63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 2)

ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாக இருக்க வேண்டும். அந்த மைந்தனைத் தாய் பிடிக்க, தந்தை அரிய வேண்டும். தாயும் தந்தையும் தம்முள் மனம் உவந்த துன்பமின்றி அமைந்த கறியைத்தான் தாம் உண்பது என்கிறார் பைரவ அடியார்.

பள்ளிக்குச் சென்ற சீராளத் தேவரை அழைத்து வந்து நீராட்டி, அணிகலன்களைப் பூட்டி அழகு செய்து, வழமைபோல் அள்ளியணைத்து முத்தமிட நினைத்த திருவெண்காட்டு நங்கையார் வெருவுற்று நீங்கினார். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராளத் தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்று அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

தாங்கள் பெற்றெடுத்த தெய்வச் செல்வனை, மழலை மாறா இனிய புதல்வனைச் சலங்கை கொஞ்சும் அழகிய கால்கள் இரண்டையும் மடியில் வைத்துப் புடை இடுக்கி மகனுடைய இரண்டு கைகளையும் தாய் பிடிக்கத் தந்தையார் கருவி கொண்டு தலையரிவார். பைரவர் தாயும் தந்தையும் தம்முள் மகிழ்ந்து துன்பமின்றி அரிந்து கறிசமைக்க வேண்டும் என்றதனால், தாயும் தந்தையும், சீராளத் தேவர் என்னும் மகன் இருந்ததால் தங்கள் திருத்தொண்டு முற்றுப் பெறாமல் தொடர்ந்து நிகழ வாய்ப்பளித்தான் என்று மகிழ்ந்திருந்தார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையோ இன்று அடியவர் அமுது செய்யவில்லையானால் தன் கணவர் உயிர் வாழார், சீராளத் தேவர் அடியவருக்கு அமுதாக இருந்து தன் கணவர் உயிரைக் காத்து தன் தாலியை தமக்களித்தான் என்று இருவர் மனமும் மகிழ உணவு சமைத்தார்.

சந்தனத்தாதியார் கறியைப் பல்வேறு வகையாக, விரைந்து சமைத்து சிறுத்தொண்டருக்கு விவரம் அளித்தவுடன், அவரும் பைரவ அடியாரைச் சென்று அழைத்து வந்து, அவரின் பாதங்களைத் தூய்மை செய்து, ஆசனத்தில் அமரச் செய்து மாலைகள் சூட்டிப் புனித நீரால் பாதங்களைக் கழுவினார். அப்புனித நீரை வீடு முழுக்கத் தெளித்துத் தூப தீபம் காட்டிப் பூசனை செய்து வேண்டினார். மனைவியுடன் வணங்கி திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்து வேண்டி நின்றார். பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து, தாம் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் கொண்டு சுவையாக கறியமைத்தீரா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திருவெண்காட்டு நங்கை தலைக்கறி அமுதுக்காகாது என்று கழித்துவிட்டதாகக் கூறியபோது, அதுவும்கூட தாம் உண்போம் என்றார். இணையர் இருவரும் சிந்தை கலங்கித் திகைத்து நின்றனர். உடனே சந்தனத்தாதியார் அதையும் சமைத்து வைத்திருப்பதாகக் கூறி எடுத்துக் கொடுத்தார்.

பைரவ அடியாருக்கு எவ்விதக் குறையுமின்றி அமுது படைப்பதில் மகிழ்ந்த திருவெண்காட்டு நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். ஆனால் அதன் பின்னும் பைரவ அடியார், தாம் தனித்து உண்ண மாட்டோம் என்றும் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வரவேண்டும் என்றும் கூறினார். வெளியில் தேடிய சிறுத்தொண்ட நாயனார், எவரையும் காணவில்லை என்று கூறுகிறார். பைரவ அடியாரும், திருவெண்ணீறு அணிந்திருக்கும் அவரும் அடியார்தான் என்பதால் சிறுத்தொண்டரும் தன்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் என்றார். அடியார் திருவமுது செய்யும் பொருட்டு தாமும் உடனமர்ந்து உணவருந்துவதாகக் கூறி உண்ண ஆரம்பித்தார். அது கண்ட பைரவ அடியார். “உமக்கு ஓர் பிள்ளை இருக்கிறான் அல்லவா? அவனையும் அழைத்து வா. அவனும் நம்முடன் திருவமுது செய்யட்டும்” என்றார். அது கேட்டு சிறுத்தொண்ட நாயனார் கண் கலங்கி தங்கள் மைந்தன் அதற்கு உதவான் என்றார். ஆனால் பைரவ அடியார் அவர்களது மைந்தனும் வந்தால் தான் தாம் அமுது உண்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். சிறுத்தொண்ட நாயனார் செய்வதறியாது திகைத்து நின்றவர், செய்வதறியாது கணவன், மனைவி இருவரும் வாயிற்புறத்தில் நின்று மகனே வருவாய் என்று அழைக்க ஆரம்பித்தபோதும் மகன் வரவில்லை.

சிறுத்தொண்டர் மீண்டும் இப்போது அடியார் அமுதுண்ண நீ வேண்டும் மகனே, என் துன்பத்தை நீக்கும் மைந்தா வருக என்று வேண்டியபோதும் வரவில்லை. திருவெண்காட்டு நங்கையோ, பிள்ளையைத் தந்தை அரிய கால்களைப் புடை இடுக்கி அழுத்திப் பிடித்தபோது சீராள தேவர் கால்களை உதறிய நேரத்தில் அந்தப் பிஞ்சுக் கால்களில் அணிந்திருந்த சிலம்பின் மணி ஒலிகள் தம் காதுகளில் ஒலித்த அந்த நொடியே அது கடைசிக் காட்சியாக ஆகிவிட்டாலும் அதனையே வைத்து மீண்டும் அழைத்தார்.

வையம் நிகழும் சிறுத் தொண்டர்

  மைந்தா வருவாய் என அழைத்தார்

தையலாரும் தலைவர் பணி தலை

  நிற்பாராய்த் தாம் அழைப்பார்

செய்ய மணியே சீராளா வாராய்

  சிவனார் அடியார் யாம்

உய்யும் வகையால் உடன் உண்ண

  அழைக்கின்றார் என்று ஓலம் இட. 

எம்பெருமான் திருவருளால் அந்த அதிசயமும் நடந்தது. குழந்தை சீராளன் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்த அன்பு புதல்வனை அள்ளியெடுத்த அன்னை வாரிக் கையிலெடுத்து கணவரிடம் கொடுக்க, சிவனடியார் அமுதுண்ணப் பெற்றோம் என இருவரும் அகமகிழ்ந்தனர். மகனை அழைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்த சிறுத்தொண்டர் பைரவரைக் காணாது சிந்தை கலங்கித் திகைத்துக் கீழே விழுந்தார். கலத்தில் இருந்த கறியமுதும் காணாமல் அஞ்சினார். பைரவரைத் தேடி வீட்டின் பகுதியில் பார்த்தார். மறைந்த பைரவர் விடை மீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிக் கொடுத்த அதிசயமும் நடந்தது. திருத்தொண்டில் மூவரும் ஈடுபட்டதால் மூவருக்கும் அருள் செய்ய எம்பெருமான் மூவராகவே வந்தனர் போலும்!

தனி வெள் விடை மேல் நெடும்

  விசும்பில் தலைவர் பூத கண நாதர்

முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய்

  உள்ளோர் போற்றி இசைப்ப

இனிய கறியும் திரு அமுதும்

  அமைத்தார் காண எழுந்து அருளிப்

பனி வெண் திங்கள் முடி துளங்கப்

  பரந்த கருணை நோக்கு அளித்தார்

 

சிறுத்தொண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருத்தொண்டில் வல்வினையும் நல்வினையும்!

சிவனடியார்களின் திருத்தொண்டுகள் பற்றிய நூலாகிய திருக்களிற்றுப்படியார், அடியார்களின் செயல்களின் தன்மை சார்ந்து அவற்றை மெல்வினை, வல்வினை என வகைப்படுத்துகிறது. அவற்றுள், ஏறுமாறாக இல்லாமல், மிக இயல்பாக, எவரும் செய்யக்கூடிய எளிமையான சரியை கிரியைத் தொண்டுகள் மெல்லினையெனவும், நினைக்கவே அச்சமூட்டுகின்றனவும், பதற்றமும் ஏற்படுத்துகிற, அடுத்தவர்களால் எளிதாகச் செய்ய முடியாதனவாக உள்ளத் தொண்டுகள் வல்வினை எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் மெல்வினையை இலக்கண வகையாலுரைத்த திருக்களிற்றுப்படியார் வல்வினையை உதாரணங்கள் மூலமே காட்டியிருத்தல் குறிப்பிடத்தகும்.

“வரங்கள் தருஞ்செய்ய வியிரவர்க்குத் தங்கள்
கரங்களினாலன்று கறியாக்க – இரங்காதே
கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
வல்வினையே யென்றதுகாண் மற்று.”

திருஞானசம்பந்தர் தேவாரத்தில், “சிறப்புலவன் சிறுத்தொண்டன்” என்றும் “சீராளன் சிறுத்தொண்டன்”

சிறுத்தொண்ட நாயனார் குறிக்கப்பட்டுள்ளார்

சேக்கிழார் தம் வாக்கில்,

“சீதமதி அரவினுமின் செஞ்சடைமேற்

செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு

வழிபாட்டால் மேதகையாரவர் முன்பு மிகச்

சிறியராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்டராய்

நிகழ்ந்தா ரவனியின் மேல்”

என்பார்.

சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டும், அளவற்ற அன்பின் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் உலக இயல்புக்கு மாறானவை என்றாலும் அவை முக்தி தரும் என்கிறார். பைரவர் (சிவன்) வடிவில் வந்த அடியாருக்குத் தனது கைகளாலேயே தன் மகனைக் கறியாக்கிச் சமைத்து அன்போடு படைத்த சிறுத்தொண்ட நாயனாரின் வல்வினை பற்றி குறிப்பிடுகின்றது.

உயிர் உள்ள ஆடு, கோழி போன்றவற்றை அறுத்தார்கள் எனும்போது, உயிர் அற்ற காய்கறிகளை அரிந்தார்கள் என்பது வழக்கு. சீராளத் தேவர் சிவயோக நிலையில் உயிர் பொருளாக இருந்த காரணத்தால் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரிந்தார் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளதோடு, அரியவினை செய்தார் என்று இரு பொருள்படக் கூறுகிறார். அதாவது ஒன்று அருமையான செயல் என்று குறிப்பிடுவது. மற்றொன்று சீராளத் தேவர் அரிகின்ற செயல் என்பதாம்.

இத்தகைய அரிய செயல் செய்தவரை ஆண்டவன் அருள் செய்தது சற்று கடினமான முறைதான் என்றாலும் பெற்ற பிள்ளையை அரிந்து சமைக்கச் செய்தது கருணையின்பால் படுமா என்று தோன்றலாம். யாரை எப்படி ஆட்கொள்வது என்பதை அந்த இறைவனே முடிவு செய்கிறான். வடபுலத்தில் படையெடுத்துச் சென்ற பரஞ்சோதியார் வாதாபித் தென் நகரைத் தீக்கிரையாக்கியுள்ளார். அதில் பல உயிர்களும், குழந்தைகளும் உயிர் நீத்துள்ளனர். பரஞ்சோதியாரைப் பொருத்தவரையில் அது தனது தேசபக்தியின் வெளிப்பாடு என்பார். பற்றின்றி விருப்பு வெறுப்பின்றித் தேச பக்தியால் வாதாபியை வீழ்த்தியவர் தெய்வ பக்திக்காகப் பற்றற்று தம் பிள்ளையை அரிவாரோ என்று சோதிப்பார் போலும்! இவ்வினாவிற்கான விடையாக சிறுத்தொண்டர் வரலாற்றால் அடியவர்களின் பற்றற்ற நிலையை உலகிற்கு விளக்கியருளுகிறார்.

சிறுத்தொண்டர் நாயனார் பல்லவ மன்னனின் படைத் தளபதியாக ‘வாதாபி’ சென்று சாளுக்கியர்களோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது தம்முடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில் நிர்மாணம் செய்துள்ளார். இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருச்சிற்றம்பலம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.