Tag: கவிஞர் ஜவஹர்லால்

  • அழகு

    கவிஞர் ஜவஹர்லால்

    எதுஅழகு ? எப்படி? இப்படிப் பார்க்கலாமா?
    எதிலழ கில்லை? ஏனழ கங்கில்லை ?

    அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்
    அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?

    காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?
    சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?

    மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்
    எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?

    வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்
    எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.

    பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?
    காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?

    நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?
    ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?

    மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்
    கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்
    திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?

    எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்
    எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.

    கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;
    முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?

    இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?
    நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?

    ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;
    ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;

    வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?
    எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.

    கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும் துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?

    இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்
    நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?

    பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்
    கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.

    காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?
    மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?

    இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?
    மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?

    இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.
    இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?

    சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்
    அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !

    கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்
    நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நங்கநல்லூர்—20-02-2000

    Share
  • எங்கே போகிறோம் ?

    கவிஞர் ஜவஹர்லால்

    we_have_a_long_way_to_go__by_down_hearted

    சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
    சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
    மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
    முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
    பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
    பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
    ஏதுக்குச் சங்கங்கள் ? ஆய்ந்து பார்த்தால்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    மனிதாபி மானத்தைக் காண வில்லை;
    மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
    இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
    இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
    கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
    கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
    இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    பள்ளங்கள் மேடாக வில்லை; இங்கே
    பாவங்கள் குறைவாக வில்லை; நல்ல
    உள்ளங்கள் உயர்வாக வில்லை; நாட்டின்
    ஊனங்கள் சீராக வில்லை; நெஞ்சக்
    கள்ளங்கள் அழிவாக வில்லை; செய்யும்
    கபடங்கள் மறைவாக வில்லை; எங்கும்
    இல்லங்கள் வளமாக வில்லை; நாட்டில்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    நதிநீரைப் பங்குதர மனமே இல்லை;
    நாட்டினிலே ஒருமைப்பாட் டுணர்வே இல்லை;
    விதியைத்தான் நம்புவதைத் தவிர வேறு
    வினைவலியை நம்புகின்ற நெஞ்சே இல்லை;
    கதிமாற்றும் தேர்தலிலே செம்மை யாகக்
    கடமையாற்றி நிலைமாற்றும் துணிவே இல்லை;
    நிதிசேர்க்கும் தவறுகளோ குறைய வில்லை;
    நாமெங்கே போகின்றோம் ? தெரிய வில்லை.

    Share