இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

மண்ணும் கடவுள் மரமும் கடவுள்
நீரும் கடவுள் நெருப்பும் கடவுள்
ஊர்கள் தோறும் பற்பல பெயரில்
உருவம் பெற்று கடவுள் திகழ்கிறார்

ஏகன் ஆகி இருப்பார் கடவுள்
எங்கும் நிறைந்தும் இருப்பார் கடவுள்
தாபங் கொண்டு தேடுவார் கண்ணில்
தரிசனம் கடவுள் கொடுப்பார் என்பர்

சமயச் சண்டையில் இருக்கார் கடவுள்
சாதிச் சண்டையில் இருக்கார் கடவுள்
இமயம் இருப்பார் கடவுள் என்கிறார்
இறைவன் இல்லா இடமே இல்லை

கடவுளை நம்பாச் சமயமும் உண்டு
கடவுளே இல்லை என்பாரும்  உண்டு
நம்பினார் நம்பாதார் யாவர்க்கும் என்றும்
நல்லதை நல்குவார் கடவுளாய் தெரிவார்

உருவாய் இருப்பார் அருவாய் இருப்பார்
ஒருவரும் நினையா உருவமாய் ஒளிர்வார்
அருளாய் இருப்பார் அன்பாய் இருப்பார்
அனைத்தும் ஆகி இருப்பார் ஆண்டவன்

கற்பனை யாகக் கடவுள் இருக்கிறார்
கற்சிலை யாகக் கடவுள் இருக்கிறார்
இத்தரை இருப்பார் எண்ணு மனைத்திலும்
இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம்  !

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *