Tag: கி. கண்ணன்

  • தமிழ்க் களஞ்சியம் இணையதளம்: ஒரு பகுப்பாய்வு

    கி. கண்ணன்

    முன்னுரை:

    இணையம், இன்று உலகைத் தன் கைக்குள் கொண்டுவந்துள்ள ஓர் ஊடகமாகும். நூல்களாகக் கொண்டுவர முடியாத பல தகவல்களை இணையதளம் உடனுக்குடன் அளிக்கும் ஓர் ஒப்பற்ற பிணைப்பாக விளங்குகிறது. இலக்கியம், ஆன்மீகம், அரசியல், பொழுதுபோக்கு என்று இதனுள் இல்லாதததே இல்லை எனலாம். சமூக வலையகம், வலைப்பதிவு, வலைத்தளம் என்று பலவகைகளில் இணையமானது இன்று வளர்ச்சி பெற்றள்ளது. அவ்வகையில் இணையதளங்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இதில் தமிழ்க்களஞ்சியம்.காம் என்ற இணையதளம் எவ்வாறு தமிழ்மொழி, தமிழிலக்கியம் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்கிறது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    களஞ்சியம்:

    களஞ்சியம் என்ற சொல் பொதுவாக ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும். குறிப்பாக தமிழில் களஞ்சியம் நெல் போன்ற தானியங்களை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும் என்று களஞ்சியத்திற்கு விளக்கமளிக்கின்றது விக்கிபீடியா. அறிவியல் களஞ்சியம், கலைக் களஞ்சியம், வாழ்வியற் களஞ்சியம் என களஞ்சியம் பலவகைப்படும். இணையத்தில் விக்கிபீடியா என்ற கட்டற்ற இணையம் மட்டுமே உலகளாவிய தகவல்களைத் தருகின்றது. தமிழ் இணையத்தில் தமிழ்க்களஞ்சியம் என்பது தமிழ் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒன்றிணைக்கின்றது.

    தமிழ்க்களஞ்சியம் (www.tamilkalanjiyam.com):

    thamizhkkalanjiyam

    தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல், கணேசன், பெருமாள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் கிடைக்கப்பெற்ற ஓர் அற்புத பொக்கிஷம் தமிழ்க் களஞ்சியம் என்னும் தமிழ் சேமிப்பான் ஆகும். இது எண்ணற்ற இலக்கியங்களையும் ஆவணங்களையும் பதிவு செய்து தற்கால மக்களின் அறிவிற்கும் வருங்கால தலைமுறையின் பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்க்களஞ்சியம்.காம் இணையதளம், என்று இதற்கு முன்னுரை அளிக்கிறார் ஆசிரியர் சக்திவேல்.

    பகுப்பு:

    இந்தத் தமிழ் களஞ்சியம் இணையதளத்தில்,
    இலக்கியம்,
    தமிழ் உலகம்,
    அறிவியல்
    பொதுஅறிவு
    ஆன்மீகம்
    ஜோதிடம்
    மருத்துவம்
    பெண்கள் பற்றி
    நகைச்சுவை
    கலையலகம்

    என்ற பத்து பகுப்புக்களின் கீழ் பலவகையான தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. களஞ்சியம் என்பதன் பொருளுக்கிணங்க பலதரப்பட்ட செய்திகளையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் தொடர்பான செய்திகளைத் தருவதாக அமைந்துள்ளது.

    இலக்கியம்:

    தமிழ் இலக்கியம் தொடர்பான அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் காணக் கிடைக்கின்றது. சங்க இலக்கியம், இலக்கணங்கள், காப்பிய இலக்கியங்கள், புராணங்கள், தல புராணங்கள், சைவ இலக்கியங்கள், வைணவ இலக்கியங்கள், கிறித்துவ இலக்கியங்கள், இசுலாமிய இலக்கியங்கள், சமண இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், அவ்வையார் நூல்கள், கம்பர் நூல்கள், ஒட்டக்கூத்தர் நூல்கள் என பல பிரிவுகளும் மேலும், இதில் கவிதைகள், புதுக்கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    தமிழ் உலகம்:

    இத்தலைப்பின் கீழ், தமிழ் இலக்கிய நூல்கள், தமிழக மன்னர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்க அறிஞர்கள், தமிழக தலைவர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், மாவட்டங்கள், ஊர்கள், சுற்றுலா தலங்கள், திருத்தலங்கள், அரசியல் கட்சிகள், ஆறுகள், ஏரிகள், மலைகள், கோட்டைகள், தமிழ்ப்பெயர்கள், தமிழ்ப் பணியார்கள் என்று தமிழ் மொழி, தமிழ்நாடு சார்ந்த தகவல்கள் இதில் ஒன்று திரட்டப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் சுட்டிப் படங்களுடனும் விளக்கப்பட்டுள்ளன.

    மேலும் இப்பிரிவில், தமிழ் தேடுபொறி, அகரமுதலி, தமிழ் ஆங்கில அகராதிகள், கலைச்சொற்கள், மின்னஞ்சல், உரையாடல், கட்டுரைகள் போன்ற இணைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    அறிவியல்:

    அறிவியல் என்னும் பகுப்பின் கீழ் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் தொடர்பான பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில், கணிதவியல், மின்னியல், மின்னணுவியல், கனிமவேதியியல், கரிமவேதியியல், வானவியல், இரசவாதம், கணிப்பொறியியல், ஒளியியல், ஒலியியல், உளவியல், அணுஇயற்பியல், தாவர வகைப்பாட்டியல், உடல் அமைப்பியல், உடற்செயலியல், மரபியல் போன்றனவும் இது தொடர்பான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இப்பகுதியில், அடிப்படை கணிதவியல், அடிப்படை இயற்பியல், அடிப்படை வேதியியல், அடிப்படை உயிரியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் விதிகள் போன்றன இடம்பெற்று விளக்கப்பட்டுள்ளன.

    பொது அறிவு:

    இப்பகுப்பின் கீழ், உலக வரலாறு, இந்திய வரலாறு, இந்து, கிருத்துவ, இசுலாமிய குழந்தைப் பெயர்கள் இன்னும் பல பொது அறிவு சார்ந்த தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொது அறிவுத் தகவல்கள், பொது அறிவுக் கட்டுரைகள், கேள்வி பதில்கள், சாதனைகள் ஆகியனவும் இதில் இடம்பெற்றள்ளன.

    ஆன்மீகம்:

    மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினையும் பற்றிய குறிப்புகள் இதில் காணப்படுகின்றது. சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாமியம், சமணம் ஆகிய மதங்கள் தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருமால். சிவன், முருகன், விநாயகர், அம்மன் ஆலயம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரக்கோயில்கள், கட்டுரைகள், மந்திரம், யந்திரம், சித்தர்கள் போன்றன பற்றி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. யோகக்கலைகள், யாகங்கள் பற்றியும் இத்துடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும்,

    ஜோதிடம்:

    தமிழ்க் களஞ்சியத்தில், அதிக பிரிவுகளைக் கொண்டு காணப்படுகிறது ஜோதிடம் பகுப்பாகும். பொது ஜோதிடம், வேத ஜோதிடம், நாடிஜோதிடம், எண் ஜோதிடம், ஆரூடங்கள், கைரேகை, பரிகாரங்கள், ஜாதகக் களஞ்சியம் என்று தலைப்பும் அதனைத் தொடர்ந்து உங்கள் ஜாதகம், பொருத்தம், பஞ்சாங்கம், சனி, குரு, ராகு-கேது ராசி பலன்கள், நவக்கிரக மந்திரங்கள், ஆரூடச் சக்கரங்கள் யோகங்கள் ஆகியன அதன் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஜோதிடக் கட்டுரைகள், குறிப்புகள், கேள்வி-பதில்கள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

    மருத்துவம்:

    அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் தேவையான பகுதியாக இரு இருக்கிறது. சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். ஹோமியோபதி பற்றிய விவரங்களுடன் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

    பெண்கள் பகுதி:

    அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்பு, சமையல் செய்முறை, குழந்தை வளர்ப்பு, மகளிர் மன்றம், கோலம். மருதாணி என்ற தலைப்புகளின் கீழ் பெண்கள் தொடர்பான குறிப்புகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இக்களஞ்சியத்தில், நகைச்சுவையும், கலையுகம் என்ற பகுப்புகளின் கீழ் நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள், கருவிகள், சினிமா செய்திகள் போன்றனவும் இ்டம் பெற்றுள்ளன.

    முடிவுரை:

    இணையம், கட்டற்ற கலைக்களஞ்சியமாக இருக்கின்றது என்பதற்கு தமிழ்க்களஞ்சியம் ஓர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இதில், இலக்கியம், குழந்தைகள், சினிமா, பொழுதுபோக்கு, பெண்கள், ஆன்மீகம் என்று அனைத்து விதமான மக்களும் பயன்படுத்தும்படி இலக்கியத் தரத்துடன் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வகைகள் பிரிக்கப்பட்டுள்ள முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படியும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

     

    Share
  • தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும்

    கி. கண்ணன்.

    முன்னுரை:
    தமிழ் மொழியை கணிப்பொறிக்கும் இணையத்திற்கும் கொண்டு செல்வதில் எழுத்துக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சைகைளாலும் மெய்ப்பாடுகளாலும் வளர்ந்த தமிழ்மொழி இன்று இணையத்தில் பலவாறு பயன்படும்படி உயர்ந்துள்ளது. கணினியில் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்யமுடியும், ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை முற்றிலுமாக மாறி இன்று தாய்மொழியான தமிழிலேயே தட்டச்சு செய்யலாம் என்ற நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட உயர்தனிச் செம்மொழியை கணினியிலும் இணையத்திலும் பதிவேற்றம் செய்யும்பொழுது தமிழ் எழுத்துருக்களின் வரலாற்றினையும் வகைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    மொழியும் எழுத்தும்:
    மனிதன் தோன்றி மொழி தோன்றாத பொழுது தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை மெய்ப்பாடு, சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் ஆகியவற்றின் முலமாக பிறருக்குத் தெரிவித்தான். அதுவரை ஊமை மொழிகள் (Dumb Language) என்றனர் என்று முதல் மொழிக்கு விளக்கமளிக்கிறார் தோ. பரமசிவம். இம்முதல் மொழியினைத் தொடர்ந்து பேச்சு மொழியாக மாறியதும் எழுத்துக்கள் உருவாகி வளர்ச்சியடைந்தன. கல்லெழுத்து, பிராமி எழுத்து, வட்டெழுத்து, நாகரி எழுத்து, தமிழி எழுத்து என்று உருமாறி தற்போதுள்ள தமிழ் எழுத்து என பலவாறு மாறிவந்திருப்பதை தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியில் காண முடிகிறது.

    கணினி குறியீட்டு முறை:
    கணினியில் அச்சேற்றப்படும் எழுத்துக்கள் எம்மொழி எழுத்துக்களாயினும் அவை 0,1 என்ற எண்களைக் கொண்டே கணினி இயங்குகின்றது. “கணிப்பொறி என்பது கணிப்பானாக மட்டுமே பயன்படும் போது எவ்வித சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களுக்குச் சேமிக்கும் பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும்.”[1] இவற்றை திரையில் எழுத்துக்களாக காண்பதற்கு எழுத்துருக்கள் (Font) தேவைப்படுகின்றது. இத்தகைய எழுத்துருக்களை பெற குறியீடுகள் அவசியமாகின்றது. ஒரே குறியீட்டைக் கொண்டு ஒரு எழுத்தைத்தான் உருவாக்க முடியும் என்பதாலும் தமிழில் அதிக எழுத்துக்கள் இருப்பதாலும் முழுமையாக எழுத்துக்களைப் பயன்படுத்துவது சிரமமாகவும் இருந்தது.

    தமிழில் எழுத்துரு தொடர்பான மென்பொருள்களின் வளர்ச்சியினால் இன்று இத்தகைய சிரமங்கள் சரிசெய்யப்பட்டாலும் சில தவிர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களைச் சேர்த்து தட்டச்சு செய்யும் நிலையில் இதனை உணரலாம்.

    எழுத்துருக்களின் வளர்ச்சி:
    கணினியில் இடும் கட்டளைகளை எழுத்துக்களாக மாற்றிக்காட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 7 பிட்டு(எ.கா.1000001), 8 பிட்டு (00001111) என்ற இரும எண் குறியீட்டு முறையில் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட கணினி மொழிகளாகக் கொள்ளப்பட்டன.

    கணினி மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பைட்டாகக் கணக்கிடப்படுகிறது. ஆங்கில எழுத்திற்கான எழுத்துரு வடிவத்தினை ஆஸ்கி ASCII (American Standard Code for Information Interchange) என்று அழைக்கப்பட்டது. இது 7 பிட்டு அளவுள்ளதாகக் இருந்தது. இதனைத் தொடர்ந்து 8 பிட்டு அளவிற்கு விரி ஆஸ்கி அமைப்பு உருவாக்கப்பட்டது. அட்டவணையில், ஆங்கில எழுத்துக்கள் போக மீதமுள்ள 128 – 255 வரையிலான இடங்களில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை ஒன்றிணைத்து பொதுவான முறை உருவாக்கப்பட்டது. இதற்கு இஸ்கி (ISCII – Indian Standard Code for Information Interchange) எழுத்துரு எனப் பெயரிட்டனர். இத தமிழ் விசைப்பலகையில் எழுத்துருக்களைக் கொண்டு வருவதற்கு முதன்மையாக அமைந்தது. இதில் மென்பொருள் பொறியாளர்களின் உதவியுடன் உலக தமிழறிஞர்கள் வடிவமைக்கப்பட்ட தமிழ் வடிவ எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

    தமிழ் லெசர், அணங்கு, ஆதமி, ஆதவின், திருவின், மயிலை, அஞ்சல், சரஸ்வதி, கணியன், வானவில் போன்ற எழுத்துருக்களைப் வல்லுனர்கள் பலரும் உருவாக்கினர். இதனால் ஒருவர் தட்டச்சு செய்த தகவல் அந்த எழுத்துரு படிப்பவரிடம் இருந்தால் மட்டுமே அவ்வெழுத்து திரையில் தோன்றும் நிலை உருவானது. இது பெரும் குழப்பத்தினையே உருவாக்கியது. ஆகவே, தமிழ் எழுத்துருக்களை முறைபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டிஸ்கி (TSCII – Tamil Standard Code for Information Interchange) என்ற முறை உருவாக்கப்பட்டது. இது தமிழ்மொழியில் ஏற்பட்ட அடுத்தகட்ட வளர்ச்சியைக் குறிக்கும்படி அமைந்தது. தற்போது நடைமுறையில் யுனிக்கோடு முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

    “உலக அமைப்பாகிய UNICODE குழுமத்தின் முயற்சியால் 16 பிட்டு அமைப்பில் பன்மொழிக்குறியீட்டு முறையும் தோன்றியது. அந்த யுனிக்கோடு அமைப்பில் இந்திய மொழிகளுடன் தமிழும் இருந்தது…. 128 இடங்களில் தமிழ் உயிர்எழுத்துக்கள், அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள், ஆய்த எழுத்து பிற உயிர் மெய் எழுத்துக்களின் துணைக் குறியீடுகள் ஆகியன இடம்பெற்றன.”[2] இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட எழுத்துருக்கள் மேற்கூறிய பல பெயர்களுடன் வெளியாயின.

    ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழிலும் ஒரே எழுத்துரு குறியீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், “இரண்டு உருக்குறியீட்டு முறைகளைத் தமிழக அரசு அங்கீகாரம் செய்து தரப்படுத்தியது. இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே மாநில அரசின் எழுத்துத் தரப்பாடு செய்யப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.”[4] இவை, 1. டாம் (TAM – Tamil Monolingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் எழுத்துக்களுக்காவும் 2. டாப் (TAB – Tamil Bilingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் – ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. யுனிக்கோடு முறையில் TAM, TAB போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தக்கூடியவை.

    தமிழ் எழுத்துரு வகைகள்:

    charactemap.tam1
    தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் அரசின் பங்களிப்புடன் வெளியாயின. தனி நபர்களாலும் குழுக்களாலும் பல வடிவங்களில் எழுத்துருக்கள் இன்றளவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை விசைப்பலகையின் அமைப்பிற்கேற்ப விண்டோஸ், லினக்ஸ், மேக்கின்தோஸ் போன்ற இயங்கு தளங்களில் பயன்படும்படி அமைக்கப்பட்டிரு்கின்றன.

    மயிலை
    1985 ஆம் ஆண்டில் கு. கல்யாண சுந்தரம் அவர்களால் “மயிலை” எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதில், தமிழ்க் குறியீடு இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்களைப் பெற முடியும். உ.ம். a என்பது அ என்றும், aa/A என்பது ஆ என்பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

    முரசு அஞ்சல்
    1986 இல் முத்து நெடுமாறன் என்பவரால் உருவாக்கப்பட்டது அஞ்சல் எழுத்துரு. இது எழுத்துருவை மட்டுமே கொண்டிராமல் எழுதி, மின்னஞ்சல், செயலி, விசைப்பலகை போன்ற வகைகளும் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஆண்ட்ராய்டு பேசிகளில் பயன்படும்படி Application ஆக பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கு என்ற எழுத்துருவிற்கு க+உ என்றும், சோ என்பதற்கு ச+ஓ என்றும் எழுத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கீ மேன்
    செந்தமிழ் எழுத்துரு என அழைக்கப்படும் கீமேன் எழுத்து வடிவம் பெரும்பாலும் அச்சக பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. டாவ்லெட் சாப்ட் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட இது 285 விதமான எழுத்துரு வடிவங்களைக் கொண்ட பன்முக வடிவமாகும். பெரும்பான்மை யுனிக்கோடு வடிவத்துடன் ஒத்திருந்தாலும் இதில் சில எழுத்துருக்கள் விசைப்பலகையின் அமைப்பில் மாற்றம் பெற்றுள்ளன. கீமேன், விதவிதமான எழுத்துருக்கள் வடிவத்தில் புத்தகம் உருவாக்கம் போன்ற அச்சுப் பணிக்கு இது உகந்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏ.கலப்பை
    தமிழ் இணையதளத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டது இ. கலப்பை எனப்படும் எ.கலப்பை. இதில் ஐந்து விதமான எழுத்துருக்கள் காணப்படுகின்றன.
    1. ஆங்கில ஒலியியல் முறை 2. பாமினி, 3. தமிழ் 99, 4. தட்டச்சு முறை, 5. இன்ஸ்கிரிப்ட் என்ற ஐந்து வகையான எழுத்துரு வடிவங்களைக் கொண்டது.

    NHM எழுதி
    தமிழ் எழுத்துருக்களில் இன்று பலரிடமும் பயன்படுத்தப்படுவதாக இவ்வெழுத்துரு அமைந்துள்ளது. கூகுள் குரோம், நெருப்புநரி (Firefox), ஒபேரா போன்ற எல்லாவிதமான இயங்குதளத்திலும் இவ்வமைப்பு பயன்படுகின்றது. தமிழிலிருந்து கீழே குறிப்பிட்ட இந்திய மொழிகளுக்கு எழுத்துக்களை மாற்றும் வசதி இதில் உள்ளது. இதனை இணையத்திலிருந்து இலவச மென்பொருளாகப் தரவிறக்கம் செய்து,
    1. Alt + 0 – சாதாரண விசைப்பலகை எழுத்துருவையும்
    2. Alt + 1 – ஒருங்குறி தமிழ் 99 எழுத்துருவையும்
    3. Alt + 2 – ஒருங்குறி தமிழ் ஒலியியல் முறையையும்
    4. Alt + 3 – ஒருங்குறி பழைய தட்டச்சு எழுத்துருவையும்
    5. Alt + 4 – ஒருங்குறி தமிழ் பாமினி எழுத்துருவையும்
    6.Alt + 5 – ஒருங்குறி தமிழ் இன்ஸ்கிரிப்ட் முறையினையும் கொண்டு காணப்படுகிறது. ஒருங்குறி முறையில் அமைந்திருப்பதால் அனைவராலும் பயன்படுத்தும்படி உள்ளது. இந்த எழுத்துருவில் தமிழ், அசாம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் போன்ற பத்து இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    பொன்மடல், பொன்மொழி எழுத்துரு
    ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என்ற இருவேறு இயங்கு தளங்களில் தட்டச்சு செய்யும் வசதி. காலத்திற்கேற்ப புதுமை என்ற விதத்தில் பல புதிய வசதிகள் இந்த எழுத்துருவில் காணப்படுகின்றன.
    1. தவறாக எழுதினால் ல, ர, ன ஒலிமாற்றச் சொற்களையும் சந்திப்பிழை திருத்தப்பட்ட சொற்களையும் இரு சொல் இணைந்ததையும் உடனுக்குடன் காட்டும்.
    2. சொற்பிழைகளை உடனுக்குடன் திருத்துவதுடன் திருத்துவதற்கு பல நிறங்களைக் காட்டுகின்றன.
    3. தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம் போன்ற தட்டல் அமைப்புகளுடன் கே12 என்னும் T9 போன்ற ஒரு மிக எளிய புதிய முறை இதன் சிறப்பு. 9 விசைகளில் செயல்படும் இதைக்கற்க 10 நிமிடங்கள் போதும்.
    4. ஆங்கிலத் தட்டச்சு இருப்பதால் இருமொழிகளுக்கும் பொன்மடல் ஒன்றேபோதும்.
    5. யூனிக்கோடு, டேம், டேப் குறியீடுகளில் உள்ளிடலாம்.
    6. புதிய பெயர்ச்சொற்களை அகராதியில் சேர்க்கலாம்.
    7. சுயதிருத்த வசதியால் ஒன்றிரண்டு எழுத்துக்களை எழுதியே பல சொற்களைச் சேர்க்கலாம். [3]
    இது போன்ற பல சிறப்பியல்புகளைக் கொண்டதாய் பொன்மடல், பொன்மொழி எழுத்துருக்கள் அமைந்துள்ளது.

    மென்தமிழ்
    சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற தெய்வசுந்தரம் அவர்களால் உருவாக்கப்பட்ட மென்தமிழ் எழுத்துரு கணினியில் தமிழ் மொழியியல் தொடர்பாகக் கொண்டுவரப்பட்டது. இம்மென்பொருள், ”தமிழ் ஆவணங்களை உருவாக்கி, அவற்றின் மொழி அமைப்பைச் சீரமைத்துப் பதிப்பிக்கும் அனைத்துக் கருவிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. கணினித்தமிழின் வளர்ச்சியையொட்டி தமிழ்மொழிக் கருவிகள் (சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி, அகராதிகள்) தொடர்ந்து மென்மேலும் செழுமைப்படுத்தப்படும்.”[4] என்ற உயரிய நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் சில…
    அழகி – ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் எழுத்துருவை காணலாம்.
    ஸ்ரீலிபி – தமிழ் ஒருங்கறி, தமிழ் 99, தட்டச்சு முறை போன்ற எழுத்துருக்களில் பயன்படுத்தலாம்.
    கம்பன் – விசைப்பலகையுடன் கூடிய ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை டேம், டேப் போன்றவற்றிற்கு உரு மாற்றி போற்ற எழுத்துருக்களில் பயன்படுத்தப்படுகிறது.
    வாணி – எழுத்துப்பிழை திருத்தி.
    நாவி – சந்திப்பிழை திருத்தி
    சுரதா – வலைக்கு உகந்த எழுத்துரு
    கண்டுபிடி – வலை எழுத்திற்கு உரியது
    போன்றவனவற்றையும் குறிப்பிடலாம்.

    முடிவுரை:
    தமிழ் எழுத்துரு, கணினி பயன்பாட்டிற்கு என தினந்தோறும் புதுப்புது மாற்றங்களுடனும் வடிவங்களுடனும் இன்றளவும் மென்பொருள்களை உருவாக்கி வருகின்றனர். ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை, பாமினி, இன்ஸ்கிரிப்ட் முறைகளிலிருந்து இன்று அழகி, வாணி, நாவி, பொன்மடல், மென்தமிழ், சுரதா, கண்டுபிடி போன்ற மென்பொருள்களாலும் கணினியில் மட்டுமல்லாது இணையத்திலும் தமிழினை எழுத்து வடிவம் மாறாமலும் பிழையில்லாமலும் காணக்கிடைக்கின்றது. அகராதிகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறையும் தற்போது வழக்கத்தில் உள்ளது. இத்தகைய எழுத்துருக்கள் தமிழ் மொழியினை அடுத்தத் தலைமுறைக்கு எவ்வித சேதமுமின்றி முழுமையாகக் கொண்டுபோய் சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    சான்றெண் விளக்கம்:

    1. www.pathivugal.com, கணத்தமிழ், தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பும் சிக்கல்களும்
    2. முனைவர் மு. பொன்னவைக்கோ, இணையத் தமிழ் வரலாறு, ப. 10
    3. www.Learnfunsystems.com./Products. பொன்மடல்
    4. www.lingsoftsolutions.co

     

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

    Share
  • தமிழ் இணைய இதழ்கள்: ஓர் இலக்கியப் பார்வை

    –கி. கண்ணன்.

     

    முன்னுரை:

    தமிழை வளர்ச்சிப் பாதையில் இணையத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இணையத்தைப் பொறுத்தமட்டில் இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள், திரட்டிகள், சமூகக் குழுக்கள் என்று அனைத்திற்கும் அத்தகைய பொறுப்பு உள்ளது. அவ்வகையில் இணையத்தில் மட்டுமே வெளியாகின்ற இதழ்களின் மூலம் தமிழ் வளர்ச்சியானது எவ்வகையில் மேன்மையடைந்துள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    இணைய இதழ்கள்:

    அச்சேற்றப்பட்டு தனி இதழ்களாக வெளிவருபவை, நாளிதழ், வாரஇதழ், மாதமிருமுறை, மாதஇதழ் என்று காலமுறையினைக் கொண்டு வகைப்படுத்தலாம். இணைய இதழ்கள் கீழ்க்கண்ட மூன்று பெரும் பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.
    1. அச்சில் மட்டுமே வெளிவரும் இதழ்கள் (உ.ம்). தனிச்சுற்றுக்கு உரியவை.
    2. அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவருபவை. (உ.ம்) தினதந்தி, தினமலர், நக்கீரன் போன்றவை.
    3. இணையத்தில் மட்டுமே வெளி வருபவை. (உ.ம்) திண்ணை, பதிவு, முத்துக்கமலம் போன்றவை. “இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.” [1] என்ற விக்கிபீடியாவின் கருத்தினைக் கொண்டு இணையத்தில் வரும் இதழ்களை மட்டுமே இதில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

    இணைய இதழ்களின் வகைகள்:

    இணைய இதழ்கள் அவற்றின் உள்ளடக்கத்திற்குத்தக்கவாறு அவை எவ்வகையான இதழ் என்று அடையாளம் காட்டப்படுகின்றது. அவ்வகையில்,

    1. அரசியல்,
    2. அறிவியல்,
    3. ஆய்வு,
    4. ஆன்மீகம்,
    5. இலக்கியம்,
    6. குழந்தைகள்,
    7. பல்சுவை,
    8. பெண்கள்,
    9. பொழுதுபோக்கு,
    10. மதம்,
    11. மருத்துவம்,
    12. வணிகம்

    என்று இன்னும் வகைப்படுத்திக்கொண்டு செல்லலாம்.

    இலக்கிய இதழ்கள்:

    இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தரும் இதழ்கள் இலக்கிய இதழ்கள் எனப்படும். உலகிலுள்ள எவரும் தமிழ் இலக்கியம் தொடர்பான தகவல்களைப் பெற தமிழில் இணைய இதழ்கள் பெரிதும் உதவி புரிகின்றன. இவ்வகையில் இலக்கியத்தரத்துடனும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இதழ்கள் குறிப்பிடத்தக்க சிலவையே ஆகும்.

    திண்ணை இதழ் (http://puthu.thinnai.com/):

    thinnaiதமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை என்ற வாசகத்துடன் வெளிவரும் இப்பத்திரிகை. திண்ணை, புதிய திண்ணை என இரு வடிவங்களில் வருகின்றது. இதில், அரசியல், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியக் கட்டுரைகள், கடிதங்கள், அறிவிப்புகள், கதைகள், கலைகள், சமையல், கவிதைகள், நகைச்சுவை, வித்தியாசமானவை போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
    “மழை பொழியாத காலத்தும், கோடை காலத்தும் ஓர் அரசு முன்கூட்டியே நீர் சேமிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாத அரசை மக்கள் செறுப்பர் என்பதும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகள் பாதுகாப்பதும் புதிதுபுதிதாக ஏற்படுத்துவதும் ஓர் அரசனின் இம்மை மறுமைக்கான நிலைத்தப் புகழுக்குக் காரணமாகும். போர்பெருக்கத்தை விட நீர்ப் பெருக்கம் செய்யும் அரசையே வரலாறு பதிவு செய்து கொள்ளும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.” [2] என்று இப்பதிவின் மூலம் சங்க இலக்கியப் பாடலுக்கான விளக்கத்தினை நடைமுறை காலத்துடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார் முனைவர். ந. பாஸ்கரன்.

    முத்துக்கமலம் இதழ் (http://www.muthukamalam.com/):

    muthukkamalam2006 முதல் இணையத்தில் பதிவேற்றம் பெற்று இன்றளவும் வெளிவரும் ஒர் இலக்கிய இதழ் முத்துக்கமலம் ஆகும். இதன் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி ஆவார். உலக அளவில், 26.05.2015 வரை 3,05,904 பார்வையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய இணைய இதழாக இருக்கின்றது. மாதம் இருமுறை புதிய பதிவேற்றங்கள் செய்யப்படுகிறது. மேலும், ஆன்மிகம், ஜோதிடம், பொன்மொழிகள், பகுத்தறிவு. அடையாளம், நேர்காணல், கல்வி, கதை, கட்டுரை, கவிதை, குட்டிக்கதை, குறுந்தகவல், சிரிக்க சிரிக்க, சிறுவர் பகுதி, மகளிர் மட்டும், சமையல், மருத்துவம், புத்தகப் பார்வை, சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின் புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள், படைப்பாளர்கள், தினம் ஒரு தளம் போன்ற தலைப்புகளின் கீழ் இலக்கியம் தொடர்பான பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்களின் படைப்பில், “பூம்புகார் நகரத்தில் பலவிதமான தொழிலை நடத்துகின்ற தொழிலாளர் சமுதாயம் அமைந்திருக்கிறது. ஓவியத்தொழில் சிறந்திருந்தமையை மணிமேகலைக் காப்பியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

    வம்ப மாக்கல் கம்பலை மூதூர்
    கடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
    மைஅறு படிவத்து வானவர் முதலா
    எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
    வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
    கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்

    என்ற இப்பாடலில் ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் குறிக்கப்பெறுகின்றனர். எனவே பூம்புகார் நகரில் ஓவியம் தீட்டும் தொழிலாளர்கள் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பது பெறப்படுகிறது.” [3] என்ற விளக்கம் இலக்கிய நயத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    வல்லமை (http://www.vallamai.com/):

    vallamaiஅண்ணாகண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையத்தில் மட்டுமே வெளிவந்துகொண்டிருக்கும் இதழ். பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்னும் பொருண்மையில், இணையத்தில் தமிழை வளர்க்கும் முனைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றது. இதழ்களுக்குரிய குறியீட்டு எண்ணுடன் வெளிவரும் இதழாக இது உள்ளது.

    முகப்பு, நிர்வாகக்குழு, பத்திகள், நேர்காணல்கள், கேள்வி-பதில், திரை, பொது, தலையங்கம், இலக்கியம், நுண்கலைகள் போன்ற தலைப்புகளுடனும் அதன்கீழ் பலதரப்பட்ட பகுப்புகளையும் கொண்டு இது வெளிவருகின்றது.

    ஆய்வுக்கட்டுரை என்ற பகுப்பில் தமிழிலக்கியம் தொடர்பான பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் பலரும் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இதில் “ஐந்திணை ஐம்பது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்” [4] என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் எழுதிய ஆய்வுக் கட்டுரை இலக்கிய நோக்குடன் எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

    ஊடறு (http://www.oodaru.com/):

    oodaruபெண்மையை மையப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிவரும் இணைய இதழ். அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல் என்று பெண் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. உள்ளீடு, ஓவியம், புகைப்படம், கவிதைகள், குறும்படங்கள், நூல்கள் என்ற தலைப்பின் கீ்ழ் பெண்ணியம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. 2010 முதல் இவ்விதழ் இயங்கிவருகின்றது.

    வரலாறு (http://www.varalaaru.com/):

    varalaaru2004 ஆம் ஆண்டிலிருந்து ஆன்மிகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயணிக்கும் இவ்விதழ் மாத இதழாக வெளிவருகின்றது. ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே – என்ற தலைப்பின் கீழ் கோயில்களில் காணப்படும் சிலைகளுக்கும் இதர குறிப்பிற்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பிற்குரியது. சேரசோழ பாண்டியர் காலத்து கோயில்களில் காணப்படும் தொன்மங்களின் அடிப்படையில் அமைந்த நீண்ட நெடிய ஆராய்ச்சித் தொடர் இந்த இதழில் காணப்படுகிறது. இவ்விதழில், கோயில் கட்டடக்கலையில் பயன்படுத்தப்படும் சில கலைச்சொற்களை விளக்கியுள்ளார் மா. நளினி அவர்கள்,

    • அங்கணம் – தூணிடை வழி,
    • சந்திரசீலா – நிலாப்படி,
    • கண்டம் – கழுத்து,
    • அதபத்மம் – கீழ்நோக்குத் தாமரை,
    • ஊர்த்வ பத்மம் – மேனோக்கு தாமரை,
    • பிரதி – மேற்கம்பு,
    • ஸ்தம்பம் – தூண,
    • கலசம் – பானை,
    • லலாய பிம்பம் – நெற்றி வடிவம்
    • விமானம் – இறையகம் [5]
    என்று சமஸ்கிருத கட்டடக்கலை சொற்களை தமிழ்படுத்தியதன் தன்மை உணரமுடிகிறது.

    கீற்று (http://keetru.com/):

    keetruமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தித் தூண்டிக்கொண்டே இருப்பது எம் கடமை”6 என்ற வாசகத்துடன் கீற்று இணைய இதழ் வெளிவருகின்றது. இதில், இலக்கியம் என்னும் தலைப்பில், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில்,

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ
    குவளை உன்கண் குய்ப்புகை கமழக்
    தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
    இனிதெனக் கணவன் உண்டலின்
    நுண்ணிதன் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” [7]

    என்று இல்லற மாண்பில் உணவு சமைத்த முறையினை விளக்கிக் கூறுகின்றார் இப்பதிவின் ஆசிரியர் ப.மணிகண்டன். மேலும், இவ்விதழில்,
    திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், அடுக்களை, அறிவியல், வரலாறு, சிரிப்பூ, சட்டம், தகவல் களம், சுற்றுலா, திசைகாட்டிகள் என்ற தலைப்பின் கீழ் மனித வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் பதிந்துக் கிடக்கின்றன. இதில், பகுத்தறிவினைப் போற்றியும் சாதிய ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிர்த்தும் குரல் கொடுக்கிறது.

    சிற்றிதழ்கள் பகுப்பில், பெருமாள் முருகன் எழுத்து படைப்புரிமைப் பறிப்பும் திறனாய்வு உரிமையும் என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன், அர்த்தநாரி ஆகிய புதினங்களைப் பற்றிய திறனாய்வு பதியப்பட்டுள்ளது உற்றுநோக்கப்பட வேண்டியதாக உள்ளது.

    வெப்துனியா இணைய இதழ் (http://tamil.webdunia.com/):

    webduniaதினமும் பதிவேற்றம் செய்யப்படும் இதழ்களில் வெப்துனியாவும் ஒன்று. பல துறை தொடர்புடைய செய்திகளை தரும் இதழாக இது வெளிவருகின்றது. இதில், செய்திகள், தமிழகம், சினிமா, விளையாட்டு, ஜோதிடம், படங்கள், காணொலி, கருத்துக்களம், பல்சுவை, படத்தொகுப்பு போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

    பல்சுவை பகுதியில் மருத்தவம், சுதந்திரதினம், அறுசுவை, மங்கையர், காதல், இலக்கியம், குழந்தைகள் உலகம் ஆகிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இலக்கியம் பகுதியில் கவிதைப் பிரிவில் சீன மொழிபெயரப்புக் கவிதையாக,

    “ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்.
    நீ விரும்புவது மழையில் நனைவதையா?
    வெயிலில் காய்வதையா? என்று…
    குடை மெதுவாகச் சிரித்தது, பின்னர் சொன்னது
    என் கவலை இதைப் பற்றியது அல்ல… என்று
    பின் எதைப் பற்றியது என்று கேட்டேன்.
    குடை சொன்னது…
    எனது கவலையெல்லாம்
    எப்படிபட்ட அடைமழையானாலும்
    என் மக்களை நனையவிடக் கூடாது
    எப்பேர்பட்ட கொடிய வெயிலானாலும்
    என் மக்களை காயவிடக்கூடாது. [8]

    என்ற கவிதையினை நயத்துடன் பதிவு செய்துள்ளது.

    இவை போன்ற இணைய இதழ்களும் இன்னும் பல இணைய இதழ்களும் இணையத்தில் அன்றாடம் தகவல்களைத் தரும் இதழ்களாக வலம் வருகின்றன. இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேயா, கனடா போன்ற அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களாலும் இதழ்கள் உருவாக்கப்பட்டு இன்றைக்கும் இணையத்தையும் தமிழையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அப்பால் தமிழ், தமிழம், தமிழமுதம், நெய்தல், புகலி போன்ற இதழ்கள் இன்றைக்கும் புதிய புதிய செய்திகளுடன் வெளிவருகின்றன.

    முடிவுரை:

    இணைய இதழ்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன என்பதை மேற்கண்ட ஒருசில இதழ்களின் இலக்கியப் பகுதி விளக்கத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து வெளி நாடுகளில் வாழும் தமிழ் சான்றோர்களாலும் தமிழ்மொழியானது போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அன்றாடம் நிகழும் சம்பவங்களின் இணைய ஆவணம் என்று சொல்லுமளவிற்கு இத்தகைய இணைய இதழ்கள் உலகளவில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதுடன் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.

    சான்றெண் விளக்கம்:

    1. ta.m.wikipedia.org., தமிழ் இணைய இதழ்கள்., நாள் 26.04.2015
    2. puthu.thinnai.com., சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை, நாள்.26.04.2015
    3. www.muthukamalam.com/essay/literature
    4. www.vallamai.com. ஆய்வுக் கட்டுரைகள், நாள். 26.05.2015
    5. www.varalaaru.com/design/ மு. நளினி, தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராமமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு, நாள். 26.04.2015
    6. www.keetru.com
    7. www.keetru.com, இலக்கியம், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள், நாள்.26.05.2015
    8. www.tamil.webdunia.com

     

     


    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.


    Share
  • வலைப்பூக்களில் தமிழ் ஆளுமைகள்

    –கி. கண்ணன்.

     

     

    முன்னுரை
    தமிழ் மொழியின் எதிர்காலம் இணையத்தின் கையில் உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், சங்க இலக்கியத் தமிழ், காப்பிய இலக்கியத் தமிழ், பக்தி இலக்கியத்தமிழ், இக்கால இலக்கியத் தமிழ் என்ற நிலைகளிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று இன்று இணைய இலக்கியத் தமிழ் என்ற உயரிய நிலையில் தமிழ் இலக்கியம் வளர்ந்து வருகின்றது. இணையத்தின் வாயிலாக இன்றைக்கு தமிழ் மொழியின் பரவலை அதிகரிக்க முடியும் என்று நிருபித்திருக்கின்றன வலைப்பூக்கள். இவ்வலைப்பூக்கள், வலைப்பதிவு, வலைக்குறிப்பு, வலைக்குடில் [1] என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. வலைப்பூக்களின் வளர்ச்சி அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு வலைப்பூக்களின் முக்கியத்துவத்தினை நன்குணரமுடிகிறது. அப்படிப்பட்ட வலைப்பூக்களின் வாயிலாக தமிழ் மொழி பெற்றுள்ள வளர்ச்சியினை வெளிக்கொணருவதாக இக்கட்டுரை அமைகிறது.

    வலைப்பூக்கள் அறிமுகம்
    ”வலைப்பூ என்பது எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக்கோப்புகள், ஓவியம், படங்கள், என்பனவற்றை நாமே இணையம் வழி வெளியுலகிற்குத தெரிவிக்கும் இணைய சேவையாகும்.”[2] என்பார் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள். ஆங்கிலத்தில் Blog என்று அழைக்கப்படும் இது இரு இணைய சொற்களின் கூட்டுச் சொல்லாகும். Web – log என்று வழங்கிய வலைப்பூ Blog என்ற பெயரில் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. தமிழில் முதல் வலைப்பதிவு 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் முதல் பதிவை கார்த்திகேயன் இராமசுவாமி என்பவர் பதிவு செய்தார் [3] என்றும் தமிழ் விக்கிபீடியா விளக்கியுள்ளது..

    வலைப்பூ அமைப்பு
    Blog என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு என்றும் வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுது என்றும் பொருள் தருகிறது. Blogger என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுதுபவர் அல்லது வலைப்பதிவு ஆசிரியரைக் குறிக்கின்றது. Blogging என்பது வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவில் எழுதுதல் என்றும் பொருள் தருகின்றது. மேலும்,
    ஒவ்வொரு வலைப்பூவும் கீழ்க்கண்ட சில அடிப்படை அமைப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றன.
    • வலைப்பூவின் பெயர் – வலைப்பூ ஆசிரியர் தன்னுடைய வலைப்பூவிற்கு வைக்கும் பெயர் தன் விருப்பத்திற்கேற்ற விதத்தில் இருக்கும்.
    • வலைப்பூவின் முகப்பு – வலைப்பதிவர் தம்மைப் பற்றியும் தன் வலைப்பூவின் நோக்கம் பற்றியும் விளக்கும் பகுதி.
    • வலைப்பூவின் தலைப்பு – புதியதாக பதிவு செய்யும் படைப்பிற்கு இடும் பெயர் ஆகும்.
    • பூவின் உள்ளமைப்பு – தலைப்பைத் தொடர்ந்த கட்டுரைப் பகுதி.
    • வலைப்பூ பதிப்பித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் – வலைப்பூ ஆசிரியர் தான் பதிப்பிக்கும் பதிப்பின் விவரம் தெரிவிக்கும் பகுதி.
    • பின்னூட்டங்கள் – தான் வெளியிட்ட பதிப்பினைப் படித்த வாசகர்கள் தரும் விமர்சனம்.
    • சேமிப்பகம் – பதிவுகளை சேமிக்கும் பகுதி.
    • இணைப்புகள் – தன்னுடைய வலைப்பூவிலிருந்து வேறொரு தளத்திற்கு செல்லும் பகுதி.
    • வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் – வலைப்பூவின் இருபுறமும் அமைந்திருக்கும் இணைக்கப்படும் பக்கக்கூறுகள் போன்றனவாகும்.

    தமிழ் வலைப்பூக்கள்
    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கணினியில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தமிழில் மென்பொருள்களும் எழுத்துருக்களும் முறையாக வெளிவந்த பிறகுதான் இணையத்தை அனைவராலும் பயன்படுத்த முடிகிறது. அதன் வெளிப்பாடாக, தற்போது தமிழ்மொழியில் நிறைய வலைப்பூக்கள் வெளிவந்து கொண்டிருப்பதைக் கொண்டு அறிய முடிகிறது.

    வலைப்பூக்கள், அவற்றில் பதிப்பிக்கும் ஆசிரியரைப் பொறுத்து அதனைத் தோற்றுவித்த நோக்கத்தினைப் பொறுத்து தமிழின் ஆளுமைகள் மாறுபடுகின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்றால் அதில் தமிழின் வெளிப்பாடு தரமானதாக இருக்குமா என்பது சந்தேகமானதாகவே உள்ளது. மாறாக, இலக்கிய நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட வலைப்பூக்களில் தமிழின் பயன்பாடும் இலக்கியத்தரமும் மிகுந்து காணப்படும். அவற்றில் சில…

    மு.இளங்கோவன் வலைப்பூ

    muelangovan.blogspot.in
    பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களால் muelangovan.blogspot.in [3] என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை இலக்கியம், நாட்டுப்புறம், இலக்கியவாதிகள் பற்றிய விமர்சனம் ஆகியன பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

    இவரது அச்சக ஆற்றுப்படை என்னும் நூலினை வலைப்பூவில் பதிவு செய்து வைத்துள்ளதில் தமிழ் மரபுக் கவிதைகளின்பால் இவருக்கு இருக்கும் ஆர்வத்தை பறைச்சாற்றுவதாய் அமைந்துள்ளது. இவரது வலைப்பூவில் இணைய பயிலரங்கம், கருத்தரங்கம் போன்ற இணையத்தில் தமிழ்மொழி, தமிழிலக்கியம் சார்ந்ததாக உள்ளது.

    manikandanvanathi.blogspot.inமணிவானதி வலைப்பூ
    பேராசிரியர் முனைவர் து. மணிகண்டன் அவர்களால் 2009 ஆம் ஆண்டு முதல் manikandanvanathi.blogspot.in [4] என்னும் பெயரில் வலைப்பூ மணிவானதி என்ற தலைப்புடன் துவங்கப்பட்டு பல இலக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளையும் தமிழ்மொழி சார்ந்த இணைய பயிலரங்கப் பதிவுகளையும் காணமுடிகிறது. இவரது இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் போன்ற நூல்கள் இணையத்திலும் வலைப்பூக்களிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.

    Arivumathi.blogspot.inஅறிவுமதி வலைப்பூ
    கவிஞர் அறிவுமதியின் வலைப்பூ. Arivumathi.blogspot.in [5]  என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவரது படைப்புகள் பெரும்பான்மை கவிதை நடையையே பின்பற்றி இருக்கின்றன. சமூகச் சாடல்கள் அதிகம் காணப்படும் இவரது கவிதைப் பதிவுகளில் எதார்த்தமும் இயல்பான நடைமுறை அவலங்களும் அதிகம் காணப்படுகிறது.

    duraiarasan-blogதுரையரசன் வலைப்பூ
    அழகு தமிழில் இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்வதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் அவர்கள். இவரது வலைப்பூ duraiarasan.blogspot.com [6 ]என்பதாகும். 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவுகளை செய்து வரும் இவர் புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள், அகநானூறு 99 மலர்கள், திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்ற தலைப்பில் பயிலரங்கமும் இணையத்தில் தமிழ்த் தரவுகள் என்ற இணையதள கருத்தரங்கமும் இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளமை வலைப்பூவில் இவரது தமிழ் ஆளுமையைப் பறைச்சாற்றுகின்றது.

    gunathamizhகுணசீலன் வலைப்பூ
    வேர்களைத் தேடி என்ற தலைப்பினைக் கொண்ட www.gunathamizh.com [7] வலைப்பூ பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களால் இன்று வரை தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கலை, இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் சார்ந்த பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். வலைத்தளத்திலும் வலைப்பூவிலும் தமிழ் தரவுகளைப் பதிவு செய்வது இவரது தலையாயப் பணியாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. தமிழ் வலைப்பூக்களைப் பற்றிய தொகுப்பு இவரது பதிவில் தொடர்பாய் உள்ளது நோக்குதற்குரியது.

    இவ்வலைப்பூக்கள் மட்டுமே அல்லாமல் பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் குழந்தைகள் பாட்டு, கவிதை, கட்டுரை என அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்து எண்ணற்ற பல வலைப்பூக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

    வலைப்பூக்களின் இலக்கியப் பணி
    இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள் தமிழ் வலைத்தளத்தில் அதிகமாக வெளிவரத்தொடங்கியுள்ள இந்த இணைய இலக்கிய காலத்தில் வலைப்பூக்களினால் சங்க இ.லக்கிய நூல்களும் அதற்குப் பிறகு தோன்றிய எல்லா வகையான இலக்கண இலக்கிய நூல்களையும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அடுத்த தலைமுறையினரிடையே தமிழ் இலக்கியம் பற்றிய முழுமையன புரிதலை ஏற்படுத்த இத்தகைய வலைப்பூக்கள் பெரிதும் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காகிதங்களில் கரையான்களுக்கு இரையாக்கிய காலம் மாறி இன்று எவ்விதத்திலும் அழியாத நிலையில் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பன்னெடுங்காலமும் மக்கள் படிக்கவும் பயனுறவும் இத்தகைய இணைய பதிவுகள் துணை நிற்கின்றன.

    தமிழ் வலைப்பூக்கள் மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம், பண்பாடு உள்ளிட்ட கருத்தோட்டங்களைத் தாங்கி வருகின்றன. இவற்றின் வருகையால் தமிழ் ஆய்வுப் பரப்பில் புத்தெழுச்சித் தோன்றியுள்ளது.8 என்கின்றார் முனைவர் க. துரையரசன். இலக்கியத் தரம் வாய்ந்த வலைப்பூக்கள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல பூக்கள் இணையத்தையும் தமிழ்மொழியினையும் இன்றும் அலங்கரித்து வருகின்றன.

    முடிவுரை
    கல்வெட்டுகளிலிருந்து ஓலைக்கும் ஓலைகளிலிருந்து காகிதத்திற்கும் மாறிய தமிழ் மொழி இன்று கணினி தமிழாக மாறியிருப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை பதிவின் மூலம் வெளியிடுவதனால் பிற நாடுகளில் வாழும் தமிழ்ச் சான்றோர்களாலும் விமர்சிக்கக் கூடியதாக அமைகிறது. இலக்கிய – இலக்கண வளர்ச்சிக்கும் தமிழின் தொன்மையும் பழமையும் வெளி உலகிற்கு தெரியப்படுத்திட இன்றைக்குக் கட்டாயமான தேவையாக வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் உள்ளன.

    துணை நூற்பட்டியல்
    1. http://ta.m.wikipedia.org/wiki/
    2. முனைவர் துரை. மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், ப. 11
    3. muelangovan.blogspot.in
    4. manikandanvanathi.blogspot.in
    5. Arivumathi.blogspot.in
    6. duraiarasan.blogspot.com
    7. Gunathamih.blogspot.com
    8. முனைவர் க. துரையரசன், இணையமும் இனிய தமிழும், ப. 100

     

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

    Share