உணவகங்களில் உணவு பரிமாறுபவராக 35 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர், ஆனந்த ராவ். பிரபலமான திரைப்பாடல் மெட்டுகளில் தாமே பாடல் இயற்றி, இனிய குரலில் பாடும் ஆற்றல் கொண்டவர். உழைக்கும் வர்க்கப் பாடகர் என்பதில் பெருமை கொள்ளும் இவர், மிக முக்கியமான கோரிக்கையை இந்த மே தினத்தில் எழுப்பியுள்ளார். இந்த உழைப்பாளியின் குரலைக் கேளுங்கள். உரியவர் செவிகளுக்கு இதைக் கொண்டு சேருங்கள். உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் வர்க்கப் பாடகர் ஆனந்த ராவ், ஓட்டல்களில் உணவு பரிமாறுபவராக (சப்ளையர்) வேலை பார்த்தவர். 79 வயதிலும் படபடவெனப் பேசுகிறார். திரைப்பாடல் மெட்டுகளில் தானே பாட்டுக் கட்டி, இனிய குரலில் பாடுகிறார். விவசாயப் பணியாளர், கட்டடத் தொழிலாளர், சமையல் கலைஞர், தையல் கலைஞர், ஆட்டோ ஓட்டுநர்… எனப் பலரையும் பாடியவர். அத்துடன் நில்லாமல் கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி… எனப் பலரையும் புகழ்ந்து பாடியிருக்கிறார். யாரைப் பற்றியும் பாட முடியும், எல்லோரையும் நேசிக்கிறேன் என்கிறார். இந்தப் பதிவில் தமது பாடல்கள் பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைக் கேட்டு மகிழுங்கள்.
கல்வியின் பெருமைகளை, துள்ளாத மனமும் துள்ளும் பாடலின் மெட்டில், எளிய தமிழில் தாமே இயற்றிப் பாடுகிறார், ஆனந்த ராவ். மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல். மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பகிருங்கள். உண்மைக் கல்வியை உணர்ந்து போற்றுவோம்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா… உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார்.
சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார்.
தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.
இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.