பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்



தொண்டை நாடு சான்றோர் உடைத்து, எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித்த தொண்டை நாட்டில், நீர் வளமும் நில வளமும் மிக்க ஊரான திருவேற்காட்டில், வேளாண்மை குலத்தில் தலைமை சார்ந்த பெரியார் ஒருவர் வாழ்ந்தார். திருநீற்றினையே மெய்ப்பொருளாகக் கருதியவர், சிவனடியார்களுக்கு அன்புடன் திருவமுது படைத்து, அவர்களையே சிவமெனக் கருதித் துதித்துப் பின்னர் தாம் உண்ணும் நியதியைக் கொள்கையாகக் கொண்டவர்.
தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
வெகுண்டிடலான் “மூர்க்கர்” என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே
அடியார்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு அன்புடன் அளித்து அமுதும் செய்வித்து வந்தார் மூர்க்க நாயனார். அடியவர்கள் திரண்டு வர ஆரம்பித்ததால் அவர் தம் உடைமைகளை விற்றும் திருத்தொண்டு செய்து வந்தார். இருப்பினும் மேலும் அத்தொண்டு செய்வதற்குப் போதிய பொருள் இன்மையால், முன்பு அவர் கற்ற சூதாட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதன் மூலம் பொருள் ஈட்டி அடியவர்களுக்கு அமுது படைக்க எண்ணினார். ஆனால் அவ்வூரில் சூதாடுவோர் இல்லாமையினால் அவ்வூரை அகன்று ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்று, அவ்வூரிலுள்ள சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டுப் பின் சூதாடி அதன் மூலம் வரும் பொருளினால் அடியவர்க்கு அமுது ஊட்டி வந்தார்.
பெற்றம் ஏறிப் பலிக்கு வரும்
பெருமான் அமரும் தானங்கள்
உற்ற அன்பால் சென்று எய்தி
உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதியாம்
கடனும் முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக் குடந்தை
அடைந்தார் வந்து சில நாளில்
பின்னர் கும்பகோணத்தை அடைந்து அங்கே சூதாடிப் பொருள் தேடி தம் கடமையை நிறைவேற்றியவர், சூதிலே முதல் ஆட்டத்தில் தோற்றவர் பின்னாட்டங்களிலே பல முறையும் வென்றவர் பொருள் பெற்றார். சூதிலே மறுத்தவர்களை மூர்க்கமாக உடைவாளை உருவிக் குத்தியதால், நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினால் பெற்ற பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்தபின் கடைப்பந்தியில் அமர்ந்து தம் பசியாறினார்.
சூதினில் வென்று எய்தும் பொருள்
துரிசு அற்ற நல் உணர்வில்
தீது அகல அமுது ஆக்குவார்
கொள்ளத் தாம் தீண்டார்
காதலுடன் அடியார்கள் அமுது
செயக் கடைப் பந்தி
ஏதம் இலா வகை தாமும் அமுது
செய்து அங்கு இருக்கும் நாள்.
எம்பெருமானின் அடியார்களுக்கு அன்றாடம் அமுது படைத்தவர், அப்பெருமக்களின் அருளால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெற்று இவ்வுலகை விட்டு இறையடி நிழல் சென்று சார்ந்தார்.
மூர்க்க நாயனார் புராணம் சொல்லும் கருத்து
“உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே” என்று சிவஞான சித்தியாரிலும்,
“எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே” – “அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை” – “சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்” என தாயுமான சுவாமிகள் பாடலிலும்,
“என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்” என பட்டினத்தடிகள் பாடலிலும் வருவன கொண்டு, செய்யும் செயல் யாவும் சிவனருளால் மட்டுமே நடைபெறுவதை அறியத் தருகின்றனர்.
ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான சூதாட்டத்தை இறையடியாரான ஒரு நாயனார் செய்வது தகுமோ என்ற வினா எழுவது இயல்புதானே. ஆனால் இந்நாயனார் அந்த சூதாட்டத்தை தம் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தம் குடும்பத்திற்காகவும், சுய நோக்கிற்காகவும் செய்திருந்தால் அது மாபெரும் தவறாகும். ஆனால் நாயனார் தாம் முன்பு கற்ற அந்த சூதாட்டத்தை தம் வாழ்வு வளம் பெற பயன்படுத்தவில்லை. தம் உடைமைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அடியவர்களின் நலன் கருதி அந்த சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அடியார்களுக்கு அமுது படைக்கவும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளி வழங்க வேண்டும் என்ற தம் கொள்கை நிறைவேறவும் அவர் இறுதி வரை பாடுபட்டார். பொதுவாகவே அடியார்கள் தாம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதனால் வரும் பாவத்தை ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் அவர் சூதாடி வந்த பொருளில் தனக்காகவோ, தன் குடும்பத்தினர்க்காகவோ ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.
“செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு” என்று திருக்களிற்றுப்படியார் கூற்றினாலும்,
“நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே” எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதாலும் அறிய முடிகிறது.
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.
சுந்தரர் தேவாரம்
திருச்சிற்றம்பலம்
