–கி. கண்ணன்.

 

முன்னுரை:

தமிழை வளர்ச்சிப் பாதையில் இணையத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இணையத்தைப் பொறுத்தமட்டில் இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள், திரட்டிகள், சமூகக் குழுக்கள் என்று அனைத்திற்கும் அத்தகைய பொறுப்பு உள்ளது. அவ்வகையில் இணையத்தில் மட்டுமே வெளியாகின்ற இதழ்களின் மூலம் தமிழ் வளர்ச்சியானது எவ்வகையில் மேன்மையடைந்துள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

இணைய இதழ்கள்:

அச்சேற்றப்பட்டு தனி இதழ்களாக வெளிவருபவை, நாளிதழ், வாரஇதழ், மாதமிருமுறை, மாதஇதழ் என்று காலமுறையினைக் கொண்டு வகைப்படுத்தலாம். இணைய இதழ்கள் கீழ்க்கண்ட மூன்று பெரும் பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.
1. அச்சில் மட்டுமே வெளிவரும் இதழ்கள் (உ.ம்). தனிச்சுற்றுக்கு உரியவை.
2. அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவருபவை. (உ.ம்) தினதந்தி, தினமலர், நக்கீரன் போன்றவை.
3. இணையத்தில் மட்டுமே வெளி வருபவை. (உ.ம்) திண்ணை, பதிவு, முத்துக்கமலம் போன்றவை. “இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.” [1] என்ற விக்கிபீடியாவின் கருத்தினைக் கொண்டு இணையத்தில் வரும் இதழ்களை மட்டுமே இதில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

இணைய இதழ்களின் வகைகள்:

இணைய இதழ்கள் அவற்றின் உள்ளடக்கத்திற்குத்தக்கவாறு அவை எவ்வகையான இதழ் என்று அடையாளம் காட்டப்படுகின்றது. அவ்வகையில்,

1. அரசியல்,
2. அறிவியல்,
3. ஆய்வு,
4. ஆன்மீகம்,
5. இலக்கியம்,
6. குழந்தைகள்,
7. பல்சுவை,
8. பெண்கள்,
9. பொழுதுபோக்கு,
10. மதம்,
11. மருத்துவம்,
12. வணிகம்

என்று இன்னும் வகைப்படுத்திக்கொண்டு செல்லலாம்.

இலக்கிய இதழ்கள்:

இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தரும் இதழ்கள் இலக்கிய இதழ்கள் எனப்படும். உலகிலுள்ள எவரும் தமிழ் இலக்கியம் தொடர்பான தகவல்களைப் பெற தமிழில் இணைய இதழ்கள் பெரிதும் உதவி புரிகின்றன. இவ்வகையில் இலக்கியத்தரத்துடனும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இதழ்கள் குறிப்பிடத்தக்க சிலவையே ஆகும்.

திண்ணை இதழ் (http://puthu.thinnai.com/):

thinnaiதமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை என்ற வாசகத்துடன் வெளிவரும் இப்பத்திரிகை. திண்ணை, புதிய திண்ணை என இரு வடிவங்களில் வருகின்றது. இதில், அரசியல், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியக் கட்டுரைகள், கடிதங்கள், அறிவிப்புகள், கதைகள், கலைகள், சமையல், கவிதைகள், நகைச்சுவை, வித்தியாசமானவை போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
“மழை பொழியாத காலத்தும், கோடை காலத்தும் ஓர் அரசு முன்கூட்டியே நீர் சேமிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாத அரசை மக்கள் செறுப்பர் என்பதும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகள் பாதுகாப்பதும் புதிதுபுதிதாக ஏற்படுத்துவதும் ஓர் அரசனின் இம்மை மறுமைக்கான நிலைத்தப் புகழுக்குக் காரணமாகும். போர்பெருக்கத்தை விட நீர்ப் பெருக்கம் செய்யும் அரசையே வரலாறு பதிவு செய்து கொள்ளும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.” [2] என்று இப்பதிவின் மூலம் சங்க இலக்கியப் பாடலுக்கான விளக்கத்தினை நடைமுறை காலத்துடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார் முனைவர். ந. பாஸ்கரன்.

முத்துக்கமலம் இதழ் (http://www.muthukamalam.com/):

muthukkamalam2006 முதல் இணையத்தில் பதிவேற்றம் பெற்று இன்றளவும் வெளிவரும் ஒர் இலக்கிய இதழ் முத்துக்கமலம் ஆகும். இதன் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி ஆவார். உலக அளவில், 26.05.2015 வரை 3,05,904 பார்வையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய இணைய இதழாக இருக்கின்றது. மாதம் இருமுறை புதிய பதிவேற்றங்கள் செய்யப்படுகிறது. மேலும், ஆன்மிகம், ஜோதிடம், பொன்மொழிகள், பகுத்தறிவு. அடையாளம், நேர்காணல், கல்வி, கதை, கட்டுரை, கவிதை, குட்டிக்கதை, குறுந்தகவல், சிரிக்க சிரிக்க, சிறுவர் பகுதி, மகளிர் மட்டும், சமையல், மருத்துவம், புத்தகப் பார்வை, சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின் புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள், படைப்பாளர்கள், தினம் ஒரு தளம் போன்ற தலைப்புகளின் கீழ் இலக்கியம் தொடர்பான பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்களின் படைப்பில், “பூம்புகார் நகரத்தில் பலவிதமான தொழிலை நடத்துகின்ற தொழிலாளர் சமுதாயம் அமைந்திருக்கிறது. ஓவியத்தொழில் சிறந்திருந்தமையை மணிமேகலைக் காப்பியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

வம்ப மாக்கல் கம்பலை மூதூர்
கடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மைஅறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்

என்ற இப்பாடலில் ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் குறிக்கப்பெறுகின்றனர். எனவே பூம்புகார் நகரில் ஓவியம் தீட்டும் தொழிலாளர்கள் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பது பெறப்படுகிறது.” [3] என்ற விளக்கம் இலக்கிய நயத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வல்லமை (https://www.vallamai.com/):

vallamaiஅண்ணாகண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையத்தில் மட்டுமே வெளிவந்துகொண்டிருக்கும் இதழ். பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்னும் பொருண்மையில், இணையத்தில் தமிழை வளர்க்கும் முனைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றது. இதழ்களுக்குரிய குறியீட்டு எண்ணுடன் வெளிவரும் இதழாக இது உள்ளது.

முகப்பு, நிர்வாகக்குழு, பத்திகள், நேர்காணல்கள், கேள்வி-பதில், திரை, பொது, தலையங்கம், இலக்கியம், நுண்கலைகள் போன்ற தலைப்புகளுடனும் அதன்கீழ் பலதரப்பட்ட பகுப்புகளையும் கொண்டு இது வெளிவருகின்றது.

ஆய்வுக்கட்டுரை என்ற பகுப்பில் தமிழிலக்கியம் தொடர்பான பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் பலரும் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இதில் “ஐந்திணை ஐம்பது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்” [4] என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் எழுதிய ஆய்வுக் கட்டுரை இலக்கிய நோக்குடன் எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

ஊடறு (http://www.oodaru.com/):

oodaruபெண்மையை மையப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிவரும் இணைய இதழ். அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல் என்று பெண் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. உள்ளீடு, ஓவியம், புகைப்படம், கவிதைகள், குறும்படங்கள், நூல்கள் என்ற தலைப்பின் கீ்ழ் பெண்ணியம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. 2010 முதல் இவ்விதழ் இயங்கிவருகின்றது.

வரலாறு (http://www.varalaaru.com/):

varalaaru2004 ஆம் ஆண்டிலிருந்து ஆன்மிகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயணிக்கும் இவ்விதழ் மாத இதழாக வெளிவருகின்றது. ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே – என்ற தலைப்பின் கீழ் கோயில்களில் காணப்படும் சிலைகளுக்கும் இதர குறிப்பிற்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பிற்குரியது. சேரசோழ பாண்டியர் காலத்து கோயில்களில் காணப்படும் தொன்மங்களின் அடிப்படையில் அமைந்த நீண்ட நெடிய ஆராய்ச்சித் தொடர் இந்த இதழில் காணப்படுகிறது. இவ்விதழில், கோயில் கட்டடக்கலையில் பயன்படுத்தப்படும் சில கலைச்சொற்களை விளக்கியுள்ளார் மா. நளினி அவர்கள்,

• அங்கணம் – தூணிடை வழி,
• சந்திரசீலா – நிலாப்படி,
• கண்டம் – கழுத்து,
• அதபத்மம் – கீழ்நோக்குத் தாமரை,
• ஊர்த்வ பத்மம் – மேனோக்கு தாமரை,
• பிரதி – மேற்கம்பு,
• ஸ்தம்பம் – தூண,
• கலசம் – பானை,
• லலாய பிம்பம் – நெற்றி வடிவம்
• விமானம் – இறையகம் [5]
என்று சமஸ்கிருத கட்டடக்கலை சொற்களை தமிழ்படுத்தியதன் தன்மை உணரமுடிகிறது.

கீற்று (http://keetru.com/):

keetruமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தித் தூண்டிக்கொண்டே இருப்பது எம் கடமை”6 என்ற வாசகத்துடன் கீற்று இணைய இதழ் வெளிவருகின்றது. இதில், இலக்கியம் என்னும் தலைப்பில், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில்,

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ
குவளை உன்கண் குய்ப்புகை கமழக்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதன் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” [7]

என்று இல்லற மாண்பில் உணவு சமைத்த முறையினை விளக்கிக் கூறுகின்றார் இப்பதிவின் ஆசிரியர் ப.மணிகண்டன். மேலும், இவ்விதழில்,
திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், அடுக்களை, அறிவியல், வரலாறு, சிரிப்பூ, சட்டம், தகவல் களம், சுற்றுலா, திசைகாட்டிகள் என்ற தலைப்பின் கீழ் மனித வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் பதிந்துக் கிடக்கின்றன. இதில், பகுத்தறிவினைப் போற்றியும் சாதிய ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிர்த்தும் குரல் கொடுக்கிறது.

சிற்றிதழ்கள் பகுப்பில், பெருமாள் முருகன் எழுத்து படைப்புரிமைப் பறிப்பும் திறனாய்வு உரிமையும் என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன், அர்த்தநாரி ஆகிய புதினங்களைப் பற்றிய திறனாய்வு பதியப்பட்டுள்ளது உற்றுநோக்கப்பட வேண்டியதாக உள்ளது.

வெப்துனியா இணைய இதழ் (http://tamil.webdunia.com/):

webduniaதினமும் பதிவேற்றம் செய்யப்படும் இதழ்களில் வெப்துனியாவும் ஒன்று. பல துறை தொடர்புடைய செய்திகளை தரும் இதழாக இது வெளிவருகின்றது. இதில், செய்திகள், தமிழகம், சினிமா, விளையாட்டு, ஜோதிடம், படங்கள், காணொலி, கருத்துக்களம், பல்சுவை, படத்தொகுப்பு போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பல்சுவை பகுதியில் மருத்தவம், சுதந்திரதினம், அறுசுவை, மங்கையர், காதல், இலக்கியம், குழந்தைகள் உலகம் ஆகிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இலக்கியம் பகுதியில் கவிதைப் பிரிவில் சீன மொழிபெயரப்புக் கவிதையாக,

“ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்.
நீ விரும்புவது மழையில் நனைவதையா?
வெயிலில் காய்வதையா? என்று…
குடை மெதுவாகச் சிரித்தது, பின்னர் சொன்னது
என் கவலை இதைப் பற்றியது அல்ல… என்று
பின் எதைப் பற்றியது என்று கேட்டேன்.
குடை சொன்னது…
எனது கவலையெல்லாம்
எப்படிபட்ட அடைமழையானாலும்
என் மக்களை நனையவிடக் கூடாது
எப்பேர்பட்ட கொடிய வெயிலானாலும்
என் மக்களை காயவிடக்கூடாது. [8]

என்ற கவிதையினை நயத்துடன் பதிவு செய்துள்ளது.

இவை போன்ற இணைய இதழ்களும் இன்னும் பல இணைய இதழ்களும் இணையத்தில் அன்றாடம் தகவல்களைத் தரும் இதழ்களாக வலம் வருகின்றன. இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேயா, கனடா போன்ற அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களாலும் இதழ்கள் உருவாக்கப்பட்டு இன்றைக்கும் இணையத்தையும் தமிழையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அப்பால் தமிழ், தமிழம், தமிழமுதம், நெய்தல், புகலி போன்ற இதழ்கள் இன்றைக்கும் புதிய புதிய செய்திகளுடன் வெளிவருகின்றன.

முடிவுரை:

இணைய இதழ்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன என்பதை மேற்கண்ட ஒருசில இதழ்களின் இலக்கியப் பகுதி விளக்கத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து வெளி நாடுகளில் வாழும் தமிழ் சான்றோர்களாலும் தமிழ்மொழியானது போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அன்றாடம் நிகழும் சம்பவங்களின் இணைய ஆவணம் என்று சொல்லுமளவிற்கு இத்தகைய இணைய இதழ்கள் உலகளவில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதுடன் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.

சான்றெண் விளக்கம்:

  1. ta.m.wikipedia.org., தமிழ் இணைய இதழ்கள்., நாள் 26.04.2015
  2. puthu.thinnai.com., சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை, நாள்.26.04.2015
  3. www.muthukamalam.com/essay/literature
  4. www.vallamai.com. ஆய்வுக் கட்டுரைகள், நாள். 26.05.2015
  5. www.varalaaru.com/design/ மு. நளினி, தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராமமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு, நாள். 26.04.2015
  6. www.keetru.com
  7. www.keetru.com, இலக்கியம், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள், நாள்.26.05.2015
  8. www.tamil.webdunia.com

 

 


கி. கண்ணன்,
முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.