ஜனநாயகன் – விஜயின் பிரம்மாஸ்திரம்
– அண்ணாகண்ணன்
தேர்தலுக்கு முன்னால் இந்தப் படம் வெளியாகியிருந்தால், அத்தனைத் தொகுதிகளையும் விஜய் அள்ளியிருப்பார். இதைத் தடுத்து நிறுத்தியதால், எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள் இல்லை. அடுத்து, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், 2031 சட்டமன்றத் தேர்தல் என இனி நடக்கப் போகிற ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயகன், மிகப் பெரிய தாக்கத்தைச் செலுத்தும்.
இதில் உள்ள குறிப்பிட்ட சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் அல்லது சமூக ஊடகங்களில் பகிர்ந்தால், அதன் விளைவும் வீச்சும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கும். தமிழில் ஜனநாயகன், தெலுங்கில் ஜனநாயகுடு, இந்தியில் ஜன் நேதா எனப் பல மொழிகளில் வௌியாகியிருப்பதால், இந்திய அளவில் விஜயின் செல்வாக்கு உயரும்.
அந்த அளவுக்குத் தேர்தலை மையப்படுத்திய படம் இது. குழந்தைகள், பெண்கள், கிராமத்து மக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் உடனே செயலாற்ற உந்தும் வகையிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வகையிலும் இந்தப் படம் அமைந்துள்ளது.
விஜய் மட்டுமின்றி, அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண்ராஜ் ஆகியோரும் திரையில் தோன்றுகிறார்கள். தளபதி வெற்றி கொண்டான் என்ற பெயரில் விஜயின் பட்டப் பெயர், விஜய் என்ற பெயரின் பொருளான வெற்றி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அத்துடன் இந்தப் பெயர்ச் சுருக்கமும் கட்சியின் பெயர்ச் சுருக்கமும் (டிவிகே) ஒன்றாக வருமாறு வைத்திருக்கிறார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றையும் இதில் விஜய் அதிரடியாகத் தீர்த்து வைக்கிறார். தங்களுக்காக ஒருவர் சூப்பர்மேனாக நின்று போராட வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பரபரப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். பாடல்கள், அதிமுகவுக்கு இன்றும் வாக்குகளைச் சேர்த்து வருகின்றன. அது போல், இந்தப் படத்தின் காட்சிகளும் பாடல்களும் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆரும் விஜய் பக்கம் இருப்பது போல் காட்சிகள் உள்ளதால், எம்.ஜி.ஆர். ரசிகர்களும் விஜய் பக்கம் வருவார்கள்.
ஜனநாயகன் என்ற பெயரிலேயே கன் (Gun) இருப்பதால், படத்திலும் ஏராளமான துப்பாக்கிகள் வெடிக்கின்றன. வன்முறை அதிகம் என்பதால், வயது வந்தோருக்கான படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குச் சில நல்ல செய்திகளை விஜய் அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், வயது வந்தோருக்கான படம் எனச் சான்றிதழ் பெற்றுள்ளதால், குழந்தைகளிடம் அந்தச் செய்திகள் சென்று சேருமா? ஏனெனில் அவர்களால் திரையரங்கிற்குச் சென்று இதைப் பார்க்க முடியாது. தொலைக்காட்சியிலும் ஓடிடி தளங்களிலும் இந்தப் படம் வெளியாகும்போது, என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
இதைப் பொழுதுபோக்குப் படம் என்பதை விட, அதிரடி அரசியல் திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். தனது திறமை என்ன, வலிமை என்ன என்று இயக்குநர் எச்.வினோத் நிரூபித்திருக்கிறார்.
இதை எதிர்கொள்ள, இன்னும் நிறைய அரசியல் திரைப்படங்கள் வரலாம். ஆனால், ஜனநாயகனுக்கு வலிமை சேர்ப்பது கதை மட்டுமில்லை, விஜய் என்னும் ஆளுமை. அவரது பிரம்மாஸ்திரம், இந்த ஜனநாயகன். இது செல்லும் இடமெங்கும் வெல்லும்.
