Tag: இந்த வார வல்லமையாளர் விருது

  • இந்தவார வல்லமையாளர் விருது! (222)

    செல்வன்

    அன்னையர் தினமான இன்று, நாடெங்கும் உள்ள பிள்ளைகளின் கல்வித்தரம் உயரப்பாடுபடும் அமெரிக்க கல்வித்துறை செக்ரட்டரி (அமைச்சர்) பெட்ஸி டிவோஸ் (Betsy Devos) அவர்களை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அமெரிக்க பெருநகரங்கள் சிலவற்றில் உள்ள பள்ளிகளில் குற்றச்செயல்களும் மாணவர்களிடையே போதைபொருட்கள் பயன்பாடும் அதிகம். இத்தகைய பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கும் மாற்ற முடியாது பெற்றோர் அவதிப்பட்டு வந்தார்கள். இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்படைந்தது. இந்த சூழலில் மாணவர்கள் விரும்பும் பள்ளிக்கு அவர்களை அனுப்பும் “பள்ளித்தேர்வு” (School choice) மற்றும் “சார்ட்டர் பள்ளிமுறை” (Charter schools) சமூக நலனில் அக்கறை கொண்ட கல்வியாளர்களால் முன்மொழியப்பட்டது.

     

    சார்ட்டர் பள்ளிகள் அமைப்பதன் மூலம் பிள்ளைகள் குற்றங்களும், வன்முறையும், போதைமருந்து பயன்பாடும் அதிகம் உள்ள பள்ளிகளில் இருந்து விடுபட்டு சார்ட்டர் பள்ளிகளில் இலவச கல்வி பெறமுடியும். இதனால் இத்தகைய பள்ளிகள் தம் தரத்தை உயர்த்தி மாணவர் நலனை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தியே ஆகவேண்டும். பள்ளித்தேர்வு முறையின் மூலம் பெற்றோர் தரம் அதிகமுள்ள தனியார் பள்ளிகள், கான்வென்டுகளில் இலவசமாக தம் பிள்ளைகளை சேர்க்க முடியும். இதனால் மிகப்பெரிய பணக்காரகுழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மக்களும் படிக்கமுடியும் என்பது மிக முற்போக்கான, மானுடம் போற்றும் திட்டமாகும்.

    இத்தகைய முற்போக்கு கல்விமுறைகளை ஆதரிக்கும்  கல்வியாளர்களில் முக்கியமானவர் பெட்ஸி டிவோஸ். இவர் ஆம்வே எனும் பன்னாட்டு கம்பனியை துவக்கிய ரிச்சர்ட் டிவோஸ் அவர்களின் மருமகள் ஆவார். இத்தகைய பெரும்பணக்கார குடும்பத்தில் பிறந்து, தன் கம்பனி நலனுக்கு உழைக்காமல் மக்கள் நலனை பற்றி சிந்திக்கும் தன்மை கொண்டவர் பெட்ஸி டிவோஸ்.  பள்ளிகளை முன்னேற்றும் பள்ளித்தேர்வு மற்றும் சார்ட்டர் பள்ளி முறைகளை பரவலாக்க Foundation for Excellence in Education  எனும் அமைப்பை துவக்கினார் பெட்ஸி டிவோஸ்.

    அமெரிக்க கல்விமுறையின் மிகப்பெரும் பின்னடைவுகளில் ஒன்றாக பள்ளித்தேர்வு உரிமையின்மையை குறிப்பிடலாம். தான் மளிகை சாமான் வாங்கும் கடையை மக்களால் தேர்ந்தெடுக்க முடிகிறது. தான் உணவு உண்ணும் உணவகங்களை ஒருவரால் தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆனால் தன் பிள்ளை படிக்கவேண்டிய பள்ளியை பெற்றோரால் தேர்ந்தெடுக்கபட முடியாத சூழல் நிலவுவது எத்தனை துயரமானது? இதனால் தன் வீட்டின் அருகே உள்ள பள்ளியின் தரம் எத்தனை மோசமாக இருந்தாலும் அதிலேயே தன் பிள்ளையை சேர்க்கும் நிர்ப்பந்ததிற்கு பெற்றோர் ஆளானார்கள். இதிலிருந்து இவர்களை விடுவித்து பிள்ளைகள் படிக்கும் பள்ளியை பெற்றோரே தேர்ந்தெடுக்கலாம் எனும் புரட்சிகரமான பள்ளித்தேர்வு முறையை (school choice) 1நாடெங்கும் பரவலாக்க பெட்ஸி டிவோஸ் பாடுபட்டார்.

    பிளாரிடா மாநிலத்தில் இவரது  சேவைகளின் பலனாக 50,000 குழந்தைகளுக்கு தாம் படிக்கும் பள்ளியை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைத்தது.

       பிளாரிடாவுடன் நில்லாது இண்டியானா, லூசியானா,  மிச்சிகன் மற்றும் டெட்ராய்ட் பள்ளிகளை மேம்படுத்த இவர் உழைத்ததன் பலனாக கடந்த ஜனவரி மாதம் இவர் அமெரிக்க கல்வித்துறை அமைச்சராக அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களால் நியமிக்கபட்டார்.

    இவரது பதவி ஏற்புக்கு பின் உடனடியாக அமெரிக்க பள்ளிகள் பலவற்றுக்கும் விஜயம் செய்து மாணவர்கள் நலனை எப்படி மேம்படுத்துவது என ஆராய்ந்தார். ராணுவ வீரர்களின் குழந்தைகள் நலனை எப்படி மேம்படுத்துவது, கருப்பின குழந்தைகள் நலனை எப்படி மேம்படுத்துவது, மாணவர்களின் மதிய உணவை மேம்படுத்தி அவர்களின் உடல்நலனை மேம்பாடடைய செய்வது எப்படி என்பதை இந்த சுற்றுப்பயணங்கள் மூலம் அறிந்து கொண்டார்.

    இவ்வாரம் “ஆசிரியரை போற்றும் வாரமாக” (Teachers appreciation week) அறிவிக்கபட்டு பெட்ஸி டிவோஸ் தானே நேரடியாக பல ஆசிரியர்களை தொலைபேசியில் அழைத்து ஆசிரியர் வார வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்வி அமைச்சர் தமக்கு போன் செய்து வாழ்த்தியது ஆசிரியர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை உருவாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாரம் இவருக்கு மேலும் ஒரு சிறப்பு சேர்ந்தது. கருப்பின மாணவர்கள் பெரும்பான்மையாக படிக்கும் பிளாரிடாவின் புகழ்பெற்ற பெதூன் – குக்மன் பல்கலைக்கழகம் (Bethune–Cookman University) இவரை தன் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்து சிறப்புரையாற்ற அழைத்ததுடன் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தது. அங்கே அப்போது போராட்டக்காரர்கள் சிலர் குரல் எழுப்பியதன் காரணமாக இந்த நிகழ்வு நாடுமுழுக்க பேசபட்ட நிகழ்வாகவும் ,அதே சமயம் நாடுமுழுக்க ஊடகங்கள் இவரது உரையை ஒளிபரப்பவும் காரணமாக அமைந்தது

    விழாவில் சிறப்புரை ஆற்றிய பெட்ஸி டிவோஸ் மாணவர்கள் தேசநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், சேவைநோக்குடனும் பணியாற்றவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    கருப்பின குழந்தைகள், ஏழைகுழந்தைகள், பள்ளிகுழந்தைகள் நலனை முதன்மையாக கொன்டு செயல்படும் பெட்ஸிடிவோஸ் அவர்களை இந்த அன்னையர் தினத்தன்று வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. தன் பிள்ளைகள் நலனை மனதில் கொண்டவர் தானே சிறந்த அன்னை? ஆக நாடெங்கும் உள்ள பிள்ளைகளின் கல்வித்தரம், எதிர்காலம் ஆகியவற்றின் மேல் அக்கறை கொண்டுள்ள பெட்ஸி டிவோஸ் அவர்களுக்கு அன்னையர் தினத்தன்று இந்த விருது வழங்கப்படுவது மிகப்பொருத்தமானது.

    வல்லமையாளர் பெட்ஸிடிவோஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். கடந்த 220 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர்,  முனைவர் தேமொழி, உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. செல்வன் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான், பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 220 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு பேரா. செல்வன் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    selvan

    பெயர்: செல்வன்

    தொழில்: கல்லூரி பேராசிரியர்
    கல்வித்தகுதி: முனைவர் (வணிகவியல் மேலாண்மை)

    எழுத்துகள் பிரசுரமான தளங்கள்: வல்லமை, திண்ணை, தமிழோவியம், குமுதம், தினமணி, ஆனந்த விகடன், தினகரன்

    எழுதிய நூல்கள்: பேலியோ டயட் (கிழக்கு பிரசுர வெளியீடு)

    நல்லுணவு நான் சொல்லுவேன் (மல்லிகை மகள் பிரசுரம்)

    நிறுவனர்: ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமம். இது மூன்றரை லட்சம் பேர் கொண்ட தமிழின் முதன்மையான உடல்நலம் சார்ந்த குழுவாகும்

    இவரது பேலியோ டயட் நூல் 2016ஆம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் இரண்டாமிடம் பிடித்தது. தினமணியில் வெளியான பேலியோ டயட் தொடர் தினமணி வலைதளத்தில் ஒவ்வொருவாரமும் தொடர்ந்து அதிகம் படிக்கப்பட்ட பக்கங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்தது.

    தற்போது இவர் குமுதத்தில் “வாழ்க கொழுப்புடன்” எனும் தொடரையும், மல்லிகை மகள் இதழில் “நியாண்டர் செல்வனின் கேள்வி-பதில்கள்” எனும் பகுதியையும் தொடராக எழுதி வருகிறார்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால்,  holyape@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share