Tag: கணேஷ் வெங்கட்

  • முதல் நாள்

    கணேஷ் வெங்கட்

    விஷால் ஒரு தொழிலதிபரைப் பற்றிய புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தான். அவன் படிக்கும் மேனேஜ்மெண்ட் பள்ளியில் நடைபெறும் ஒரு செமினாரில் சிறப்புரை ஆற்ற அந்தத் தொழிலதிபர் வருவதாக திட்டம் இருந்தது. க்ரக்ஸ் திரிவேதி என்று பரவலாக அறியப்படுகிற தொழிலதிபர் அவர். பிளாஸ்டிக் பைகள் மற்றும் குட்கா போன்றவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர். மீரட்டில் சாதாரண அச்சகமொன்றில் ஆபரேட்டராக இருந்த திரிவேதி இருபது ஆண்டுகளில் இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர் என்ற ஸ்தானத்தை எட்டியவர். மத்தியிலும் உத்திரப் பிரதேச மாநிலத்திலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் எல்லா அரசியல்வாதிகளுடன் உறவு பேணி தன் நிறுவனத்துக்கும் தன் தொழில் துறைக்கும் சாதகமான கொள்கைகளை அமல் படுத்த வைப்பதன் வாயிலாக அசாதாரண முன்னேற்றத்தை பதிவு செய்தவர். இந்தியாவெங்கும் பத்துக்கும் மேலான தொழிற்சாலைகள் ; கூட்டு முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் மூலம் போலந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் எல்லாம் கிளை பரப்பியிருந்தது அவருடைய “க்ரக்ஸ்” நிறுவனம். அவர் வந்து தலைமையுரை ஆற்றப் போகும் கருத்தரங்கை தொகுத்தளிக்கும் பொறுப்பு விஷாலுக்கு தரப் பட்டிருந்தது. விஷால் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தான். அவருடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் எதைப் பற்றி பேசுவது என்றெல்லாம் ஒத்திகையெல்லாம்  பார்த்து வைத்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திரிவேதி கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையென்று சொல்லி விலகிக் கொண்டார்.

    இதற்கெல்லாம் நடுவில் ஒரு நாள் திரிவேதியை சந்தித்துப் பேசியதாக ஆர்த்தி வந்து சொன்ன போது அவனால் துளி கூட நம்ப முடியவில்லை.

    “அவ்வளவு பெரிய ஆளை எப்படி நீ சந்திக்க முடியும்…சும்மா கதை அடிக்காதே” என்றான்.

    ஆர்த்தி தன் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தில்லி வந்து விஷாலுடன் வசிக்கிறாள். புலந்த்ஷஹரில் வசிக்கும் அவளுடைய பெற்றோரைப் பொறுத்த வரை அவள் நொய்டாவில் ஒரு கால்-சென்டரில் வேலை செய்கிறாள் என்றும். தன் நண்பிகளுடன் காஜியாபாதில் தங்கியிருக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஹவுஸ்-கீப்பிங் கம்பெனியில் ஒரு சாதாரண வேலை அவளுக்கு கிடைத்திருந்தது.

    “இல்லை நிஜமா அவரைப் பார்த்தேன்….இன்னிக்கு கன்னாட்பிளேசில் இருக்கிற ஸ்டார் பிளாசா ஓட்டலில் வேலை செய்ய என்னை அனுப்பியிருந்தாங்க…அங்க இருந்த பார்-இன் நாற்காலிகளை நான் துடைத்துக் கொண்டிருக்கும் போது அவர் பாரில் தனியாக உட்கார்ந்து கொண்டு குடிச்சிட்டிருந்தார்”

    ”அப்புறம்”

    “அவரே என்னிடம் பேச ஆரம்பிச்சார்….அவருடைய அம்மாவின் சொந்த ஊரும் நம்ம ஊர் தான்….நம்ம ஊர்ப் பெண் என்று சொன்னார்….எங்க வேலை செய்றேன்னு கேட்டார்…சொன்னேன்…ஆசையிருந்தா அவர் கம்பெனியில் அவருடைய பெர்சனல் அசிஸ்டெண்டாக சேர்கிறாயான்னு கேட்டார்…என்ன சொல்றதுன்னு தெரியாம நின்னேன்….ஒரு கார்டில் அவருடைய எக்ஸிக்யூடிவ் ஒருத்தர காண்டாக்ட் பண்ணச் சொன்னார்”

    நோய்டாவில் செக்டர் 62-இல் க்ரக்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. கார்ப்பரேட் ஆஃபீஸ் பத்து மாடி கட்டிடம். கார்ப்பரேட் ஆஃபீசின் பின்புறம் சேர்மன் ஆஃபீஸ் இருக்கும் கட்டிடம் இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம். இக்கட்டிடத்தில் திரிவேதியும் அவருடைய பர்சனல் ஸ்டாஃபும் மட்டும் வேலை செய்தார்கள்.

    ஆர்த்தியின் நேர்முகத்தை ஜோஷி மேடம் என்று அழைக்கப்பட்ட ஒருத்தி எடுத்தாள். ஜோஷி மேடத்துக்கு நாற்பது வயது இருக்கலாம். மிகக் கவர்ச்சியான பாணியில் புடவை அணிந்திருந்தாள். தலையை குட்டையாக வெட்டியிருந்தாள். ஆர்த்தி தேர்வு செய்யப்பட்டாள். அன்றே வேலை நியமனக் கடிதம் வழங்கப் பட்டது. தற்போதைய வருவாயை விட மூன்று மடங்கு அவளுடைய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அவளுடைய சிறு வருவாய் மற்றும் விஷாலின் தந்தை அனுப்பிவைக்கும் பணம் – இவற்றினால் அவர்களிருவரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இச்சூழ்நிலையில் ’க்ரக்ஸ்’ தரும் சம்பளம் கூரையைப் பொத்துக்கொண்டு விழும் தங்கம்!

    அன்றைய தினம் ஆர்த்தியின் ஆச்சரியம் நிற்பதாகத் தெரியவில்லை. ஜோஷி மேடம் “சேர்மனைப் பார்க்க பல்வேறு உயர்பதவியாளார்கள் மற்றும் பெரும்புள்ளிகள் வந்து போகும் இடம் இது. கீழ் வேலை செய்பவர்கள் எல்லாம் அழகாக உடை அணிய வேண்டும் என்று சேர்மன் விரும்புவார். கூந்தலை அழகாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். புதிதாக நாகரீகமாக உடை வாங்கிக் கொள்ள உனக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும். நாகரீக ஆடைகளில் எதை வேண்டுமானாலும் அணியலாம். கர்நாடகமான உடைகள் தவிர்க்கப்படல் வேண்டும்” என்றாள். இருபதாயிரம் ரொக்கமும் உடன் கிடைத்தது. கம்பெனி விதிகளின் படி எல்லா ஊழியர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆர்த்திக்கு ஒரு தனியார் மருத்துவமனையின் முகவரி தரப்பட்டது.

    அடுத்த நாள் மாலை ஆர்த்தியும் விஷாலும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று நவநாகரீக உடைகள் வாங்கினார்கள். ஆர்த்திக்கான உடைகள் வாங்கிய பின் மிச்சமான பணத்தில் விஷாலுக்கும் உடை வாங்கி பரிசளித்தாள்.

    புதிதாக வாங்கிய உடை இறுக்கமாக இருந்தது. தோள்கள் தெரியும் உடை அணிவது அவளுக்கு இதுவே முதல்முறை. புலந்த்ஷஹரில் இருந்த நாட்களில் சல்வார்-கமீஸ் தான் அணிவது வழக்கம். தில்லி வந்த பிறகு ஜீன்ஸ்-டாப்ஸ் என்று ஆகி விட்டது. ஊரிலிருந்து கொண்டு வந்த உடைகளை எல்லாம் வீட்டை சுத்தம் செய்ய வரும் வேலைக்காரிக்கு கொடுத்து விட்டாள். விஷாலுக்கு அன்று கல்லூரி இல்லை. அவள் உடை அணிந்து காட்டிய போது, அவன் வாய் விரிய பார்த்துக்கொண்டிருந்தான். “ஏய்..ஏய்” என்று கண்ணடித்தவாறு நெருங்கினான். அவள் “போடா” என்று சொன்னவாறு பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அவன் அவள் கையை இழுத்து அவளை வீட்டுக்குள் இழுத்தான். இருவரும் முத்தமிட்டுக்கொண்டார்கள். “சரி…நான் போகணும்” என்று விலகினாள். ”சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவேன் என்று தெரியவில்லை. உனக்கு போன் பண்ணுகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

    காலையில் நடந்தததை நினைத்ததும் அவள் இதழில் புன்னகை ததும்பியது. உதட்டை மடித்து புன்னகையை அடக்கிக் கொண்டாள். மார்புப் பகுதியை அடிக்கடி தொடும்படியாக இருந்தது. பிரா அணியாமல் இருப்பதும் முதல் தடவை. ரொம்ப சின்ன வயதிலிருந்தே அவளுக்கு பிரா அணியும் பழக்கம். பருவமெய்துவதற்கு சில வருடங்கள் முன்னரே அவளுடைய அம்மா அவளை பிரா அணிய வலியுறுத்தினாள். தோள் தெரியும் உடையை வாங்குவதற்கு முன்னர் ட்ரயல் ரூமில் பிராவைக் கழட்டாமலேயே போட்டுப் பார்த்தாள்.

    சேர்மனின் இரண்டு சீனியர் காரியதரிசிகளில் ஒருத்தியான அஞ்சலி மேடம் (இன்னொருத்தி ஜோஷி மேடம்!) “என்ன அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கறே? எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு” என்று கேலி பண்ணினாள். “ஒண்ணும் இல்லக்கா…..” என்று வெட்கத்துடன் புன்முறுவலித்தாள் ஆர்த்தி.

    ஜோஷி மேடம் ரொம்ப நேரம் கழித்து திரிவேதி சாரின் அறையிலிருந்து வெளியே வந்தாள். “அஞ்சலி! எனக்கு தலைவலிக்கிறது. டாக்டர் பிரசாத்திடமிருந்து மாத்திரை வாங்கிவரப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு. எங்கோ கிளம்பிச் சென்றாள். அஞ்சலி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை ஆர்த்தி பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்து விட்டாள். அஞ்சலி மேடமும் மற்ற பெண்களும் வேலையெதுவும் செய்வதாகத் தெரியவில்லை. மேக்-அப்பை சரி பார்ப்பதும், கம்ப்யூட்டரில் சாட் செய்வதுமாக இருந்தார்கள்.

    “சிகரெட் குடிப்பியா?” என்று அஞ்சலி மேடம் கேட்டாள்.

    “பழக்கம் இல்லக்கா” என்றாள் ஆர்த்தி.

    “வாயேன் உலாத்திவிட்டு வருவோம்” என்று அஞ்சலி அழைக்கவும் ஆர்த்தி அவளுடன் சென்றாள். மொட்டை மாடிக்கு வந்ததும் அஞ்சலி சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள்.

    “ஹ்ம்ம் என்ன பாக்கேஜ்ல வந்திருக்க” என்று ஒரு தோரணையாகக் கேட்டாள்.

    தயக்கத்துடன் தன் சம்பளம் எவ்வளவு என்ற தகவலைச் சொன்னாள்.

    “ஹ்ம்ம்…இதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சிட்டிருந்தே”

    “____ அக்கா”

    “லேட் நைட் வோர்க் இருக்கும்னு ஜோஷி மேடம் சொன்னாங்களா”

    ஏதோ ஆஃபீசர் மாதிரி அஞ்சலி மேடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது ஆர்த்திக்கு பிடிக்கவில்லை. ஆர்வமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “என்ன சைஸ்?” என்று அஞ்சலி மேடம் கேட்டதும் அதிர்ச்சியானாள்.

    “என்ன மேடம் இப்படியெல்லாம் கேட்குறீங்க”

    “ஏன்….ஜோஷி மேடம் கேட்கலியா?”

    “இல்ல மேடம்…அப்படி கேட்டாலும் பதில் சொல்லணுமா என்ன?”

    அஞ்சலி வாயை மூடிக் கொண்டாள். மேலே எதுவும் பேசவில்லை. சிகரெட் புகைத்து முடித்ததும் தன் சேலையை சரி செய்து கொண்டாள். பிரக்ஞையின்றி சேலை கொசுவத்தைப் பிரித்து கட்டிக் கொண்டாள். ஆர்த்திக்கு வெட்கமாக இருந்தது. வேறு திசையில் பார்த்தாள்.

    காரியதரிசிகளின் அறைக்கு திரும்பியவுடன், ஜோஷி மேடம் இண்டர்காமில் போன் செய்து ஆர்த்தியை முதல் ஃப்ளோரில் இருக்கும் மெடிக்கல் ஆஃபீசரின் அறைக்கு வருமாறு அழைத்தாள். அறைக்கு வெளியே டாக்டர் பிரசாத் என்று எழுதியிருந்தது. கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள். டாக்டர் பிரசாதிற்கு ஐம்பது வயது இருக்கலாம். தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, “வெல்கம் டு க்ரக்ஸ் க்ரூப்” என்று கை குலுக்கினார் பிரசாத். ஜோஷி மேடம் “பிரசாத் டியர், ப்ரோசிஜர் படி ஆர்த்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்யணும்..நேத்து பிளட் சாம்பிள் கொடுத்துட்டு வந்துட்டா” என்றாள்.

    டாக்டர் பல்ஸ் செக் செய்தார். ரத்த அழுத்தத்தை மெஷர் செய்தார்.

    “லேப்பில் இருந்து ரத்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடுச்சி…எல்லாம் நார்மல்…” என்று சொன்னார். ரிப்போர்ட் இருந்த உறையை ஜோஷி மேடத்திடம் தந்தார்.

    மூன்று மணியளவில் திரிவேதி ஆர்த்தியை கூப்பிட்டனுப்பினார். அவருடன் ஆங்கிலேயர் ஒருவர் அமர்ந்திருந்தார். திரிவேதி ஆர்த்தியை கூர்ந்து பார்த்தார். பின்னர், ”உட்கார்” என்றார். ஆங்கிலேயர் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் மெள்ள உட்கார்ந்தாள். ஆங்கிலேயருக்கு ஆர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார். திரிவேதியும் ஆங்கிலேயரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். ஆர்த்திக்கு அவ்வளவாகப் புரியவில்லை. பசையெடுத்து ஒட்டிக்கொண்ட புன்னகையை வீசியவாறே உட்கார்ந்திருந்தாள். திரிவேதி டீ பாட்டில் இருந்த டீயை சர்வ் செய்யச் சொன்னார். கோப்பைகளில் டீயை பதவிசாக ஊற்றி இருவருக்கும் தந்தாள். சந்திப்பு முடிந்து ஆங்கிலேயர் கிளம்பு முன் கோட் ஸ்டாண்டில் இருந்த கோட்டை எடுத்து வருமாறு பணிக்கப்பட்டாள். அந்த ஆங்கிலேயரை லிஃப்ட் வரை வந்து திரிவேதி வழியனுப்பிவிட்டார். “அவரை கேட் வரை விட்டுவிட்டு வா!” என்று ஆர்த்தியிடம் சொல்லப்பட்டது, “ஒக்கே சார்” என்று புன்னகை மாறாமல் சொன்னாள். ஆங்கிலேயர் லிஃப்ட்டுக்குள் புன்னகைக்கவும், அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். காரில் ஏற்றி விடும் போது “தேங்ஸ் ப்ரெட்டி கேர்ள்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார் ஆங்கிலேயர்.

    ஐந்து மணி வாக்கில் ஜோஷி மேடம் ஆர்த்தியிடம் வந்து “ஏற்கெனவெ சொன்னா மாதிரி, பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை லேட் சிட்டிங் இருக்கும். நாளைக்கு பாஸ் நியூயார்க் போறதாலே அவருக்குன் இன்னிக்கு லேட் நைட் உட்காருவாரு….இன்னிக்கு உன்னை லேட் சிட்டிங் பண்ணச் சொல்லியிருக்காரு…உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை தானே!”

    “இல்லை மேடம்”

    ஆறு-ஆறரை வரை எல்லாக் காரியதரிசிகளும் சென்று விட்டார்கள். சேர்மன் ஃப்ளோரில் ஒரு ஈ-காக்கை இல்லை. அவ்வப்போது பட்லர் ஒருவன் பானங்களை சேர்மனின் அறைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தான். சேர்மன் அறையில் இருந்து ஆங்கில இசை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஆர்த்தி தனியே உட்கார்ந்திருந்தாள். ஃபெமினா பத்திரிக்கையின் பழைய இதழ்கள் அஞ்சலி மேடத்தின் மேஜையில் இருந்தன. அவற்றை புரட்டி அதனுள்ளில் இருந்த புகைப்படங்களில் மாடல்கள் அணிந்து கொண்டிருந்த உடைகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் விஷாலுடன் எஸ் எம் எஸ்-சில் உரையாடலும் நடத்திக் கொண்டிருந்தாள். அன்று காலை முதல் அவளுக்கு பல தடவை ஐ லவ் யூ சொல்லிவிட்டான். போனில் முத்தமழை வேறு. சேர்மனின் அழைப்புக்காக காத்திருக்கையில் வந்த விஷாலின் குறுஞ்செய்திகள் ஆர்த்தியை அன்றிரவு கோடு தாண்டும் ஆசையை பிரகடனப்படுத்தின. விஷாலின் ஆர்த்தியின் காதல் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு வருடமாக இருவரும் சேர்ந்து வேறு வசிக்கின்றனர். ஆர்த்தியின் அன்புக்கட்டளைக்கு இதுவரை கீழ்ப்படிந்து வந்திருக்கிறான் விஷால். இன்றைய நாள் வரை அவர்களுடைய காதலின் உடலியல் பரிமாணங்கள் ஒர் எல்லைக்கோட்டுக்குள் அடங்கியிருக்கின்றன. ஆர்த்திக்கு எல்லை மீறும் ஆசை வந்ததில்லை. அவனின் கோரிக்கையை “அப்புறம் பார்க்கலாம்” “உன் படிப்பு முடியட்டும்” “பொறுமை காத்தோரின் கையில் அவனியே வந்தமரும்” என்றெல்லாம் கூறி அன்புடன் மறுதளிப்பாள் ஆர்த்தி.

    பட்லர் வந்து திரிவேதி சார் கூப்பிடுகிறார் என்று கூறவும் விஷாலுக்கு “சார் கூப்பிடுகிறார்” என்ற குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சேர்மன் அறைக்குள் நுழைந்தாள். திரிவேதி குர்த்தா-பைஜாமா அணிந்திருந்தார். அமருமாறு ஜாடை செய்தார். போனில் யாருடனோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். டாக்டர் பிரசாத் ஜோஷி மேடத்திடம் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட் இருந்த என்வலப் திரிவேதியின் மேஜையில் கிடந்தது. போனை கீழே வைத்ததும், ஐஸ் பாக்ஸிலிருந்து ஒர் ஐஸ் துண்டத்தை பானம் நிரம்பியிருந்த கோப்பையில் போட்டார்.

    புலந்த்ஷஹர், ஆர்த்தியின் குடும்பம், – இவை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர் “பத்துப்பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை லேட் சிட்டிங் செய்யணும் என்று ஜோஷி மேடம் சொன்னார்களா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

    “சார், நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லவேயில்லையே?” என்று கேட்டாள்.

    ”கான்பரன்ஸ் ரூமுக்குப் போவோம்”

    வராண்டாவின் கடைசியில் இருந்த கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றார்கள். கான்பரன்ஸ் ரூமுக்குள் ஒரு கதவு இருந்தது. அதைத் திறந்தால் உள்ளே படுக்கையறை. ஆர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “வேலை அதிகமாக இருந்தால், வீட்டுக்குப் போகாமல் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளத்தான் இந்த அறை”

    கட்டிலில் திரிவேதி உட்கார்ந்தார். “ஹ்ம் உட்கார்” என்று சொன்னார். “இல்லை சார் பரவாயில்லை” என்று நின்றுகொண்டிருந்தவளை, அவள் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்தார் ;, ஆர்த்தியின் கையை பிடித்து இழுத்து கட்டிலின் மேல் விழும்படி செய்தார். அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் லாவகமாக ஆர்த்தி அணிந்திருந்த உடையின் பின்புற ஜிப்பை திறந்து இழுத்துவிட்டார். உடையை இடுப்புக்கு கீழ் இறக்கிவிட்டு, ஆர்த்தியின் மேலாடையில்லாத உடம்பை வேட்கையுடன் பார்த்தார்.

    “வேண்டாம் சார்” என்று எழ எத்தனித்தவளை, திரும்ப கட்டிலில் இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டார். தலைகீழாக அவள் மேல் படுத்து, அவளின் உடையை முழுக்க உருவி தரையில் எறிந்தார். சில வினாடிகளில் அவளை வெறியுடன் அனுபவிக்க ஆரம்பித்தார். ஆர்த்தி கண்ணை மூடி ஒர் இயந்திரம் போல கிடந்தாள். வெண்ணிற மீசை அவளின் மூக்கில் உரசும் படி, தன் வாயால் ஆர்த்தியின் வாயை மூடி, மூர்க்கமான விசையுடன் இயங்கினார். இச்சை  தீர்ந்ததும், களைத்து விழுந்தார். தஸ்புஸ்ஸென்று மூச்சை வெளியேற்றினார். ஆர்த்தி கண்ணை திறக்காமல் சில நிமிடங்கள் படுத்திருந்தாள். சத்தம் ஓய்ந்தது மாதிரி இருந்த போது, கண்ணைத்திறந்தவள், திரிவேதியின் கண்கள் அவளையே மறு உயிர் பெற்ற இச்சையோடு நோக்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள். உடையை எடுக்க எழுந்தவளை அவரின் கரங்கள் மீண்டும் இழுத்தன. “கொஞ்ச நேரம் இரு…இன்னும் வேலை இருக்கு” என்றவர் ஆர்த்தியின் உடலை படுக்கப் போட்டு இறுக்கிக் கட்டிக்கொண்டார். அடுத்த நிமிடம் அவளின் மேல் படுத்துக் கொண்டு இன்னொரு முறை அனுபவித்தார்.

    திருப்தியுடன் பக்கவாட்டில் படுத்து திரிவேதி கண்ணை மூடிய அடுத்த கணம், ஆர்த்தி அவசரமாக அவசரமாக உடையால் தன் உடலை மறைத்துக் கொண்டு வராண்டாவில் ஓடினாள். வராண்டாவில் ஒருவரும் இல்லை. அவளுடைய இருக்கையை அடைந்து கைப்பையை எடுத்துக் கொண்டு வாஷ்-ரூமுக்கு சென்றாள். வாஷ்-ரூமில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தை வெறித்துப் பார்த்த வாறே நின்றிருந்தாள். முகம் அலம்பி, உடைகளை அணிந்து, கூந்தலை சரி செய்து கொண்டு கிளம்பினாள். வராண்டாவில் திரிவேதி சுருட்டு பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

    “கிளம்பிவிட்டாயா?

    ஆர்த்தி மவுனமாக இருந்தாள்.

    “ஜோஷி மேடம் இண்டர்வியு அன்னிக்கு கொடுத்த பணத்துல எத்தனை ட்ரெஸ் வாங்கிக்கிட்டே”

    “இரண்டு”

    ”இப்போ போட்டுட்டிருக்கிறது அதுல ஒண்ணா?

    “ஹ்ம்”

    பைஜாமாவுக்குள் கைவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிலவற்றை அவளுக்கு கொடுத்தார்.

    “இதே மாதிரி இன்னும் ரெண்டு-மூணு ட்ரெஸ் வாங்கிக்க…..என் ட்ரைவர்ல யாராவது ஒருத்தர் உன்னை வீட்டுல விட்டுடுவாங்க…நீ காஜியாபாதில தானே இருக்க?”

    ஆர்த்தி தலையாட்டினாள்.

    “சார் நான் நாளைக்கு…..” என்று இழுத்தாள்.

    “பரவாயில்லை…லீவு எடுத்துக்கோ….நாளை மறு நாள் வந்தா போதும்,,,,ஜோஷி மேடத்துக்கு நான் சொல்லிடறேன்”

    வீடு திரும்பிய போது விஷால் அவளை அணைத்துக் கொண்டான். “யோசிச்சியா?” என்று கேட்டவனின் கண்களில் எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. ஆர்த்தி பதில் சொல்லவில்லை.

    பேச்சை மாற்றி “முதல் நாள் எப்படி இருந்தது?” என்று கேட்டான்.

    “முப்பதாயிரம் இலாபம்…..இன்னும் ரெண்டு மூணு டீசெண்டான ட்ரெஸ் வாங்கிக்க சொல்றாங்க….”

    தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்தாள். அதற்குள் அவளுடைய கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டான் விஷால்.

    டிபன் காரியரை எடுத்து அவள் சாப்பிடத்தொடங்கியதும் பேண்ட் மாட்டிக் கொண்டு எங்கோ கிளம்பினான்.

    “எங்க போறே?”

    ”கொஞ்சம் வேலையிருக்கு”

    “பார் மூடியிருக்குமே”

    “பாருக்கு போகலை”

    “பொய்”

    “நான் என்ன பண்ணினா உனக்கு என்ன?” – அவன் குரலில் கோபம் தெறித்தது.

    “எதுக்கு கோபம்?”

    “அதைப் பத்தி உனக்கென்ன?”

    ”என் ராசாவுக்கு என்ன கோபம்னு எனக்கு தெரியாதா?”

    பாதி சாப்பாட்டில் எழுந்து அவனருகில் ஓடி வந்து அவன் இதழில் அழுத்தி முத்தமிட்டாள்.  சாப்பாடு முழுக்க சாப்பிடப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டு டிபன் கேரியரிலேயே அடைத்து வைக்கப்பட்டது. நாளைக்கு சூடு பண்ணி சாப்பிட்டுக் கொள்ளலாம் ! விஷாலின் கோபம் அன்றிரவே தணிந்தது. அன்றைக்குப் பிறகு விஷால் மாலை நேரங்களில் கோபம் கொள்வது நிரந்தரமாக நின்று போனது.

    Share
  • அருவி சத்தம்

    கணேஷ் வெங்கட்

    சிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.
    நான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும  இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.
    இவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.
    ++++++
    “இது என்னது? கவிதையா? சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது? துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன? எண்ணினாயா?…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”
    புகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.
    ”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா? ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா? என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”
    ”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”
    ”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”
    இதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா?” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.
    பு,பெ,எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.
    “என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”
    “வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”
    ராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.
    சி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
    சி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.
    “இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா?”
    ”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”
    “இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
    “நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”
    +++++
    ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.
    பிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.
    லாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.
    எதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.
    “சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”
    “போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”
    ”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”
    “போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”
    “அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன?”
    என் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.
    செயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே? கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.
    +++++
    கிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.
    “நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு.
    தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”
    “நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.
    தொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க
    இந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”
    “தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”
    “ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”
    “உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
    கொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா? இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”
    “அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.
    கதையின் மையப் பிரச்சினை
    முக்கிய கதாபாத்திரங்களின் குணம்
    அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)
    எவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன!”
    பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
    +++++
    என் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.
    நான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர். “எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு?” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.
    என் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.
    “நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”
    மணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    +++++
    கிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன.  சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”
    +++++
    கிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்
    +++++

    Share