Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 40

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

    மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

    விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
    அகன்ற பெருந்தோள் கணவருடன்
    ஊடல் பாராட்ட இயலாமல்
    அவருடன் பொருந்தியிருந்து
    வந்திட்ட விருந்தினரை
    வரவேற்று உபசரித்தனர்
    இல்லற மகளிர்.

    வழிபாட்டு ஒழுக்கத்தில்
    மேலோங்கிச் சிறந்த
    அருந்ததி போலும்
    கற்பில் சிறந்த
    இல்லற மகளிரை
    அவர்தம் கணவர் பெருமக்கள்
    மதித்தேதான் போற்றினர்.

    தம் நெஞ்சத்திடம்
    தம் எண்ணம் உரைத்தனர்.

    ஒளியும் அழகும் பொருந்திய
    இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
    நீலமணி ஒத்த இதழ்களையுடைய
    குவளை மலர்கள்
    புறங்கொடுத்துப் போயின.

    மகளிரின் கரிய கண்களின்
    கோபக் கருஞ்சிவப்பு
    விருந்தினர் வரவால்
    நீங்கியே போயிற்று.

    இக்கோபச்சிவப்பு மட்டும்
    நீங்காமல் போயிருந்தால்
    இந்தப் பரந்த நிலவுலகம்
    இவர்தம் ஊடல் நீங்கிட
    வேறு ஒரு மருந்தைத்
    தர வல்லதோ…

    இங்ஙனம் எண்ணி எண்ணிச்
    செயலற்று மயங்கினர்
    கணவன்மாரும்
    விழாவது நடந்திட்ட நாட்களில்..

    கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

    இச்சிறப்புடை இந்திரவிழாவின்
    நள்ளிரவுப் பொழுதொன்றில்
    தன்னுள்ளே இருக்கும்
    மணத்தாது மகரந்தங்கள்
    தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

    மேற்பரப்பில் இருக்கும்
    கட்டு மெல்லவே அவிழ்ந்து
    தேன் சொரியச் சொரிய
    நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
    உள்ளத்தின் நினைவை
    உள்ளே மறைத்துக்
    கண்ணீரைச் சொரிந்தன
    இரு பெண்களின் கண்கள்.

    கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
    கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
    பிரிவுத்துயர் தாளாமல்
    கண்ணீரைச் சொரிந்திட்டது;
    துடிக்கவும் செய்தது.

    கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
    மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
    ஆனந்தம் தாளாமல்
    கண்ணீரைச் சொரிந்திட்டது;
    துடிக்கவும் செய்தது.

    (குறிப்பு:
    பெண்ணின் இடக்கண் துடித்தல் – நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.

    பெண்ணின் வலக்கண் துடித்தல் – தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)

    (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கடல் ஆடு காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 227 – 240
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி:
    http://highqualitypic.blogspot.in/2011/06/raja-ravi-varma-paintings_17.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 39

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

    வீதியில் உலாவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

    அகன்ற அழகிய வானில்
    இராகு கேது பாம்புகளுக்கஞ்சிக்
    கருமுகில் சுமந்து
    முயற்கரை* ஒழித்துத்
    திரியும் நிலவது போல்

    (முயற்கரை – நிலவிலுள்ள கறை)

    கருங்கூந்தல் சுமந்து
    கயல்மீனான இருவிழிகளிடைக்
    குமிழ்மலர் போன்ற மூக்கினையும் கொண்ட
    அழகுப் பரத்தையர்
    புகார் வீதிகளில் உலவுகின்றனரோ
    என்றெண்ணியே
    பரத்தையர் முகம் கண்டு
    காமுற்று மயங்கினர் இளைஞர் சிலர்.

    முன்பொருமுறை
    சிவனால் எரிக்கப்பட்ட
    மகரக் கொடி தாங்கிய மன்மதன்
    தன் உடம்பினை மீண்டும் பெறுதல் பொருட்டு
    ஈரம் நிறைந்த திங்களாகி
    பெரிய நிலத்தே உள்ள
    அமுதக் கலையின்
    சீர்மை பொருந்திய துவலையுடைய
    நீரைப் பருகி வளரும்படி
    வளர்த்த மின்னல் கொடி ஒன்று
    இந்நிலத்தே வந்ததோ…
    என்றெண்ணியே
    பரத்தையர் இடையழகில்
    மயங்கிப் பிதற்றினர்
    இன்னும் சில இளைஞர்.

    பெருநிலம் ஆள்கின்ற மன்னர்க்குத்
    தம் பெருவளம் காட்ட விரும்பிய
    திருமகள் இங்குதான் வந்து புகுந்திருப்பாள்
    என்றே கருதியது தாமரை மலர்.

    அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
    அழகு நங்கையின்
    செந்நிற முகம் ஒத்தது.

    எரிதழல் நிறமுடை இலவ மலர்
    போன்ற அதரங்களையும்
    வெள்ளை நிறமுடை முல்லை அரும்புகள்
    போன்ற பற்களையும்
    கருமை நிறமுடை நீள்குவளை மலர்
    போன்ற கண்களையும்
    குமிழ்மலர்
    போன்ற மூக்கையும்
    தன்னுள் அடக்கிக் கொண்டு
    வேற்று உருவம் தாங்கியே
    திருமகளைச் சேரவென்று
    அவளைத் தேடியே திரிந்த
    கள்ளத் தாமரை
    போன்றவள் இவ்வழகுப் பெண்.

    ஒரே ஒரு தாமரை மலருக்குப்
    பல மலர்களின் குணம் வாய்த்தது போல்
    ஒரே ஒரு பெண்ணிடம்
    பல்வகைப்பட்ட அழகும் அமைந்திருந்தது
    கண்டு மயங்கித் திரிந்தனர்
    இன்னும் சில இளைஞர்.

    பல உயிர்களையும்
    கவர்ந்து செல்லும்
    எமன் அவனும்
    ஆண் இயல்போடு உருவத்தோடு
    தாம் திரிந்தால்
    அச்செயல் மன்னனவன்
    செங்கோல் மறுத்ததாகும்
    பழி நேரும் என்றஞ்சியே

    தன் உருவம் மாற்றிக்கொண்டு
    நாணமுடைய தோற்றமும்
    நகையுடைய முகமும்
    திவவினையுடைய*
    பண்ணிசைக்கும் யாழின் மொழியையும்
    தன்னகத்தே கொண்டு
    பெண்ணுருவம் தாங்கி
    இவ்வீதியில் திரிகின்றான் போலும்
    என்றெண்ணியே
    அப்பரத்தையர் அழகில்
    தம்முயிர் பறிபோவது போல்
    பிதற்றி நின்றனர் இளைஞர் சிலர்.

    (திவவு – யாழின் கோட்டிலுள்ள நரம்புக்கட்டு)

    உருவம் ஏதுமில்லாக் காமனவன்
    ஒப்பற்ற பெருஞ்சேனையெனத்
    திகழ்ந்தது பரத்தையர் கூட்டம்.

    அப்பொதுமகளிருடன் ஊடி
    அவர்களைப் புகழ்ந்து
    முன்போலவே ஊடல் வென்று
    அவர்களை வேறெங்கும் போகவிடாது
    தடுத்து நிறுத்திப் புணர்ந்தனர்.

    அத்தருணத்தில்
    அம்மகளிர் தோள்களில்
    மார்புகளில் எழுதிய
    தொய்யில் எனும் வரிக்கோலம்
    ஆடவரின் மார்பிலும் தோளிலும்
    எழுதப்பட்டது.

    புதிதாய்ப் பதிந்திட்ட
    இம்முத்திரை குறித்து
    மனைவியர் தம்மோடு ஊடுவர்
    என்றஞ்சியே
    விருந்தினர் சிலருடன்
    தம் வீடு சென்றனர் ஆடவர்.

    அடிப்படையாய் அமைந்த சிலம்பின் வரிகள் இங்கே..204 – 210
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram13.html

    அடிப்படையாய் அமைந்த சிலம்பின் வரிகள் இங்கே..211 – 227
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி: http://www.indiaplaza.com/raja-ravi-varma-painting-shakuntala-looks-of-love-paintings-pant29122011sgf16-10.htm

    Share