Tag: எஸ்.கோதண்டராமன்

  • சர்வாதிகாரி!…

    எஸ். கோதண்டராமன்

     

         சர்வாதிகாரி அவர். நாட்டுக்கு அல்ல, வீட்டுக்கு. இங்கு அவர் வைத்தது தான் சட்டம். இன்று என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதிலிருந்து யார் யார் என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை அவர் தீர்மானத்தைப் பொறுத்தது. இட்லி சாப்பிட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கும்போது, வேறு எதாவது கொடுத்தால் அவருக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே. வீட்டில் மாவு இல்லாவிட்டால் கடையிலோ, அங்கும் இல்லாவிட்டால், அக்கம் பக்கத்து வீடுகளில் யாசகம் வாங்கியோ செய்து போட்டால் தான் மற்றவர்கள் பிழைக்க முடியும். அவர் தூங்கும் போது தான் மற்றவர்கள் அவரவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொலைக் காட்சியில் காண முடியும். தொலைபேசி ஒலித்தால் அவர் தான் முதலில் எடுக்க வேண்டும். அவர் பேசி விட்டுக் கொடுத்த பிறகு தான் மற்றவர்கள் பேச முடியும். சில சமயம், தானே பதில் சொல்லிவிட்டுப் போனை வைத்து விடுவார். யாரிடமிருந்து ஃபோன் என்று கேட்டால் பதில் வராது. “உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம். சொல்லித் தான் ஆகணுமோ?” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வார். இவ்வளவு வல்லாட்சியாளராக இருந்தும், வீட்டிலுள்ள அனைவரும் அவருக்கு இன்முகத்துடன் அடங்கி நடப்பார்கள்.

         எந்த வல்லாட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை. ஆனானப்பட்ட சதாம் உசேனின் சர்வாதிகாரம், எண்ணைப் பணமும் ஏராளமான ஆயுதங்களும் இருந்தும், அமெரிக்கப் படை பலத்துக்கு முன் நிற்க முடியவில்லை. ராணுவ வலிமை மிகுந்த ஹோஸ்னி முபாரக்கோ தன் சொந்த நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தில் பதவி இழந்தார். இந்நிலையில் இரண்டே முக்கால் வயதான இந்த சர்வாதிகாரி எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? ஆம். நம் கதாநாயகன் பிறந்து இன்றோடு 1000 முறை சூரியன் உதித்திருக்கிறான்.

         வல்லாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கான விதை தூவப்பட்டது அவரது இரண்டாவது பிறந்த நாள் அன்று. கையில் சாக்லேட் டப்பாவைத் தூக்கிக் கொண்டு பக்கத்து பிளாட்காரர்களுக்கு ‘பாப்பாக்கு பத்தே (பர்த் டே)’ என்று சொல்லி அவர்களுடைய கொஞ்சுதல்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வரும் போது உடன் சென்ற அவனது தாயிடம் ஒரு பெண்மணி கேட்டார், “அடுத்த வருஷம் ஸ்கூல்லே சேர்க்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டிங்களா?”

         “இப்பத் தானே ரெண்டு வயசு முடிஞ்சிருக்கு. ஜூனுக்கு இரண்டரை வயசு தான் ஆகும். மூணு வயசு முடிஞ்சாத் தானே எல்கேஜியிலே சேத்துப்பாங்க.”

         “உலகம் தெரியாம இருக்கீங்களே. நல்ல ஸ்கூல்லே எல்கேஜியிலே சேர்க்க மாட்டாங்க. ப்ரீகேஜியிலே தான் சேத்துப்பாங்க. நீங்க இப்பவே ட்ரை பண்ணினாத் தான் கெடைக்கும்.”

         உடனே தாயும் தந்தையும் எது நல்ல பள்ளி என்று தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தில் பெற்றோர் குழுமத்தின் உரையாடல்களை எல்லாம் அலசினார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு குறை. இருந்தாலும் பொது மக்கள் மத்தியில் எது பிரபலமானது என்று தீர்மானித்து அந்தப் ப…… பள்ளிக்கு போன் செய்தார்கள்.

         “ப்ரீகேஜி அட்மிஷனை நாங்க அப்பவே முடிச்சுட்டோமே.”

         “நான் அடுத்த வருஷத்துக்குக் கேக்கறேன். ஜூன் மாசம் ஆரம்பிக்கிற கிளாசுக்கு அட்மிஷன் வேணும்.”

         “அதைத் தான் நான் சொல்றேன். வர ஜூன் பேட்சுக்கு இந்த நவம்பரிலேயே நாங்க அட்மிஷனை முடிச்சுட்டோம். இடமில்லே. சாரி.”

         “சரி, அதுக்கு அடுத்த வருஷம் எல்கேஜியிலே சேர்க்கணும்னா எப்ப அப்ளை பண்ணணும்?”

         “நாங்க ப்ரீகேஜிலே மட்டும் தான் அட்மிஷன் பண்றது. மத்த கிளாசிலே புதுசா யாரையும் சேக்கறது இல்லே.”

         இப்படி ஒவ்வொரு பள்ளியாக விசாரித்து விசாரித்து எல்லாப் பள்ளிகளிலும் எதிர்மறை விடையே கிடைத்ததால் நமது குழந்தையின் எதிர்காலமே பாழாகி விடுமோ என்ற கவலை வந்து விட்டது.

         மீண்டும் தேடுதல் வேட்டை.

         எதிர்வீட்டுப் பெண்மணி சொன்னார், “பக்கத்திலேயே ஒரு ஸ்கூல் இருக்கு. சுமாரா இருக்கும். பரவாயில்லே. ஃபீசும் கம்மி தான். வேணுமானாப் பாருங்க.”

         அந்த சுமார் பள்ளிக்குப் போனார்கள். நல்ல வேளை சேர்க்கை இன்னும் துவங்கவில்லை.

         “அட்மிஷனுக்கும் வகுப்பு துவங்குவதற்கும் இடைவெளி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு. நாங்கள் மட்டும் தான் அதைக் கடைப்பிடிக்கிறோம்.

         உங்கள் குழந்தையைச் சேர்த்துக் கொள்கிறோம். ஸ்கூல் ஃபீஸ், அட்மிஷன் ஃபீஸ், ஸ்பெஷல் ஃபீஸ்,  புத்தகம் எல்லாம் சேர்த்து 16500 ரூபாய் கட்டிவிடுங்கள். இந்த விலாசத்தில் ஸ்கூல் யூனிஃபார்ம் வாங்குங்கள். ஜூன் முதல் தேதி குழந்தையை அழைத்துக் கொண்டு வாருங்கள்.”

         அப்பாடா, ப்ரீகேஜி பிரச்சனை தீர்ந்தது. அடுத்த வருஷம் எல்.கே.ஜி. இங்கே படிக்கக் கூடாது. வேறு நல்ல பள்ளியாக இப்பொழுதிலிருந்தே பார்க்க வேண்டும்.

         ஜூன் பிறப்பதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே குழந்தையை ஸ்கூலுக்குப் போகப் போகிறோம் என்று சொல்லிச் சொல்லித் தயார் செய்தாகி விட்டது. அந்த நாளும் வந்தது. புதுச் சீருடை போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளில் எல்லாம் போய் “புதூ தத்தை, ஊனிஃபாம்” என்று காண்பித்து விட்டு வந்தான் குழந்தை.

         முதல் நாள். எல்லாக் குழந்தைகளும் தாய் தந்தையுடன் வந்திருந்தார்கள். பூஜைகள் நடந்தன. ஒரு மணி நேரத்தில் அவரவர் குழந்தையுடன் வீடு திரும்பினார்கள். நாளை முதல் முறையான வகுப்பு என்று சொன்னார்கள்.

         மறுநாள். குழந்தை உற்சாகத்துடன் சீருடை மாட்டிக் கொண்டு தாயுடன் பள்ளிக்குப் போனான். கேட் அருகில் போனவுடன் அங்கிருந்த ஒரு ஆயா தாயை வெளியிலேயே நிறுத்தி விட்டுக் குழந்தையை மட்டும் வெடுக்கென்று பிடுங்கி உள்ளே தூக்கிக் கொண்டு போனார். மிரட்சியில் அழுதது குழந்தை. சில விநாடிகளில் சத்தம் நின்று விட்டது.

         ஆபரேஷன் தியேட்டரிலும், நர்சரி வகுப்பறைகளிலும் என்ன நடக்கிறது என்பது வெளி உலகிற்குத் தெரியாது. முன்னதில் நோயாளி மயக்க நிலையில் இருப்பார். பின்னதில் குழந்தைகள் நடப்புகளை வாய் விட்டுச் சொல்லத் தெரியாதவர்கள். கண நேரம் கூடச் சும்மா இராமல் ஆட்டம் பாட்டம் துள்ளல் என்று இருக்கும் சக்தியே வடிவமான 30 குழந்தைகளை மூன்று மணி நேரம் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பது இரண்டாவது தாயான அந்த ஆசிரியைக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் வரும்போது குழந்தைகள் உற்சாகமாக வருவார்கள். அந்த உற்சாகம் விடுதலை பெற்ற மகிழ்ச்சியா, இது தான் நம் தலையெழுத்து என்று குழந்தை தன்னைத் தானே உணர்ந்து கொண்ட ஞானப் பரிபக்குவமா, தெரியாது.

         நாட்கள் ஓடின. தினசரி, குழந்தையை அழ அழப் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பும்போது சிரிப்புடன் வருவதும் வழக்கமாகிவிட்டது. குழந்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படும் சிறார் பாடல்களைத் தன் மழலை மொழியில் உதிர்க்கும்போது பெற்றோர் அக மகிழ்ந்தனர். ஒரு நாள் பாடல்களின் நடுவே    அவன் சொன்ன ஒரு சொல் வித்தியாசமாக இருக்கவே, மறு நாள் தாய் ஆசிரியையிடம் கேட்டாள்.

         “மிஸ், தூக்கத்திலே குழந்தை டார்க் ரூம், டார்க் ரூம் னு அடிக்கடி சொல்றானே, அது எந்த ரைமிலே வருது?”

         “அதுவா, அது ஒண்ணுமில்லே. இன்னொரு பையன். மகா சேட்டை. அவனைக் கொஞ்சம் வழிக்குக் கொண்டு வருவதற்காக டார்க் ரூமிலே போட்டுப் பூட்டிடுவேன்னு சும்மா சொன்னது அது.”

         ஒரு நாள், பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் குழந்தை “ஊனிபாஃம் வாந்தாம்” என்று தகராறு செய்தான். “யூனிஃபார்ம் வேண்டாமென்றால் விட்டுவிடேன், சாதாரணச் சட்டையைப் போட்டு அழைத்துக் கொண்டு போ. இவன் என்ன ராணுவப் பயிற்சிக்கா போகிறான்? என்றான் அவளது கணவன். “இன்னிக்கு ஒரு நாளைக்கு இடம் கொடுத்தா இதுவே வழக்கமாயிடும்” என்று கூறித் தாய் அவனுக்கு வலுக்கட்டாயமாக அதை அணிவித்து அழ அழக் கூட்டிக் கொண்டு போனாள். மதியம் திரும்பும் போது வழக்கம்போல உற்சாகமாக இருந்தான். மாலையில் கணவன் வீடு திரும்பியதும், “பார்த்தீங்களா, காலையில் சற்று நேரம் அழுதானே தவிர சமாதானம் ஆகிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டு நாம் அவனுக்கு யூனிஃபார்ம் அணிவிக்காமல் அழைத்துச் சென்றால் அதுவே அவனது ஒழுங்கீனத்துக்கு வழி வகுக்கும். இப்பொழுதிலிருந்தே பழக்கம் பண்ணினால் தான் படிப்பில் சிரத்தை வரும். உயர்ந்த நிலையை அடைய முடியும். அவன் நாசாவின் டைரக்டர் மாதிரி உலகளவில் பெரிய பதவிக்கு வரணும், குறைஞ்சது அப்துல் கலாம் போல ஒரு இஸ்ரோ டைரக்டராகவாவது வரணும் ” என்றாள்.

         நீ சொல்ற அந்த அப்துல் கலாம் ப்ரீகேஜியும் படிக்கல்லே, எல்கேஜியும் படிக்கல்லே. உயர்நிலைப் படிப்பு வரையில் சாதாரணப் பள்ளியில் தான் படித்தார் என்று அவன் நினைத்துக் கொண்டான். சொல்லவில்லை.

         அடுத்த நாள் சாப்பிட மாட்டேன் என்று சண்டித்தனம், அதற்கு அடுத்த நாள் குளிப்பதற்கே மறுப்பு, அடுத்த நாள் பல் துலக்கவே போராட்டம் என்று வர வர அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாகி வந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் எழுந்ததிலிருந்தே அழுகை. “கூல் வாந்தாம், கூல் வாந்தாம்” என்று சிணுங்கிக் கொண்டிருந்தான். கால ஓட்டத்தின் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து, அது வரை வாய் மூடி, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுப் பெரியவர்கள் இப்பொழுது வாய் திறந்தார்கள். “இது என்ன பெரிய கிளாசா, ஒரு நாளைக்கு கொஞ்சம் விட்டுப் பிடியேன். அழ விடாதே” என்றாள் குழந்தையின் பாட்டி.

         “அவங்க மிஸ் சரியாத் தான் சொன்னாங்க, வீட்டிலே பெரியவங்க இருந்தா செல்லம் குடுத்துக் குழந்தையைக் குட்டிச் சுவராக்கிடுவாங்கன்னு. உங்க காலம்னு நினைச்சீங்களா, இப்பல்லாம் 99 சதவீதம் வாங்கினாப் போதாது, ஒரு அரை மார்க் கால் மார்க் கூட வாங்கினவன் அடிச்சுகிட்டுப் போயிடுவான். நாள் தவறாம ஸ்கூலுக்குப் போனாத் தான் படிப்பிலே ஈடுபாடு வரும்.” இது தாய்.

         குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தூக்கியபோது அவன் தன் முழு பலத்துடனும் திமிறிக் கொண்டு தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். சமாளிக்க முடியாத நிலையில் தாய் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டாள். அது வரையில் பிறர் அடிக்கப்படுவதைக் கூடப் பார்த்திராத அந்தப் பி்ஞ்சு உடல் துடித்து விட்டது. சுற்றி நின்றவர்கள் கண்களில் நீர் ததும்பியது. அவனுடைய முரண்டல் நின்றது. அழுது கொண்டே சென்றவனைப் பள்ளியில் விட்டு வந்தாள் தாய். மதியம் அவனை அழைக்கப் போனபோது அவனுடைய ஆசிரியை சொன்னார், “குழந்தை அழுகிறான் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து விடாதீர்கள். அதுவே வழக்கமாகிவிடும்.” குழந்தை அழவில்லை என்றாலும் அவனது முகத்தில் இருந்த மலர்ச்சியைக் காணவில்லை.

         மாலையில் உடல் கொதித்தது. காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டி மருந்து வாங்கி வந்தாள். இரவு தூங்கும் போது இடை இடையே அவன் விசிக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்போது “தாக் ஊம் வாந்தாம்” என்று அவனது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

         தாய் தூங்கவில்லை. ஆத்திரப்பட்டுக் குழந்தையை அடித்து விட்டோமே என்று அழுது கொண்டிருந்தாள். இவனை எப்படி அழாமல் பள்ளிக்குப் போக வைப்பது என்று யோசித்துக் கொண்டும் இருந்தாள்.

         தந்தை தூங்கவில்லை. குழந்தைக்குப் பள்ளிச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்வதற்கான மன முதிர்ச்சி இன்னமும் வரவில்லை என்பதை அவன் அறிந்து கொண்டான். கட்டாயப்படுத்தாமல் தன் இயல்புப்படி விட்டாலே அவனுடைய அறிவு வளரும் என்பதைத் தன் மனைவிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

         பெரியவர்களும் தூங்கவில்லை. குழந்தைகளின் குதூகலத்தை, குறுகுறுப்பை, கற்பனையை, துள்ளலை, எதையும் வியப்புடன் பார்த்து மகிழும் பால் மனத்தை இந்தக் காலக் கல்வி அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்துகிறதே, இவர்கள் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிறார்களே என்று மனத்துக்குள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

         இதோ பொழுது புலரப் போகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் துவங்க இருக்கிறது.

         அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தாய் செய்யும் செயல்களைச் சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. தன் மகனைச் சான்றோன் ஆக்கி, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க வேண்டும் என்ற ஆசை அது. அது என்றும் நிலைத்திருக்கும்.

    Share
  • பணப்பொருத்தம்!…

    எஸ். கோதண்டராமன்

     

    1 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர………….. ”

    “சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”

    “இதுவும் ப்ரொபஷன் தானே. ”

    “சாரி, டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”

    2 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”

    “பி.டெக். எந்த காலேஜ்? ”

    “சேலம். ”

    “சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”

     

    3 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”

    “வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”

    “பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”

     

    4 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”

    “ஒரு நிமிஷம். ”

    “பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”

    “பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”

    “என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”

     

    5 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”

    “என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”

    “அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”

    “என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”

    “அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”

    “என்னடி சொல்றே நீ? ”

    “ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”

    “ஏண்டி? என்னடி ஆச்சு? ”

    “பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”

    “என்னடி சொல்றே? ”

    “கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”

    “ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி?

    “அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான்.  நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க”

     

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 1

     

    -சு. கோதண்டராமன்-

    பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

          நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

          பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?

          வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

          தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

          வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.

    ஒன்று: பரம் பொருள்

                    பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

                எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –

    வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

                வேதம் புகன்றிடுமே ஆங்கோர்

                வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

                வேதமறியாதே

                நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று

                நான்மறை கூறிடுமே ஆங்கோர்

                நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்

                நான்மறை கண்டிலதே.

    வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

                அலையும் அறிவிலிகாள் பல்

                லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

          டாமெனல் கேளீரோ என்று பாரதி கேட்கிறார்.

                நாம் என்ன செய்கிறோம்? மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம். இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

                எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

                பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்

                பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

      “ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

    பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி

                புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்

                சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்

                ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்

                நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

                நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்

                யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே

                யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே      

     

                தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

                தீயை வளர்ப்பவர் மூடர்

                உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

                ஓர் பொருளானது தெய்வம்

    என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

    பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்

                எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்

                நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்

                சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி

                அல்லா அல்லா அல்லா

    இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

    விண்டுரைக்க அறிய அரியதாய்

                விரிந்த வான வெளியென நின்றனை

                அண்டம் கோடி வானில் அமைத்தனை

                அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

      பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்

    தேவரும் தானாய் திருமகள் பாரதி

    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

     

          இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

          தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

          உள்ளொளியாகி உலகெலாம் திகழும்

          பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ

          ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்

          தேவதேவா சிவனே கண்ணா

          வேலா சாத்தா விநாயகா மாடா

          இருளா சூரியா இந்துவே சக்தியே

          வாணீ காளீ மாமகளேயோ

          ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள

          யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே

          வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

        சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

    காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

                பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

                சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை

                தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா

                தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா

                சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

     

                அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள்,  வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

                உலகின்பக் கேணிஎன்றே

                நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

                நாயகிதன் திருக்கை

    Share