வரலாறு படைத்த பாரதிராஜா
அண்ணாகண்ணன்
பாடல் பெற்ற தலங்கள் என்று திருக்கோவில்களைச் சொல்வார்கள். ஆனால், பட்டி தொட்டிகளை எல்லாம் பாடல் பெற்ற தலங்களாக மாற்றியவர் பாரதிராஜா. செட்டுக்குள் சிறைப்பட்டிருந்த சினிமாவுக்கு விடுதலை தந்து, எட்டுத் திக்கும் உலாவச் செய்தவர்.
அவருக்கு முன்பும் கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் காட்டினார்கள். ஆனால், அவர்கள் சிறப்பு ஒப்பனைகளால் தங்கள் சிறப்பை இழந்தவர்கள். இவர்தான் மண்வாசனையுடன் அசலான மனிதர்களையும் அவர்களின் உயிர்ப்புள்ள வாழ்வையும் காட்டினார். ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கிராமத்து மாந்தர்களை மையப் பாத்திரங்களாய் மாற்றினார். இதன் மூலம் அவர்களின் வட்டார வழக்கையும் நடை, உடை, பாவனை, சிகையலங்காரம் உள்ளிட்ட வாழ்வியலையும் ஊரையும் உணர்வையும் ஆவணப்படுத்தினார்.
அவரையே கிராமம் என்ற சிமிழுக்குள் அடைக்க முயன்ற போது, அந்தக் கோட்டையும் அழித்தார். தமிழ் என்ற வட்டத்துக்கு வெளியே தெலுங்கிலும் இந்தியிலும் படம் எடுத்தார். இன்று உடல் என்ற கூட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.
அவரது திரைப்படங்கள் (முதல் மரியாதை), திரைக் காட்சிகள் (நான் கரை ஏறிட்டேன்), வசனங்கள் (பத்த வச்சிட்டியே பரட்டை), பாடல்கள் (சிறுபொன்மணி அசையும்) எனப் பலவும் சாகா வரம் பெற்றவை. தான் வரலாற்றில் இடம் பெற்றதோடு புதிய வரலாறு படைத்தார். தன்னுடன் ஒரு பெரும் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார். மக்கள் நினைவுகளில் என்றும் வாழ்வார்.
Photo Credit: Stills Ravi / The Hindu Archives
