Author: முனைவர் மு.பழனியப்பன்

  • பதினெண் கீழ்க்கணக்குநூல்களில் சமயங்களும், புத்திலக்கிய வளர்ச்சிநிலைகளும்

    — முனைவர் மு.பழனியப்பன்.

     

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

     

     

     

    படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தின் முன்னோடி இலக்கியமாகக் கருதப்பட்டு நிலைப்படுகின்றது. அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக இருந்தாலும் அவை தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கின்றன. அவற்றின் நீதி சொல்லும் பாங்கு புதிய இலக்கிய வகை உருவாகக் காரணமாகியது.

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட ஆசிரியர் அவர்சார்ந்த சமயம் ஆகியவற்றின் காரணமாக சமயப் பின்புலத்தையும் பெற்றமைகின்றன. இப்பின்புலம் அக்கால நிலையில் சமயங்கள் பெற்றிருந்த ஏற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவற்றின் கடவுள் வாழ்த்துகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கும்போது அவைதிக சமயங்கள், வைதிக சமயங்கள் என்ற இருநிலைப் பகுப்பினை உணரமுடிகின்றது. இவைதவிர சமயப்பொதுமை என்ற நிலையையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் பரப்பில் காணமுடிகின்றது.

    அவைதிக சமயங்களாகக் கொள்ளத்தக்கன சமணம், பௌத்தம் ஆகியனவாகும். இவற்றில் ப சமணம் சார்ந்த கடவுள் வாழ்த்துக்களைப் பெற்ற பதினெண் கீழ்;க்கணக்கு நூல்களாக, நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்கள் அமைகின்றன. பௌத்த சமயம் சார்ந்த கடவுள் வாழ்த்துகள் எதுவும் எந்நூலுக்கும் அமையவில்லை. இதன் காரணமாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தில் பௌத்தச் செல்வாக்கு குறைந்தே இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

    வைதீக சமயங்கள் என்ற நிலையில் சைவம் வைணவம் ஆகியன அமைகின்றன. சைவம் சார்ந்தனவாக ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகிய நூல்கள் அமைகின்றன. திருமால் பற்றிய கடவுள் வாழ்த்துகளை உடைய நூல்களாக நான்மணிக்கடிகை, திரிகடுகம், கார் நாற்பது ஆகியன அமைகின்றன. சிவன், திருமால் இருவரையும் பாடுவனவாக இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியன அமைகின்றன. திருக்குறள் சமணப் பொதுமை வாய்ந்ததாக அமைகின்றது. ஆசாரக் கோவை வேதநெறி சார்ந்ததாக அமைகின்றது. மீதம் ஐந்து நூல்கள் சமயச் சார்பினை அறியா நிலையில் உள்ளன.

    அவைதீக சமயங்கள்
    அவைதீகம் என்றால் வேதநெறியை ஏற்காதது என்று பொருள்படும். வேதங்கள் சொல்லிய முறைக்கு முன்னான சமயங்கள், அல்லது வேதநெறிப்பாடாத சமயங்கள் அவைதீக சமயங்கள் எனப்படுகின்றன. இவ்வகையில் சமணமும், பௌத்தமும் அவைதீக சமயங்கள் ஆகின்றன. அதாவது ஆரியர் வருகைக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட வேத நெறி சார்ந்த சமயங்களை வைதீக சமயங்கள் என்றும், அதற்கு முன்னான முரணான சமயங்களை அவைதீக சமயங்கள் என்றும் பிரிப்பது சமயப் பாகுபாடாகும்.

    சமணம்
    சமண சமயத்தாக்கம் அதிகமாக இருந்த காலமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காலம் அமைகின்றது. இதற்குப் பின் வந்த களப்பிரர் காலத்திலும் சமண சமயத்தின் ஆளுமை இருந்தமையை இலக்கிய வரலாறுகள் உணர்த்துகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் சமண சமய கடவுள் வாழ்த்துகள் சமயம் பற்றி அறிய முக்கிய சான்றாதாரங்களாக உள்ளன.

    நாலடியார் சமண சமயம் சார்ந்த பலரால் எழுதப் பெற்றது. இதன் கடவுள் வாழ்த்துப்பகுதியில், இடம்பெறும் பாடல் பின்வருமாறு.
    வான்ஈடு வில்லின் வரவறியா வாய்மையால்
    கால்நிலம் தோயாக் கடவுளை- யாம் நிலம்
    சென்னி யுறவணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
    முன்னி யவைமுடிக என்று”
    என்ற இப்பாடல் அருக வணக்கமாக அமைகின்றது. வானவில்லின் வரவையும் செலவையும் அறிய இயலாது. அதுபோன்று உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகியன பற்றியும் அறிந்துகொள்ள இயலாது. பாதம் புவியில் பாடாத அளவு பெருமை உடைய அருகக்கடவுளை வணங்கி நாம் எண்ணியதை முடிக்க வேண்டுவோம் என்பது நாலடியாரின் தெய்வ வணக்கம் ஆகும்.

    மேலும் நாலடியாரில் நிலையாமை கருத்துக்கள் முன்னணியில் அமைக்கப்பெற்றுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியனவும் வலியுறுத்தப்பெற்றுள்ளன. இவற்றின் வழி சமண சமயக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
    பழமொழி நானூறில் வரும் கடவுள் வாழ்த்து பின்வருமாறு
    ~அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
    விரிகடல் சூழ்ந்த வியன்கண் மாஞாலத்து
    உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
    பெரியதன் ஆவி பெரிது
    என்ற பாடல் பழமொழி நானூற்றின் முன்பகுதியில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதில் பெரியதன் ஆவி பெரிது என்று ஒரு பழமொழி எடுத்தாளப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே இக்கடவுள் வாழ்த்தும் பிறறொரு புலவரால் எழுதப்பாடாது முன்றுறையரையனாராலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

    பெரியதன் ஆவி பெரிது என்ற இந்த உவமை சமணசமயம் சார்ந்த உவமையாகும். சமண சமயத்தில் உடல் பெரியதாக இருந்தால் அதனுள் இருக்கும் உயிரும் பெரியதாக இருக்கும் என்ற கருத்து விளங்குகின்றது. சீவன் அல்லது உயிருக்குப் பருமனும்அளவும் குறிக்கின்றது சமணரது தத்துவம். உயிர் எந்த உடலை தனக்கு உறைவிடமாகக் கொள்கின்றதோ அந்த உடலின் பருமனுக்கு ஏற்பத் தன்னைக் கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது (கி.லெட்சுமணன், இந்தியத் தத்துவ ஞானம்,ப.96) என்ற கருத்தினை மேற்கொண்டுப் பார்க்கையில் பழமொழிநானூற்றின் கடவுள் வாழ்த்து சமண சமயக் கொள்கைக்கு இடம் தருவதாக இருப்பதை அறியமுடிகின்றது.

    பரந்த கடல் சூழ்ந்த உலகில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் கெடுத்துக், குற்றமற்றவராக விளங்கும் இறைவனின் திருவடிகளை அறிந்தவர்களின் உயர்வு பெரிதாகும். அது பெரிய உடலின் ஆவி பெரியதாக அமைவதுபோல் அமையும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

    இந்நூலுக்கு ஒரு தற்சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது.இதிலும் இந்நூல் சமணம் சார்ந்தது என்பது தெரிவிக்கப்பெற்றுள்ளது.
    ~பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
    பண்டைப்பழமொழி நானூறும் கொண்டு இனிதா
    முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
    இன்றுறை வெண்பா இவை.
    என்ற இப்பாடலில் அசோக மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று அருகப் பெருமான் வாழ்த்தப் பெறுகிறான். இவற்றின் வாயிலாக பழமொழி நானூறு சமணசமயம் சார்ந்தது என்பது தெளிவாகின்றது.

    சிறுபஞ்சமூலமும் சமணம் சமயம் சார்ந்த நூலாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்து பின்வருமாறு.
    முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
    பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
    மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
    வெண்பா உரைப்பான் சில
    என்ற கடவுள் வாழ்த்து காரியாசானின் சிறுபஞ்சமூலத்தின் முன்பகுதியில் இடம்பெறுகின்றது.

    காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றினையும் ஒழித்து, முழுதுணர்ந்து, முதுமை பெறாத இறைவனின் பாதத்தை குற்றமின்றி வணங்கி அப்பெருமானின் குணங்களைப் போற்றி இவ்வுலகத்திற்கு நன்மை உண்டாகும் வண்ணம் சிறுபஞ்சமூலம் என்ற நூலை நான் உரைப்பேன் என்ற ஆசிரியர் கூற்றாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது.
    ஏலாதி என்ற நூலும் சமண சமயச் சார்புடைய நூலாகும்.
    அறுநால்வர் ஆய்புகழ்ச் சேவடி யாற்றப்
    பெறுநாலவர் பேணி வழங்கிப் பெறுநூல்
    மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
    இறைபுரிந்து வாழ்தலியல்பு.
    என்ற இப்பாடலில் சமண சமய அடிப்படைகள் பல கூறப்பெற்றுள்ளன. சமண சமயத்தில்தீர்த்தங்கரர்கள்- 24, அவதராங்கள்-24, தேவராசி -4, சக்கரவர்த்திகள் -12, பலதேவர்-9, வாசுதேவர் -9 என்ற கூறுபாடுகள் ஏற்கப்படுகின்றனர். இவர்கள் கொல்லாமை முதலான அறங்களை உலகில் பரவச் செய்தவர்கள் ஆவர். இவர்களின் மேலாக, வேதங்களால் உணர்த்தப்படுகின்ற இறைவனை எப்போதும் துதி செய்து வாழுங்கள். இறந்தபின் இதற்கு வாய்ப்பில்லை. தேவர்களுக்கு அரசனும் இதனையே செய்து பெரும்பதவி பெற்றான் என்கிறது இப்பாடல்.

    ஏலாதி நூலின் ஆசிரியராக விளங்கும் கணிமேதாவியார் பாடிய அகத்துறைப் பாடல் திணைமாலை நூற்றைம்பது ஆகும். இந்நூலும் சமண சமயத்தவரால் எழுதப்பெற்றது என்பதற்கு ஏலாதி சான்றாக அமைகின்றது.

    இவ்வாறு சமண சமய நூல்களின் கடவுள் வாழ்த்துகள் அக்கடவுளின் தன்மைகளை, இயல்புகளை, அவர்களின் சுற்றததை எடுத்துக்காட்டுகின்றது. இதன் காரணமாக பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் சமணத்திற்கு உயரிய இடம் இருந்ததை உணரமுடிகின்றது. அதாவது ஏறக்குறைய ஐந்து நூல்கள் என்ற பெரிய எண்ணிக்கை சமண சமயத்தின ஆளுமை உயர்வை இக்காலத்தில் காட்டுவதாக உள்ளது.

    வைதீக சமயங்கள்
    வைதீக சமயங்கள் என்ற நிலையில் வேதநெறிக்கு உட்பட்ட சமயங்களாக சைவம், வைணவம் ஆகியன கொள்ளப்பெறுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்பெறுகின்றன.

    சைவம்
    சிவனை முழுமுதல் தெய்வமாகக் கொண்ட சமயம் சைவ சமயம் ஆகும். இச்சமயத்தின் கடவுளான சிவனைப் பற்றிக் கடவுள் வாழ்த்தில் பாடி சைவசமயப் பின்புலம் ஏற்படுத்திக் கொண்ட நூல்கள் நான்காகும். அவை ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகியன சிவபெருமானின் பாடலைத் தம் கடவுள் வாழ்த்தாகக் கொண்டுள்ளன. இவற்றின் வழியாக சிவபெருமான் பற்றி கருத்துகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

    பெருவாயின் முள்ளியார் பாடிய ஆசாரக் கோவையின் சிறப்புப் பாயிரமாக சிவனைப் போற்றும் கடவுள் வாழ்த்து ஒன்று அமைந்துள்ளது.
    ஆர்எயில் மூன்றும் அழித்தான அடி ஏத்தி
    ஆரிடத்துத் தான்அறிந்த மாத்திரையான் ஆசாரம்
    யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை
    ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் – தீராத்
    திருவாயில் ஆய திறல்வண் கயத்தூர்ப்
    பெருவாயின் முள்ளிஎன் பான்
    என்ற இப்பாடலில் ஆர் எயில் மூன்றும் என்பது திரிபுரம் பற்றியதாகும். திரிபுரத்ஐ;த எரித்தவன் அடி ஏத்துவதாக ஆசாரக்கோவையின் சிறப்புப் பாயிரம் அமைகின்றது.

    மேலும் இவ்வாசாரக் கோவையின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒருபாடல் வேதநெறியைப் போற்றுகின்றது.
    தக்கிணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்
    முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால்
    எப்பாலும் ஆகா கெடும் (பாடல். 3)
    என்ற பாடலில் வேதநெறிமுறை காட்டப்பெற்றுள்ளது. எரியால் பொருள்களை அவிக்கும் வேள்வி, அந்தணர்களுக்கு வழங்கப்பெறும் ;தட்சிணை போன்றன வேதக்குறிப்புகள் ஆகும். இவ்வகையில் வேதநெறியின் பாற்பட்டதாக ஆசாரக்கோவை அமைகின்றது.

    மூவாதியார் படைத்த ஐந்திணை எழுபது என்ற நூலில் விநாயக வணக்கம் இடம்பெற்றுள்ளது.
    எண்ணும் பொருளினிதே எல்லா முடித்தெமக்கு
    நண்ணும் கலையனைத்து நல்குமால்- கண்ணுதலின்
    முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்
    சண்டத்தான் ஈன்ற களிறு
    என்ற பாடலில் ஈசனைக் கண்ணுதல் தெய்வமாக அதாவது நெற்றியில் கண் பொருந்தியவனாக, மூலமாக விளங்குகின்றவனாக, கண்டத்தில் விடம் உடையவனாகச் சிவனைக் காட்டி அத்தெய்வத்தின் மகனான விநாயகப் பெருமான வேண்டிய கலைகள் அனைத்தும் தருவான் என்று உரைக்கப்பெற்றுள்ளது.

    வைணவம்
    வைணவத்தின் முதல் தெய்வம் திருமால் ஆவார். இவர் முல்லை நிலத் n;தய்வமாகச் சங்ககாலத்தில் வைத்து எண்ணப்பெற்றார். இதன் தொடர்ச்சிப் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் காணக்கிடைக்கின்றது. திரிகடுகம், கார்நாற்பது, நான்மணிக்கடிகை ஆகிய நூல்கள் திருமால் வணக்கத்தைப் பெற்றுள்ளன.
    ~மதி மன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
    கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
    முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
    எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும் ப+வைப்
    புதுமலர் ஒக்கும் நிறம்
    என்பது விளம்பிநாகனார் பாடிய நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இதில் திருமாலின் முகம் முழுமதி போன்றது என்றும், திருமாலின் கையிலுள்ள சக்கரம் சூரியனைப் போன்றது என்றும் அவனின் விழிகள் தாமரைமலர் போன்றது என்றும், அவன் திருமேனியின் நிறம் காயா மலர் போன்றது என்றும் கருத்துக்கள் அமையப் பாடப்பெற்றுள்ளன. இதனைப் பாடிய விளம்பிநாகனார் கடவுள் வாழ்த்தாக மற்றொரு பாடலையும் தருகின்றார்.
    படியை மடியகத் திட்டான் அடியினால்
    முக்காற் கடந்தான் முழுநிலம் – அக்காலத்தும்
    ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் கோவின்
    அருமை அழித்த மகன்
    என்ற இப்பாடலில் திருமாலி;ன் செயல்கள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகைத் தன் மடியில் வைத்தவன் திருமால். அவன் மூவடியால் உலகை அளந்தவன். குன்றைக் குடையாகப் பிடித்து ஆநிரைகளைக் காத்தவனும் அவனே. அரிய நெருப்பு மதிலான ~சோ|வை அழித்தவனும் அவனே. இவ்வாறு அவனின் அருமை பெருமைகளைச் சொல்லி நான்மணிக்கடிகை திருமாலை வாழ்த்துகின்றது.
    நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தில் திருமால் வாழ்த்து அமைந்துள்ளது.
    ~கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
    தண்ணறும் ப+ங்குருந்தம் பாய்ந்ததூஉம் நண்ணிய
    மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
    ப+வைப்ப+ வண்ணன் அடி
    என்ற இப்பாடலில் திருமாலின் அலகிலா விளையாட்டுகள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகை அளந்தவன் கண்ணன். குருந்த மரம் முறித்ததும், வண்டியை உதைத்ததும் திருமாலே. அவன் காயாம் ப+வைப் போன்ற கரிய நிறமுடைய திருமால் ஆவான். இவ்வாறாக திருமாலின் பெருமையைப் பேசுவதாக அமைவது இக்கடவுள் வாழ்த்தாகின்றது.

    கார் நாற்பது என்ற பதினெண்க் கீழ்க்கணக்கு நூலின் கடவுள் வாழ்த்தும் திருமாலைப் போற்றுகின்றது.
    ~பொருகடல் வண்ணன் புனைமார்பிற்றார்போல்
    திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
    வருதும் என மொழிந்தார் வாரார் கொல் வானம்
    கருவிருந் தாலிக்கும் போழ்து
    என்ற இந்தப் பாடலில் திருமால் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. கார் என்பது முல்லை நிலத்தின் பெரும்பொழுதாகும். இந்நிலத்தினைப் பற்றிய பனுவல் கார் நாற்பது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். அத்தெய்வத்தை முதல் பாடலில் சுட்டி அதனையே கடவுள் வாழ்த்தாகவும் ஏற்கத்தக்க வகையில் இந்நூலின் முதல் பாடலை மதுரை கண்ணங்கூத்தனார் பாடியுள்ளார்.

    கடலின் நிறத்தை உடைய திருமாலின் மார்பில் உள்ள மாலை போன்று வானவில்லை குறுக்காக நிறுத்தி மழையானது பெய்யத் தொடங்கியது. இம்மழைக்காலத்தில் வருவோம் என்று சொல்லி விட்டுச்சென்ற தலைவர் வாராது இருப்பாரா என்பது இப்பாடலின் கருத்தாகும்.

    இன்னிலையில் சிவபெருமானையும், உமையம்பிகையையும், சிவபெருமான் பெற்றெடுத்த மற்றொரு மகனான முருகனையும் வணங்குவதாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது,
    ~வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
    வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
    கூற்றம் கதழ்ந்நெறி கொன்றையன்
    கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே
    என்ற பாடல் கடவுள் வணக்கமாக அமைகின்றது. இதனை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னிலையை எழுதியவர் பொய்கையார் ஆவார். இப்பாடலில் வேலனைப் பெற்றெடுத்த விரிந்த சடையை உடைய பெருமான் எமனைச் சினந்தழித்தக் கொன்றை மாலையை உடைய பெருமான் ஆகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள உமையம்பிகையின் இணையோடு அமர்ந்திருக்க உலகம் நன்மை பெறுகின்றது என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

    சிவனையும் திருமாலையும் ஒருங்கிணைந்த நிலையில் பாடப்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துகள் வைதிக நெறியில் அமைந்த மும்மூர்த்திகளையும் கடவுள் வாழ்த்தில் பாடும் முறைமையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகின்றது. இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்தும் முக்கடவுளர்களைத் தொழும் நிலையில் அமைகின்றது.
    ~கண்மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே
    தொல்மாண் துழாய் மாலையானைத் தொழலினிதே
    முந்துறப் பேணி முகநான் குடையானைச்
    சென்றமர்ந் தேத்தல் இனிது
    என்று சிவன், திருமால், நான்முகன் ஆகிய மூவரையும் வணங்குவதாக ப+தஞ்சேந்தனாரின் இனியவை நாற்பது விளங்குகின்றது.

    இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்து, சிவன், திருமால், பலராமன் ஆகிய மூவரையும் வாழ்த்துகின்றது.
    முக்கண் பகவன் அடிதொழா தார்க்கின்னா
    பொன்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா
    சக்கரத்தானை மறப்பின்னா ஆங்கின்னா
    சத்தியான் தாள்தொழாதார்க்கு
    என்பது இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இப்பாடலில் மூன்று கண்களை உடைய சிவன், பலராமன், திருமால் ஆகிய மூவரையும் தொழாமல் இருப்பது இன்னாதது என்று குறிக்கிறார் கபிலர்.

    மேற்சொன்னவற்றைத் தொகுத்துக் காணும்போது, வேதநெறியின் பாற்படாத அவைதீக சமயங்களுக்கும், வேதநெறியின் பாற்பட்ட வைதீக சமயங்களுக்குமான போட்டி மிகுந்த காலப் பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    திருக்குறள் வேதநெறியின் படியும் அமையாமல், அவைதீகத்தையும் சார்ந்துவிடாமல் பொதுநிலையில் நிற்கின்றது. திருக்குறள்
    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ;ஒன்றன்
    உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

    என்று வேள்வியை மறுக்கின்றது. ஏனெனில் வேள்வியில் ;உயிர் செகுத்து சதைத் திரளைப் போடும் வழக்கம் இருந்துள்ளது. இவ்விரண்டையும் திருவள்ளுவர் மறுக்கின்றார். அதே நேரத்தில் அவைதீக நெறிப்படவும் அவர் தன் நூலை அமைத்துக்கொள்ளவில்லை.
    காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
    நாமம் கெடக் கெடும் நோய் (குறள் 360)

    என்று சமணக் கொள்கையை ஏற்கும் வள்ளுவர் இன்பத்துப்பால் என்ற ஒன்றைப் பாடுகின்றார். இவ்வின்பத்துப்பால் காமம் சார்ந்த ஒன்றாகும். தமிழ் நெறிப்பட்ட நிலையில் அமைந்த களவியல், கற்பியல் ஆகியவற்றை வள்ளுவர் ஏற்றுக்கொள்வதில் இருந்து அவைதீக நெறியிலும் அவர் தன்னைச் சார்ந்து அமைத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

    நாலடியார் பாடிய காமத்துப்பாலுக்கும் திருக்குறள் காமத்துப்பாலுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுமகளிர், கற்புடை மகளிர் ஆகிய இருவரின் இழிவையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் பணியை மட்டுமே நாலடியார் செய்துள்ளது. ஆனால் வள்ளுவர் காதலின் முதல்நிலை முதல், ஊடல் வரைப் பாடியுள்ளார். இதனால் வள்ளுவர் பொதுநிலை சார்ந்து தன் நூலைச் சமயச் சார்பு இன்றிப் படைத்துள்ளார் என்பது தெளிவு.

    இவ்வாறு வெளிப்படத் தன்னை சமய அடிப்படை வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து அவற்றின் சமய நிலையை அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

    புத்திலக்கிய வகைகள்
    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிநூல்கள் பாடும் வகைமை தோன்றியது. முற்கால நீதி நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வழங்கும் முறைமை ஏற்பட்டது. பிற்காலத்தில் நீதி நூல்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்பட்டது.

    பிற்கால ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் அமைந்துள்ள நீதிநூல்களின் தொடர்நிலைசார்ந்தனவாகும். இவற்றைத் தொடர்ந்து எழுந்த அருங்கலச்செப்பு, முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரம், அதிவீரராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை, குமரகுருபரர் பாடிய நீதி நெறி விளக்கம், சிவப்பிரகாசர் பாடிய நன்னெறி, உலகநாதப் பண்டிதரால் பாடப்பெற்ற உலகநீதி, மாயுரம் வேதநாயகம் பிள்ளையால் பாடப்பெற்ற நீதிநூல் பெண்மதி மாலை போன்றனவும் நீதி இலக்கிய வகைமையின் தொடர்ச்சியாக அமைகின்றன.

    மேலும் புதிய வகைமைகள் தோன்றவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காரணமாக அமைந்தன.

    ஆத்திச்சூடிகள்
    ஒருவரியில் அறத்தைச் சொல்லும் மரபு பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக்காஞ்சியில் துவக்கி வைக்கப்பெற்றது. இம்மரபு ஒளவையாரின் ஆத்திச்சூடியானது. இதன்பின் பல ஆத்திச் சூடிகள் வர ஆரம்பித்தன.

    பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, வ.சுப. மாணிக்கத்தால் எழுதப்பெற்ற தமிழ்ச் சூடி, ச.மெய்யப்பன் எழுதிய அறிவியல்சூடி, நா.ரா. நாச்சியப்பன் எழுதிய தமிழ்சூடி, சிற்பி எழுதிய ஆத்திச் சூடி போன்ற பல ஆத்திச்சூடிகள் புதுவகையாகப் பதினெண்க் கீழ்க்கணக்கு நூல்களின் தாக்கத்தால் படைக்கப்பெற்றன.

    திருக்குறள் தொடர்பான புதிய ஆக்கங்கள்
    திருக்குறளை மையமாக வைத்துப் பல ஆக்கங்கள், பல வகைமைகள் தோன்றின. ஒளைவயார் படைத்த ஞானக்குறள், வ.சுப. மாணிக்கானர் படைத்த மாணிக்கக்குறள் ஆகியன திருக்குறளின் தாக்கத்தால் எழுந்தவை. இதன் யாப்பு வடிவமான குறள் வெண்பா யாப்பு வடிவமும் பிறரால் பின்பற்றப்பட்டது. குறிப்பாக சைவ சித்தாந்த நூலான உமாபதி சிவம் படைத்த திருவருட்பயன் வள்ளுவ யாப்புமுறையைப் பின்பற்றியது.

    திருக்குறளை முன்னிறுத்த அதனைச் சார்ந்து பல இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் குமரேச வெண்பா, ரங்கேச வெண்பா போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. கவிராஜ பண்டிதர் எனப்படும் ஜெகவீரபாண்டியனார் இயற்றி திருக்குறள் குமரேச வெண்பா மிகச் சிறப்பானது. முதல் இரு அடிகளில் குறள், அடுத்தது ஒரு தனிச்சொல், அடுத்த இருஅடிகளில் மேற்காட்டிய குறளுக்கு எடுத்துக்காட்டு நிகழ்ச்சி என்று அத்தனை குறள்களுக்கும் நேரிசை வெண்பா யாப்பில் ஒரு நூலை கவிராஜபண்டிதர் திருக்குறள் குமரேச வெண்பா எனப் படைக்கின்றார். இதோடு நில்லாமல் குறளுக்கும், எடுத்துக்காட்டிற்கும் உரைவிளக்கம் தருகின்றார். இவ்வடிப்படையில் ரங்கேச வெண்பா போன்றனவும் எழுந்தன.

    திருக்குறள் தமிழில் அதிகம் உரையாசிரியர்களைப் பெற்ற நூலாகும். இதன் சொற்சுருக்கம்,செம்மை,தெளிவு கருதிப் பற்பலரும் உரை வரைந்தனர். உரை வரைந்து கொண்டுவருகின்றனர். இவை அனைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மீது மக்கள் கொண்டுள்ள பற்றினை விளக்குவன என்றால் மிகையாகாது.

    இன்னா, இனிய
    இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று வாழ்வில் இன்னாதவற்றையும் இனியவற்றையும் காட்டுவன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். பிற்காலத்தில் பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பெற்ற குடும்பவிளக்கு, இருண்ட வீடு ஆகிய இரு முரண்பட்ட கருத்து கொண்ட இலக்கியங்கள் படைக்கப்படவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழிவகுத்துள்ளன.

    இன்னும் பற்பல முயற்சிகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பெற்று வருகின்றன. இவ்வகையில் சமயநிலையிலும், இலக்கிய வகைப் பெருக்க நிலையிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

     

     

     

    Share
  • இனி யார் சிலம்பிசைப்பார்

    –முனைவர் மு.பழனியப்பன்.

     

    குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பற்றிய ஆவணப்படம் பற்றிய கண்ணோட்டம்

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR3
    ஓடும் காவிரியின் ஒய்யாரத்தை அருகிருந்துப் பார்க்க முடியுமா? காவிரியின் புதுப்புனல் ஓட்டம், அது சுழித்துச் சுழித்துப் பொங்கிச் செல்லும் புதுமை, நாற்றுகளுக்கு இடையில் புகுந்தோடும் வளமை, தமிழ்ப்பாட்டுக்களின் தாளத்தோடு இசைந்தோடும் அதன் கவி வெள்ளம், கொக்குகளின் அணிவகுப்பு, மீன்களின் துள்ளல் என்று காவிரி காட்டும் உயிர்ப்பெருக்கம் என்று பல்வகை நீர்க்கோலம் காட்டும் காவிரியின் பேரழகை தமிழின் இசைப் பின்புலத்தோடு, இசை வரலாறோடு, தமிழிசை வாணரின் வாழ்வோடு கலந்து தருகிறது குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய ஆவணப்படம். தமிழிசையாறு குடந்தை ப. சுந்தரேசனார். தமிழ்ப்பண்களை வெளிப்படுத்தும் பேறு அவர் பெற்ற வாழ்க்கைப் பேறு.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR2மண்சார்ந்த பண் கலைஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு மண்உருவம் சமைத்துத் தொடங்கும் இவ்வாவணப்படம், அவருக்குத் திருத்தவத்துறையில் இராசகோபுரத்தில் இடம் சமைக்கப்பெற்றிருப்பதைக் காட்டி அவர் பொன்னுருவம் பெற்றதோடு நிறைகிறது இவ்வாணப்படம். சீர்காழியில் தொடங்கும் அவரின் வாழ்க்கை கும்பகோணத்தில், ஆடுதுறையில், திருவாரூரில், திருமழபாடியில், திருப்புள்ளம்பாடியில், சிதம்பரத்தில், மதுரையில் தொடர்ந்து இசை முழக்கமாக வெளிப்பட்டுள்ளதை நீரோட்டமாக அளிக்கிறது இப்படம்.

    பண்ணாராய்ச்சி வித்தகரான குடந்தை ப. சுந்தரேசனார் – மனிதநேயம் கொண்டவர், பணத்தைப் பொருளாக எண்ணாதவர், பண் ஆராய்ச்சி வித்தகர், பாடியும் விரிவுரையாற்றியும் பாடும்போதே விளக்கவுரை செய்தும், விளக்கவுரையின்போதே பாடியும் சாதனைகள் பல புரிந்தவர், தமிழிசை வளரப் போராடியவர் என்று அவரின் பண்புகளைப் பாராட்டும் அறிஞர்தம் உரைகள் அவற்றினை முன்னுரையாகக் கொண்டு பண்ணாராய்ச்சி வித்தகவரின் ஒலிவடிவத்தை இயற்கை எழிலோடு கலந்து தருகிறது இக்குறுவட்டு.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR

    நாடுகாண்குழு என்ற ஒன்றைத் தொடங்கி அதன் வழி தமிழசைப்பயணம் மேற்கொண்டு, தேவாரப் பனுவல்களைக் கல்வெட்டுக்களாக்கி அவர் செய்த அரும்பணி இன்னொரு பக்தி இயக்கம். மற்றுமொரு தமிழியக்கம்.

    குடும்பம் தழைத்தோங்கப் பரம்பரை இல்லையென்றாலும் தன் தமிழிசைக்கானப் பரம்பரையை அவர் துவக்கிச் சென்றுள்ளார். அவர் வழியில் தமிழிசை வளர்ந்து வருகிறது என்பதற்கு இவ்வாவணப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் இசைவாணர்கள் சான்று.

    மகாவித்வான் மீனாட்சி சுந்தரனாரின் பெருந்திருப்பிராட்டியாரின் பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் இருந்துப் பாடப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழ்ப்பாடல் மையாமன இடத்தில், தேவையான இடத்தில் இவ்வாவணப்படத்தில் இடம்பெறச்செய்யப்பெற்றுள்ளது. அதற்கான நடனவடிவம் தந்தவரின் நடனப்பாங்கு ஒரு முழுமையான இலக்கியத்தை ரசித்த முழுமையைத் தந்துநிற்கிறது. அதுபோல சிலப்பதிகார வாழ்த்துப்பகுதிகளைக் காவிரியாற்றின் ஓட்டத்தில் மர ஓடத்தை நிற்கவைத்து அதன் மீது நடனமாடச் செய்திருப்பதும் மழையைப் போற்றும்போது நடனபெண்ணார் அமர்ந்து காவிரித்தண்ணீரை வணங்கி நிகழ்த்தும் முறையும் கண்களில் அகலாமல் காட்சியாக நிலைக்கின்றன.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR4

    பண்ணாராய்ச்சி வித்தகரின் உலகத்தமிழ் மாநாட்டு உரை இவ்வாவணப்படத்தின் புதிரொன்றுக்கு நல்ல பதில் தருகின்றது. பெரும்பாணாற்றுப்படையின் இசைவரிகளுக்கு பண்ணாராய்ச்சி வித்தகர் குரல் முழக்கம் செய்கின்றார். ஆயன் ஒருவன் குழல் செய்து இசை ஒலிக்கும் காட்சி காட்சியாக வருகின்றது. இது ஏன் வருகின்றது என்ற புதிருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் மாநாட்டுப் பேருரையின் சிறுபகுதி பதில் தந்துவிடுகின்றது. குழலிசையை முதன் முதலாக உலகுக்கு அறிமுகம் செய்தவன் தமிழன் என்பதால் அக்காட்சி முன்னிலும் அதற்காக காரணம் பின்னிலும் அமையும்படி இவ்வாவணப்படம் ஆதி அந்தமாக விளங்குவது சிறப்பாக உள்ளது.

    முனைவர் மு. இளங்கோவன்
    முனைவர் மு. இளங்கோவன்

    தமிழிசை உலகில் குடந்தை ப. சுந்தரேசனாரின் பணியை, அவரின் குரலை, அவரின் உருவத்தை நிலைநிறுத்துவதாக இவ்வாவணப்படம் அமைகின்றது. இதனை எழுத்தும் இயக்குமுமாக்கிய முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தமிழிற்கு காலத்தினால் செய்த உதவி இதுவாகின்றது. தமிழறிந்தோர் தமிழறிந்தோரை விளக்கம் செய்யாவிட்டால் தமிழன் இருந்தென்ன, செத்தென்ன பயன். தயாரித்தளித்த திருமதி பொன்மொழி இளங்கோவன் வெளியிட்ட வயல்வெளித் திரைக்களம், இசை மற்றும் படத்தொகுப்பு செய்த இராஜ்குமார், இராசமாணிக்கம், ஆகியோருக்கு நன்றிகள். இவ்வாவணப்படத்தைப் பெறுவதற்கு வயல்வெளி திரைக்களம் 0442029053 என்ற எண்ணைச் சுழற்றுங்கள். தமிழிசையின் ஆரத்தைச் சுழற்றிய பெருமை உங்களைச் சேரும். இனி யார் சிலம்பிசைப்பார்?

    ஆவணப்படம் முன்னோட்டக் காணொளிகள்:

    காணொளி-1: http://youtu.be/wevQG7e_8f8

    காணொளி-2: http://youtu.be/CFpvBCw1wxQ

     

     

     

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

     

     

    கட்டுரையின் படங்கள்:
    ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் காணப்பட்ட திரைக்காட்சிகள் மற்றும் விக்கிபீடியா

    Share
  • தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்

    –முனைவர் மு.பழனியப்பன்.

    பொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம், புறம் ஆகிய பொருள்களை வெளிப்படுத்தும் கருவியாக யாப்பு விளங்குகின்றது. யாப்பில் உணர்வைக் கூட்டுவது மெய்ப்பாடாகின்றது. யாப்பில் அணிநலம் சேர்ப்பது அணியாகின்றது. யாப்பில் மரபினை மாறாமல் காப்பது மரபாகின்றது. எனவே பொருள் இலக்கணம் செய்யுளின் வடிவம், அழகு, வெளிப்பாட்டுத்திறன் ஆகியவற்றின் இலக்கணமாக விளங்குகின்றது.

    tolkapiyamதொல்காப்பியர் இலக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சிகளை மெய்ப்பாட்டியல் என்ற இயலில் தனித்து விளக்குகின்றார். இவருக்குப் பின்வந்த புத்தமித்திரனார் தன் இலக்கண நூலான வீரசோழியத்தில் மெய்ப்பாட்டு இலக்கணத்தைச் சுட்டியுள்ளார்.

    புத்தமித்திரனார் தன் வீரசோழிய நூலினை ஐந்திலக்கண நூலாகப் படைக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரப் பிரிவில் சந்திப்படலம், சொல்லதிகாரப்பிரிவில் வேற்றுமைப்படலம், தொகைப்படலம், தத்திதப்படலம், தாதுப்படலம், கிரியாபதப்படலம், பொருளதிகாரப் பிரிவில் பொருள்படலம், யாப்பதிகாரப் பிரிவில் யாப்புப்படலம், அலங்காரப் பிரிவில் அலங்காரப்படலம் ஆகிய உட்பகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதனுள் உள்ள பொருளதிகாரப் பிரிவில், பொருட்படலத்தில் அகம், புறம், அகப்புறம் ஆகியன பற்றிய இலக்கணங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

    அகப்பாடல்களில் இருபத்தேழு உரைமுறைகள் உள்ளனவாக வீரசோழியம் குறிக்கின்றது. சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடம், கிளவி, கேள்வி, மொழி, கோள், உட்பெறுபொருள் (உள்ளுறை), சொற்பொருள், எச்சம். இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு, காரணம், காலம், கருத்து, இயல்பு, விளைவு, உவமம், இலக்கணம், புடையுரை, மொழிசேர்தன்மை, பொருளடைவு என்பன அவ்விருபத்தேழும் ஆகும். இவ்விருபத்தேழில் ஒன்றாகக் குறிக்கத்தக்கது மெய்ப்பாடு ஆகும்.இவ்வகையில் இரு   நூல்களிலும் குறிக்கத்தக்க இடத்தை மெய்ப்பாடு பெற்றுள்ளது. தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டு இயல்புடன், வீரசோழிய மெய்ப்பாட்டு இயல்புகளை ஒப்பு நோக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மெய்ப்பாடு விளக்கம்:

    தொல்காப்பியம்

    ‘‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்

    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’’[1]

    என்று மெய்ப்பாட்டிற்கு இலக்கணம் வகுக்கின்றது. இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படும் மெய்ப்பாடு என்பது நுண்ணிய உணர்வுடையாரால் மட்டுமே அறியத்தக்கது. கண்களாலும், செவிகளாலும் மெய்ப்பாடுகள் உணரத்தக்கனவாக இருக்க வேண்டும் என்பன தொல்காப்பியம் தரும் மெய்ப்பாட்டிற்கான வரையறைகள் ஆகும். மெய்யின்கண் படும் பாடு மெய்ப்பாடு என்று பொதுவில் மெய்ப்பாடு என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.

    வீரசோழியம் மெய்ப்பாடு என்பதை ‘‘மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றம் செவ்விதின் தெரிந்து செப்பல்’’ [2] என்று விளக்கம் கொள்கின்றது. தொல்காப்பியம் உரைத்த அதே விளக்கத்தினை ஏற்றுத் தாமும் வழிமொழிவதாக வீரசோழியம் விளக்கம் தருகின்றது.

    மெய்பாட்டின் வகைகள்:

    மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள், அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் எனப் பிரிக்கின்றார்.

    வீரசோழிய ஆசிரியர் அகத்திற்கான மெய்ப்பாடுகள், புறத்திற்கான மெய்ப்பாடுகள் எனப் பகுத்துரைக்கின்றார்.

    தொல்காப்பியர் சுட்டும் அகமெய்ப்பாடுகள் வீரசோழியம் காட்டும் அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தத் தக்கன. தொல்காப்பியர் காட்டும் பொதுவான மெய்ப்பாடுகள் புற மெய்ப்பாடுகளுடன் பொருந்தத்தக்கன.

    அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் ஐந்து நிலைகளாக் கொள்ளப்படுவதாகக் குறிக்கிறார் புத்தமித்திரனார். மன்மதனின் ஐந்து கணைகள் போல அது ஐந்து என்பது அவரின் கணக்கீடு. ‘‘ ஐவகை கணையுளாக்கிய காமம்’’[3] என்று இதனைப் புத்தமித்திரனார் மொழிகின்றார். இந்த ஐவகை பின்பு முப்பதியிரண்டுத் துறைகளாகப் பகுக்கப்பெறுகின்றன.

    ஐந்து கணைகள்:

    சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஐந்தும் அக மெய்ப்பாட்டின் பிரிவுகளாகப் புத்தமித்திரனரால் கொள்ளப்பெறுகின்றன. இவற்றுக்கான விளக்கங்களையும் புத்தமித்திரன் வழங்கியுள்ளார்.

    சுப்பிரயோகம் – காதலர் குறித்த சொல்லும் நினைப்புமாக இருப்பது

    விப்பிரயோகம்- வெய்துயிர்ப்பு உறுதல்

    சோகம்– உடலில் வெம்மை ஏற்படலும், சோறுண்ணாமல் இருத்தலும்

    மோகம் – மயக்கமும் மொழி பல பிதற்றலும்

    மரணம்- அணங்கலும் வருந்தலும்[4]

    என்று ஐவகைக் கணைகளுக்கும் விளக்கம் தருகின்றார் புத்தமித்திரனார். இச்செய்தி தொல்காப்பியத்தில் காணப்படாத செய்தியாகும்.

    துறைகள் முப்பத்தியிரண்டு:

          இவ்வைங்கணைகள் முப்பத்தியிரண்டின் வழிப்படுகின்றன. அவை தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் ஒப்பு வைக்கத்தக்கன. தொல்காப்பியர் சுட்டும் அக மெய்ப்பாடுகள் அவத்தைகள் என அழைக்கப்படுகின்றன.[5]

    mm1

    விளர்ப்பேமேற்காண் பட்டியலில் தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தும் வீரசோழிய மெய்ப்பாடுகள் காட்டப்பெற்றுள்ளன. பொருந்தாத மெய்ப்பாடுகள் பின்வருமாறு.

    1. பசப்பே
    2. மெலிவே
    3. விதிர்ப்பே
    4. துளக்கந் துயர்தல்
    5. தும்மல்
    6. சோர்தல்
    7. வெருவுதல்
    8. விரும்புதல்
    9. ஒப்பிலாமை
    10. உருகுதல்
    11. மயங்குதல்
    12. மூரி உயிர்ப்பு
    13. மூர்ச்சனை
    14. முறுவல்
    15. காரிகை கடத்தல்
    16. இருந்துழியிராமை
    17. இராகம் இகழ்தல்
    18. சேர் துயிலின்மை
    19. காட்சி விரும்பல்
    20. உண்டி விரும்பாமை
    21. உரைத்தது மறுத்தல்
    22. கண்ணீர் வழிதல்
    23. கனவு நனி காண்டல்[6]

    ஆகியன தொல்காப்பியத்தில் இல்லாத புதிய அக மெய்ப்பாட்டுத் துறைகளாக வீரசோழிய ஆசிரியரால் கண்டுகொள்ளப்பெற்றுள்ளன.

    புறமெய்ப்பாடுகள்:

    தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் ஏறக்குறைய புற மெய்ப்பாடுகளாகக் கருதுகின்றார் வீரசோழியம் இயற்றிய புத்தமித்தினரார். அவற்றின் பட்டியல் பின்வருமாறு.

    mm2

    இப்பட்டியல் தொல்காப்பிய மெய்ப்பாடுகளுடன் வடமொழி மெய்ப்பாடுகளையும், வீரசோழிய மெய்ப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்குகின்றது. இவற்றில் வெகுளி என்ற மெய்ப்பாடு வீரசோழியத்தில் இடம்பெறவில்லை. உட்கோள் என்பது புதிதாக இடம்பெற்றுள்ளது. சிருங்காரம் என்பது வடமொழிக்கும், வீரசோழியத்திற்கும் பொருந்துகிறது. இப்பொருத்தம் வீரசோழியம் வடமொழிச் சார்பினது என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. வடமொழியின் சாந்தம் தமிழ் மரபில் தனித்த நிலையில் ஏற்கப்பெறவில்லை என்பதற்குத் தொல்காப்பியமும் வீரசோழியமும் அதனை விடுத்தது கருதித் தெரியவருகின்றது.

    இவ்வெண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றும் களங்கள் நான்காகும். இதனைத் தொல்காப்பியமும் ஏற்கின்றது. வீரசோழியமும் ஏற்கின்றது. அவற்றையும் இங்குப் பொருத்திப் பார்ப்பது மெய்ப்பாடு குறித்த முழுமையான புரிதலை உண்டாக்கும்.

    நகை:

    நகை தோன்றும் இடங்களாகத் தொல்காப்பியம்,

    எள்ளல், இளமை, பேதமை, மடனென்று

    உள்ளப்பட்ட நகை நான் கென்க[7]

    என்ற நான்கினைக் காட்டுகின்றது. வீரசோழியம்

    மயக்கம்,பெயர்ப்பே, இகழ்வே, நோக்க

    நயப்பத் தோன்றும் நகையது நலனே[8]

    என்ற நான்கினைக் காட்டுகின்றது. இவற்றை ஒப்பிட்டுப் பின்வரும் பட்டியல விளக்குகின்றது.

    mm3


    அழுகை:
    நகைக்காக களங்கள் ஏறக்குறைய இரு நூல்களிலும் பொருந்துவதாக அமைகின்றது. இளமை என்ற ஒன்று தொல்காப்பியத்திலும், பெயர்ப்பு என்ற ஒன்று வீரசோழியத்திலும் தனித்து் விளங்குகின்றன. எனவே நகை தோன்றும் இடங்கள் நான்கில் இருந்து ஐந்தாக வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கொள்ள இயலும். எள்ளல், இளமை, பேதமை, மடன், பெயர்ப்பு நகை தோன்றுவதற்கான இடங்களாகின்றன.

    அழுகை என்ற மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் காட்ட அதற்கு இரக்கம் என்ற மெய்ப்பாட்டை இணையாக வைக்கின்றார் வீரசோழிய ஆசிரியர்.

    இழிவே, இழவே, அசைவே வறுமையென

    விளிவில் கொள்கை அழுகை நான்கே[9]

    என்பது தொல்காப்பியம்

    வருத்தம் இகழ்வே விலியின்மை, பெருமை

    இரக்கந் தோன்றும் இந்நாலிடத்தே[10]

    என்பது இரக்கம் மெய்ப்பாடு தோன்றும் நான்கு களங்கள் என்கிறது வீரசோழியம். இதன் பொருத்தப்பாடு பின்வருமாறு.

    mm4


    இளிவரல்:
    அழுகைக்கான களங்களில் இழவிற்குத் தொல்காப்பியத்தில் இடம் தரப்பெற்றுள்ளது. வீரசோழியத்தில் பெருமைக்கு இடம் தரப்பெற்றுள்ளது. மற்ற மூன்றும் பொருந்துகின்றன. எனவே இதுவும் ஐந்தாக வளர்ச்சி கொள்ளுகின்றது. இழிவே, இழவு, அசைவு, வறுமை, பெருமை ஆகியன அழுகைக்கான களங்கள் ஆகும்.

    தொல்காப்பியம் சுட்டும் இளிவரலை, இழிப்பு எனக் கொள்கின்றது வீரசோழியம்.

    இளிவரல் மெய்ப்பாட்டின் தோற்றக் களங்கள் பின்வருமாறு.

    ‘‘மூப்போ பிணியே வருத்த மென்மையொடு

    யாப்புற வந்த இளிவரல் நான்கே’’[11]

    இழிப்பு பற்றிய வீரசோழிய நூற்பா பின்வருமாறு

    நாற்றஞ் சுவையே தோற்றம் ஊறு என்று

    இந்நால் வழித்தாம் இழிப்பு எனப்படுமே[12]

    இவ்விரு நூற்பாக்களின் வழி பெறப்படும் பகுப்புகள் பின்வரும் நிலையில் ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.

    mm5


    மருட்கை:
    தொல்காப்பியம் இளிவரல் எனச் சுட்டுவது, இழிப்பு என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடுடன் ஒத்துப்போகின்றது. இளிவரல் தோன்றும் களங்களில் மூப்பு, பிணி ஆகிய இரண்டும் பொருந்துகின்றன. மற்ற இரண்டான வருத்தம், மென்மை ஆகியன பொருந்தவில்லை. வீரசோழியத்தால் புதிதாகக் காட்டப்பெற்றுள்ள நாற்றம்,சுவை ஆகியவற்றால் இழிப்புத் தோன்றும் என்பது உறுதி. எனவே இது இழிப்பின் மெய்ப்பாட்டின் வளர்ச்சி நிலை எனக் கருதலாம். இதனடிப்படையில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை, நாற்றம்,சுவை ஆகிய ஆறாக இளிவரல் மெய்ப்பாடு தோன்றும் இடங்கள் அமைகின்றன.

    வியப்பு என வீரசோழியத்தால் குறிக்கப்படும் தொல்காப்பிய மருட்கை நான்கு தோற்றக் களன்களை உடையது.

    தொல்காப்பியம்,

    புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு

    மதிமை சாலா மருட்கை நான்கே[13]

    என்று மருட்கை தோன்றும் இடங்களைக் காட்டுகின்றது.

    வீரசோழியம்

    தறுகண்மை, புலமை, பொருளே, பண்பே

    பெறுவழித் தோன்றும் பெருந்தகு வியப்பே[14]

    என்று வியப்பு பிறக்கும் களங்களைச் சுட்டுகின்றது. இதன் ஒப்பீடு பின்வருமாறு.

    mm6

    தொல்காப்பியம் சுட்டும் வியப்பிற்கான களங்கள் மூன்றும் பண்பு என்ற வீரசோழியப் பகுப்பில் உள்ளடங்கி விடுகின்றன. ஆக்கம் என்பதற்குப் பொருள் என்பதை ஒப்பாக வைக்கலாம். இவை தவிர தறுகண், புலமை காரணமாக வியப்பு மேலிடலாம் என்றுப் புதிதாக முடிகின்றது வீரசோழியம். ஆகவே புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், தறுகண், புலமை ஆகியன வியப்பின் பிறப்பிடங்களாக அமைகின்றன.

    அச்சம்:

    அச்சம் என்ற மெய்ப்பாடு இரு நூல்களாலும் அதே பெயரெில் அழைக்கப்படுகின்றது. இது பிறக்குமிடம் நான்கு என்கிறது தொல்காப்பியம்.

    ‘‘அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்

    பிணங்கல் சாலா அச்சம் நான்கே’’[15]

    ‘‘மாற்றலர், விலங்கல், மற்றவர் சேருத

    லாற்றத் தோன்றும் அச்சத்து விளைவே’’[16]

    என்பது வீரசோழியம் காட்டும் அச்ச மெய்ப்பாட்டுக்கான பிறப்பிடங்கள் ஆகும்.

    அச்சம் என்ற மெய்ப்பாடு பொருந்தும் நிலையைப் பின்வரும் பட்டியல் விளக்குகின்றது.

    mm7


    பெருமிதம்:
    அச்சத்தில் இரு களங்கள் ஒத்தமைகின்றன. மற்றவர் என்ற களம் வீரசோழியத்தில் உள்ளது. தம் இறை, அணங்கு ஆகியன தொல்காப்பியத்தில் உள்ளன. இவற்றை வீரசோழியம் மற்றவர்கள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். அணங்கு, விலங்கு, கள்வர், இறை, மற்றவர் என்ற நிலையில் அச்சம் அமையலாம். வீரசோழியத்தில் அச்சம் தோன்றும் மூன்று இடங்கள் மட்டும் சுட்டப்பெற்றுள்ளன.

    தொல்காப்பியம் சுட்டும் அடுத்த சுவை பெருமிதம் என்பதாகும். இந்தப் பெருமிதத்திற்கும் பிறக்கும் களன் நான்காகும்.

    கல்வி தறுகண் இசைமை கொடை யெனச்

    சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே[17]

    வீரசோழியம் பெருமிதம் என்பதை வீரம் என்ற மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அம்மெய்ப்பாடு பிறக்கும் நான்கு இடங்கள் பின்வருமாறு.

    ‘‘பகையே செருவே இகலே முனிவே

    மிகுவழித் தோன்றும் வீரத்து விளைவே’’[18]

    இவ்வகையில் ஓரளவிற்கு இணையும் இம்மெய்ப்பாடுகளைப் பின்வரும் நிலையில் அதன் பிறப்பிடங்களை நோக்கி ஒப்புக் காண முடிகின்றது.

    mm8


    வெகுளி:
    தொல்காப்பியம் பெருமிதம் என்பதை மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அதன் களங்கள் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்பதாகச் சுட்டுகின்றது. இவற்றுள் தறுகண் என்பதை வீரமாகக் கொண்டு வீரத்தை மெய்ப்பாடாக வீரசோழியம் கருதுகின்றது. வீரம் என்ற மெய்ப்பாடு வடமொழியிலும் உள்ளது, வடமொழியின் சார்பினால் வீரசோழியம் வீரத்தை மெய்ப்பாடாகக் கருதுகின்றது எனக் கொள்ளலாம்.

    வெகுளி என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் மட்டும் காணப்படுகின்றது. இதனை ரௌத்திரம் என்று வடமொழி குறிக்கின்றது. வீரசோழியம் இதற்கு இணையாக மெய்ப்பாடு எதனையும் கொள்ளவில்லை.தொல்காப்பியம் உறுப்பறை, குடி, அலை, கொலை ஆகியனவற்றை வெகுளி மெய்ப்பாடு பிறக்கும் களங்களாகச் சுட்டுகின்றது.

    தொல்காப்பியம் காட்டும் வெகுளி மெய்ப்பாட்டின் பிறப்பிடங்களை உணர்த்தும் நூற்பா பின்வருமாறு.

    ‘‘உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன

    வெறுப்ப வந்த வெகுளி நான்கே’’[19]

    இம்மெய்ப்பாட்டினைப் புத்தமித்திரர் தன்னுடைய நூலான வீரசோழியத்தில் விடுத்ததற்கான காரணம் உண்டு. உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்பன நான்கும் ஒருவரை வருத்தும் துயரங்கள் ஆகும். இதனை பௌத்த சமயம் ஏற்காது. பௌத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சையாகும். இதன் காரணமாக புத்தமித்திரனார் இந்த மெய்ப்பாட்டை விடுத்துள்ளார்.

    இதற்குப் பதிலாக உட்கோள் என்ற ஒன்றைப் புதிதாகப் புத்தமித்திரன் உருவாக்கி எண்வகை மெய்ப்பாடாக ஆக்கிக்கொள்கிறார்.

    உவகை:

    சிருங்காரம் என்பது வடமொழியில் உள்ள முதல் மெய்ப்பாடு ஆகும். இதனை அப்படியே வீரசோழியம் ஏற்கின்றது. இதனைத் தொல்காப்பியம் சுட்டும் உவகை என்ற மெய்ப்பாடுடன் ஒத்து வைத்து எண்ணமுடியும்.

    செல்வம் புலனே புணர்வு விளையாட்டென

    அல்லல் நீத்த உவகை நான்கே[20]

    என்ற தொல்காப்பிய நூற்பா உவகையின் பிறப்பிடங்கள் நான்கினைக் காட்டுவதாக உள்ளது,

    இளமையும் வனப்பும் வளமையும் கலவியும்

    களனாகத் திரிதருஞ் சிருங்காரம்மே[21]

    என்ற வீரசோழிய நூற்பா சிருங்காரரசம் பிறக்கும்.இடங்களைக் காட்டுகின்றது. இவற்றின் ஒப்புநிலை பின்வருமாறு.

    mm9


    உட்கோள்:
    சிருங்கார ரசத்திற்கான தோற்றக் களங்களில் தொல்காப்பியத்திற்கும், வீரசோழியத்திற்கும் இரண்டு என்ற அளவில் பொருந்துகின்றன. இரண்டு பொருந்தவில்லை. ஆகவே செல்வம்,புணர்வு, விளையாட்டு, புணர்வு, இளமை, வனப்பு ஆகியன நகைக்கான பிறப்பிடங்களாக அமைகின்றன.

    வெகுளி என்ற மெய்ப்பாட்டினை ஏற்காத வீரசோழியம் அதனிடத்தில் உட்கொள் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளது. உட்கோள் தோன்றும் நிலைக்கலன்களாக ஐவகைக் குரவர்(தாய், தந்தை, குரு, தெய்வம், மூத்தோர்), தேவர், மன்னர் ஆகியோரின் எய்தாது எய்திய இயல்பு உட்கோள் என்கிறது வீரசோழியம்.

    ‘‘ஐவகைக் குரவர் தேவர் மன்னர்

    எய்தா தெய்திய வியல்பவை உட்கோள்’’[22]

    என்பது உட்கோளை விளக்கும் வீரசோழிய நூற்பாவாகும்.

    மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்துப் பின்வரும் கருத்துகள் அறியத்தக்கனவாகின்றன..

    நகையும் அழுகையும் ஆகிய இரு மெய்ப்பாடுகள் தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டு இலக்கண நூல்களிலும் பெரிதும் பொருந்துவனவாகத் திகழ்கின்றன. இவை தோன்றும் களங்களாக காட்டப்படும் நான்கில் மூன்று பொருந்தி வருகின்றன.

    இளிவரல், வியப்பு, அச்சம், சிருங்காரம் ஆகிய நான்கும் தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் தோற்றக் களங்கள் இரண்டினால் ஒன்று படுகின்றன. இரண்டால் வேறுபடுகின்றன.

    பெருமிதம் என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரம் என்பதாக வீரசோழியத்தால் கொள்ளப்படுகின்றது. பெருமிதத்தின் தோற்றக்களன்களுள் ஒன்றாக வீரத்தைத் தொல்காப்பியம் காண வீரத்தையே தனியான மெய்ப்பாடாக வடமொழியினுடன் ஒத்து வீரசோழியம் கொள்ளுகின்றது.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தில் இல்லை. உட்கோள் என்ற வீரசோழிய மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் இல்லாதப் புதுமையது.

    நகை, மருட்கை, அச்சம் போன்ற மெய்ப்பாடுகள் பெயர் நிலையில் அப்படியே இரு நூல்களில் ஒத்து அமைகின்றன. அழுகை என்பதற்கு இரக்கம் என்பதும், இளிவரல் என்பதற்கு இழிப்பு என்பதும் கொள்ளப்படுகின்றது. சிருங்காரம், வீரம் ஆகிய வீரசோழிய மெய்ப்பாடுகள் தொல்காப்பிய மெய்ப்பாடுகளான உவகை, பெருமிதம் ஆகியவற்றோடு பெயரளவில் ஒத்துச் செல்லவில்லை என்றாலும் பொருள் அளவில் ஓரளவிற்கு ஒத்து் அமைகின்றன.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாட்டை வீரசோழியத்தால் ஏற்க முடியவில்லை. உட்கோள் என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் பெயரளவிலும் பொருள் அளவிலும் காணப்படவில்லை.

    இவ்வாறு புற மெய்ப்பாடுகளில் ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டு அறியமுடிகின்றது.

    முடிவுகள்:

    தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டிலும் மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக இருபத்துநான்கினைக் காட்ட, வீரசோழியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக ஐந்து கணைகள், முப்பத்தியிரண்டுத் துறைகள் ஆகியனவற்றைக் காட்டுகின்றது. இவையிரண்டையும் பொருத்திப் பார்க்கையில் எட்டு இரண்டு நூல்களுக்கும் பொருந்தி அமைகின்றன. மற்றவை பொருந்தவில்லை. அவ்வகையில் தொல்காப்பிய அகமெய்ப்பாடுகளில் பதினாறும், வீரசோழியத்தில் இருபத்துநான்கும் பொருத்தமில்லாமல் தனித்து விளங்குவனவாகும்.

    புறமெய்ப்பாடுகள் என்று தொல்காப்பியம் சுட்டும் வெகுளி முதலான எண்வகை மெய்ப்பாடுகளை ஒட்டி எட்டினை வீசோழியம் குறிக்கின்றது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,பெருமிதம், உவகை ஆகிய ஏழும் பகுப்பு, பொருள் அளவில் பொருந்தி அமைகின்றன.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தால் பின்பற்றப்படவில்லை. உட்கோள் என்ற ஒன்று குறிக்கப்படுகிறது. இது ஐவகைக் குரவர் போன்றோர் மீது ஏற்படும் மதிப்பால் விளையும் உடல் மெய்ப்பாடுகள் ஆகும்.

    வடமொழியில் உள்ள சாந்தம் என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தாலும் வீரசோழியத்தாலும் தனித்த ஒன்றாக ஏற்கப்படவில்லை. வடமொழியின் சா்ர்பின் காரணமாக சிருங்கார ரசம், வீர ரசம் ஆகியன வீரசோழியத்தினால் எடுத்தாளப்பெற்று அவை மெய்ப்பாடுகளாக ஆக்கப்பெற்றுள்ளன.

    தொல்காப்பியர் காட்டிய மெய்ப்பாடுகள் வீரசோழிய காலத்தில் தேய்வும், வளர்ச்சியும் பெற்றுள்ளளன என்று முடியலாம்.

     

     


     

    பயன் கொண்ட நூல்கள்:

    1. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை, 2010
    2. சுப்பிரமணியம்.ச.வே., வீரசோழியம் திறனாய்வு, மூலமும் கருத்தும், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1979
    3. தாமோதரம் பிள்ளை,(சி.வை.), வீரசோழியம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008

     

    [1] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூற்பா,27

    [2] வீரசோழியம்.பக் 77-78

    [3] வீரசோழியம், ப.79

    [4] வீரசோழியம்,ப. 79

    [5] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள் 13,14,15,16,17,18 ஆகியவற்றின் சுருக்கம்

    [6] வீரசோழியம், ப.79

    [7] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.4

    [8] வீரசோழியம், ப. 80

    [9] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.5

    [10] வீரசோழியம், ப. 80

    [11] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூ.6

    [12] வீரசோழியம், ப. 80

    [13] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.7

    [14] வீரசோழியம், ப. 80

    [15] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.8

    [16] வீரசோழியம், ப. 80

    [17] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.9

    [18] வீரசோழியம், ப. 80

    [19] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.10

    [20] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூ.11

    [21] வீரசோழியம், ப. 80

    [22] வீரசோழியம், ப. 80

     

    ____________________________

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடனை, 623407
    இராமநாதபுர மாவட்டம்
    muppalam2006@gmail.com

    Share
  • சங்க இலக்கியங்களில் வானியல் செய்திகள்

    முனைவர் மு.பழனியப்பன்

    சங்க இலக்கியங்கள் பல்துறை செய்திகளைக் கொண்டு விளங்குகின்றன. உலக இலக்கியங்கள் என்று போற்றத்தக்க வகையில் அவற்றில் பற்பல துறைகள் சார்ந்த செய்திகள் அமைந்து கிடக்கின்றன. குறிப்பாக வானியல் பற்றிய பல குறிப்புகளையும் வானியல் நிகழ்வுகள் பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளன. சங்க காலப்புலவர்கள் இதன் காரணமாக பல்துறை அறிவு சார்ந்து இயங்கினர் என்பதும் கருதத்தக்கது.

    வானத்தில் இருந்து பெய்யும் மழையின் இயக்கத்தை முல்லைப்பாட்டு மிக அழகாக அறிவியல் அடிப்படையில் அறிவிக்கின்றது.

    நனந்தலை உகலம் வளைஇ நேமியோடு

    வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

    நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

    பாடிமிழ் பனிகடல் பருகி வலன்ஏர்பு

    கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி

    பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை ( முல்லைப்பாட்டு 1-6)

    என்ற இந்தப் பாடலடிகள் உணர்த்தும் மேகத்தின் இயக்கம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது ஆகும்.

    பனிகடல் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது வானப்பரப்பிற்குச் சென்று, குளிர்ந்த காற்று பட்டதும் வானத்திலிருந்து மழையாகப் பொழிந்தது என்று முல்லைப்பாட்டு சுட்டும் கார்கால வருகையை அறிவியலார் காட்டும் மழையின் இயக்கத்துடன் ஒப்பு வைக்க முடியும்.

    ஒரு காலத்தில் மாபலிச் சக்கரவர்த்திக்காக வாமன அவதாரம்  எடுத்த திருமாலின் உயர்ச்சிபோல இம்மேகக் கூட்டத்தின் எழுச்சி இருந்தது என்று முல்லைப்பாட்டு படைத்த நப்பூதனார் ஒரு புராணச் செய்தியுடன் இதனை ஒப்பு வைக்கின்றார்.

    மழை பொழிவதற்கும் வானத்துக் கோள்களின் அசைவிற்கும் தொடர்பு உண்டு என்று சங்கப்புலவர்கள் கருதியுள்ளனர். வானத்தில் உள்ள வெள்ளி என்ற கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும் தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும் என்றும் சங்கப் புலவர்கள் உரைத்துள்ளனர்.

    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் ( புறம். 35.7) என்று வெள்ளக்குடி நாகனாரும், தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் ( புறம் 117.2) என்று கபிலரும்,

    ‘‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

    திசை திரிந்து தெற்கு ஏகினும்

    தற்பாடிய தனி உணவில்

    புட்டேம்பப் புயன்மாறி

    வான்பொய்ப்பினும் தான் பொய்யா

    மலைத்தலைய கடற்காவிரி’’ (பட்டினப்பாலை 1-6)

    என்று கடடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாடியிருக்கும் பகுதிகள் வெள்ளி மீனின் தெற்கு திசை நோக்கிய வளமிக்க பயணத்தை எடுத்துரைப்பன.

    இவ்வாறு மழைபொழியும் தன்மை குறித்தும், மழை பொழியும் வானியல் சூழல் குறித்தும் தமிழர்கள் கவனித்துக் கணித்துள்ளனர். மழை என்பது முக்கியமான வளம் என்பதால் இதன் தேவையை உணர்ந்த சங்கப் புலவர்கள் இவ்வகையில்  மழை பற்றிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

    உலகத் தோற்றம்

    உலகின் தோற்றத்தையும், உலகின் இயக்கத்தையும் காணும் இயல்புடையோராகச் சங்கப்புலவர்கள் இருந்துள்ளனர். பதிற்றுப்பத்தில் இடம் பெறும் பின்வரும் பகுதி உலக இயல்பை, அதன் இயக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

    நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்

    அளப்பு அரியையே;

    நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,

    ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;

    ஐந்து பூதங்களில் கூட்டுச் சேர்க்கையால் ஆகியது உலகம். இது நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல் போன்றவற்றின் இயக்கத்தால் நடைபெறுகிறது என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. இவற்றின் சிறப்போடு அரசனின் சிறப்பு ஒப்பு நோக்கப்படுகிறது

    கோள்கள் விண்மீன்கள் பற்றிய செய்திகள்

    வான மண்டலத்தில் பல்வேறு கோள்கள் விண்மீன்கள் விளங்கியுள்ளன என்பதைச் சங்கப் புலவர்கள் அறிந்திருந்தனர். சூரியன், பூமி, வியாழன், புதன், வெள்ளி, சனி போன்றன பற்றியும், துணைக்கோளான திங்கள்  கோள் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. பற்பல் விண்மீன்களைப் பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் பதிவாக்கப் பெற்றுள்ளன. அடிப்படையில் வானத்தில் இயங்குபவனவற்றைக் கோள்கள் என்றும் வின்மீன்கள் என்றும் பகுக்கலாம். இவ்விரு பிரிவுகளைப் பின்வரும் பட்டினப்பாலை அடி தெளிவுபடுத்துகின்றது.

    நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
            நாள்மீன் விராஅய கோள்மீன் போல (பட்டினப்பாலை  67, 68)

    என்ற பாடலடி வானத்தில் உள்ளவற்றை நாள்மீன் என விண்மீனையும், கோள்மீன் என கோள்களையும் பிரித்தறிகின்றது. கோள்மீன்கள் பற்றிய செய்திகள் இதனடிப்படையில் முதலில் இங்கு அறிவிக்கப்பெற்று, அதன்பின் நாள்மீன்கள் பற்றிய செய்திகள் அறிவிக்கப்படுகின்றன.

    கோள்கள்

    செஞ் ஞாயிற்றுச் செலவும்,

    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

    பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

    வளி திரிதரு திசையும்,

    வறிது நிலைஇய காயமும், என்று இவை

    சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்

    இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் (புறநானூறு 30)

    என்ற பாடல் ஞாயிற்று மண்டலம் என்ற ஞாயிற்றைச் சுற்றியிருக்கும் கோள்களின் வரிசையைக் குறிப்பதாக உள்ளது. பரிப்பு சூழ்ந்த மண்டிலம் என்பது சூரிய குடும்பத்தைக் குறிப்பதாகும். சங்கக் காலப்புலவர்கள் சூரியனை மையமிட்ட வானியல் நிலையை அறிந்துள்ளனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகும். சென்று அளந்து அறிந்தோர் என்ற தொடர் வானியல் அறிவு வாய்க்கப்பெற்றவர் என்று பொருள் தரக்கூடியது. எனவே சங்க காலத்தில் வானியல் நோக்கும் அறிஞர் கூட்டம் இருந்துள்ளது என்பதும் இப்பாடல் வழி தெரியவருகின்றது.

    விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து எனப் பட்டினப்பாலை உரைப்பதும் வான மண்டலம் இருப்பதை உறுதி செய்கின்றது.

    சூரியன் பற்றிய செய்திகள்

    ஞாயிற்றின் தோற்றம். மறைவு, அதன் உச்சி மீதமர்ந்த நிலை ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன.[1] ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.[2]. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.( விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து சூரியனின் தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    சங்கப்பாடல்களில் சூரியனை முன்வைத்தே அனைத்து வானியல் இயக்கங்களும் நடைபெறுகின்றன என்ற கருத்து பொதிய வைக்கப்பெற்றுள்ளது.

    வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த

    இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து ( சிறுபாணாற்றுப்படை)

    என்ற தொடரில் கோள்கள் அனைத்தும் ஞாயிற்றினைச் சுற்றி அமைந்துள்ளன என்ற கருத்து பெறப்படுகின்றது. இதனை அறிவியல் அடிப்படையில் சொல்வதானால் சூரியனைச் சூழ்ந்த வட்ட பாதையில் கோள்கள் அனைத்தும் இயங்குகின்றன என்பதை உணரஇயலும்.

    பல் இருள் விடிய புலம்பு சேண் அகல

    பாய் இருள் நீங்க பல்கதிர் பரப்ப

    ஞாயிறு குண முதல் தோன்றியாஅங்கு ( பதிற்றுப்பத்து 59)

    என்ற பதிற்றுப் பத்து அடிகள் ஞாயிறு கிழக்கில் தோன்றி உலக இருள் அகற்றும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது,

    சூரியனின் மறைவினை

    சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு

    குட கடல் சேரும் படர் கூர் மாலையும்  (அகம் 378)

    என்ற பகுதி சூரியன் மேற்கில் மறையும் தன்மையைக் காட்டுகின்றது.

    சூரியனின் ஒளி மற்ற நட்சத்திரங்களை விட மிகப் பிரகாசமானது. இதன் காரணமாகச் சூரியனின் ஒளியில் மற்ற நட்சத்திரங்கள் தென்படுவதில்லை. இதனைப் பதிற்றுப்பத்து

    ‘‘மாஇரு விசும்பின் பல் மீன் ஒளி கெட

    ஞாயிறு தோன்றியாங்கு’’ ( பதி. 64)

    என்ற இவ்வடிகளில் இரவில் விண்மீன்கள் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் செய்தியும் பகல் எழும்பொழுது அவை சூரியனின் ஒளியில் அதன் அதிகமான ஒளிப்பரப்பில் காணாமல் போவதும் சுட்டப் பெற்றுள்ளது.

    சூரியனின் உள்பகுதி எரிந்து கொண்டே இருக்கக் கூடியது. அதனையும் ஒரு சங்கப்பாடல் உணர்த்துகின்றது.

    ‘‘வான மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்

    கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிறு’’ ( நற்றிணை 163)

    என்ற பாடலடிகளில் கதிரவனின் உள்பகுதி அகம் கனலியாக அதாவது அகத்திலே கனன்று கொண்டிருக்கக் கூடிய தன்மையை உடையது என்பதை அறிவிக்கின்றது.

    சூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர்3 ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) .[30] கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம் கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். இவ்விளைவில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிப்படியாக பரவுகிறது.(விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து மேற்கருத்துடன் ஒப்புநோக்கத்தக்கது.

    சூரியனின் உள்பகுதியில் ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக மாற்ப்படும் தன்மை சுட்டப்பெறுகிறது. இதன் காரணமாக அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது எனச்சுட்டப்பெறுகிறது. சங்கப் புலவர் இதனை அகம் கனலி என்று வெளிப்படுத்துகிறார்.

    பூமி

    பூமியும் வான மண்டலத்தில் ஒரு கோளாகும். இப்பூமி சூரியனை மையமாக வைத்துச் சுழல்கிறது. மேலும் தன்னைத் தானேயும் அது சுற்றி  வருகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை

    உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

    பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

    ஓஅற இசைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி  (திருமுருகாற்றுப்படை. 1-3)

    என்று அறிவி்க்கின்றது. இதில் உள்ள வலனேர்பு திரிதரு என்பது சூரியனின் இயக்கம் பற்றியதாகும். பூமி சூரியனை வலமாகச் சுற்றிவருகிறது. இதன் காரணமாக சூரியன் இடமிருந்து வலமாகச் சுற்றிவருவதாகத் தெரிகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை வலப்பக்கமாகச் சுழல்வதாகக் காட்டுகின்றது

    புதன்

    புதன் பற்றிய குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. புந்தி மிதுனம் பொருந்த என்ற பாடலடி புதன் கோளைப் பற்றியதாகும். சூரியனின் வட்டப்பாதையில் முதலில் அமைந்துள்ள கோள் புதன் ஆகும்.

    வெள்ளி

    வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. (விக்கிப்பீடியா) என்ற அறிவியல் செய்தி வெள்ளி என்ற கோளின் இயல்பினைச் சுட்டுகின்றது.

    வெள்ளி என்பதை வெண்மீன், சீர்சால் வெள்ளி என்று பலவாறு சங்கப்பாடல்களில் சுட்டப்பெற்றுள்ளது.  வெள்ளி என்பதைச் சுக்கிரன் என்றும் தற்போது அழைத்துவருகின்றனர்.

    வெள்ளி  தென்புலத்து உறைய விளைவயல்

    பள்ளம் வாடிய பயன் இல் காலை ( புறநானூறு. 388)

    என்ற குறிப்பு வெள்ளி மீன் இயக்கத்தைச் சுட்டுவதாக உள்ளது.

    வெள்ளிமீன் விடிகாலையில் வானத்தில் விளங்கும் காட்சியை

    வைகுறு மீனின் தோற்றம் ( அகம் 17)

    வைகுறு மீனின் பைபயத் தோன்றும் ( பெரும்பானாற்றுப்படை 318)

    குணக்குத் தோன்றும் வெள்ளியின் ( நற்றிணை 356)

    என்று சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    உயர்சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே ( புறம் 397)

    என்ற பாடலடி அதிகாலையில் வெள்ளி என்ற கோளின் வரவை இயற்கை நிகழ்வுகளுடன் கலந்துரைக்கின்றது.

    செவ்வாய்

    செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒட்சைட்டு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது (விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து செவ்வாய் பற்றிய செய்திகளை அறிவிக்கின்றது.

    செம்மீன் என்று இதனைச் சங்கத்தார் அழைத்தனர். பரிபாடலில் படிமகன் என்று இது சுட்டப்பெறுகின்றது. பதிற்றுப்பத்திலும் இக்கோள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    வியாழன்

    வியாழன் கோள் பொன்னிறமானது. பொன்னிறமுடைய கோள் என்று வரும் புறநானூற்று அடியைக் கொண்டு சங்கப்புலவர்கள் வியாழன் கோள் பற்றி அறிந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. வியாழன் (Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்

    ‘‘தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்

    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ’’ (புறநானூறு 392)

    என்ற பாடலடிகள் வழியாக வியாழன் சுட்டப்படுகின்றது எனத் தெளியமுடிகின்றது. பொலங்கலம் உள்ள கள் என்பதற்கு உவமையாக கோள்மீன் சுட்டப்படுவதால் அது வியாழன் என முடிவது பொருத்தமானது.

    சனி

    சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்று இதனைக் கபிலர் பாடியுள்ளார்.

    ஆகவே சங்கப் புலவர்கள் அக்கால அறிவு நிலையின்படி அவ்வப்போது தெரிந்த கோள்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

    திங்கள்

    நிலவினைப் பற்றிய பல தகவல்கள் சங்க இலக்கியத்துள் செறிந்துள்ளன. நிலவு நிலத்தைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். வளர்பிறை நிலவு, தேய்பிறை நிலவு இவற்றையெல்லாம் சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர். இதனை முறையே அலர்தரு பக்கம் என்றும், வழியது பக்கம் என்றும் அழைத்துள்ளனர்.
    பல் மீன் நடுவண் திங்கள் போலவும், (மதுரைக்காஞ்சி 219) , பல் மீன் நடுவண் பால் மதி போல,( சிறுபாணாற்றுப்படை) என நிலவு விண்மீன்கள் சூழ இருக்கும் காட்சியைச் சங்கப் புலவர்கள் கவனித்துள்ளனர்.

    பிறையைத் தொழும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்துள்ளது. தொழுதுகாண் பிறை ( குறுந்தொகை. 178) என்று பிறைவணக்கம் செய்யப்பட்ட நிலை தெரியவருகின்றது.

    நாள்மீன் (விண்மீன்)கள் பற்றிய குறிப்புகள்

    சங்க இலக்கியத்தில் கார்த்திகை, உரோகினி, உத்திராடம், மகம், உத்தரம், திருவோனம், அனுஷம், மூலம் போன்ற பல நட்சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் (நற்றிணை 202), அறுமீன் சேரும் அகல் இரு நடுநாள் (அகநானூறு 141) என்ற குறிப்புகள் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் ஆகும்.

    முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய

    உரோகினி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை 161-163)

    என்ற அடியில் உரோகினி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

    விண்மீன்களின் அமைப்பும், அவற்றின் பால் நிற்கும் சூரிய இயல்பும் இராசிகள் என்று  அழைக்கப்படுகின்றன. மொத்தம் பன்னிரு இராசிகள் உள்ளன. அவற்றைப் பற்றிய குறிப்பும் பரிபாடலில் காணப்படுகின்றது

    உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

    வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

    புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

    அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

    இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

    வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

    மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

    பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

    மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

    எதிர் வரவு மாரி இயைக’ என இவ் ஆற்றால்(பரிபாடல், 11)

    என்ற இப்பாடலில் இராசி மண்டலங்கள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

    வெள்ளி என்ற கோள் இடப ராசியை அடைந்தது. புதன் மிதுன லக்கனகத்தில் பொருந்தினான். சூரியன் கடக ராசியில் இருந்தான்.வியாழன் மீனத்தை அடைந்தான். சனி மகரத்தை அடைந்தான். ராகு சந்திரனை மறைத்தபடி இருந்தான் என்ற இந்நிலை அமைந்திருந்தபோது காற்று வந்தது என்ற இக்குறிப்பு நாள்மீன் கோள்மீன், இராசிகள் போன்ற அனைத்தின் கலவையாக இருப்பதை உணரமுடிகின்றது.

    வான ஊர்தி

    வான ஊர்தி வழியாக சங்ககாலத்தில் வானியல் அறிவு பெறப்பட்டது என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

    சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,

    நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன,

    வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,

    வீற்றிருந்தோரை எண்ணும்காலை,

    5              உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

    மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே;

    ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

    வலவன் ஏவா வான ஊர்தி

    எய்துப என்ப, (புறநானூறு 24)

    என்ற பாடலில்  வலவன் ஏவா வான ஊர்தி என்பது ஆளில்லாமல் பறக்கும் செயற்கைக்கோள் பற்றிய குறிப்பு ஆகும்.

    இவ்வகையில் வானியல் செய்திகள் பலவற்றை உட்பொதிந்துச் சங்க இலக்கியங்கள் வைத்துள்ளன.

    முனைவர் மு.பழனியப்பன்

    இணைப்பேராசிரியர்,

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

    திருவாடானை

    Share
  • ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி

    முனைவர் மு.பழனியப்பன்

    கல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். பாலக்காட்டுக் கணவாயின் தெற்குத் தாழ்வாரத்தில், ஆழியாற்றின் கரையில் பூர்வீகங்களின் மிச்ச சொச்சத்துடன் வாழ்ந்துவரும் கிராமமான ஆத்துப்பொள்ளாச்சி சிற்பியின் சொந்தமண். அதுவே அவரின் நிரந்தரக் கவிதை மண். தோப்பும் துரவும் சொந்தமாக இருக்க, கணக்கும் வழக்கும் அவருக்குத் தொல்லை தராமல் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றியவர் அவரின் தாயார் கண்டியம்மாள். அகலமான நெற்றியில் வட்ட வடிவமானச் சந்தனப் பொட்டோடு சிற்பியின் கவிதைகளில் காட்சி தருகிறார் அவரின் தந்தையார் பொன்னுச்சாமி. பிறந்த ஆண்டு, 1936.

    sirpiமரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். கவிதை என்பது ‘‘மறைந்து கிடக்கும் மனிதநேய ஊற்றுக்களைக் கண்டடைகிற முயற்சி’’, ‘‘நேரே நில், நிமிர்ந்து பார், நெஞ்சில் பட்டதை வளமாய்ச் சொல்’’, ‘‘எழுத்து ஆன்மாவின் ரத்தம், கவிதைகள் காலத்தின் உதடுகள்’’, ‘‘வலிவுள்ள பழமை, அழகுள்ள புதுமை’’ இவையே சிற்பி தன் கவிதைகளுக்குக் கொண்டிருக்கும் இலக்கணங்கள். ‘‘தாகம் தொலைக்கும் சிறுநதியாய் என் கவிதை நடக்கட்டும்’’ என்பதே இவர் கவிதையின் பயன். தேங்காது இயங்கு, முதல் நிலை விரும்பு, வையகம் புகழ வாழ் என்பது சிற்பியின் ஆத்திச்சூடி. அதுவே அவர் வாழ்க்கைக்குச் சூடிக்கொண்ட கொள்கைகள்.

    பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர் மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட இவர் பவள விழா கண்டவர். கோயம்புத்தூர் சிற்பியின் பவள விழா கண்டுக் கோலமுத்தூர் ஆனது. இதே நேரத்தில் சிற்பியின் கவிதைகள் ஒருங்காய் முளைத்து முத்துக்கொத்துக்களாயின. அவரின் நினைவினை மலராய், ரீடராய், கட்டுரைத் தொகுப்புகளாய் ஆக்கி மகிழ்ந்தார்கள் பவள விழாக் குழுவினர்.

    ஆசிரியத் தொழிலின் அருமை, பெருமைகளை, கடுமை, சிறுமைகளை அள்ளித் தெளிக்கும் அவரின் கவிதை ஆசிரியர் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்ய வேண்டிய மரபுக்கவிதை. “வாத்தியாரு வேலை” என்பது அதன் தலைப்பு.

    ‘‘மணியடிச்சாப் பணிதுவங்கும் வாத்தி யாரு வேலை
    மலிவுப் பதிப்பா ஆகிப்போச்சு வாத்தியாரு வேலை

    எடுத்துச் சொன்னா வெட்கம் வாத்தியாரில் ஏழு பிரிவு
    இவரை விட அவர் உயர்வாம்! மேடுபள்ளமாய்ப் பார்வை!
    தடுக்கிவிழும் சிலராலே விளையும் அலங்கோலம்
    … சின்னத் தவறு பண்ணினாலும் இவரு சீட்டு கிழியும் ’’
    ( சிற்பி கவிதைகள்,ப.189)

    சிற்பிஇதுவே வாத்தியாரு வேலையின் மகத்துவம். ஆனால் கல்விச் சாலையின் ஈடு இணையற்ற பெருமையை மற்றொரு கவிதைச் சிற்பம் வடித்தெடுக்கிறது. கவிதையின் தலைப்பு “பள்ளிக் கூடம்”.

    ‘‘எழுத்துக்களிலிருந்து
    ஐீவித எதார்த்தங்களுக்கு
    ஒரு தொடர் ஓட்டப்பந்தயம்
    தொடங்குகின்றது
    … காகிதப் பட்டறைகளில்
    சூட்சும
    ஆயுதத் தயாரிப்பு,
    வாழ்க்கைப் போரைச் சந்திக்க’’ (மேலது, ப.673)

    வகுப்பறைகளின் மீது கவிஞர் கொண்டுள்ள நம்பிக்கையும், ஆசிரியத் தொழில் மீது கொண்டுள்ள மரியாதையும் இணைத்துக் காணும்போது சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பும், எதார்த்தமும் ஒன்றுக்கொன்று ஏறுக்குமாறாய் இருப்பது தெரியவருகிறது.

    படிமக் கவிதைகளின் பிதாமகர் சிற்பி. அணுக்கருச் சிதைவு படிமமாய்த் தொடர்கிறது அவரது “நாய்க்குடை” கவிதையில்

    ‘‘ ஹிரோஸஷிமாவின் சாம்பல் அணுக்கள்
    சமாதான மழையைத் தாகித்திருக்க…
    மானிட ரத்தக் கடல்களின் மேலே
    சாவின் தலைவிரி கோல மகுடமாய்
    காற்றுக் குமிழியில் விஷ நிறம் பூசி
    நீரில் நச்சு ஊசிகள் தூவி
    விரிகிறது இன்னும்
    விரிகிறது இன்னும்
    ராட்சத நாய்க்குடைக் காளான்’’ (மேலது, ப. 361)

    “சிகரெட்” அவரது கவிதையில் படிமமாய் உறைகிறது.

    ‘‘சாம்பல் அணுக்களின்
    சயன மண்டபம்
    பாம்பு நோய் உறையும்
    புற்றின் கோட்டை
    .. இருவிரல் நடுவில்
    புகையும் எரிமலை’’ ( மேலது,ப. 313)

    ஒருகணம் பழுத்து, மறுகணம் உதிரும் சிறுசிறு சிவப்புக் கனிகளின் தோட்டம் என்று சிகரெட்டின் தன்மை பேசும் சிற்பியின் கவிதைகள் சிகரெட்டிற்குப் பாராட்டுவிழா நடத்துகின்றனவா, எச்சரிக்கைக் கூட்டம் நடத்துகின்றனவா என்று குழம்ப வைக்கின்றன.

    பாரதியைப் பின்பற்றியவர் சிற்பி. காந்தியை இதயத்தில் ஏற்றியவர் சிற்பி. இவர்களுக்காகத் தனித்தனிக் காவியங்கள் படைத்தவர். இவரின் பாரதி கைதி எண் 253, மகாத்மா ஆகிய படைப்புகள் இவரின் தனித்த கவிக் காவிய முத்திரைகள். ஆதிரை, மௌன மயக்கங்கள் ஆகியன இவரின் காப்பியச் சிதறல்கள். நிலவுப் பூ (1963), சிரித்த முத்துக்கள் (1966), ஒளிப்பறவை (1971), சர்ப்ப யாகம் (1976), புன்னகை பூக்கும் பூனைகள் (1982), மௌன மயக்கங்கள் (1982)(தமிழக அரசு பரிசு பெற்றது), சூரிய நிழல் (1990), இறகு (1996), சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது), ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது), பூஜ்யங்களின் சங்கிலி (1999)(தமிழக அரசு பரிசு பெற்றது), பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001), மூடுபனி (2003), சிற்பி: கவிதைப் பயணங்கள் (2005), தேவயானி (2006), சிற்பி கவிதைகள் தொகுதிகள் – 2 (2011), நீலக்குருவி (2012), கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு) ஆகியன இவரின் கவிதைத்தொகுப்புகள் ஆகும். இவை தவிர உரைநடை நூல்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், உரைநூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று பற்பல ஆக்கத்துறைகளில் இவர் தடம் பதித்தவர். இவர் பெற்ற பட்டங்கள், விருதுகள் ஐம்பதுக்கும் மேற்பட்டன. இவர் மலையாளக் கவி வள்ளத்தோளையும், பாரதியாரையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

    சொல்லுக்குள் சொல் முளைத்து புதுமை செய்வது சிற்பியின் பாணி.

    கிளிஞ்சலுக்குள் சமுத்திர ஆர்ப்பரிப்பு
    சமுத்திரத்திற்குள் கிளிஞ்சல் சங்கீதம்
    கிளையசைவில் காற்று
    காற்றசைவில் கிளையாட்டம்
    பறவைக்குள் முட்டை
    முட்டைக்குள் பறவையின் பதுங்கல்
    நேற்றுக்குள் இன்றின் கல்லறை
    இன்றுக்குள் உறைந்து கொண்டிருக்கும் நேற்று’’ (மேலது,ப.850)

    சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தைக் தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது.

    அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள். இவரின் ஆக்கங்களை வல்லிக்கண்ணன் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.

    ‘சிற்பியின் கவிதைகள் கற்பனை வளம், கலைநயம், கவிதா வேகம், உணர்வு ஓட்டம் கொண்டுச் சிறந்து விளங்குகின்றன. இவரது ‘சிகரங்கள் பொடியாகும்’’, ‘‘ராட்சதச் சிலந்தி’’, ‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?’’, ‘‘சர்ப்பயாகம்’’, ‘‘நாய்க்குடை’’ ஆகியவை வேகமும் விறுவிறுப்பும் கொண்ட சிந்தனைப் படையல்கள். முள். முள்.. முள் என்ற தலைப்பில் பல பொருள்கள் பற்றிய சிறு சிறு கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் சிற்பி. ரசமான கவிதை இது’’ என்ற வல்லிக்கண்ணனின் மதிப்பீடு என்றைக்கும் கல்வெட்டாய் சிற்பி கவிதைகளின் வல்லமை பேசும் வரிகள் ஆகும்.

    தனக்குப் பின்னாக கவிதைகளை, கவிஞர்களை, திறனாய்வாளர்களை, மாணவர்களை, நண்பர்களை, நல்லிளைஞர்களை வரவேற்கும் பெருந்தன்மை வாய்ந்த நல்ல மனக் கவிஞர் சிற்பி. அவரின் படிப்பிற்கும், படைப்பிற்கும் அவரது அறைக் கதவுகள் அதிகாலை மூன்று மணிக்கே திறந்துவிடுகின்றன. என்பது அதிசயம் ஆனால் உண்மை.

    _______________________________________________
    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    படம் உதவி:
    http://ta.wikipedia.org/s/p0n
    http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    Share
  • தொல்காப்பிய புறத்திணை நோக்கில் சிலப்பதிகாரம்

    முனைவர் மு.பழனியப்பன்,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    tholkappiyar

    தொல்காப்பியப் பொருள் இலக்கணம் இருவகைப்படுகின்றது. அக இலக்கணம், புற இலக்கணம் எனபனவாகும். இவ்விரண்டிற்கும் தனித்த இலக்கண மரபுகள் தொல்காப்பியரால் காட்டப்பெற்றுள்ளன. அக இலக்கண மரபுகளை அப்படியே தாங்கிச் சங்க இலக்கிய அகப் பாடல்கள் அமைந்துள்ளன. புற இலக்கண மரபுகளை அப்படியே ஏற்று புற இலக்கியங்கள் படைக்கப்பெற்றுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சிற்சில மாறுபாடுகள் இவ்விலக்கண மரபுகளி;ல் தோன்றினாலும், அப்பகுப்பு சார்ந்த அக, புற இலக்கியங்கள் தொல்காப்பிய மரபுகளைப் பின்பற்றின என்பதில் ஐயமில்லை. இதற்குப் பின் சிலப்பதிகாரம் தோற்றம் பெறுகின்றது. ஏறக்குறைய பத்துப்பாட்டின் வளர்ச்சி நிலை சிலப்பதிகாரம் எனக் கொள்ளலாம். நெடிய பாடலாக விளங்கும் பத்துப்பாட்டு அமைப்புமுறையின் நீட்சிச் சிலப்பதிகாரக் காப்பியமாக வளர்கின்றது. இதனுள்ளும் அக, புற இலக்கணங்களின் மரபுகள் பின்பற்றப்பெற்றுள்ளன. அவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

    புற இலக்கணம் வரையறை

    புறம் என்ற இலக்கணத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள இளம்பூரணரின் விளக்கம் பயன்படுகின்றது. ~~புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செங்தலும் ஆகலான் அவற்றானாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் என்ற புற இலக்கணம் பற்றிய குறிப்பு, புறத்திணைப் பொருள் இலக்கணத்தின் அடிப்படையை எடுத்தியம்புகின்றது.

    தொல்காப்பியர் அகத்தை ஏழாகப் பிரித்தது போலவே புறத்தையும் ஏழாகவேப் பிரித்தார். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய எழு திணைகள் தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் ஆகும்.

    வெட்சி என்பது ஆநிலை கவர்தல் ஆகும். வஞ்சி என்பது மண் கருதிய போராகும். உழிஞை எதிரி அரசனின் அரணை முற்றுகையிடலும், அம்முற்றுகையை அவ்வரசன் முறித்தலும் ஆகும். தும்மை என்பது இரு பெரு வேந்தர்களும் போர் எதிர்தலாகும். வாகை என்பது வெற்றியைக் குறி;ப்பதாகும். காஞ்சி என்பது யாக்கை, செல்வம், இளமை ஆகியனவற்றின் நிலையாத் திறம் காட்டிப் போரை விலக்கல் ஆகும். பாடாண் என்பது இவ்வகையில் n;வற்றி பெற்று அடங்கி வாழ்ந்தத் தலைவன் ஒருவனின் புகழ் பாடுவதாகும். இத்துறைகளுக்கு வைக்கப்பெற்ற பெயர்கள் பூக்களின் பெயர்கள் ஆகும். இப்பூக்களை மூடி இவ்வினைகளைத் தமிழர்கள் ஆற்றினர். இதன் காரணமாக சமுதாயத்தில், போர்க்களத்தில் அவர்கள் எக்குழு சார்ந்தவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளமுடிந்தது.

    சிலப்பதிகாரம் – புறத்திணைச் சார்புடையது

    சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையில் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் ஆகும். இதனை இயற்றிய இளங்கோவடிகள் அரச மரபினர் என்பதால் அவர் புறத்திணை மரபுகளைப் பெரிதும் அறிந்தவர் ஆகின்றார். இதன் காரணமாக அவர் படைத்த சிலப்பதிகாரம் முழுவதிலும் தொல்காப்பிய புறத்திணை மரபுகள் விரவிக் கிடப்பதைக் காணமுடிகின்றது.

    சிலப்பதிகாரப் புறத்திணைக் கூறுகள் என்ற பொருளில் நூல் வரைந்துள்ள, இராம தட்சிணாமூர்த்தி சிலப்பதிகாரத்தில் அனைத்துக் காதைகளிலும் இடம்பெற்றுள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்தியம்பியுள்ளார். அவர் தம் நூலில், சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலும், புறப்பொருள் வெண்பாமாலையின் புறத்திணையியலும் இணைந்து இடம்பெற்றுள்ள திறத்தைக் காட்டியுள்ளார். அவரின் கருத்துகள் சிலப்பதிகாரம் பின்பற்றிய புறத்திணை மரபுகளின் இயல்புகளை தெளிவுடன் காட்டுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு.

    ~~சங்க இலக்கிய மரபை முழுக்க மறுக்காமலும், முழுக்கப் பற்றாமலும் சிலப்பதிகாரத்தை அடிகள் ஆக்கினார். ஒரு வணிகக் குடிமகனுக்கும், அவன் மனைவிக்கும் ஏற்பட்ட வாழ்க்கைச் சுழல்களையும், அழல்களையும் விளக்கி ஒரு பெரிய தொடர்நிலைச் செய்யுளைப் படைத்தார். தம் கதையின் மூலமாக, சில உண்மைகளைக் கூற முனைந்தார். அவற்றையே முப்பேருண்மைகளாகக் குறிப்பிட்டார். அதுகாறும் இலக்கியங்களின் போக்குக்கும், நோக்குக்கும் அடிப்படையாக அமைந்த ~பொருளிலக்கண வழக்கு அவரது புதிய இலக்கியத்திற்கு இன்றியமையாத தேவையாயில்லை. ஆனாலும் சங்க இலக்கியப் பொருள் இலக்கண மரபின் தாக்கத்தை அவர் நூலில் காணமுடிகின்றது என்ற அவரின் கருத்து சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் புறத்திணை மரபுகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் இளங்கோவடிகள் பின்பற்ற முனைந்துள்ளமையைக் குறிப்பிடுகின்றது.

    அவரே ~~மறத்துறையைச் சார்ந்த திணை, துறைகளை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பொருத்தி, வீரப் பெண்மைக்குப் புகழ் பாடியவர் இளங்கோவடிகள். வஞ்சிக் காண்டத்தில் கண்ணகி ~வீரபத்தினி| என்றே குறிக்கப் பெறுகிறாள். பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வீரமிக்க ஆடவர்கட்குக் கல்லெடுப்பது மரபு. இதை நடுகல் என்பர். நடுக்கல்லில் இறந்த தலைவனுடைய பெயரையும், சிறப்புகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி வணங்குவர்.

    நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடு மெழுதி யதர்தொறும்
    பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
    சிலம்பில், கண்ணகி என்ற பெண்ணுக்கே நடுகல் விழா நடக்கின்றது.
    ~~காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
    சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
    இருமூன்று வகையிற் கல்லொடு புணர

    என்று தொல்காப்பியம் கூறும் புறத்திணைத் துறைகளையே வஞ்சிக்காண்டத்தின் தலைப்புக்களாகக் கொடுத்துள்ளார் இளங்கோவடிகள் என்ற மேற்குறித்த ஆய்வாளரின் கருத்து தொல்காப்பியத்தில் காட்டப்பெற்ற ஆண் புற மரபுகள் சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கப்பட்டதைக் காட்டுகின்றது.

    சிலப்பதிகாரக் காட்சிக் காதை- தொல்காப்பிய புறத்திணையியலின் சிறிய வடிவம் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் மேற்சுட்டிய ஆய்வாளர். ~~செங்குட்டுவன் தன் நாட்டைந்த பத்தினிக் கடவுளுக்குச் சிலையெடுக்க நினைந்து இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்தல் சிறந்தது எனக் கூறுகின்றான். மலையரசன் மாபெரும் பத்தினிக் கடவுளுக்குக் கல் தாரான் எனின், அவனோடு மலைவேன் என்று வஞ்சினம் கூறுகின்றான். செங்குட்டுவன் வடதிசை நோக்கிப் போர் மேலெழுவதற்காக வஞ்சினம் உரைப்பது போலவமைந்துள்ளது இப்பகுதி. தான் வஞ்சி சூடி வாளமர் செய்யும் வஞ்சி வேந்தன் :போலவும், மலையரசன் (இமயமலை) காஞ்சி வேந்தன் போலவும் குறிக்கப்பெறுகின்றனர். சேரன் கூறும் வீரவுரை முழுவதும் ~ஒரு சிறிய புறத்திணையியல்| போலவே அமைகின்றது. என்ற கருத்து சிலப்பதிகாரம் தொல்காப்பிய புறநெறிகளின்படி போர்த்திறத்தைக் காட்டியுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.

    மேற்சுட்டிய ஆய்வாளரின் கருத்துகள் சிலப்பதிகாரம் தொல்காப்பிய புற மரபுகளின் வழிப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

    சிலப்பதிகாரப் புறத்திணைச் சார்புப் பகுதிகள்

    சிலப்பதிகாரத்தில் புறத்திணையை ஒட்டிய மரபுகள் காதைகள் தோறும் அமைந்துள்ளன என்றாலும், கட்டுரையின் அளவு கருதி இங்கு ஒரு சில பகுதிகள் மட்டும் சுட்டிக்காட்டப்பெறுகின்றன. குறிப்பாக தொல்காப்பிய புறத்திணைகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாங்கு இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்பெறுகின்றது.

    வெட்சி

    வெட்சி புறத்திணைகளில் முதல் திணையாகும். இதன் திணை மற்றும் துறைகளை மிக்க வெளிப்படையாகவே வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

    கொற்றவை கோலம் புனைந்து வந்த பெண்மகளைக் கொற்றவையாகவே கருதி அவளுக்கு வேண்டுவன செய்யும் நடைமுறை வேட்டுவவரியில் விவரிக்கப்படுகின்றது. அப்போது கொற்றவை விரும்புவது வெட்சிப் போரும், கரந்தைப்போரும் என்றுக் குறிக்கிறார் இளங்கோவடிகள்

    ~~உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆநிரை கொள்ள உற்ற காலை
    வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும்போலும்
    வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
    கட்சியுள் காரி கரிய குரல் இசைத்துக் காட்டும் போலும்

    என்ற அடிகளில் வெட்சிப் போர் முறை விளக்கப்பெற்றுள்ளது. வெட்சிப் பூக்களைச் சூடி ஒரு ஆடவன் போருக்குச் செல்கின்றான். அவனுக்குத் துணையாகக் கொற்றவையும் (கொற்றவையாகிய நீயும்) செல்லுவாய். இதன் காரணமாக வெட்சிக்கு எதிரான ஊரில் அழிவு நேரப்போகின்றது என்பதைக் கரிக்குருவி அறிவிக்கக் கிளம்பிவிட்டது என்ற செய்தியும் புள்வாய்ப்பச் சொன்ன நிமித்தமாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.

    அடுத்த பாடலில்

    ~~கள்விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்திப்
    புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும்போலும்
    புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக்
    கொள்ளும் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும்
    என்ற இந்தப் பாடலில் கொடி எடுத்துக்கொண்டு வெட்சிப்போருக்குப் புறப்பட்ட ஆண்மகனின் வீரத்திற்குத் துணையாகக் கொற்றவையும் போவாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.

    இச்செய்திகள் அப்படியே வெட்சி பற்றி தொல்காப்பிய நூற்பாவின் மறுவடிவமாக விளங்குகின்றன.

    ~~வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின்
    ஆ தந்து ஓம்பல் வேற்று ஆகும்

    வெட்சித் துறைகள் சிலவற்றையும் இளங்கோவடிகள் இதனுள் புகுத்தி உரைக்கின்றார். பாதீடு, கொடை ஆகிய துறைகளை அவர் பெரிதும் சிலப்பதிகாரத்தில் விளக்குகின்றார். கொண்டு வந்த ஆநிரைகளைப் போருக்கு உதவியவர்களுக்கு, ஊருக்கு உதவியர்களுக்கு மறவர்கள் அளிக்கின்றார்கள். அவர் அளித்தபட்டியல் நீண்டதாகும்.

    இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர்
    தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்
    கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
    நல் யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன.

    முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
    கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் 
    கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
    புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன.

    கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
    அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்
    நயன் இல் மொழியின் நரை முது தாடி
    எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன .

    என்பன கொடை பெற்றவர்களின் பட்டியல். இவ்வடிகளுக்குள் ஒரு நகைச்சுவையும் கலந்துள்ளது. கள் விற்பவள் போர் செல்ல இருந்த மறவனுக்குக் கள் தராமல் காலம் நீட்டித்தாள். அவன் கள்ளுண்ணாமலே போருக்குச் சென்றுவி;ட்டான். ஆனால் வெற்றி பெற்றதும் கள் தராத அம்மங்கைக்கும் ஆநிரைகளைத் தந்து அப்போர்வீரன் வெற்றிகண்டான். தராதவளுக்கும் கொடை அறித்த பெருந்தன்மையாளனாக அப்போர்வீரன் இளங்கோவடிகளால் காட்டப்பெற்றுள்ளான்.

    இதன்பிறகு அவிப்பலி என்ற துறையும் எடுத்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு வெட்சியின் விளக்கம் வேட்டுவவரியில் இடம்பெற்றுள்ளது.

    வஞ்சித்திணை, காஞ்சித்திணை வஞ்சித்திணையும் கர்ஞ்சித்திணையும் காட்சிக்காதையில் இளங்கோவடிகளால் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. சேரன் வஞ்சினம் கூறிப் போருக்குச் செல்லும் செயலைக் குறிக்கும் பகுதியில் வஞ்சியை எடுத்தாள இளங்கோவடிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதனுடன் இணைந்துக் காஞ்சியும் இடம்பெற்று விடுகின்றது.

    பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
    முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
    மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
    சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
    புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
    முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
    இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
    மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
    கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,
    வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
    கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
    முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
    மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
    தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை
    நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
    நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
    அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
    வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
    மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு| என,
    ~குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
    நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
    வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
    பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
    குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்,
    வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
    புட்கைச் சேனை பொலிய, சூட்டி
    பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
    வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்| என-

    என்ற இப்பகுதியில் சேரன் வஞ்சினம் கூறுகின்றார். வஞ்சினக்காஞ்சியாக இது அமைகின்றது. அவ்வஞ்சினத்தில் காஞ்சித் திணை செய்திகளும். வஞ்சித் திணை செய்திகளும் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.

    குடைநிலை வஞ்சி, கொற்ற வஞ்சி, நெடுமாறாயம், பெரு வஞ்சி,பெருஞ்சோற்று வஞ்சி, கொற்ற வள்ளை ஆகிய வஞ்சித் துறைகள் மேற்சுட்டிய பகுதியில் இடம்பெற்றனவாகும். வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்ற பாடலடியின் வழியாக வஞ்சிப் பூவினை வாளுக்குச் சூடி சேரன் படையெடுத்த நிலை தொல்காப்பிய புறத்திணையியல் சார்ந்த்தாகும்.

    இதற்கு முன்பே மூன்று காஞ்சித் துறைகள் இடம்பெற்றுள்ளன. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்ற தொல்காப்பியத் து:றை, கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை எனச் சிலப்பதிகாரத்தால் வழிமொழியப்பெற்றுள்ளது. முதுகுடிப்பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்களித்த மகட்பாற் காஞ்சி என்ற சிலப்பதிகாரம் காட்டும் காஞ்சித் துறை தொல்காப்பியம் குறிக்கும் ~முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பாலானும்| என்ற துறையாகக் கொள்ளத்தக்கது. தென்றிசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன்றிய நீள் பெருங்காஞ்சி என்ற சிலப்பதிகாரத்துக் காஞ்சித் துறை, மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை| என்றத் தொல்காப்பியத் :துறையாகக் கொள்ளத்தக்கது.

    தும்பைத்திணை

    சேரனின் போர்திறம் தும்பைத் திணையுடன் சிலப்பதிகாரத்தில் விளக்கம் பெறுகின்றது.

    நும்போல் வேந்தர் நும்மொடு இகலி
    கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயல்கொடி
    பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
    திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன
    கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர்
    பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்
    வட ஆரியரோடு வண்தமழ் மயக்கத்து உன்
    கடமலை வேட்டம் என் கண்புலம் பிரியாது
    கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
    எம் கோமகளை ஆட்டிய அந்நாள்
    ஆரிய மன்னர் ஈர் ஐந்நூற்றுவர்க்கு
    ஒரு நீ ஆகிய செருவேம் கோலம்
    கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்

    என்ற இப்பகுதி சேரன் மற்ற மன்னர்களுடன் நேருக்கு நேர் மோதிய ஆற்றலைத் தெரிவிக்கின்றது. இது ~மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்குஞ் சிற்ப்பிற்றென்ப என்ற தொல்காப்பியத் தும்பை வரையறையின் சார்பினது ஆகும். மேலும் போர்த்தானைகளைச் சிறப்பிப்பது தானை நிலை எனப்படும். அத்தானைநிலையை

    மேலும் கனக விசயருடன் சேரன் போர் புரிந்த ஆற்றலை,

    ~~எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்n;தாகை
    ஒரு பகல் எல்லையில் உண்ணும் என்பது
    ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய
    நூழில் ஆட்டிய சூழ்கழல்வேந்தன்
    போந்தொடு தொடுத்த பரவத்தும்பை
    ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய|

    என்ற பாடலடிகளில் தும்பையைச் சேரன் அணிந்த நிலை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. வடபுலத்து அரசர்களை வெற்றி கொள்ளும் நிலையிலும் தமிழ் போர்மரபு பின்பற்றப்பெற்றிருப்பதை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.

    வாகைத்திணை

    போரில் சேரன் வெற்றி பெறுகின்றான். அவனின் தேருக்குப் பின்னாலும், முன்னாலும் மகிழ்ந்து வீரர்கள் ஆடிவருகின்றனர். இவ்வாட்டம் வாகைத்திணையின் வயப்பட்டதாகும்.

    ~~…..பேர்இசை
    முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி
    பின்தேர்க்குரவைப் போய் ஆடு பறந்தலை
    முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி
    தொழத்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
    மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட
    சிறப்பு ஊண் கடிஇனம் செங்கோல் கொற்றத்து
    அறக்களம் செய்தான் ஊழி வாழ்க

    என்ற பாடலடிகளில் வென்ற கோமான் முன்தேர்க்குரவையும், ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும் அரும்பகை தாங்கும் ஆற்றலும் ஆகிய தொல்காப்பியத் துறைகள் சிலப்பதிகாரத்தால் ஏற்கப்பெற்றன என்பதைக் காட்டுகின்றன.

    பாடாண் திணை

    சிலப்பதிகாரத்தில் சேரனைப் போற்றும் மாடலனின் பாடலடிகள் பாடாண் திணை வயப்பட்டனவாக உள்ளன.
    ~~…நின்
    மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
    ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
    இளவரசு பெறாஅர் ஏவல் கேளார்
    வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
    ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவர்
    பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
    பழையன காக்கும் குழைபயில் நெடும்கோட்டு
    வேம்பு முதல் தடிந்த ஏந்து வாழ் வலத்து
    போந்தைக் கண்ணிப் பொறைய

    என்ற பகுதி சேரனின் பெருமையைப் பேசும் பாடாண்திணைப்பகுதியாகும்.

    இவ்வாறு அரசர் போர்ப்பகுதியை விளக்கும் வஞ்சிக்காண்டம் தொல்காப்பியப் புறத்திணைச்சாயலுடன் ஒட்டிப்படைக்கப்பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.

    வஞ்சிக்காண்டத்தின் காதைகளின் பெயரமைவு என்பது தொல்காப்யிர் சுட்டும் கரந்தைத்திணை சார்ந்த துறைகளை ஒட்டியே இளங்கோவடிகள் அமைத்திருப்பது அவரின் தொல்காப்பிய நெறி பின்பற்றலுக்குச் சான்றாகின்றது. காட்சி, கால்கோள், நீர்ப்படை நடுகல், வாழ்த்தல் என்ற அதே அமைப்பில் கண்ணகிக்குச் சிலை காணும் போக்கை இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

    ~மதுரை மூதூர் மாநகர் கோடுஉற
    கொதிஅழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
    நல்நாடு அணைந்து நளிர்சினை வேங்கை
    பொன்அணி புதுநிழல் பொருந்திய நங்கையை
    அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
    சிறப்புடைக் கம்பியர் தம்மொடும் சென்று
    மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
    பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
    இமையவர் உறையும் இமையச் செல்வரைச்
    சிமைய சென்னித் தெய்வம் பரசிக்
    கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
    வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
    முற்றுஇழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
    பூப்பலி செய்து. காப்புக்கடை நிறுத்தி
    வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்து
    கடவுள் மங்கலம் செய்க என ஏவினான்
    வடதிசை வணங்கிய மன்னவர் ஏறுஎன்

    என்ற இந்தப் பாடலடிகளில் கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்யப்படும் திறம் நடுகல் நாட்டி வணங்கும் திறமாக உள்ளது. தொல்காப்பியத்தில் ஆணுக்குச் சொல்லப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி ஒரு பெண்ணிற்கு செய்யப்பெற்றதாக இளங்கோவடிகள் படைத்துக்காட்டுவது என்பது மரபு மீறல்அல்ல… புறத்திணை பெண்களுக்கும் உரியது என்ற எண்ணம்தான்.

    Share
  • முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

    முனைவர் மு.பழனியப்பன்.

    BabyMurugaOriginal

     

    திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத்தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப்பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

    முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுபதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்தொண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.

    தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.

    சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார், செந்தில் வாழ் அந்தணர், திருத்தணியிற்பிறந்தார், தொண்டரடித்தொண்டர், பாடாது விடுபட்டோர், புராணிகர்கள், முருகன் திருவருளைச் சிந்திப்போர், முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர்.

    இப்புராணத்துள் ஒளவையார், மீனாட்சி அம்மையார், முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், குமரகுருபரர், நக்கீரர், அகத்தியர், கச்சியப்ப சிவாச்சாரியார், பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.

    செந்தில்வாழ் அந்தணர் சருக்கம், கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம், வென்றி மலைச் சருக்கம், அரஹாரச் சருக்கம், காவடிச் சருக்கம், குகனேரிச் சருக்கம், கல்லாடச் சருக்கம், தென்பழநிச் சருக்கம், நின்றசீர்ச் சருக்கம், நாரதச் சருக்கம், வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது. அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது. இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.

    இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்
    றதல சேடனார் என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்
    மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்
    சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே (1181)

    என்று பாடுகின்றார்.

    கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை
    ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்
    பரவசமாய் வீழ்ந்தெழுந்து
    போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்
    இனியென்று காண்பதென்று
    சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி
    படைத்த சம்பந்தாண்டன்
    தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று
    ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)

    என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.

    பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது, முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்

    அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில்) அதிபன் பரிவோடு அம்
    புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்
    இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா
    தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்

    பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்
    சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்
    வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்
    சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பறிய திதைத்தம் (2582)

    என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

    முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்
    இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா
    அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்
    கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண் (1324)

    என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று, அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.

    இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை, அவர்களின் வாழ்வை, தொண்டை, சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத் துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    படம் உதவிக்கு நன்றி: indianknowledgesystemacademy.blogspot.com

    Share
  • கம்பனில் அழகியல்

    மு​னைவர் மு.பழனியப்பன்

    பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அழகியல் திறனாய்வு பெருவளர்ச்சியுடன் திகழ்ந்தது.  நவீனத்துவ திறனாய்வுகளில் அழகியல் திறனாய்வு முன்னணி வகித்தது, ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் அழகியல் திறனாய்வாளர்கள் அழகுணர்வு என்பதே படைப்பின் நோக்கமும் அடிப்படையும் என்று கருதினர். இமானுவல் கான்ட், ஆஸ்கர் வொயில்டு, ஐhன் ரஸ்கின் போன்றோர் அழகியல் சார்ந்து இயங்கிய மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் ஆவர்.

    பழங்காலத்திலேயே எகிப்து, இந்தியா, ரோம், சீனா போன்ற பல நாடுகளில் அழகுணர்வு என்பது தனித்துவம் மிக்கக் கலைக்கூறாக மக்களால் விரும்பப்பட்டுள்ளது. கட்டிடம், ஓவியம், நாட்டியம் போன்றவற்றில் அழகுணர்வைத் தனித்துவமான நிலையில் அந்நாட்டு மக்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இலக்கியப் படைப்பாளர்களும் அழகுணர்வு வயப்பட்டுப் படைப்புகளைப் படைத்தளித்துள்ளனர்.

    குறிப்பாக இந்தியாவில் எழுந்த ரசக் கோட்பாடு, நாட்டிய சாஸ்திரம் போன்றன அழகியல் தன்மை உடையனவாகும். தமிழில் தொல்காப்பியத்தில் இடம்பெறும் உவம இயல், செய்யுளியல், மெய்ப்பாட்டியல் போன்றன முழுக்க முழுக்க அழகியல் சார்ந்தன. தொடர்ந்து வந்த தமிழ் இலக்கியங்களில் அழகுணர்வு என்பது போற்றப்பட்டு வந்துள்ளது.

    ~~அழகியல் திறனாய்வு என்பது இலக்கியத்தை அழகுடையது, அழகற்றது – சுவையுடையது, சுவையற்றது – என்று உணர்த்துவது,  இலக்கியப்படைப்பின் தனித்த பாணி, நாகரீகம், வடிவழகு ஆகியன குறித்து அறிவது, மனிதர்களின் நம்பிக்கை, மகிழ்வு துயரம் ஆகியன எவ்வாறு ஒரு படைப்பில் வெளிப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவது  மனித வாழ்க்கை என்பது அதிக அளவிலான அழகியல் கூறுகளைக் கொண்டது என்பதால் அழகியல் ஆய்விற்கு வளமான வாய்ப்புகள் அமைகின்றன.

    அழகியல் ஆய்வு என்பது படைப்புகளை ஆராய்ந்து ஒற்றை வரியில் இது அழகானது, இது அழகற்றது என்று சொல்லிவிடுவதல்ல. ஒரு படைப்பின் முழுமையை அறிந்து, அப்படைப்பின் படைப்புத் தன்மையில் உள்ள கலைத்துவத்தை வெளிப்படுத்துவது, ஏன் படைப்பின் சில பகுதிகள் அழகாக உள்ளன, ஏன் சில பகுதிகள் அழகுணர்வற்று உள்ளன என்று உணர்த்துவது, இவற்றோடு படைப்பினுள் பயன்படுத்தப்பட்டுள்ள வலிமையான, மென்மையான கலாச்சாரக் கூறுகளை உற்று நோக்குவது என்ற நிலையில் பல கோணங்களை உடையதாக உள்ளது. பின்வரும் நோக்கங்களை உடையதாகவும் இவ்வாய்வு அமைகின்றது.

    •    படைப்புக்கான பின்புலத்தினை அறிவது.
    •    இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் எவ்வகை படைப்புச் செயல்பாடு நிகழ்ந்துள்ளது என்று கண்டறிதல்;
    •    அழகியல் உணர்வினை ஊட்டக் கூடிய உத்திமுறைகள் எவ்வாறு கையாளப்பெற்றுள்ளன என அறிவது.
    •    படைப்பினுள் பொதிந்து வைக்கப் பெற்றுள்ள சமுதாய மதிப்புகள், நம்பிக்கைகள், விருப்பங்கள், தேவைகள் முதலானவற்றை அறிதல்
    •    படைப்;பினோடு தொடர்புடைய பிற கொள்கைகள், மரபுகள் போன்றவற்றை உணர்தல்
    •    படைப்பினால்  ஏற்படும் பயனை உணர்த்தல்

    போன்ற நோக்கங்களை உடையதாக அழகியல் ஆய்வு அமைகின்றது.

    ~~உருவமே முதன்மையானது. அதுவே இலக்கியத்திற்குக் கலையழகைத் தரக்கூடியது என்பதும், இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படிச் சொல்லப்பெற்றிருக்கிறது என்பதே பார்க்கப் பட வேண்டும் என்பதும் அழகியல் திறனாய்வின் அடிப்படையாகும். தோற்றத்தின் திரட்சியும், நளினமும் லயமும், முதலில் ரசிக்கப்பட வேண்டும். அதன இனிமையே ஒரு சுகானுபவம் என்று ரசனையை முதன்மைப் படுத்துகிறது இத்திறனாய்வு. பெரும்பாலும் மனப்பதிவு முறையிலேயே இது கூறப்படுகிறது. முக்கியமாக சொல்லிலும் ஓசையிலும் காணக் கூடிய ஒருவித ஒழுங்கமைவு,தொனி, பொருட்சுழற்சி, உணர்ச்சி வடிவங்கள், உவம, உருவகங்கள், ஆர்வத் தூண்டல்கள் முதலியவற்றை ரசனைக்குரிய பகுதிகளாக இது விளக்கவும் வருணிக்கவும் செய்கின்றது,  என்று அழகியல் திறனாய்விற்கு விளக்கம் அளிக்கிறார் தி.சு. நடராஜன்.

    “அழகியல் திறனாய்வு என்பது ரசனை முறைத் திறனாய்வாக தமிழ்த்திறனாய்வுப் போக்கில் நிகழ்த்தப் பெற்று வந்துள்ளது. கம்பராமாணயம் பற்றிய ரசனை முறைத்திறனாய்வுகள் தமிழில் குறிக்கத்தக்க இடம்பெறுவனவாகும். ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தம் போன்ற அறிஞர்களின் பெரும் பட்டியல் கம்பராமாயணம் பற்றிய ரசனைமுறைத் திறனாய்வுக்கு உள்ளது. ~~இலக்கிய ரசனைக்குக் கவிதையே இவர்களுக்கு உகந்ததாக இருந்தது. எளிமை,தாளம், லயம், உணர்வு, சொல் இவற்றிற்கெல்லாம் கவிதையே இடம் தருவதாக இவர்களுக்குப்பட்டது. அதிலேயே லயித்துப் போய்ப் பொருள் விளக்கம் (முக்கியமாக பொழிப்புரை) தருவது இவர்கள் வழக்கம்” என்று ரசனை முறைத் திறனாய்வாளர்கள் பற்றிய மதிப்புரையை வழங்குகிறார் தி.சு நடராஜன்.

    ~~கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவை மிகவும் உயர்ந்தது. ரஸிகருடைய அறிவுக்கு அது அமுதமாக நிற்கின்றது. கம்பராமாயணத்தின் ரசனைச் சுவையை உணராமல் மற்ற சுகங்களை மாத்திரம் உணருகிறவர்கள் அதன் சுவையில் செம்பாதிக்கு மேல் இழந்துவிடுகிறார்கள்,  என்ற அமைப்பில் ரசனைமுறைத் திறனாய்வுகள் கம்பராமாயணத்திற்கு அமைந்தன.

    ஓர் இலக்கியத்தை ரசிப்பது என்ற நிலையில் இருந்துச் சற்று மேம்பட்டது அழகியல் திறனாய்வு. ரசனை முறைத் திறனாய்வு என்பது பாராட்டு முறைத் திறனாய்வு வயப்பட்டதாக அமைந்துவிட அதிலிருந்து வேறுபட்டு அமைவது அழகியல் திறனாய்வாகின்றது. கம்பராமாயணம் காப்பியப் படைப்புகளில் மிக முக்கியமானது. அதன் அளவாலும், கவிவளத்தாலும் நிலையான இடத்தைத் தமிழ்க்காப்பியப் பகுதியில் பெற்றிருக்கிறது. குறிப்பாக இதனுள் இடம்பெறும் சுந்தரகாண்டம் என்பது அழகியல் சார்ந்த பல கருத்துகளைக் கொண்டமைகின்றது.

    நவீனத்துவ ஆய்வுகள் வாசகனுக்கு முக்கிய இடம் தருகின்றன. வாசகர்களால் சுந்தரகாண்டம் அதிகம் படிக்கப்படுவதாக இன்றளவும் உள்ளது. இதற்கு சமய நம்பிக்கை ஒரு காரணமாக அமைகிறது என்பது ஒருபுறம். என்றாலும் சுந்தர காண்டம் என்பது மற்ற இராமயணப் பகுதிகளைக் காட்டிலும் மக்கள் மத்தியில் குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. உரைநடைவடிவம், அல்லது சுருங்கிய கவிதைவடிவம், கம்பர் தந்த சுந்தரகாண்டம், வால்மீகி தந்த சுந்தர காண்டம் என்று பற்பல நிலைகளில் மக்களிடம் சுந்தரகாண்டம் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம் அழகியல் உணர்வு சார்ந்த பின்புலத்துடன் சுந்தர காண்டம் படைக்கப்பட்டிருப்பது ஆகும்.

    ~~கம்பன் பாடிய ஆறு காண்டங்களுக்குள்ளும் காவியத்துள் ஒரு காவியம் என்றே போற்றப்பெறுவது ஐந்தாவது காண்டமான சுந்தர காணடம் ஓர் அனுபவச் சுரங்கம். அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம். அறிதொறும் அறியாமை கண்டாற்போல அனுபவ எல்லை விரிந்து கொண்டே செல்லும்,  என்ற நிலையில் சிறப்பு வாய்ந்தது சுந்தரகாண்டம்.

    ~~சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும். அன்றியும் காவிய நாயகனான இராமபிரானது பணிமேற்கொண்டு கடத்தற்கரிய கடலையும் தாவிக் கடந்து புகற்கரிய பகைப்புலமாகிய இலங்கை நகரிற்புக்கு தேடிப் பிராட்டியைக் கணட தன மேலும் செயற்கருஞ்செயல் பல செய்து வென்றியோடு மீண்ட தலையாய தூதனான அநுமனுடைய அறிவும் ஆற்றலும் முயற்சியும் ஊக்கமும் எண்ணித் துணியும் திறமும் உரையாடற்றிறமும்; பிறகுண நலங்களும் ஆகிய பெருமையினை உணர்த்தி நின்றது எனினும அமையும்||  என்று இதற்கு சுந்தர காண்டத்திற்குப் பெயர்க்காரணம் சுட்டப் படுகிறது.

    மேற்காட்டிய கருத்துகள் வழியாக சுந்தர காண்டம் அழகியல் சார்ந்தமைவது என்பது தெற்றெனத் தெரிகின்றது. கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தை மட்டும் இக்கட்டுரை அழகியல் நோக்கில் அணுகுகின்றது.

    இராமனின் அழகு, சீதையின் அழகு ஆகியன அனுமனால் எடுத்துரைக்கப்படுவதாகக் கம்பர் படைத்துள்ளார். இராமனின் அழகையும், சீதையின் அழகையும் இருபது, இருபது பாடல்களில் வடித்துள்ளார் கம்பர். ஆனால் இவ்விரு அழகுகள் சொல்லப்படும் முறை வேறு வேறு அழகுகளை உடையதாக உள்ளன.

    அனுமன் காட்டும் இராமனின் அழகு

    hanuman-rama
    அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்தபின் அவனிடம்

    ~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.

    இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.

    இராம அழகு
    ~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
    முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
    என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும் கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான். இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.

    திருவடிகள்
    சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும். பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.

    திருவடி விரல்கள்
    இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும், பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;. சூரியனின் இளங்கதிர்; போன்று இராமபிரானின் கால்விரல்கள் ஒளிபெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.

    திருவடி விரல்களின் நகங்களின் அழகு
    திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச்சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை. விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.

    திருவடிகளின் செய்கை
    நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின, காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது. இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞானநூல்கள் உரைக்கின்றன. அவன் நிலஉலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும். ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?

    இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர். இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்; இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.

    கணைக்கால்
    கணைக்கால் அம்பறாத்தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக்கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.

    தொடைகள்
    இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும். அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.

    திருவுந்தி
    வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது. மகிழம்ப+வை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.

    திருமார்பு
    மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது. அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம். இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.

    கைத்தலங்கள்
    இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.

    கைத்தல நகங்கள்
    இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன. அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள் ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.

    திருப்புயங்கள்
    புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது. ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல. திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது. இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.

    திருமிடறு
    இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது. திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.

    திருமுகம்
    இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது. எனவே அது பொருந்தாது. அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.

    திருவாய்
    தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும். பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது. இனிய சொற்களைப் பேசாது.

    பற்கள்
    இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம் என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா? அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.

    திருமூக்கு
    இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.

    திருப்புருவங்கள்
    இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன. இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது. அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள். இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.

    திருநெற்றி
    எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல், இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில் பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.

    திருக்குழல்
    நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து, நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது. இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.

    நடை
    அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும் தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான். இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.

    இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான். மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன் அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.

    மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும். பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர். ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார். இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.  ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராமபக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

    இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.    சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபதுபாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை. ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.

    சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன். அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான். அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.

    குடும்பப் பெருமை
    சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,  மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.

    பொறுமை
    பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
    தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
    நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
    எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)
    என்ற இப்பாடலில் சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது. இப்பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடிதோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.

    குலப்பெருமை
    சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள். இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது. வானவர் குலத்தையும் வாழ வைத்தாள். இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.

    இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
    வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.

    கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
    சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.

    சீதையின் இருப்பிடம்
    இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம்பெற்று தவம்செய்த தவமாம் தையல் என்ற சொல்சேர்க்கை அழகுமிக்கது.

    இராவணன் பெற்ற சாபம்
    சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.

    சீதையை தீண்டாத இராவணன்
    இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.

    தேவர் வியக்கும் கற்பு
    சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.

    சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
    இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.

    அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
    பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.

    இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.

    இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.

    அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.

    இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.

    அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.

    உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.

    இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.

    இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.

    கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.

    ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.

    பயன் கொண்ட நூல்கள்
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கம்பராமாயணம்,சுந்தர காண்டம், (இருபகுதிகள்), இரண்டாம் பதிப்பு 2010
    நடராஜன். தி.சு., திறனாய்வுக் கலை, என்சிபிஎச், ஏழாம் பதிப்பு 2010
    பழனியப்பன், பழ., சுந்தரகாண்டம் புதிய பார்வை, வானதிபதிப்பகம், 2008
    கம்பமலர், அகில இலங்கைக் கம்பன் கழகம், 15 ஆம் ஆண்டுமலர், 1995
    ஜெயராசா.சபா.கலாநிதி,, அழகியல், அம்மா வெளியீடு, இணுவில், மருதனா மடம், இலங்கை, 1989

    படத்திற்கு நன்றி: http://www.starsai.com/lord-hanuman-garudalwar-murugan-temple/

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமண சமயமும், சமண சமய பொது அறங்களும்

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத்துறைத்தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற பகுப்புமுறையில்  அமைந்துள்ள சமண சமயம் சார்ந்த காப்பியங்கள் சமணசமய ஆளுமையைத் தமிழிலக்கியப் பரப்பில் வெளிப்படுத்துவனவாகும். சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம் என்பது அதனுள் இடம்பெறும் சமண சமயச் செய்திகள், சமண சமயப் பாத்திரங்கள் ஆகியவற்றால் உணரத்தக்கதாக உள்ளது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்துசெல்லும் பெருவழிப் பயணத்திற்கு துணைநின்ற கவுந்தியடிகள் பாத்திரம் சமண சமயததைச் சார்ந்த துறவிப்பாத்திரம் ஆகும். இவர்களின் பயணத்தின்போது சந்திக்கின்ற அறவாணர் சமண சமயம் சார்ந்தவர். அவரின் நல்மொழிகளுடன் தங்கள் பயணத்தை அவர்கள் தொடருகின்றார்கள். இவைபோன்ற பற்பல செய்திகள் சமணசமயத்தின் ஆளுமைப்பரவல் சிலப்பதிகார காலத்தில் இருந்தமையைத் தெரிவிக்கின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை உணர்த்தும்  பல அகச்சான்றுகளும் இக்காப்பியத்துள் உண்டு. சமண சமயத்தின் சிறப்புக் கூறுகளும், பொதுமைக் கூறுகளும் சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் உணர்த்தும் சமண சமயம் சார்ந்த செய்திகளையும் அச்சமயம் உணர்த்தும் பொது அறங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

    புகார் நகரமும் சமண சமயமும்

    காவிரிப்பூம்பட்டிணம் என்றழைக்கப்பெறும் பூம்புகார் நகரத்தில் பல் தெய்வக் கோயில்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றோடு சமண சமய வழிபாட்டு இடங்களும் அமைந்திருந்தன.

    அவலம் நீத்தறிந் தடங்கிய கொள்கை
    மெய்வகை உணர்நத விழுமியோர் குழீஇய
    ஐவகை நின்ற அருகத்தானத்துச்
    சந்திஐந்தும் தம்முடன் கூடி
    வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
    பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
    நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்  
    சாரணர் வரூஉம் தகுதியுண்டாமென
    உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
    இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு (நாடுகாண் காதை 16-25)

    என்ற பாடலடிகள் புகார் நகரத்தில் இருந்த சமண இருக்கைகளைப் பற்றி விவரிக்கின்றன. புகாரில் மூவகையான சமண இருப்பிடங்கள் இருந்துள்ளன. அருகத்தானம், பெருமன்றம், சிலாவட்டம் என்பன அவையாகும்.

    அருகத்தானம்

    புகார் நகரில் அருகத்தானம் என்ற இடம் சமண சமய வழிபாட்டிடமாக இருந்துள்ளது. இங்கு புலால் உண்ணாமலும், பொய்கூறாமை என்ற விரதத்தை மேற்கொண்டும், இவற்றோடு துன்பம் நீக்குவதற்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும், அடங்கிய கொள்கை உடையவர்கள் இருக்கும் இடம் அருகத்தானம் ஆகும். இது ஸ்ரீகோயில் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றது.

    பெருமன்றம்

    இத்தானத்தை அடுத்துப் பெருமன்றம் என்ற பகுதி அமைந்திருந்தது. ஐவகைப் பட்ட சந்திகள் ஒன்று கூடும் மன்றமாக அது விளங்கியது. ஐந்து சந்திகள் என்பது பஞ்ர பரமேட்டிகள் என்றழைக்கப் பெறும் ஐவகைச் சான்றோர்களைக் குறிக்கும்.  அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என்ற அவ்வைவரும் இம்மன்றத்தில் ஒன்று  கூடியிருந்தனர். சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் அவர்கள் அம்மன்றத்தில் உறைந்தனர்.

    சிலாவட்டம்

    இவ்வருகத்தானத்தில் பல்வகை விழாக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெற்றுள்ளன. பொன்போன்ற பூக்களைத் தரும் அசோகமரத்தின் நிழலில் இருந்த அருகப் பெருமானின் உருவத்திற்கு அவ்வருகப்பெருமானின் அபிடேகத்திருநாளில் ஒரு பெருவிழா நடந்துள்ளது. அவருக்குத் தேர்த்திருவிழா ஒன்றும் நடைபெற்றுள்ளது. இவ்விழாக்காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சாரணர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு, அறக்கருத்துகளை உணர்த்துவதற்கு அமைக்கப் பெற்ற  மேடை போன்ற இடம் சிலாவட்டம் ஆகும். பத்துப்பாட்டில் சிலாவட்டம் என்றால் சந்தனம் அரைக்கும்இடம் என்று பொருள். சந்தனம் அரைக்கும் இடத்தில் இருந்த மணமும், குளிர்ச்சியும் நிரம்பிய இடமாக இவ்விடம் இருந்திருந்த காரணத்தால் இதனையும் சிலாவட்டம் என அழைத்துள்ளனர்.

    கோயில், மன்றம், மேடை போன்ற பல்வேறு அமைப்புகளைப் புகார் நகர அருகன் கோயில் கொண்டிருந்தது என்பதை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.

    கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தினர்

    கோவலனும் கண்ணகியும் சமண சமயம் சார்ந்தவர்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

    கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் முதன் முறையாகக் காணுகின்றார். அவர்கள் திசையறியாது மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்ட சூழலில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

    ‘‘உருவும் குலனும் உயர்பேர்ஒழுக்கமும்

                                     பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்

                                    உடையீர் என்னோ உறுகணாளரின்

                                    கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறென’ ( நாடுகாண்காதை, 46-49)

    என்ற இப்பாடலடிகளில் பயின்று வந்துள்ள “பெருமகன் திருமொழி பிறழா நோன்பு” என்ற குறிப்பு சமண மதத்தில் இருந்துப் பிரியாத  கொள்கை உடையர்கள் கோவலனும் கண்ணகியும் என்பதை உணர்த்தி நிற்கின்து. கவுந்தியடிகள் கேட்ட இக்கேள்விக்கு ‘‘உரையாட்டில்லை உறுதவத்தீர்’என்று பதில் சொல்லாதுத் தவிர்க்கிறான் கோவலன்.

    கவுந்தியடிகள்

    கவுந்தியடிகள் மதுரை வருவதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகின்றார்.

    ‘‘அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத்

                                    தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு

                                    ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்

                                    போதுவல்யானும் போதுமின் ‘ (நாடுகாண் காதை, 57-60)

    மதுரைக்குச் சென்று அங்குள்ள அருகதேவனை வணங்குவதைத் தன் விருப்பமாகக் கொண்டவர் கவுந்தியடிகள் ஆவார். இதன் காரணமாக மதுரைவரை சமண சமயத்தின் ஆளுமைப் பரவல் இருந்துள்ளது என்பதைச் சிலப்பதிகாரத்தின் வழி அறியமுடிகின்றது.

    திருவரங்கத்தில் சமணம்

    புகாரிலிருந்து நடந்து வந்த இம்மூவரும் அரங்கம் என்ற திருவரங்கத்திற்கு வந்து சேருகின்றனர். அங்கு ஒரு சாரணரைச் சந்திக்கின்றனர். திருவரங்கத்திலும் அந்தக் காலத்தில் சமண சமயம் பரவியிருந்ததை இதன்வழி அறியமுடிகின்றது. இச்சாரணர் ஆங்காங்குத் தோன்றி அறக்கருத்துகளை எடுத்துரைப்பவர் ஆவார். முன்னர் பட்டினப்பாக்கம் என்ற புகாரின் நகரப்பகுதியில் சமயவுரையாற்றிய இவர் தற்போது அரங்கத்தி;ல் இம்மூவரும் கேட்க அறவுரை பகர்கின்றார்.

    அருகப் பெருமானின் இயல்புகள்

    சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான அருகப்பெருமானின் சிறப்பியல்புகளைச் சாரணர் இவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

    ‘‘அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்

                     செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்

                    தரும முதல்வன் தலைவன் தருமன்

                    பொருளன் புனிதன் புராணன் புலவன்

                    சினவரன் தேவன் சிவகதிநாயகன்

                    பரமன் குணவதன் பரத்திலொளியோன்

                    தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்

                    சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி

                    இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்

                    குறைவில் புகழோன் குணப் பெருங்கோமான்

                    சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்            

                    அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி

                    பண்ணவன் எண்குணன் பரத்தில் பழம்பொருள்

                    விண்ணவன் வேத முதல்வன் விளங்குஒளி

                    ஓதிய வேதத் தொளியுறின் அல்லது

                    போதார் பிறவிப் பொதியறையோரென’ (நாடுகாண்காதை 176- 191)

    இப்பெருகிய அடிகள் அருகப் பெருமானை வாழ்த்துவனவாகும். அருகப் பெருமானின் வழியல்லது மற்றைவழி செல்லுவோர் பிறவிச் சிறையிலிருந்து விடைபெறமாட்டார்கள் என்று துணிகின்றது இப்பகுதி.

    சமண சமயக் கருத்துகளை, சமண சமயச் சான்றோர்களை நினைவு கூர்ந்த இந்தப் பகுதியைக் கேட்டு ஆனந்தமும், நெகிழ்வும் அடைகிறார் கவுந்தியடிகள். இப்பகுதி சமண சமயக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற பகுதியாக இளங்கோவடிகளுக்கு அமைந்துவிட்டது.

    வினையின் காரணமாக காப்பியத்தில் இனி சோகம் ததும்பிய காட்சிகள் வரப்போகின்றன என்பதை எடுத்துக்காட்டவும்,  அத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைப் பாத்திரங்களும் படிப்போரும் உணரவேண்டும் என்பதற்காக இவ்விடத்தில் சாரணர்காட்சியையும், அவரின்அறவுரையையும் அமைத்துள்ளார் இளங்கோவடிகள்.

    வினைக் கோட்பாடு

    சமண சமயத்தின் உயிர்க்கொள்கை என்பது வினைக்கோட்பாடு ஆகும். இவ்வினைக்கோட்பாடே சிலப்பதிகாரத்தின் படைப்புக் கொள்கைகளுள் ஒன்றான ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதலாக வெளிப்பட்டுள்ளது. சிலப்பத்திகாரத்தில் சாரணர் அறிவிக்கும் முதல் சமணசமயக் கொள்கை வினைக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகின்றது.

    ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை

                    இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி

                    ஒட்டுங்காலை ஒழிக்கவம் ஒண்ணா

                    கடுங்கால் நெடுவெளி இடுசுடர் என்ன

                    ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் ( நாடுகாண் காதை 171-175)

    தீவினை என்பது ஒழிக என்று வேண்டினாலும் ஒழியாது வல்வினையை வந்து ஊட்டிவிடும் தன்மையது. விதை இட்டால் அது மரமாவதுபோல முன்செய்வினையானது அதற்கான பலனைத் தந்தே நிற்கும். வெட்ட வெளியில் ஏற்றி வைத்த விளக்கு கடுங்காற்று அடிக்கும்போது அணைந்துபோவதுபோல வினை வந்துத் தாக்கும்போது உயிர் உடம்புடன் நில்லாது நீங்கிவிடும். இக்கருத்துகளைச் சாரணர் கோவலன் உள்ளிட்ட மூவரையும் கண்டவுடன் சொன்னதற்குக் காரணம் கோவலன் வினைவலிமை காரணமாக இறக்கப் போகிறான், அவனையிழந்து இவர்கள் தவிக்கப் போகிறார்கள் என்பதுதான். இந்த முன்னுணர்தல் இளங்கோவடிகளின் படைப்பாற்றலில் காணப்படும் சிறப்புக்கூறு ஆகும்.

    கோவலனின் இறப்பிற்குக் காரணம் அவன் செய்த முன்வினையேயாகும். கலிங்க நாட்டில் அரசனுக்கு உறுதுணை செய்யும் பரதன் என்பவனாகக் கோவலன் முற்பிறவியில் பிறந்திருந்தான். அவன் சங்கமன் என்னும் வணிகனை வஞ்சகத்தால் அரசனிடம் காட்டிக் கொடுத்துக் கொலைப்பட வைத்தான். அவனின் மனைவி நீலி இவ்வஞ்சனை செய்தவர்கள் ‘எம்முறு துயரம் செய்தோர் இயாவதும் தம்முறு துயரமிற்றாகுக வென்றே’  என்று உரைத்ததன் வாயிலாக இப்பிறவியில் கோவலன் வணிகனாகப் பிறந்து முன்வினைப்பயனை நுகர்ந்தான்  என்ற தொடர்வும் வினைப்பயன் என்ற சமண உயிர்க்கொள்கையின் விரிவாகும்.

    காமநீக்கம்

    சமணத்தின் மற்றொரு தலையாய கொள்கை காமநீக்கம் ஆகும். இல்லறத்தாரும் நிறைவில் துறவறம் சார்ந்து இறைநிலை பெறுவது முக்தி என்பது இச்சமயக் கருத்தாகும்.  இதனைக் கவுந்தியடிகள் கோவலனுக்கு விளக்குகின்றார்.

       ‘‘வல்வினை ஊட்டுமென்று

                    அறத்துறை மாக்கள் திறத்;திற் சாற்றி

                    நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும்

                    யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்

                    தீதுடை வௌ;வினை உறுத்தகாலைப்

                    பேதமை கந்தாப் பெரும்பேது உறுவர்

                    ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை

                    கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்

                    பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்

                    உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்

                    புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கு அல்லது

                    ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை

                    பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகில்

                    கொண்டோர் உறூஉம் கொள்ளத்துன்பம்

                    கண்டனராகிக் கடவுளர் வரைந்த

                    காமம் சார்பாகக் காதலின் உழந்தாங்கு

                    ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்

                    இன்றே அல்லால் இறந்தோர் பலரால் ‘ (ஊர்காண் காதை,27- 44)

    என்ற இந்தப் பகுதி காம நீக்கம் என்ற கொள்கையை வலியுறுத்துவதாக உள்ளது. தீய செயல்களைச் செய்வதில் இருந்து விலகுங்கள். அவ்வாறு தீச்செயல்களில் இருந்து விலகாமல் இருந்தால் அது அடுத்தடுத்த பிறவிகளில் துன்பத்தை அனுபவிக்கத் தரும் என்று நாவாகிய குறுந்தடியால் வாயாகிய பறையை அறைவதுபோல பலமுறை அறவோர் கூறினாலும் அறிவு அற்றவர்கள் அதனை ஏற்கமாட்டனர். தீவினை தொடரும்போது பெரிதும் வருந்துவர். அறிந்தவர்கள் இவ்வாறு வருந்தமாட்டார்கள். மகளிரைப் பிரிவதால், புணர்வதால் ஏற்படும் துன்பம் இல்லறத்தார்க்கு எப்போதும் உண்டு. தனித்த வாழ்க்கையை மேற்கொண்ட துறவிகளுக்கு அத்துன்பம் இல்லை. பெண்ணும் உணவும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வோர் பெருத்த துன்பமடைவர். காமம் சார்பாக காதலில் விழுந்தோர் கரைகாண இயலாது துன்பத்தை அடைகின்றனர்  என்று மேற்காட்டிய பாடலின் பொருள் அமைகின்றது. இப்பகுதி காம நீக்கம் என்ற சமணக் கொள்கையின் வெளிப்பாடாகும்.

    இவ்வாறு சமண மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஆங்காங்கே வலியுறுத்தி வந்த இளங்கோவடிகள் பொது அறங்களைக் காப்பிய நிறைவில் உணர்த்துகின்றார். சமண சமயம் சார்ந்தவர்களுக்கும், சாராதவர்களுக்கும் பொதுவான அறங்கள் இவ்வகையில் இளங்கோவடிகளால்  எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

    பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

                    தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

                    பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்

                    ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

                    தானம் செய்ம்மின் தவம் பல தாங்குமின்

                    செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பிகழ்மின்

                    பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

                    அறவோர்அவைக்களம் அகலாது அணுகுமின்

                    பிறவோர்அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

                    பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

                    அறமனை காமின் அல்லவை கடிமின்

                    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

                    வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்

                    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

                    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

                    செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

                    மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தரு காதை 186- 202)

    என்ற இவை சமண மதச் சார்புடைய ஆனால் பொதுவான அறங்களை எடுத்துரைக்கும் இளங்கோவடிகளின் கவிதையாகும். இதனுள் சொல்லப்பெற்றுள்ள அத்தனை அறங்களும் எளிய மக்களும் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள் ஆகும். இவற்றைக் காப்பிய நிறைவில் அளிப்பதன் வாயிலாக சமணமதத்தைச் சார்ந்த காப்பியமாக சிலப்பதிகாரம் விளங்கினாலும் சமயப் பொதுமை, சமுதாயப் பொதுமையை வேண்டிப் படைக்கப் பெற்றுள்ளது என்பது உறுதி.

    Share
  • கருத்தரங்க அழைப்பிதழ்!

     

    மு.பழனியப்பன்

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அக்கருத்தரங்கின் நிகழ்வுகள் அழைப்பிதழாகப் பின்வருகிறது. அனைவரும் வருக.

    Share
  • அருட்கவி கு.செ. இராமசாமியின் கனல் மணக்கும் பூக்கள்-கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்

     

     

    முனைவர் மு.பழனியப்பன்

     

    கனல் மணக்கும் பூக்கள்,

    அருட்கவி கு.செ. இராமசாமி,

    23ஃ15 சிவன்கோயில் தெற்குத் தெரு,

    சிவகங்கை,630561,

    விலை ரூ. 120, 2012

        கவிதை பூமி சிவகங்கை. எண்ணற்ற கவிதையாளர்களின் இருப்பிடம், பிறப்பிடம், துவங்கிடம் சிவகங்கை. இங்கு அருட்கவி கு.செ. இராமசாமி என்ற பழுத்த தமிழ்ச் சான்றோர்- இசை, சோதிடம், ஆன்மீகம் என்ற பல துறைகளைச் சார்ந்தவர், தனது எண்பதாம் வயதிலும் சிவகங்கையைக் கவிதை பூமியாக்கிக் கொண்டுவருகிறார். எண்ணற்ற கவியரங்குகள், கண்ணதாசனின் நெருக்கம், பாவேந்தரின் பழக்கம், காரைக்குடி அழகப்பா கல்லூரியின் செல்லப்பிள்ளை, வ.சுப. மாணிக்கம் என்ற அறிஞரின் வளர்ப்பு, மன்னார்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை அரசு கல்லூரிகளின் தமிழ்த்துறைத்தலைவர் என்று எண்ணற்ற புகழுக்குச் சொந்தமானவர் இவர். இவரின் இசை செறிந்த பக்திப்பாடல்கள் பழனி பாதயாத்திரை, பாகம்பிரியாள் பாதயத்திரை ஆகியனவற்றை அருள் மெருகேற்றிக் கொண்டுவருகின்றன. பக்தர்களைக் களியாட்டம் போட வைக்கின்றன.

        சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் பழுத்த பழமாக வீற்றிருந்த அவரை அவர் சொற்றொடரில் சொல்வதானால் “தவத்திற்கு ஒருவர், தமிழுக்கு இருவர்” என்ற நிலையில் பல நாள்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  நாங்கள் இருவராக அவரின் அரசுப்பணி நெளிவு சுளிவுகளை, ஐhதகர்களின் மனதை, தமிழ்க்கவிதையின் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் உள்ள அவரின் இல்லம் களமானது. மாடி வைத்த பழங்கால வீடு. மீராவின் வீட்டருகில் என்று சொன்னால் பலருக்குப் புரியும். மாடிக்குத் தற்போது அவசியமே இல்லை. அவருக்கு ஏறமுடியாத உயரத்தில் மாடி இருக்கிறது. நடக்கமுடியாத தூரத்தில் சிவன் கோயில் இருக்கிறது. நினைவில் நிற்கும் செய்திகளுடன் சிறிதளவு உணவுடன், பெருமளவு மருந்துடன், நிறைந்த அருள்உள்ளத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் காத்துக்கிடக்கும் அவரின் தற்போதைய கவிதைத் தொகுப்பு கனல் மணக்கும் ப+க்கள்.

        கடந்தகால, நிகழ்கால, எதிர்காலச் சிந்தனைகளை, மரபு சார்ந்த கவிதைகளாக, புதுக்கவிதைகளாக, கதைக்கவிதைகளாக தந்துள்ள அவரின் படைப்புள்ளம் இளமையாகச் சுடர்விடுகிறது.

        பூக்களை அவர் அனுபவிக்கும் விதம் சுவையானது. நெடியது. பூவின் தொடர்பைத் தமிழின் தொடக்ககாலம் முதல் விரிவான கவிதையாக வடித்துள்ளார். கனல் மணக்கும் பூக்கள் என்ற அக்கவிதையின் தலைப்பே இத்தொகுப்பின் தலைப்பாக உள்ளது. நெடிய கவிதை. உயிர்ப்புள்ள கவிதை. சுவைக்கின்ற கவிதை என்ற அளவில் அக்கவிதையின் ஆளுமை அவரை நம்முன்னால் கவிதை நாற்கலியில் உயரவைக்கின்றது.

        நீர்ப்பூ, நிலப்பூ
        கோட்டுப்பபூ, கொடிப்பூ
        பூக்களில் நான்கு வகை
        அகத்திணை ஐந்துக்கும்
        ஐவேறு மலர்கள்
        புறத்திணை
        ஏழென்றால் ஏழுக்கும் ப+ ஏழு
        அவற்றால் புரிபடும்
        அக்காலப் போர்க்கூறு
        எட்டாவதாய் வரும் திணை வாகை
        வெற்றி
        கிட்டியவனுக்கு அது தலைப்பாகை
        முல்லைப்பூ கற்புக்கு
        வாகைப்பூ வெற்றிக்கு

    சங்கப் பூக்களின் மணம் கூறும் நல்ல கவிதை இது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைக்  கூறியுள்ளார் என்று தமிழாசிரியர் சொன்னதும் கபிலர் ஏன் “செஞ்சுரி அடிக்கவில்லை” என்கிறார் மாணவர். கு.செ. இராமசாமி இதோ மாணவர்கள் மொழியில் செஞ்சுரி அடிக்கிறார்.

        குறிஞ்சிப்பாட்டு அகவல்
        அதில்
        தொண்ணூற்றொன்பது மலர்கள்
        நூறாகத் தேவை ஒருமலர்
        அந்த ஒன்று
         தலைவி என்னும் திருமலர்

    குறிஞ்சிப்பாட்டின் தலைவியே ஒரு பூ என்றால் அவள் தனக்குச் சூட்டிக்கொண்ட 99 மலர்களும்  பூவிற்குப் ப+ச்சூட்டியது போலல்லவா இருக்கும். அழகான வளமான கற்பனைக்கு இடம் வைக்கிறார் கவிஞர். இந்தக் கவிதை சீதை, கண்ணகி இருவரையும் கனல் மணம் பரப்பும் திருமலர்களாகக் கொண்டுவந்துக் காட்டுகின்றது. இன்னும் இந்தக் கவிதைக்குள் மற்றொரு நுட்பம் இருக்கின்றது.

        பதுமை என்பதால் பாவை
        தினம்
        புதுமை என்பதால் பூவை

    என்று இல்லறத் தலைவியைத் தினம் மலரும் புதுமைப் பூவாகக் காண்கிறார் கவிஞர். தினம் தினம் பற்பல பூக்களைத் தேடும் ஆண்வண்டுகளுக்கு தினம், தினம் புதுமைப் பாவை தலைவி என்னும் பூவை என்பதை இந்தக் கவி வரிகள் எடுத்துரைக்கின்றன.

        மேல்நாட்டுக் காதலுக்கும் தியாகம், ரசனை உண்டு என்பதை இத்தொகுதியின் மற்றொரு கவிதை எடுத்துக்காட்டுகின்றது. டெல்லா, ஜிம் என்ற இளந்தம்பதிகள் வறுமையின் பிடியில் சிக்குண்டு அன்பை மட்டுமே அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அந்நேரத்தில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக இருவரும் இருவருக்காக ஏதாவது பரிசுப் பொருள்களை வாங்கத் தனிதனியாக முடிவெடுக்கின்றனர். இவள் தன் நீளமான கூந்தலை விற்று அவனுக்காக கடிகாரச் சங்கிலி வாங்குகிறாள். அவனோ கடிகாரத்தை விற்று அவளுக்குச் சீப்புகள் வாங்குகிறான். இருவரும் கிறிஸ்துமஸ் நாளில் தங்களின் பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் அளிக்கின்றனர். அவன் தந்த சீப்புகளால் இவள் சீவிக்கொள்ள தலையில் நீண்ட முடியில்லை.  இவள் தந்த கடிகாரச் சங்கிலியைத் தன் கையில் கட்ட அவனிடம் கடிகாரமே இல்லை. இந்தச்சூழலில் கவிஞரின் கவிதையடிகள் பிறக்கின்றன.

        கடிகாரம் இல்லை, அதைக் கட்டும் சங்கிலி உண்டு
        கூந்தல் தலையில் இல்லை. அதைக் கோதும் சீப்புகள் உண்டு
        ஒன்றை இழந்தால் ஒன்று, தியாகம் உயர்த்திப் பிடிக்கும் நின்று

     இதுவே காசற்ற காதலின் மேன்மை. அன்புடைய காதலின் அருமை. காட்சிகளின் வழியாக கதையை நடத்திச் செல்லும் கிடைக்காத கவிதைப்பணி கு.செ. இராமசாமியின் கவிதைப்பணி.

        காதலிக்காகக் கண்களை இழக்கிறான் ஒரு காதலன். காதலி கண்ணொளி இல்லாதவள். அவளைக் காதலிக்கிறான் அவன். அவள் “எப்படியாவது கண்ணொளி பெற்றுத் தாருங்கள், உங்களை மணக்கிறேன்” என்கிறாள் அவள். அவனும் படாதபாடு பட்டான். ஆனால் அவளுக்குக் கண்ணொளி கிடைத்த பாடில்லை. நிறைவில் ஒருநாள் அவளுக்கு கண் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அவள் கண்ணொளி பெற்றாள்.

        “அன்பே, உனக்குப் பார்வை அளிக்க
         என்னிரு கண்களை நான்தான் ஈந்தேன்.”
        “மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி
         கண்தந்த உமக்குக் கைகுவிக்கின்றேன்.
         திருடனை மணந்து தெருவில் நின்றாலும்
         குருடனை மணக்க நான் குருடியா இன்னும்?”

    மேற்கண்ட உரையாடல்தான் முன்னாள் குருடியான காதலிக்கும், இந்நாள் குருடனான காதலனுக்கும் இடையே நடைபெற்றது. முன்னர் காட்டப் பெற்ற கவிதையில் இருந்த காதலின் தியாகம், பின்னர் உள்ள இக்கவிதையில் இருக்கும் சுயநலத்தின் முகத்திரையைக் கிழிப்பதாக உள்ளது. ஆயிரம் மனித உள்ள வேறுபாடுகள் நிறைந்தது இந்த உலகம் என்பதை இந்த முரண்பாடுகளுடைய கவிதைகள் உணர்த்திநிற்கின்றன.

        காதலும் ஆன்மீகமும் இலக்கியமும் கைகோர்த்து அணிவகுத்து நிற்கும் நல்ல கவிதைத் தொகுதி இது. ஐயப்பன், கிருஷ்ணர், இராமகிருஷ்ணர், குருநானக், ஒஷோ போன்ற பலரின் கருத்துகள் இக்கவிதைத் தொகுதியில் எடுத்தாளப் பெற்றுள்ளன. கவிஞரின் ஆன்மீக ஆற்றல் கொண்டு ஆன்மீகத்தின் தூய வாசலைப் பின்வரும் கவிதை திறக்கின்றது.

        சாமி கனம் ஆசாமிகளின் கனம்
        அழுத்தி நெரிக்க அலங்கார வண்டியை
        இழுத்து வருமே இரண்டு காளைகள்
       
        வழியெல்லாம் அடடா, வாணவேடிக்கை
        கூட்டம் கூட்டமாய்க் கும்பிடுவோர்கள்
        எல்லாம் தமக்கென எண்ணி மாடுகள்
        செம்மாந்து நடக்கும், திமிரோடு பார்க்கும்

    என்று சாமியைத் தூக்கிவரும் மாடுகளின் பார்வையை அளக்கும் இக்கவிதை விடிந்தவுடன் அம்மாடுகள் வில்வண்டியில் ப+ட்டப்பட்டு நேற்றை அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கும் சூழலையும் எடுத்துரைக்கின்றது,

        ~~வேகமாய் அதட்டி வீதியில் ஓட்டுவார்
        வீதியில் வானவேடிக்கைகளும்,
        கூடித் திரண்டு கும்பிடுவோரும்
        காணாமல் சற்றே கலங்கி அதன்பின்
        “வேதகோஷம் நாதம் சங்கீதம்
        ஏதும் நமக்காக இல்லை இல்லை
        தலைக்குமேலே நாம் தாங்கி வந்த
        சிலைக்கே அத்தனை சிறப்பும்”
        என்ற தெளிவு வந்தது.
    காளைகளின் கௌரவத்தை நேற்றும் இன்றும் கொண்டு அளக்கிறது இக்கவிதை.

        இதுபோன்று ராஜாக்களின் இயல்பினையும் இக்கவிஞர் அளந்து காண்கிறார். ஒரு ராஜா பாதையெல்லாம் முள், கல் இருப்பதைக் கண்டு வீதிகள் எல்லாவற்றையும் தோல் கொண்டு மூடிட உத்தரவு இட்டானாம். அவ்வரசனின் அவையில் இருந்த விகடகவி “ வீதிக்குத் தோல் போடுவதை விட்டுவிடு, பாதத்தைத் தோல் மீது வைக்கத் தைத்துக்கொடு” என்று அறிவுறுத்தினானாம். இதன் காரணமாய்க் கவிஞர் மனித குல வரலாற்றில் செருப்பினை உயர்ந்த கண்டுபிடிப்பாகக் கருதுகிறார்.

        “நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் முயற்சி
        செருப்பைக் கண்டுபிடித்த -இது
        படிவளர்ச்சி”

    என்று நெருப்பையும் செருப்பையும் பாடுகிறார் கவிஞர்.

        உடல்வலு குறைவதாலும், நாள்களின் எண்ணிக்கை தேய்வதாலும் வாழ்நாள் நிறைவைக் கவிஞரின் உள்ளம் எண்ணிப் பார்க்கின்றது.

        வீணை மீட்டுவதில் நேரம் கழிகின்றது
        வாசிக்க முடியவில்லை
        சருகு சேர்ப்பதில் பொழுது கழிகின்றது
        தீக்காய முடியவில்லை
        ஆக்குவதி;ல் நாள் கழிந்தது
        அருந்த முடியவில்லை
        சேர்ப்பதில் காலம் கழிந்தது
        செலவழிக்க முடியவில்லை
        சீவிச் சிங்காரித்துப் புறப்பட்டேன்
        தேர் நிலை குத்திவிட்டது

    என்ற இந்தக் கவிதை தாகூரின் கீதாஞ்சலியை நினைவுபடுத்துகின்றது. இவரின் நிறைவுக்கால வாழ்வின் சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றது.

        எதையும் சிரிப்பாய்ச் சொல்வது இவரின் இயல்பு. சாகக் கிடக்கும் ஒருவரை இவர் பார்த்துவர ஒருமுறை இவர்  சென்றார். அவரோ ‘நான் சாகப்போகிறேனே’ என்று இவரிடம் கூறியதும்  இவர் அவரைப் பார்த்துச் சொன்னாராம் ‘உனக்குச் சாவே வராது. நீ சிரஞ்சீவி’ என்றாராம். அதற்கு அவர் ‘பிறந்தவரெல்லாம் இறப்பதுதான நியதி’ என்றதும்

        ~~வாழ்ந்தவர் தானே சாவார், நீயோ
        வாழ்ந்ததே இல்லையே? வாழ்ந்தால்தானே
        சாவதற்கு”

     என்றாராம். நகைச்சுவையான வாழ்க்கை இது. பிறருக்கு நடந்தால் நகைச்சுவை. நமக்கு நடந்தால் இழிவு.

        வாழ்வதற்கான, வாழ்ந்தற்கான அறிகுறிகள் என்று பின்வருவனவற்றைக் கவிஞர் பட்டியலிடுகிறார்.

        நல்ல உணவை உண்டதில்லை.
        நல்ல ஆடை உடுத்ததில்லை
        மனையாளுக்கு மல்லிகைப்ப+வோ
        சிறுகளுக்குச் சீனிமிட்டாயோ
        வாங்கிக் கொடுக்கும் வழக்கமில்லை
        எது சொன்னாலும் அதை அவன் கேளான்
        எது நடந்தாலும் அதை அவன் பாரான்
        தெருவில் அழகுத் தேர்வந்தாலும்
        தெப்பம் பார்;க்க ஊர் சென்றாலும்
        சினிமா,சர்க்கஸ், திருமணம், கோவில்,
        ஊர்வலம், கோஷம் ஒன்றையும் மதியான்
        சாதி சனத்தார் சண்டி என்பார்
        அலுவலகத்தில் அமுக்குளி என்பார்
        நண்பர்கள் வடையைக் ரசித்துக் கடிக்க
        சூடான தேநீர் சுழற்றிக் குடிக்க
        பார்த்துப் பார்த்தே இவன் பசியாறிவிடுவான்
        வாங்கவும் மாட்டான் வழங்கவும் மாட்டான்.
        … மனிதனா நடக்கும் மரமா என்ற
        புனித வாக்கிற்குப் பொருத்தமானவன்
        மரத்திலும் கோந்து வடிவதுண்டு
        கல்லிலும் பாசி கப்புவதுண்டு
        வறண்ட பாலையாய் வாழ்ந்தவன்

    இத்தனை அடையாளங்களும் வாழாதவனின் அடையாளங்கள். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றில் யாரேனும் இருந்தாலும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் அர்த்தம் இருக்கும். வாழ்வதில் அர்த்தம் இருக்கும். சாவதில் அர்த்தம் இருக்கும்.

        கதைகளையும் நிகழ்வுகளையும் எளிமை கலந்து சொல்லும் எண்பது வயதுக் கவிஞரின் வற்றாத கவியாற்றின் ஒரு சாரல் இது. இன்னும் பற்பல இவரால் படைக்கப் பெற்றிருக்கின்றன. அத்தனையும் படிக்க அவரையும் சந்திக்க வாருங்கள் சிவகங்கைக்கு

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    Share