சட்டம் ஆலோசனைகள் (10)
மோகன் குமார்
கேள்வி: சௌந்திரராஜன் – சென்னை
நகர்புறங்களில் இருக்கக்கூடிய பைனான்ஸ் கம்பெனிகள் வெற்றுக் காசோலைகளை கையெழுத்துடன் பெற்றுக் கொண்டு கடன் அளித்துவிட்டு, பின்னொரு காலங்களில் கடன் தொகையைத் திரும்பப் பெறும் போது அந்த வெற்றுக் காசோலையை தாங்களே நிரப்பிக் கொண்டு அவர்களே வழக்கும் தொடர்ந்தால் அந்த வழக்கின் நிலை என்ன? என் நண்பர் ஒருவர் இது போன்று ஒரு அவல நிலையில் பெரும் வேதனையில் இருக்கிறார். அன்புகூர்ந்து விடையளியுங்கள்.
பதில்:
காசோலை, வெற்றுப் பத்திரம் இவற்றில் எதுவும் நிரப்பபடாமல் கையெழுத்து போடுவது தவறு. மீறிப் போட்டால் இத்தகைய பிரச்னைகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.
சரி உங்கள் நண்பர் விஷயத்துக்கு வருவோம்.
உங்கள் நண்பர் தந்த காசோலையை வைத்து பணம் தந்தவர், உங்கள் நண்பர் மீது செக் பவுன்சிங் வழக்கு போட்டிருக்க கூடும் என உங்கள் கேள்வி மூலம் தெரிகிறது.
செக் பவுன்சிங் வழக்கை பொறுத்தவரை செக் மட்டும் அல்ல, நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு எவ்வளவு கடன் பட்டீர்கள் என்பதற்கான ஆவணங்களும் மிக முக்கியம். உங்கள் நண்பர், கடன்பட்டதாக சொல்லப்படும் தொகை வேறு, கடன் வாங்கிய தொகை வேறு எனவும், கடன் தந்தவர் தானாகவே அதனை நிரப்பி கொண்டு இவ்வாறு செய்துள்ளார் எனவும் வாதிட வேண்டும். அது ஒன்றுதான் வழி. சரியான வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை நாடச் சொல்லுங்கள்.