் ஒரு பிழை
அண்ணாகண்ணன்
சந்தா ஓ சந்தா என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 1998ஆம் ஆண்டு வெளியான கண்ணெதிரே தோன்றினாள் படத்தில், தேவா இசையில், வைரமுத்து எழுதிய பாடல்.
காதலனை எண்ணிக் காதலி நெஞ்சுருகிப் பாடுகிறாள். இந்தப் பாடலின் கடைசிச் சரணத்தில் இந்த வரிகள் வருகின்றன.
பாவை உன்னைக் கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா?
உனக்குள் சென்ற காற்று வேண்டும், எனக்கு மட்டும் தருவாயா?
இந்த இரண்டாவது வரியைக் கேட்டு வியந்தேன்.
மனிதன் ஆக்சிஜனை உள்ளிழுத்து சுவாசிக்கிறான். ஆனால், கார்பன் டை ஆக்சைடாக அதை வெளியே விடுகிறான். காதலனுக்குள் சென்ற காற்று வேண்டும் என்றால், அதை அவன் கார்பன் டை ஆக்சைடாகத்தான் வெளியிட முடியும். அதை மீண்டும் காதலி சுவாசிக்க முடியாது. அப்படியானால், அந்தக் கார்பன் டை ஆக்சைடை வைத்துக் காதலி என்ன செய்வாள்? எதற்காக அதைப் பரிசாகக் கேட்கிறாள்?
வைரமுத்து எழுதிய பாடல்கள் பலவும் அறிவியல் பார்வையும் அறிவியல் செய்திகளும் நிறைந்தவை. இந்தப் பாடலில் எப்படி அவர், அறிவியலுக்கு ஒவ்வாத ஒன்றை எழுதினார்?
சந்தா ஓ சந்தா என்றால் என்ன பொருள் என்றும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
