Tag: கருமலைத்தமிழாழன்

  • புதியதோர் சமுதாயம் படைப்போம்

         பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    சாதிகளின்   பிரிவுயின்றி   உயர்வு   தாழ்வு

    சண்டையின்றிச்   சாத்திரத்தின்    பேத   மின்றி

    ஆதிக்க    மதங்களின்றி   வணங்கு   கின்ற

    ஆண்டவனில்   முரண்பட்ட   கருத்து   மின்றி ;

    உழைக்கின்ற   வர்க்கமென்றும்   உழைப்பைத்   தின்றே

    உடல்கொழித்த   வர்க்கமென்றும்   இருந்த   தெல்லாம்

    தழைக்கின்ற   பொதுவுடைமை   நிலையி   னாலே

    தகர்ந்ததென்ற    புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

    வாக்களிக்கத்   தொகைகொடுக்கும்    வழக்க   மின்றி

    வன்முறைகள்   மிரட்டல்கள்   ஏது   மின்றி

    ஆக்கத்தை   அளிப்போரைத்   தேர்ந்தெ   டுக்கும்

    அமைதியான    தேர்தலாக   நடத்தித்  தேர்ந்த

    ஆட்சியிலே   ஊழலின்றி   அமைச்ச  ரெல்லாம்

    அதிகார   ஆர்ப்பாட்டம்   ஏது  மின்றிக்

    காட்சிக்கே   எளியவராய்   மையூட்   டின்றிக்

    கடமைசெய்யும்   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

    ஆற்றினிலும்   ஆலைகளின்   கழிவு  சேர்த்தே

    ஆகாய   வெளியினிலும்   மாசு   சேர்த்தே

    ஊற்றினையும்   தூய்மையிலா   நீராய்   மாற்றும்

    உன்மத்தச்    செயல்களின்றி   இயற்கை    காத்தே ;

    போற்றுகின்ற    இளைஞரெலாம்    வெளிநாட்   டிற்கே

    போகாமல்    தாய்நாட்டை   வளமாய்  ஆக்கி

    ஏற்றதொரு   காட்டாக   உலகின்   முன்னே

    ஏற்றுகின்ற   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

     

     

    Share
  • பாரதிவழி ஓங்கச்செய்வோம்

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    ஆயிரமாம்   தெய்வங்கள்   உண்டாம்   என்போர்

    அறிவிலிகள் !   அறிவொன்றே    தெய்வ   மென்று

    பாயிரமாய்    வேதங்கள்    சொல்லும்   சொல்லைப்

    பகுத்தறிவாய் !   மாடனைக்கா    டனையும்    போற்றி

    மாயிருளில்    மதிமயங்கி    வீழு    வோர்கள்

    மதியிலிகள் !    அவலைநினைத்   துமியை   மெல்லும்

    வாயினைப்போல்   உள்ளவர்கள்   என்றே   தம்மின்

    வரிகளிலே   மூடத்தை    ஓட    வைத்தோன் !

     

    சாதிகளின்   வேரறுக்கத்    தன்னு   டம்பின்

    சதிநூலை    அறுத்தெறிந்தே    பூணூல்   தன்னை

    ஆதிதிரா    விடனென்னும்    கனக   லிங்க

    அருந்தோழன்    மார்பினிலே   அணிய   வைத்து

    வேதியர்கள்    பறையரென்னும்    வேறு   பாட்டை

    வெறிதன்னைப்   போக்குகின்ற   செயலைச்   செய்து

    சாதித்த   புரட்சியாளன்     இவனைப்   போல

    சரித்திரத்தில்   பெயர்சொல்ல   யாரே   உள்ளார் !

     

    தான்உண்ண   உணவின்றி    வறுமை   தன்னில்

    தவித்திட்ட   போதினிலும்   கவிதைச்   சோற்றைத்

    தேன்சுவையில்   பிறருண்ண   ஆக்கி   வைக்கத்

    தெவிட்டாமல்  நாமதனை   உண்ணு   கின்றோம்

    ஊன்வருத்தி   அவர்வடித்த   கவிதை   யெல்லாம்

    உயிர்துடிப்பை    நமக்கின்றும்   ஏற்றும்   போதும்

    ஏன் பிறர்கால்    நத்துதற்கே    ஓட   வேண்டும்

    எழுந்திடுவோம்   பாரதிவழி     ஓங்கச்    செய்வோம் !

    Share