காதலிக்க நேரமுண்டு – 2
செ. கோட்டாளம்
ஒவ்வோராண்டும் நாங்களும் எங்கள் சித்திமக்களும் மாமாமார்மக்களும் யாராவது ஒருவரின் வீட்டில் ஒன்றாகச்சேர்ந்து கும்மாளமிட்டு கோடையை உல்லாசமாக கழிப்பது வழக்கம். இந்த ஆண்டு என் இளைய மாமாவின் வீட்டுக்கு செல்லும் முறையானது. ஆனால் என் தங்கை இனி போகவேண்டாம் என்று அம்மா தடுத்துவிட்டார். எனவே நான் மட்டும் கிளம்பி மாமாவீட்டுக்கு சென்றேன். நான் வண்டியிலிருந்து இறங்கியதும் வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்த என் மாமன்மகள் என்னை வரவேற்றாள். முகநிறைந்த மகிழ்ச்சியுடனும் வாய்நிறைந்த புன்னகையுடனும் ‘வாருங்கள், அத்தான்’ என்று அவள் சொன்னது என்னையும் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவளிடம் ஏதோ ஒரு மாற்றம் இருந்ததாக உணர்ந்தேன். அவளை சில ஆண்டுகளாக நான் பார்த்ததில்லை என்பது அப்போதே என் நினைவுக்கு வந்தது. சென்ற ஆண்டு என் சித்திவீட்டுக்கு எல்லாரும் வந்திருந்தபோது அவள் வரவில்லை. ஓ, என் தங்கையை இப்போது அம்மா தடுத்துவிட்டதுபோல் என் அத்தையும் இவளை போகவேண்டாம் என்று சொல்லியிருப்பார்.
உள்ளே ஓடிச்சென்று தன் அம்மாவிடம் நான் வந்திருப்பதை சொன்னாள். அவள் துள்ளிக்குதித்து ஓடிய விதம் என்னை என்னவோ செய்தது. அதன்பிறகே எனக்கு உறைத்தது. அவள் தாவணி போட்டிருந்தாள். அதுவரை பாவாடைச்சட்டையில் சிறுமியாகவே பார்த்த நான் அப்போதே அவளை ஒரு இளம்பெண்ணாக கண்டேன். அவள் ஓடியபோது தாவணியின் முந்தானை காற்றில் படபடத்த விதமே என்னை அவ்வாறு அலைக்கழித்தது. அந்தக்கணத்திலே நான் முந்தானைதாசனாகிவிட்டதை அப்போது உணரவில்லை.
எல்லாரும் வந்துவிட்டபின்னும் எனக்கு மாமன்மகளுடன் பேசுவதும் அவளுடன் விளையாடுவதுமே அதிக ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததை உணர்ந்தேன். அவளுக்கு பலவிதங்களில் வேடிக்கைகாட்டி சிரிக்கவைத்தேன். அவளும் என்னுருகில் இருப்பதை விரும்பியதாக தோன்றியது. தனிமையில் அவளுடன் பேச வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவள் உடலழகை தொலைவிலிருந்து பார்த்து மகிழ்ந்தேன். அருகிலிருக்கும்போது தொட்டுப்பேச முயன்றேன். ஆனால் நான் அவளுடன் நெருக்கமானபோதெல்லாம் அத்தை ஏதாவது சாக்கை வைத்து அவளை அழைத்து ஏதாவது வேலைகொடுத்துவிடுவது வழக்கமானது. முறைப்பெண்ணையும் முறைப்பையனையும் நெருங்கவிடுவது ஆபத்தாக முடியலாம் என்று அவர் எண்ணுவது தெளிவாகவே எனக்கு புரிந்தது. ஆனால் அப்படி நெருங்கவே எனக்கு மிகவும் ஆசையாயிருந்தது!
எந்தப்பெண்ணாலும் கவரப்படாத நான் இவள்மீது எப்படி கவர்ச்சியுற்றேன் என்பது எனக்கு விளங்கவில்லை. இவ்வாறிருந்தபோது ஒருநாள் திகில்பாட்டி மாமாவீட்டுக்கு வந்தது. திகில்பாட்டி என்பது என் அம்மாவின் சித்தி. பணக்கார தாத்தாவுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டது. ஒரு பையன் பிறந்தபின் சில ஆண்டுகளில் தாத்தா இறந்துவிட்டார். அந்த பையன் ஆளாகி தாத்தாவின் வியாபார மேலாண்மையையும் சொத்துப்பராமரிப்பையும் பாட்டியிடமிருந்து பெற்றுக்கொண்டபின் பாட்டி உல்லாசமாக ஊர்சுற்றிக்கொண்டிருந்தது. முன்னறிவிப்பில்லாமல் திடீரென்று யார்வீட்டிலாவது காரில் வந்து இறங்கும். தடால்புடாலென்று பேசி எல்லாரையும் அதட்டிவிட்டு வந்ததுபோலவே திடீரென்று சென்றுவிடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாருக்கும் அஞ்சாமல் தன் மனத்திலுள்ளதை அப்படியே போட்டு உடைத்துவிடும். பிள்ளைகளுக்கு ஏனோ இவரைப்பற்றி கொஞ்சம் அச்சம். அதனாலே நாங்கள் திகில்பாட்டி என்று பெயர்வைத்திருக்கிறோம். ஆனால் பெரியவர்கள் அது வந்தவுடனே தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை எதுவாயினும் அப்படியே போட்டுவிட்டு திகில்பாட்டிக்கு சேவைசெய்ய போய்விடுவார்கள். திகில்பாட்டி வீட்டிலிருக்கும்போது அதனுடன் பேசுவதைத்தவிர, அதாவது அது பேசுவதை கேட்பதைத்தவிர, வேறு எந்த வேலையும் நடக்காது.
மாமாவீட்டுக்கு திகில்பாட்டி வந்தபோது நானும் சில தம்பிமாரும் தெருவில் மட்டையாடிக்கொண்டிருந்தோம். அது காரிலிருந்து இறங்கியதும் நாங்களெல்லாம் ‘ஐ…யா, பாட்டி!’ என்று (பொய்யான) மகிழ்ச்சியுடன் சென்று வணக்கமிட்டோம். மட்டையாட்டத்துக்கு முற்றுப்புள்ளி. பாட்டி ஒவ்வொருவரையும் விசாரித்துக்கொண்டு சிலருக்கு பாராட்டுகளையும் சிலரின் அம்மாவையோ அப்பாவையோ பற்றிய ஏதாவது குறைகளையும் வாரிவழங்கிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது. நாங்களும் பின்தொடர்ந்தோம். பாட்டி வந்திருக்கும்போது விளையாடிக்கொண்டிருந்தால் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு வசவு கிடைக்கும்.
அத்தை பாட்டியை மிகவும் ஆர்ப்பாட்டமாக வரவேற்று அமரச்சொன்னார். மாமாவை வயலிலிருந்து விரைவாக வரும்படி அலைபேசியில் சொல்லிவிட்டு பால்வாங்கிவர ஒரு பொடியனை விரட்டினார். சமையலறையிலிருந்த மகளை அழைத்து பாட்டிக்கு வணங்கஞ்செய்யவைத்தார். அவளைப்பார்த்த பாட்டி ‘அட, பெரியவளாக வளர்ந்துவிட்டாளே! அப்படியே அவள்பெரியத்தையை உரித்துவைத்திருக்கிறாள்’ என்றது. நான் சற்றே அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். அவளுக்கு பெரியத்தை என் அம்மா! அப்போதே எனக்கு பல உண்மைகள் உறைத்தன. என் மாமன்மகள் என் அம்மைவைப்போலவே இருந்தாள். இந்த உருவ ஒற்றுமை என் உள்ளுணர்வுகளில் பட்டதாலே இவள்மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறுவயதில் என் அம்மா இவளது இப்போதைய தோற்றத்திலே இருந்திருக்கவேண்டும்.
இதை உணர்ந்ததும் எனக்கு அவள்மீதிருந்த ஆசை காதலாகவே மலரத்தொடங்கியது. சிறுவயதுள்ள அம்மாவுடன் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையெல்லாம் இப்போது நனவாகத்தொடங்கியது. இவளுடன் சிரித்துப்பேசுவதை என் அம்மா சிறுவயதினராயிருந்தபோது அவருடன் பேசுவதைப்போலவே எண்ணிக்கொண்டேன். அவளும் என்னுடன் பேசுவதை மிகவும் விரும்புவதாக தோன்றியது.
அவளுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினேன். அவ்வாறான வாய்ப்பை உண்டாக்க அவளது செயல்களை கவனித்தேன். அவள் மொட்டைமாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கவரும் நேரம்பார்த்து நான் மாடிப்படியில் அமர்ந்து ஒரு செய்தித்தாளை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாசாங்குசெய்தேன். அவள் வரும் கொலுசொலி கேட்டபோதே மகிழ்ந்தேன். ஆனால், ‘விரைவில் வாடி. மாவாட்டவேண்டும்’ என்ற அத்தையின் குரல் என் ஆசையில் நீரூற்றியது. அவள் அமைதியாக என்மீது ஒரு குறும்புப்புன்னகையை வீசிவிட்டு சென்றாள்.
இந்த அத்தையையாவது சமாளிக்கலாம். ஆனால் என் மச்சான் இருக்கிறானே! என் எண்ணம் அவனுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தது. நான் அவளை எங்காவது ஓரங்கட்டினால் இவன் வந்து இடையில் அமர்ந்துகொண்டான். மாமன்மகளுடன் நெருங்கி அமர தயங்கி சற்று இடைவெளிவிட்டே நான் அமர்வது வழக்கம். இவன் அந்த இடைவெளியில் இருவரையும் உரசிக்கொண்டு அமர்ந்துகொள்வான். எனக்கு அவன்மீது எரிச்சலாக வந்தது. ‘இரு, இரு. உனக்கு இருக்குடா! என்றைக்காவது ஒருநாள் நான் இவளையே கட்டிக்கொள்வேன். அன்றைக்கு உன்னை வெளித்தள்ளி இவளை உள்வைத்து கதவை தாழிட்டுக்கொள்கிறேன்’ என்று மனத்துள் கருவிக்கொண்டேன்.
