63 நாயன்மார்கள் வரலாறு – 22. அப்பூதியடிகள் நாயனார்

 

அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி

    யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்

பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்

    பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த

மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்

    வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்

சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்

    திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

ப்பூதியடிகள் சோழநாட்டின் திங்களூர் எனும் ஊரில் பிறந்தவர். நால்வர் பெருமக்களாலும் பாடப்பெற்ற அருட்தலமான திருஐயாறு எனும் ஊருக்கு ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ளது திங்களூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினைப் பற்றி கேள்விப்பட்டு அவரை மிகவும் மதித்து வந்தவர், அவரை முன்பின் பார்த்திராமலே அவர்மீது அளப்பரிய அன்பும், பக்தியும் கொண்டு அவரையே தம் குருவாக எண்ணி போற்றி வந்தார். நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குருபஞ்சாட்சரம் என்று அழைக்கப்படும். அந்த வகையில் தம் குருவின் திருநாமமாகிய திருநாவுக்கரசு எனும் பெயரை குருபஞ்சாட்சரமாகப் போற்றும் அப்பூதியடிகள் தம் மனைவி, மக்கள், மனைப் பொருட்கள் அறச்சாலைகள் போன்று அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார். அவருடைய நான்கு குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயர் சூட்டினார். அவர் வீட்டிற்கும் திருநாவுக்கரசர் பெயர்தான், அவருக்கு எல்லாமே திருநாவுக்கரசர் என்ற வகையில் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் அளித்தல், சத்திரம் அமைத்தல், நீர்ப்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல் போன்ற அறப்பணிகளையும் செய்து வந்தார்.

களவு பொய் காமம் கோபம்

  முதலிய குற்றம் காய்ந்தார்

வளம் மிகு மனையின் வாழ்க்கை

  நிலையினார் மனைப் பால் உள்ள

அளவைகள் நிறைகோல் மக்கள்

  ஆவொடு மேதி மற்றும்

உள எலாம் அரசின் நாமம்

  சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்

என்கிறார் சேக்கிழார் பெருமான், அப்பூதியடிகளின் பெருமையைப் பற்றி.

திருநாவுக்கரசர், தம் பெயரால் பல அறப்பணிகள் செய்யும் அப்பூதியடிகள் அப்படி செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தித்தவராய், அப்பூதியடிகள் இருக்கும் இடம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.  இந்த நற்தொண்டினைப் பற்றி அறிந்து உள்ளம் மகிழ்ந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளைக் காணும் பொருட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். ஆனால், அவர்தான் திருநாவுக்கரசர் என்பது அப்போது அப்பூதியடிகளாருக்குத் தெரியாது. எதிர் நின்ற நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தாம் முன் செய்த தவமே கருணை பொழியும் திருமுகத்தையுடைய அத்தவச் செல்வர் தங்கள் மனைக்கு எழுந்தருளியது என்று கூறி அவர் வந்த காரணம் குறித்தும் கேட்டார். திருப்பழனநாதரை வழிபட்டு வரும் வழியில் தண்ணீர்ப் பந்தலைக் கண்டதோடு அவர் புரியும் அறம் பலவும் கேட்டறிந்து அப்பூதியாரைக் காண வந்ததாகக் கூறுகிறார்.

தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா

மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே

யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா

னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

திருநாவுக்கரசர், அப்பூதியடிகளை நோக்கி, “அடியார்களுக்கு உங்கள் சொந்தப் பொறுப்பில் செய்யும் அனைத்து அறப் பணிகளுக்கும் ஏன் நீங்கள் உங்கள் பெயரை வைக்காமல் வேறொருவரின் பெயரை வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் மிகவும் மனம் வருந்திய அப்பூதியடிகள், பெரியவர் வாயில் நல்ல வார்த்தைகள் வரக்கூடாதா என்று நொந்து போனார். சமணர்களும், நாடாளும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினைத் திருத்தொண்டின் உறைப்பால் வென்ற நாவுக்கரசர் திருப்பேரா வேறோரு பேர் என்று கூறி புரியாமல் பேசுகிறீரே” என்றவர், அத்திருப்பேரே தமது தாரக மந்திரம் என்று வாய் குளர மொழிந்தார்.  அதுமட்டுமல்லாமல் நாவுக்கரசரின் மகிமையை அறியாத அவர் சமணர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லையே என்றும் கேட்டார். பின்னர் அவருடைய ஊரையும், பேரையும் குறித்தும் கேட்டார்.

அப்போது நாவுக்கரசரும், தன்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணாது அதிகைப் பெருமானாரால் கொடுஞ்சூலையினால் ஆட்கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியேன், தாம் என்று சூசகமாக பதிலிறுத்தார். இதனைக் கேட்ட அப்பூதியடிகளார் மீப்பெரும் அதிர்ச்சிக்குள்ளானவர், யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் என்று தவம் புரிந்து காத்துக் கிடந்தாரோ, யார் பெயரால் அனைத்தறங்களும் செய்து வந்தாரோ, தம் செல்வங்கள் அனைத்திற்கும் எவர் பெயரை வைத்து ஓயாமல் மூலமந்திரமாக எண்ணி செபித்துக் கொண்டிருந்தாரோ, அப்பெயருக்குரிய பெருமானார் தம் கண் முன்னால் நிற்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தவர், ஆடினார், பாடினார், மனைவி, மக்களையெல்லாம் அழைத்து வந்து அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கச் செய்தார். தாமும் கண்ணில் நீர் பெருக கைகூப்பியவராய் நாவுக்கரசர் மலரடிகளே சரணம் என்று அடியில் வீழ்ந்தார். அப்பரடிகளும் அவரைத் தம் திருக்கரத்தால் வாஞ்சையுடன் எடுத்தருளினார். அப்பரடிகளின் திருவடியை பூவும், நீரும் கொண்டு பூசனை செய்தார்.

தன்னுடைய இல்லத்திற்கு திருநாவுக்கரசரே வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ந்து கூத்தாடி, உணவு உண்ணுமாறு வேண்டினார். அவரும் அந்த அன்பிற்கு இசைந்ததால் திருஅமுது படைக்கத் தயாரானார்கள். காய்கறிகளும், கனி வகைகளும் கொண்டு தூய நற்புனிதமான உணவைத் தயார் செய்தனர். தங்கள் புதல்வன் மூத்த திருநாவுக்கரசை, திருநாவுக்கரசருக்கு பரிமாறும் பொருட்டு அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து வாழைக்குருத்து அரிந்து வரும்படி அனுப்பினார். அங்கு அவன் வாழைக் குருத்தை அரியும் போது கொடிய நாகம் ஒன்று அவன் கரத்தைத் தீண்டிவிட்டது. நஞ்சு ஏறுவதை அறிந்தும் அவன் ஓடிச்சென்று வாழைக்குருத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிரமம் பாராமல் வந்து தாயின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு அப்படியே அவர் பாதங்களில் சரிந்து விழுந்தான். விடம் தீண்டி அன்பு மகன் உயிர் இழந்தது தெரிந்தும் வேதனையை வெளிக்காட்டாமல் நாவுக்கரசரை அமுது செய்விப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்தப் பெரிய தலைவாழைக் குருத்தில் உணவு பரிமாறி அப்பரடிகள் திருவடியில் விழுந்து வணங்கி அமுதுண்ண அன்புடன் அழைத்தனர். திருநாவுக்கரசர் பூசனை முடித்து தாம் திருநீறு அணிந்த பின்னர் அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியார் மற்றும் குழந்தைகளுக்கும் திருநீறு வழங்கினார். அப்போது மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனையும் அழையுங்கள் திருநீறு பூச வேண்டும் என்றார். நடந்த உண்மையைச் சொன்னால் நாவுக்கரசர் உணவருந்த மாட்டாரே என்று நினைத்த அப்பூதியடிகள், “இப்போது இங்கு அவன் உதவான்” என்றார். அவர் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தைக் கவனித்த நாவுக்கரசர், “இந்தப் பதிலை என் உள்ளம் ஏற்காது. என் செய்தான்? உண்மையைக் கூறுங்கள்” என்றார். அதற்குமேல் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்தவர், மகனுக்கு நேர்ந்த அவலத்தையும் பாயினால் மூடி வைத்த பாங்கினையும் உள்ளவாறு கூறினார்.

இதனைக் கேட்ட நாவரசர், இப்படியும் யாரேனும் செய்வார்களோ என்று வருந்தி, ஆவி போன மகனின் சவத்தை பாயிலிருந்து எடுத்து தன் முன் கொண்டு வரும்படி பணித்தார். அச்சவத்தை நோக்கி சிவபெருமான் அருளும் வண்ணம் அவர் அருளாகிய திருமேனிகள் அமைந்த அளப்பரிய தோற்றத்தை ஒன்று முதல் பத்து வரையாக வைத்து எண்ணும் நிலையாற் பத்துப் பாடல்களைப் பாடியருளினார்.

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

 

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

பத்து கொலாம் அடியார் செய்கை தானே.

பாம்பு கடித்து உயிர் துறந்து பாயிற் கிடத்தப்பட்ட மைந்தன் உறங்கி எழுபவன் போல் எழுந்தவன் அப்பரடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அன்போடு திருநீறு பூசி வாழ்த்தினார். ஆயினும் அப்பூதியடிகளும், அவரது மனைவியாரும் அப்பர் பெருமானால் உணவருந்த முடியவில்லையே என்று வருந்தினர்.  இதனை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் புதல்வர்களை இரு புறமும் இருத்தி உணவருந்தி சில காலம் திருப்பழனத்தில் அப்பூதியடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பல பதிகங்களைப் பாடியருளினார் .

அப்பூதியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருநாவுக்கரசு என்னும் மந்திரத்தைச் சொல்லியும், எழுதியுமே முத்தி பெற்றவர் அப்பூதியடிகள்.  சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதியடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமானை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது

வேதநான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

என்று தேவாரத்திலும்,

சிவசிவ என்கிலர் தீவினையாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவருமாவர்

சிவசிவ என்ன சிவகதிதானே.

என்று திருமந்திரத்திலும் கூறுவது போன்று அப்பூதியடிகள் நாவுக்கரசரைக் காணாமலேயே அவர்மீது பக்தி கொண்டு அவரையே தம் குருவாகவும் ஏற்றுக்கொண்டார். சைவ சமயத்தில் சிவபஞ்சாட்சரம் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. அதே போன்று நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குரு பஞ்சாட்சரம் என்று போற்றப்படுகின்றது. அப்பூதியடிகளும் தம் குருவின் நாமமாகிய திருநாவுக்கரசு என்ற பெயரை குரு பஞ்சாட்சரமாகப் போற்றி, திருநாவுக்கரசரை நேரடியாகக் காணாவிட்டாலும் செவிவழியாக அவருடைய பெருமைகளையும், திருத்தொண்டினையும் அறிந்து அவர் மீது தீராத பேரன்பு கொண்டார். ஆகையால், நாவுக்கரசரின்  திருப்பெயரிலேயே மடங்களும், தண்ணீர் பந்தல்களும் அமைத்து வறியவர்களுக்கும், அடியார்களுக்கும் அனைத்து உதவிகளையும் மனிதநேயத்துடன் செய்து வாழ்ந்து வந்தார்.

 

 “நம்மை உடையவர் கழல்கீழ் நயித்த திருத்தொண்டாலே

இம்மையிலும் பிழைப்பது என என்போலவாரும் தெளிய

 

அப்பூதியடிகள் ‘திருத்தொண்டு’ என்பதனை இறைவனுக்கு மட்டுமன்றி சிவனடியார்களுக்கும், எளியவர்களுக்கும் விருந்தோம்பல் செய்வதையும் தம் அன்றாட வழிபாடாகவே செய்து கொண்டிருந்தார்.

 

 ஆதியோடு அந்தம் இல்லான் அருள்நடம் ஆடும்போது

கீதம்முன் பாடும்அம்மை கிளர்ஒளி மலர்தாள் போற்றி

சீதாமூர் வயல்சூழ்  திங்களூரில் அப்பூதியாராம்

போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலுற்றேன்

 

அப்பூதியடிகள் தம்மைநாடி வந்தவர்களுக்குச் செய்யும் அனைத்து உதவிகளையும் சிவபெருமானுக்குச் செய்யும் தொண்டாகவே எண்ணிச் செய்ததை சேக்கிழார் பெருமான் அப்பூதியடிகளை அறிமுகப்படுத்தும் பாங்கில் இருந்தே அறியலாம்.

தங்கள் தவப்புதல்வனான மூத்த திருநாவுக்கரசை அருகிலிருந்த தோட்டத்தில் வாழைக்குருத்து அரிந்து வரச்சொல்லி அனுப்புகிறார். விரியாத குருத்தினை குறிப்பாக எடுத்து வரச்சொல்கிறார். விரிந்த இலையில் காகம் முதலான பறவைகள் எச்சம் இட்டிருக்கலாம் என்பதற்காகவே குருத்து இலையை அரிந்து எடுத்து வரச்சொல்கிறார். ஆனால் இறைவனின் திருவிளையாடலாக குருத்திலைக்குள் நாகம் இருந்து தீண்டிவிட நஞ்சு ஏறிய சிறுவன் உயிர் இழக்கிறான். நல்ல திருப்பணியைச் செய்ய பெரும்பேறு பெற்றேன் என்ற மகிழ்வுடன் சென்றவனுக்கு நாகம் தீண்டினாலும், ‘பாம்பு தீண்டிய வேகத்தில் உண்டாகிய  கொடிய நஞ்சால் நான் இடறிக் கீழே விழும் முன்னர் இலைக்குருத்தினை தாயிடம் கொண்டு சேர்ப்பேன்’ என்று தீர்மானித்து ஓடிவந்தான். தன் உயிர் நீங்கினும்  அடியாராக வந்த நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது  என்ற எண்ணம் மிக்க சிறந்த தொண்டராக மூத்த திருநாவுக்கரசர் படைக்கப்பட்டுள்ளார்.

 

பெறல் அரும் புதல்வன் தன்னைப்பாயினுள் பெய்துமூடிப்

புறமுனை முன்றில் பாங்குஓர் புடையினில் மறைத்துவைத்தே

அறஇது தெரியாவண்ணம் அமுதுசெய்விப்போம் என்று

 

தம் மகனின் உயிர் பிரிந்த நிலையிலும் சடலத்தை பாயினுள் வைத்துச் சுருட்டி தன் மனையின் புறத்தே உள்ள முற்றத்தில் மறைத்து வைத்த பின்பு நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். அடியார்களையும் வறியவர்களையும் விருந்தினர்களையும் தமது இல்லத்தில் எவ்வித சூழ்நிலை இருந்தாலும் இன்முகத்துடன் வரவேற்று, முகமலர்ச்சியுடன் உபசரித்து அனுப்ப வேண்டும் என்ற உயரிய கொள்கையை தமக்கு மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளுக்கும் கடமையாக்கியுள்ள அப்பூதியடிகளின் வரலாறு போற்றுதலுக்குரியது.

 

திருச்சிற்றம்பலம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.