Tag: கவிஞர் ஜவஹர்லால்

  • யாருமில்லா மேடையில்

    கவிஞர் ஜவஹர்லால்

     

    யாரு மில்லா மேடையி லேநான்

    நாட்டிய மாடுகின்றேன்; — கேட்க

    யாரு மில்லா அவையினி லேநான்

    பாடல் பாடுகின்றேன்.

    மலரின் அசைவை அதுதரும் மணத்தை

    நுகர வாருமென்றேன்; — அந்த

    மலரே வாடி உதிர்ந்திடு வரையில்

    மனிதர் நெருங்கவில்லை.

    தென்னையின் கீற்றுச் சலசலப் பொலியின்

    தேனிசை கேளுமென்றேன்; — அங்கே

    தென்னையின் அடியில் நிற்பவர் கூடச்

    சலசலப் புணரவில்லை.

    சாதிக ளெழுப்பும் சச்சர வொலியின்

    சத்தம் அடக்குமென்றேன்; — அந்தச்

    சாதிகள் இரைச்சல் இன்னிசை யெனவே

    சுவைத்தலை யேகண்டேன்.

    ஊழல் எனவொரு புற்றுநோய் நாட்டை

    உருக்குலைக் குதென்றேன்நான்; — அந்த

    ஊழலில் குளித்தே திளைப்பவர் என்குரல்

    உதறிடல் கண்டுநொந்தேன்.

    யாரு மில்லா மேடையி லாடும்

    நாட்டியம் என்னபயன் ? – கேட்க

    யாரு மில்லா அவையினி லேஎன்

    பாடலால் என்னபயன் ?

    Share
  • மனிதனைத் தேடுகின்றேன் !

    கவிஞர் ஜவஹர்லால் 

     

    முகத்திலே தாம ரைப்பூ

    முறுவலைக் காட்டு கின்றான்;

    அகத்திலோ அறிய வொண்ணா

    ஆயிரங் கோணல்; இந்தச்

    செகத்தையே வெல்லு மாப்போல்

    சிரிப்பலை கொழிக்கும்; என்றும்

    அகத்திலும் மலர்ந்து நிற்கும்

    அவனைநான் தேடு கின்றேன்.

     

    பேச்சிலே இனிமை கொட்டும்;

    பின்னவன் இழைக்கும் நாசி

    மூச்செலாம் வஞ்சம் வெட்டும்;

    முனைப்பெலாம் கொடுமை பேசும்;

    பேச்சினைப் போலத் தூய்மை

    பொங்கிட நெஞ்சந் தன்னை

    ஓச்சிடும்  மனித  னான

    ஒருவனைத் தேடு கின்றேன்.

     

    மற்றவன் உயர்ந்தால் உள்ளம்

    மகிழ்பவன் இருக்கின் றானா ?

    மற்றவன் வழுக்கி னால்கை

    வழங்குவோன் வாழ்கின் றானா ?

    மற்றவன் புகழில் சொந்த

    வயிறெரிந் திடாமல் வாழக்

    கற்றவன் தன்னைக் கண்ணாற்

    காணநான் தேடு கின்றேன்.

     

    நண்பனே என்ற ணைப்பான்;

    நறுக்கென இறுக்கு மந்த

    அன்பெனும் அணைப்புக் குள்ளே

    ஆயிரம் வஞ்சம் நந்தம்

    என்பினை நொறுக்கி மெல்ல

    இதயமும் துளைத்தெ டுக்கும்;

    அன்பினை அன்புக் காக்கும்

    அவனைநான் தேடு கின்றேன்.

     

    சிரிக்கிறான்; விரியு மந்தச்

    சிரிப்பிலே வஞ்சப் பாயை

    விரிக்கிறான்; நல்லோர் தம்மை

    வீழ்த்தியே மகிழு கின்றான்;

    விரித்திடும் நாட கத்தில்

    வஞ்சனே வெற்றி காண்பான்;

    சிரித்திடும் பண்பு கொஞ்சும்

    செல்வனைத் தேடு கின்றேன்.

    Share
  • அழகு

    கவிஞர் ஜவஹர்லால்

     
    எதுஅழகு ? எப்படி? இப்படிப் பார்க்கலாமா?
    எதிலழ கில்லை? ஏனழ கங்கில்லை ?

    அழகு நிலவுவது எதிலே ? சேர்க்கையில்
    அழகெனப் படுவது பொருளிலா ? பார்வையிலா ?

    காக்கை கருப்புத்தான்; காக்கைக் கதுவெறுப்பா?
    சேர்க்கையில் அவைசிரித்துச் சிலிர்ப்பதில் அழகிலையா?

    மண்ணை இருட்டாக்கும் வான்மேகக் கருங்கூட்டம்
    எண்ணத்தை மயக்கும் இனிய அழகிலையா ?

    வண்ணத்தி லாஅழகு ? இல்லை; பார்க்கும்நம்
    எண்ணத்தில் எதுவினிக்கும் அதிலே அழகிருக்கும்.

    பூத்துச் சிரிக்கின்ற புதுமலர் தானழகா ?
    காற்றில் உதிர்கின்ற மலரிதழில் அழகிலையா ?

    நெடிதோங்கி நிமிர்ந்தாடும் நெடுமரம் தானழகா ?
    ஒடிந்தே அசைகின்ற சிறுகொம்பில் அழகிலையா ?

    மான்களின் கண்மருட்சி அழகுதான்; ஆனாலும்
    கான்திரியும் கொடும்புலியின் முறைப்பும் அழகுதானே !

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நிமிர்ந்தவையா? வளைந்தவையா? எதற்குமே அடங்காமல்
    திமிர்ந்தவையா? திரிபவையா? திருடி வாழ்பவையா?

    எதுவாக இருந்தாலும் அதுவாக அதுவிருந்தால்
    எதுபோழ்தும் அதுவழகு; இதயங்கள் கொளலழகு.

    கண்ணழகு; மூக்கழகு; காணும் முகவழகு;
    முன்னழகு; பின்னழகு; இவைக்கெது அளவுகோல் ?

    இடையழகு எதிலிருக்கும் ? இல்லாம லிருப்பதிலா ?
    நடையசைவில் ஒடிந்துவிடும் கொடியிடையின் அசைவினிலா ?

    ஒருவனுக்கு வானவில் வண்ணம் பேரழகு;
    ஒருவனுக் கவ்வில்லின் வளைவு பேரழகு;

    வண்ணமா ? வளைவா? எதிலே அழகிருக்கும் ?
    எண்ணத்தி லெதுபதியும்? அதிலே அழகிருக்கும்.

    கொடியிடையின் அசைவுநடம் அழகுதான்; ஆனாலும் துடிப்படங்கித் தடுமாறும் தளர்நடையில் அழகிலையா ?

    இளஞ்சேயின் சிறுமழலை அழகுதான்; ஆனாலும்
    நலஞ்சிதைந்த முதியோர்தம் நடுக்கம் அழகிலையா?

    பனிமொழியின் இதழ்சுரக்கும் நீர்நலந்தான்; ஆனாலும்
    கனிந்தகிழத் திதழொழுகும் கடைவாய்நீர் அழகிலையா ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பதிலே அகம்தழுவின் அழகுவரும்.

    காலைக் கதிரொளியின் களிநடனம் தானழகா ?
    மாலைக் கருக்கிருட்டின் மைநடனம் அழகிலையா ?

    இருளோட்டும் கதிரோனின் எழிற்பயணம் தானழகா ?
    மருளூட்டும் இருள்வானச் சுடர்மீன்கள் அழகிலையா?

    இருட்டில் அழகிலையா ? இளஞ்சோடி சொல்லட்டும்.
    இருட்டறையில் குருட்டாட்ட இயக்கம் அழகிலையா ?

    சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்; ஆனாலும்
    அங்கிருக்கும் குள்ளநரித் தந்திரமும் அழகுதானே !

    கொல்லேற்றின் திமிலசைவு அழகுதான்; ஆனாலும்
    நல்லதொரு தாய்ப்பசுவின் மடியசைவும் அழகுதானே ?

    எங்கே அழகில்லை ? எதிலே அழகில்லை ?
    அங்கங்கே காண்பவைதாம் அகம்தழுவின் அழகுவரும்.

    நங்கநல்லூர்—20-02-2000

    Share
  • நீயே சொல்லு!

    கவிஞர் ஜவஹர்லால்

     

     

    வாடாப்பா படைத்தவனே! உன்ப டைப்பின்

     வாழ்வுமுறை கண்டுமனம் மகிழ லாம்வா!

    போடாப்பா அத்திசையில் கொஞ்சம்; சற்றுப்

     பொறுத்துப்பார்! நடையோரம் கிழிந்து போன

    நாடாவைச் சிற்றாடை என்னச் சுற்றி

     நடைபயிலும் அரைவயிற்றைப் பார்த்தா யாநீ!

    தாடாப்பா உன்கரத்தை; தயங்கா தேநீ!

     தள்ளுகொஞ்சம் பள்ளத்தில் விழப்போ கின்றாய்!

     

    பள்ளத்தைத் தாண்டப்பா; இங்கே என்ன

     பள்ளமென்றா கேட்கின்றாய்? அடடா   இஃதைப்

    பள்ளமென்றா சொன்னோமிங் குறைவோர் கேட்பின்

     பதைத்துமனங் குமுறிடுவார்; குளிக்க உண்ண

    நல்லதென அன்னவர்கள் போற்று கின்ற

     நனிசுவைநீர் இதுதான்நீ அறிந்து கொள்வாய்;

    நில்லப்பா! ஏன்மூக்கைப் பிடித்தாய்? நாற்றம்

     நினக்கொத்து வரவிலையோ? மேலே போ!போ!

     

    ஈதென்ன திரைச்சீலை?’ என்கின் றாயா?

     இதுதானுன் படைப்புக்கள் பல்லோர் வாழும்

    தீதில்லாப் பேரில்லம்; வேண்டும் போது

     தெருத்தாண்டி இடந்தாண்டி அமைத்தற் கேற்பத்

    தோதான துணிவீடு; உள்ளே கொஞ்சம்

     துணிவோடு நுழையப்பா! தோலை என்பின்

    மீதாகப் போர்த்ததுபோல் இருப்ப வள்தான்

     வீட்டுக்குப் பேரரசி! பேருக் குத்தான்;

     

    அய்யய்யோ என்றகுரல் கேட்கு தாப்பா!

     அடடேநீ ஏனப்பா ஓடு கின்றாய்?

    மெய்யெல்லாம் புண்ணாக வெளுத்து கின்ற

    மேலோனும் அவன்கையில் மத்த ளம்போல்

    மெய்சோர அடிவாங்கும் பெண்ணும் உன்றன்

     மேன்மையினா லுயிர்பெற்ற பொருள்தா மப்பா!

    பொய்யில்லை எண்ணிப்பார்; இந்தக் கோலம்

     போற்றிவளர்த் திடவாநீ படைத்தாய்? சொல்லு!

     

    தெருமுனையின் சிறுவீட்டைப் பாராய்; அங்கே

     சிரிக்கின்ற தாரென்றா வினவு கின்றாய்?

    வருவண்டை இதழ்வீசி அழைத்துக் கண்ணின்

     வலைதன்னிற் பிணைத்திட்டு மேனி காட்டித்

    தருபொருளைக் கொண்டுதினம் வாழு மந்தத்

     தண்மலரும் உன்படைப்பே; அவள்தான் அந்தோ

    வருகின்றா ளுனைநோக்கி; விரைந்து வா!வா!

     வலைதன்னி லுனையுமவள் வீழ்த்தப் பார்ப்பாள்.

     

    அதற்குள்ளா சலிக்கின்றாய்? அறத்தால் வாழும்

     அருமைமிகும் உன்படைப்பைக் காண வா!வா!

    புதர்க்குள்ளே பதுங்குகின்ற முயலைப் போலப்

     பூமியிலே வாழ்கின்ற நல்லோ ரைப்பார்!

    இதற்கில்லை அதற்கில்லை எதற்கு மில்லை;

     என்றங்கே இல்லையெனும் பாட்டே கேட்கும்;

    எதற்கிந்த நிலையென்றா எனைக்கேட் கின்றாய்?

     என்னப்பா படைத்தவனே! நீயே சொல்லு!

    Share
  • கூத்து

    கவிஞர் ஜவஹர்லால்

     

    காலமெனும் மேடையிலே

    கோலமிட்டு வேடமிட்டுக்

    காட்டுகிறோம் நாம்பலவாய் வித்தை-ஆய்ந்து

    கூட்டிடிலோ அத்துணையும் சொத்தை

     

    காதலென்றும் மோகமென்றும்

    காதலின்றேல் சாதலென்றும்

    கதறுகிறார் இளைஞரெல்லாம் இங்கே-அந்தக்

    காதலெல்லாம் ஓய்ந்தபின்னர் எங்கே?

     

    மாடுமனை வீடுமக்கள்

    கூடுகின்ற மக்களெலாம்

    மாட்சியுள்ள போதிருப்பார் கூடி-நாம்

    வீழ்ச்சியுற்றால் பறந்திடுவார் ஓடி

     

    செத்தபிணம் தனைச்சுற்றிக்

    கத்தைகத்தை யாய்மாலை

    சாத்துகிறார் போர்த்துகிறார் ஆடை-நாளும்

    சாம்பிணத்துக் கேதுமில்லை ஆடை

     

    வறுமையென்றும் ஒழிப்பென்றும்

    வகைவகையாய்க் கொள்கைகளை

    வகுத்துரைத்து வாக்குவாங்கிச் செல்வார்-அவர்

    வென்றபின்னே ஏழைபக்கம் நில்லார்

     

    யாரிடத்தில் யார்தஞ்சம்

    யாரொடுயார் கூட்டணியாம்

    நாட்டிலொரு பெருங்கூத்தே நடக்கும்-என்று

    நாட்டுமக்கள் அக்கூத்தை முடிக்கும்?

    Share
  • வேறெதும் வேண்டுமோ ?

    கவிஞர் ஜவஹர்லால்

     

    புள்ளினம் வானில் பறக்குதே ! – வானப்

    பரப்பினில் வெளிச்சமும் பாயுதே !

    நல்லதோர் காலைப் பொழுதென – இங்கு

    நவின்றிட வேறெதும் வேண்டுமோ ?

     

    கீச்செனக் குருவிகள் பாயுதே ! – அந்தக்

    கீழ்வானம் ஒளியினில் தோயுதே !

    ஆச்சிதோ காலைப் பொழுதென – இங்கே

    அறைந்திட வேறெதும் வேண்டுமோ ?

     

    உச்சியில் வெய்யில் எறிக்குதே ! – கால்கள்

    ஓரிடம் நிற்க மறுக்குதே !

    மெச்சியே நண்பகல் இதுவென – இங்கு

    முழங்கிட வேறெதும் வேண்டுமோ ?

     

    வேர்வையில் உடலெலாம் குளிக்குதே ! –மூச்சு

    மேலுறக் கீழுற வாங்குதே !

    சீறிடும் உச்சிப் பொழுதென – இங்குச்

    செப்பிட வேறெதும் வேண்டுமோ ?

     

    மாடுகள் வீடு திரும்புதே ! – வீட்டு

    மல்லிகை முல்லை மலருதே !

    தேடியே மாலைப் பொழுதென – இங்குச்

    சொல்லிட வேறெதும் வேண்டுமோ ?

     

    கதிரொளி மேற்கினில் வீழுதே ! – இருள்

    கட்டியங் கூறி வருகுதே !

    மதிவரும் மாலைப் பொழுதென – வாய்

    மலர்ந்திட வேறெதும் வேண்டுமோ ?

    Share
  • அழகென்னும் தெய்வம்

     

     

     

    கவிஞர் ஜவஹர்லால்

    fall image

     

     

     

     

     

     

     

     

    பூத்திருக்கும் மலரசைவில், கீழை வானில்

    புலர்ந்திருக்கும் கதிரொளியில், மாலை வாசல்

    காத்திருக்கும் கண்ணசைவில், தலையைத் தூக்கிக்

    கவிழ்ந்திருக்கும் சேயசைவில், நீர்க்கு டத்தைச்

    சேர்த்திருக்கும் இடுப்பசைவில், தெறித்த நீரில்

    திளைத்திருக்கும் உடலசைவில், கவிதை சிந்தி

    ஆர்த்திருக்கும் பெண்ணசைவில் மனங்கொ டுத்தேன்;

    அழகென்னும் தெய்வத்தின் அடிமை யானேன்.

     

    காலையிளங் கதிரவனை எழுப்பும் சேவற்

    கரகரத்த குரலினிலே அழகைக் கண்டேன்.

    சோலையிளந் தளிரினையே ஆட்டி வைக்கும்

    சுகமான தென்றலிலே அழகைக் கண்டேன்.

    காளையினத் திமிர்நடையில், அதைந டத்தும்

    கட்டுறுதித் தோளசைவில், அழகைக் கண்டேன்.

    மாலைவரும் புள்ளினத்தின் வரிசை தன்னில்

    மயக்குகிற அழகென்னும் தெய்வம் கண்டேன்.

     

    மலைமீது கொஞ்சுமிளம் பசுமை; அங்கே

    மலர்மாலை எனவீழும் அருவி, ஓடி

    மலையளக்கும் மான்கூட்ட அருமை, ஆளை

    மயக்குகிற காட்டுமர இசைகள், என்றே

    மலையெல்லாம் அழகுகொஞ்சி நிற்ப தால்தான்

    மனமகிழத் தமிழ்முருகன் மலையைக் கொண்டான்.

    மலைகண்டு குடிகொண்டு வாழு மந்த

    மலைக்கொழுந்தில் அழகென்னும் முழுமை கண்டேன்.

     

    தெய்வத்தைக் காணவெனில் தூய்மை கொஞ்சித்

    திகழ்கின்ற மனம்வேண்டும்; அதுபோ லத்தான்

    தெய்வமெனும் அழகினையே காண வேண்டின்

    செப்பமுற்ற கவிதைமனம் வேண்டும்; அந்தத்

    தெய்வத்தைக் கண்டுணரப் பழகி விட்டால்

    தெருவெல்லாம் அழகுநடம் மிளிரும்; அந்தத்

    தெய்வமனம் கவிதையுளங் கொண்ட வன்நான்

    தெய்வமெனும் அழகிற்கே அடிமை யானேன்.

    Share
  • எழுத்தெதற்கு ?

     

    கவிஞர் ஜவஹர்லால்

     

    பார்வையில்  கூர்மை  மிகவேண்டும் – கண்ணிற்

    பளிச்சென  உண்மை  படவேண்டும்.

    சீர்மையைப்  போற்றும்  திறம்வேண்டும் – நிலவும்

    தீமைகள்  சாடும்  உரம்வேண்டும்.

     

    அல்லவை  செய்வோர்  தமைக்கண்டால் – பாட்டால்

    அடிக்கும்  துணிவு  வரவேண்டும்

    நல்லவை  செய்வோர்  பாதமலர் – போற்றி

    நாளும்  வணங்கும்  உளம்வேண்டும்.

     

    அதிகா  ரத்தின்  வால்பிடித்தே – வாயால்

    அனுதினம்  புகழா   மனம் வேண்டும்.

    எதுதான்  வந்து  மோதிடினும் – எழுத்தில்

    இழுக்குச்  சேரா  நெறிவேண்டும்

     

    அடிதடிக்  கும்பல்  அதட்டலுக்கே – சற்றும்

    அஞ்சாத்  துணிவு  மிக வேண்டும்

    இடித்துப்  பொடியா   யாக்கிடினும் – நந்தம்

    எழுத்து  எழுந்து  வர வேண்டும்

     

    பள்ளமே  கிடப்போர்  மேடுவர – எழுதிப்

    பாதிப்  புக்கள்  தரவேண்டும்.

    உள்ளமே  நொந்து  கிடப்போரை – மயில்

    இறகாய்த்  தடவும்  திறம் வேண்டும்.

     

    நல்லவை  இவைகள்  இல்லையெனில் – இந்த

    நாட்டில்  எழுத்தே  எதற்காக?

    அல்லவை  ஒழிக்க  வில்லையெனில் – எழுத்தே

    அரும்புவ  தெல்லாம்   எதற்காக?

     

    Share
  • மனித நேயம்

    கவிஞர் ஜவஹர்லால் 

     

     

    சிரித்திடு மலர்கள் பூத்த

    செடிக்கென ஆவ தில்லை;

    பறித்துமே சூடிக் கொள்ளும்

    பாவையை மகிழ்வில் ஆழ்த்தும்.

    நெருக்கியே பழுத்தி ருக்கும்

    நிறைசுவைக் கனிகள், காய்க்கும்

    மரத்தினுக் காவ தில்லை;

    மற்றவர்க் கின்ப மூட்டும்.

     

    செடியொடு மரமும் அன்புச்

    செயலினில் உயர்ந்தி ருக்கத்

    துடிப்புடை மனிதர் அன்புத்

    தொடர்பினில் துவளலாமா ?

    இடுக்கணில் நைந்திட் டாலும்

    இங்குள மற்றோர் காணும்

    இடுக்கணைத் தீர்க்க முந்தும்

    இதயமே மனித நேயம்.

     

    அன்பினை அன்புக் காக்கி

    அன்புடன் அரவ ணைத்தே

    என்பினை உருக்கு மந்த

    அன்பினுக் கெல்லை யில்லை.

    அன்பெனும் ஒன்றே ஊற்றாய்

    ஆங்கெதும் பேத மின்றி

    அன்பினால் அணைத்துக் காக்கும்

    அதுவேநல் மனித நேயம்.

     

    சாதிகள் மதங்க ளில்லை;

    சண்டையும் பிணக்கு மில்லை;

    வீதிகள் ஊரென் றில்லை;

    விழுந்தவர் யாரென் றாலும்

    கோதியே எடுத்த ணைத்துக்

    கண்ணீர் மாற்று தற்காய்

    மீதியும் துடிக்கும் நெஞ்சே

    மனிதாபி மான நெஞ்சாம்.

     

    வெள்ளமே விழுங்க வீட்டை

    இழந்துமே வந்தோர் தம்மை

    உள்ளமே விரித்த ணைத்து

    மசூதி, கோயி லெல்லாம்

    உள்ளமே போல்தி றந்தே

    உள்ளழைத் துபச ரிக்கும்

    உள்ளமும் செயலும் காட்டும்

    உயர்வதே மனித நேயம்.

     

    அன்பினில் தோய்த்தெ டுத்தே

    அருளுடன் அணைத்துக் காத்தே

    என்பெலாம் பிறர்க்காய் ஈயும்

    ஈடிலா உயர்ந்த பண்பே

    மன்பதை உயர்த்தும் பண்பாம்,

    மனிதனைக் காட்டு மந்த

    அன்புடைச் செயல்தாம் இந்த

    அவனியில் மனித நேயம்.

    Share
  • வருவாயா நீ?

    ஜவஹர்லால் 

    எண்ணிலா நோயில் இந்திய மக்கள்

    இடர்ப்படல் கண்டு நொந்தாய்;

    மண்ணிலே அவர்கள் வான்புகழ் காண

    விடுதலை வேண்டு மென்றாய்;

    இன்றுநம் நாடு விடுதலை பெற்றே

    இருப்பதில் அய்ய மில்லை.

    அன்றுள நோய்கள் அற்றன வாவென்

    றறிந்திட வருவா யாநீ?

     

    சொந்த நாட்டிலே அன்னியர்க் கடிமை

    செய்திடல் நாண மென்றாய்;

    சொந்த நாட்டிலே நம்மவர்க் கடிமை

    செய்துமே வாழ லாமோ?

    சிந்தனை கூடச் சொந்தமாய்ச் செய்யத்

    துணிவிலா அடிமை நெஞ்சம்

    இந்த நாட்டிலே இன்னு மிருப்பதை

    அறிந்திட வருவா யாநீ?

     

    சாதிகள் வேண்டாம்; மேலவர் கீழோர்

    சங்கடம் வேண்டா மென்றாய்;

    சாதிகள் சங்கம் தெருத்தொறும் முளைத்தே

    சிரித்தெமை அலைக்க ழிக்கும்;

    வேதனை விளைச்சல் கொஞ்சமா யில்லை;

    வினைகளும் பஞ்ச மில்லை;

    சாதிகள் சங்கப் பேயதை யோட்டச்

    சடுதியில் வருவா யாநீ?

     

    கீதை யளித்தவன் கீதச் சிரிப்பினைக்

    கவிதையாய்க் கொட்டி நின்றாய்;

    நாதி யற்றவ ரணைத்திடு தூய

    ஏசுவைப் பாடிச் சென்றாய்;

    ஆதித் தூயவர் அருமறை நபியை

    அன்புடன் தொழுக வென்றாய்;

    சாதிப் பிரிவினை தெய்வமே கொள்வதைத்

    தெரிந்திட வருவா யாநீ?

     

    விடுதலை பெற்ற மகிழ்வினில் திளைத்தோம்;

    வீட்டவ ராண்டிடக் கண்டோம்;

    கெடுதலை யோட்டி நன்மையைக் கூட்டக்

    கவலையார் கொள்ளு கின்றார்?

    விடுதலை நாட்டில் தீமைக ளின்னும்

    விடுதலை யாகிட வில்லை;

    நடுகிற பயிரைக் களைகளே தின்னல்

    அறிந்திட வருவா யாநீ?

    Share
  • அவளே மருந்து

     

    கவிஞர் ஜவஹர்லால்

    உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; –என்றன்
    உடலும் உருகுது தாங்கவில்லை;
    எண்ணமும் செயலுமே முடங்கிவிட– என்றன்
    இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.

    நெஞ்சுளே ஏதோ உடைகிறது; – என்
    நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
    பஞ்சென உள்ளம் பறக்கிறது — எங்கோ
    போய்ப்போய் மீண்டும் வருகிறது.

    கண்ணிலே ஒளியும் குறைகிறது; – காணும்
    காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
    கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் – ஏதோ
    கொடிய வலியுடன் வதைக்கிறது.

    பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் – எங்கோ
    பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
    உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே – இங்கே
    உருகி உருகிப் பேசுகிறார்.

    வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
    நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
    வேதனை நான்பட மற்றவர்கள் – என்னை
    வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.

    எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
    எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
    எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
    எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?

    என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
    இறகென நீவியே தரவேண்டும்;
    என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
    இளையவ ளேபிற மருந்தில்லை.

    நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; – அந்த
    நோயெலாம் உலகில் வேறுவகை;
    நோயிதைத் தீர்க்க மருந்தில்லை – இந்த
    நோய்தந்த அவளே நோய்மருந்து.

    பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து.
    புணர்ச்சிமகிழ்தல்–1102
    திருவள்ளுவர் இலக்கியமன்றம்
    நங்கநல்லூர்–08-07-06

    Share
  • கிடந்தாய் வாழி காவேரி !

    கவிஞர் ஜவஹர்லால்

     

    பிணைந்தார் நெஞ்சம் பிரிக்கவென்றே
    பிறந்த கானல் வரிகேட்டும்
    இணைந்தா ருள்ளம் நெருப்பாகி
    இரண்டாய்ப் போன நிலைகண்டும்
    இணைந்தார் வாழ்வில் திருப்புமுனை
    இயக்கும் விதியின் செயல்கண்டும்
    கனத்த இதயத் துடன்தானா
    கிடந்தாய் வாழி காவேரி!

    மனத்தில் இன்பப் பூப்பூக்க
    மணக்கும் தமிழின் இசைப்பாட்டே
    நினைக்கா வகையில் பிரிவினையை
    நிகழ்த்தி வைத்த நிலைகண்டே
    இனிக்கும் இசையே இவர்வாழ்வில்
    இசையா இசையாய்ப் போனதென்ற
    நினைப்பில் தானா முடங்கிப்போய்க்
    கிடந்தாய் வாழி காவேரி!

    தவித்த வாய்க்குத் தண்ணீரைத்
    தரவே மறுக்கும் பிறந்தஇடம்
    தவித்து நொந்து தாகத்தில்
    தினமும் அலறும் புகுந்தஇடம்
    புவிக்குள் இதுபோல் பெண்ணுக்குப்
    போராட் டம்தான் வரலாமா?
    கவிழ்ந்த நெஞ்சத் துடன்தானா
    கிடந்தாய் வாழி காவேரி!

    நதிநீர் அளிக்க மனமில்லை;
    நடப்பில் ஒருமைப் பாடென்பார்.
    நதியின் வறட்சி தானிந்த
    நாட்டின் வறட்சி அறியாரா?
    நதியின் நீரில் அரசியலை
    நடத்தும் கொடுமை தனைக்கண்டோ
    கதிவே றின்றி உளங்காய்ந்து
    கிடந்தாய் வாழி காவேரி!

    சைத்தான் வேதம் முழங்கிநிற்கச்
    சரித்தான் என்றே பண்டிதர்கள்
    கைத்தா ளத்தைப் போட்டுநிற்கக்
    கண்முன் காட்சி பொய்யென்றே
    சைத்தான் கூத்தும் ஆடிநிற்கச்
    சகித்து நாடு பொறுத்திருக்கச்
    செத்தாற் போதும் என்றாநீ
    கிடந்தாய் வாழி காவேரி!

    காக்கை கோட்டான் இசைபாடக்
    கழுகும் பேயும் நடமாடக்
    கூக்கூ என்றே குரலெழுப்பிக்
    கூட்டாய்ச் சிலவே ஓலமிடச்
    சேர்க்கை ஒவ்வாக் கூட்டணிகள்
    சிரிப்பாய்ச் சிரிக்க இங்காரும்
    கேட்கா இசையைக் கேட்டாநீ
    கிடந்தாய் வாழி காவேரி!

    Share
  • எங்கே போகிறோம் ?

    கவிஞர் ஜவஹர்லால்

    சாதிக்குச் சங்கங்கள் உண்டே யன்றிச்
    சாதிக்கச் சங்கங்கள் இல்லை; வீணே
    மோதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றி
    முனைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; உள்ளம்
    பேதிக்கச் சங்கங்கள் உண்டே யன்றிப்
    பிணைப்பிக்கச் சங்கங்கள் இல்லை; இங்கே
    ஏதுக்குச் சங்கங்கள் ? ஆய்ந்து பார்த்தால்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    மனிதாபி மானத்தைக் காண வில்லை;
    மனத்தினிலே நல்லெண்ணம் பூப்ப தில்லை;
    இனிதான சொற்களிங்கு வீழ்வ தில்லை;
    இடர்துடைக்கக் கைகளிங்கு நீள்வ தில்லை;
    கனிவான நெஞ்சங்கள் தோண வில்லை;
    கண்களிலே தூயசுடர் ஒளிர்வ தில்லை;
    இனியஉள்ளம் நல்லசெயல் எங்கு மில்லை;
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    பள்ளங்கள் மேடாக வில்லை; இங்கே
    பாவங்கள் குறைவாக வில்லை; நல்ல
    உள்ளங்கள் உயர்வாக வில்லை; நாட்டின்
    ஊனங்கள் சீராக வில்லை; நெஞ்சக்
    கள்ளங்கள் அழிவாக வில்லை; செய்யும்
    கபடங்கள் மறைவாக வில்லை; எங்கும்
    இல்லங்கள் வளமாக வில்லை; நாட்டில்
    எங்கேநாம் போகின்றோம் ? தெரிய வில்லை.

    நதிநீரைப் பங்குதர மனமே இல்லை;
    நாட்டினிலே ஒருமைப்பாட் டுணர்வே இல்லை;
    விதியைத்தான் நம்புவதைத் தவிர வேறு
    வினைவலியை நம்புகின்ற நெஞ்சே இல்லை;
    கதிமாற்றும் தேர்தலிலே செம்மை யாகக்
    கடமையாற்றி நிலைமாற்றும் துணிவே இல்லை;
    நிதிசேர்க்கும் தவறுகளோ குறைய வில்லை;
    நாமெங்கே போகின்றோம் ? தெரிய வில்லை.
    மதுரை வானொலி—18-02-96

    Share
  • வானிடம் மானிடம்

     

    கவிஞர் ஜவஹர்லால்

    இரவு நேரம் வானைப் பார்த்தால்
    இதயம் பறக்கிறது;–அங்கே
    உறவு கொண்டே திளைத்து மகிழ
    உணர்வு துடிக்கிறது.

    கண்ணைச் சிமிட்டி அழைக்கும் மீன்கள்
    கனவு படைக்கிறது;–என்றன்
    எண்ணம் விண்ணில் இறக்கை யின்றி
    எங்கும் பறக்கிறது.

    நிலவின் தூய்மை என்னுள் பலவாய்
    நினைவை அசைக்கிறது;–மண்ணில்
    நிலவும் தூய்மை யற்ற தன்மை
    நெஞ்சை அலைக்கிறது.

    முழுமதி வானை ஆளும் காட்சி
    மனசை நிறைக்கிறது;– அந்த
    முழுமதி தேய்ந்து வளர்தல் ஏனோ ?
    வினாவும் பிறக்கிறது.

    திங்கள் முழுசாய் விண்ணில் தவழச்
    சிந்தை திகைக்கிறதோ ?—பூமி
    எங்கும் ராகு கேது கண்டே
    இளைத்து வளர்கிறதோ?.

    கொடுமை சிரிக்கக் கண்டே வான்தான்
    கொப்புளங் கொள்கிறது;–அந்த
    வடுவை மீன்கள் என்றே மண்தான்
    வாழ்த்தி மகிழ்கிறது.

    நேற்றைய வானம் இன்றைக் கில்லை
    விந்தை நிகழ்கிறது;–என்றும்
    மாற்றமே நிலையாம் என்னும் உண்மை
    வானில் திகழ்கிறது.

    வளர்ச்சி தேய்வு வாழ்க்கை இயல்பு
    வான்மதி சொல்கிறது;–உள்ளத்
    தளர்ச்சி நீக்கி வலம்வரின் வெற்றி
    கதிரவன் உரைக்கிறது.

    அடடா ! வானும் நிலவும் மீனும்
    தத்துவம் பொழிகிறது; –அதனை
    எடுத்துக் கொள்ள விரும்பா திங்கே
    இதயம் அலைகிறது.

    வானிடம் எத்தனை எத்தனை தத்துவம்
    வனப்பாய் விரிகிறது;–எதையும்
    மானிடம் கற்பதே இல்லை எங்கும்
    மயக்கமே தெரிகிறது.

    வானாய் நெஞ்சம் மாறி நிலவின்
    குளுமை கொஞ்சட்டும்! –இன்பத்
    தேனை வாரி வழங்கும் மீனாய்த்
    தினமும் விஞ்சட்டும்.

    ரவியின் கைகள் கவிஞர் நெஞ்சை
    இதமாய்த் தழுவட்டும்!—இந்தப்
    புவியில் கவிஞர் ரவியின் புகழைப்
    பாடித் திளைக்கட்டும்.
    ( 19-05-99 ல் கிழக்குக் கடற்கரைச் சாலையில்
    ஒரு பேரில்லத்தில் திரு, ரவி, பாரதி கலைக்
    கழகம் சார்பில் அமைத்து நடத்திய மறக்க
    முடியாத முழுநிலாக் கவியரங்கம். )

    Share
  • வெளிச்சம்

     

    கவிஞர் ஜவஹர்லால்

    இருட்டில் இருப்பவன் வெளிச்சம் வேண்டி
    வெளியில் தேடுகிறான் ––மனசை
    இருட்டுக் குகையென ஆக்கி வாழ்பவன்
    எங்கே கண்டிடுவான் ?

    அல்லவை தேடி அலையும் மனமொரு
    கனத்த இருட்குகையே –அதில்
    நல்லவை நாடி ஒருசிறு சுடரை
    ஏற்றிடில் ஒளிபிறக்கும்.

    சித்த மயக்கம் என்பது வாழ்வைச்
    சூழும் இருட்டாகும்; –அங்கே
    சித்தத் தெளிவினைச் சேர்க்கும் அறநூல்
    சிறந்த விளக்காகும்.

    சூழும் வஞ்சகம் சூது பொய்மை
    சூழ்ந்துள மனசெல்லாம் – இருட்டில்
    ஆழும் ஒருகுகை; அதனுள் பிசாசுகள்
    அண்டிக் குடியிருக்கும்.

    கருத்து வெளிச்சம் தானாய் வராது
    கற்பன கற்றிடுவாய்! -–மனம்
    வெறுத்து நீயே வீழ்ந்து விடாமல்
    காப்பது கற்பவையே!

    வெளிச்சம் தேடி வெளியில் அலைவோர்
    பாறையில் விதைப்பவரே ! -–அந்த
    வெளிச்சம் உள்ளே ஏற்றி வெளியே
    விளங்கச் செய்திடுநீ !

    அடுத்தவர் நலத்தை நினைத்துப் பார்நீ !
    அங்கொரு சுடர்தோன்றும் ! –உன்னைக்
    கெடுத்தவர் தமக்கும் நலமே செய்நீ !
    கருத்துள் ஒளிபிறக்கும்.

    உள்ளொளி தோன்றின் வெளியொளி பிறக்கும்
    உள்ளே விளக்கேற்று ! –மிகத்
    தெள்ளத் தெளிந்த அறிவொளி ஏற்றிச்
    சூழும் இருள்நீக்கு !

    வெளிச்சம் என்றும் வெளியில் இல்லை
    விளைகிற இடம்மனமே ! –அந்த
    வெளிச்சம் பிறர்க்கே ஒளிதர வேண்டும்;
    மேன்மை நீயடைவாய் !

    Share