Tag: கௌசி

  • ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

    ஒன்றாக வாழுகின்றோம். ஒன்றாகவா வாழுகின்றோம்

    கௌசி

    எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல நண்பர்கள் காலவேறுபாடுகள் அற்று ஒன்றாக வாழுகின்றார்கள். ஆனால், ஒன்றாகவா வாழுகின்றார்கள்? என்ற கேள்வியுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கின்றது.

    ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை உண்மைதான். ஒன்றாக இல்லை என்பதற்காக அதனை வெட்டி எறிந்துவிட முடியாது. அதனால், சமாளித்து சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஒன்றை உயர்த்திப் பார்க்க நாம் ஆசைப்படுகின்றோம். வேண்டிய சக்தி எல்லாவற்றையும்  தாரை வார்க்கின்றோம். ஆனால், அங்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கவில்லை என்றால், வைத்த பற்றும் இணைந்து பயணித்த அனுபவங்களும் எம்மை மௌனமாக வழிநடத்த அடுத்தவர் கண்களுக்கு ஒன்றாக வாழுகின்றோம். ஆனால், மனதால் ஒன்றாகவா வாழுகின்றோம்?

    இப்போது ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. கணவனுடைய மனதுக்கு ஏற்ற மனைவியாக வாழ அவளுக்குத் தெரியவில்லை. அவன் விருப்பு வெறுப்புகளுக்குத் தன்னை அர்ப்பணிக்கத் தெரியவில்லை. அவனைப் புரிந்து நடக்கத் தெரியாது போகத் தானும் வாழாது கணவனையும் மகிழ்ச்சியுடன் வாழ விடாது மனைவி வாழுகின்றாள். இதேபோல் மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கத் தெரியாத மனிதனாக கணவன் வாழுகின்றான். இந்த நேரத்தில் போட்டிபோட்டுப் போராட்ட வாழ்க்கையைக் காலம் முழுவதும் கணவனும் மனைவியுமு; வாழ்கின்றனர். குடும்பத்தைக் கொண்டு நடத்த புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் தேவை. பெற்றெடுத்த பிள்ளைகளின் நலன், சமூகப் பார்வை போன்றவை எழுதப்படாத சட்டங்களாக இருக்க குடும்பங்கள் ஒன்றாக வாழுவதாகத் தெரிகின்றன. ஒன்றாகவா வாழுகின்றார்கள்?

    அக்கால இலக்கியங்களில் காணப்படும் இவ்வாறான நிலைமைகள் எமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கின்றன. பரத்தை ஒழுக்கத்தை விரும்பி கணவன் போகின்றான் என்று தெரிந்தும் மனைவி அவனுடன் ஒன்றாகவே வாழுகின்றாள். கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூடையில் சுமந்து சென்று விடுகின்றாள். இந்தக் கதை எமக்கு எதைப் போதிக்கின்றது? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்னும் தத்துவத்தையா? இல்லை. மனதை அடக்கிக் கணவன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையா? இல்லாவிட்டால் இப்படித்தான் வாழ வழியில்லாத பேதைப் பெண்கள் வாழ்க்கையில் ஒன்றாக இல்லை ஆனால், ஒன்றாகவே வாழுகின்றார்கள் என்பதையா சொல்லித் தருகின்றது.

    “மந்தப் பரத்தையோடும் வருமொழியாரோடும்”  சேர்ந்து கோவலன் தன் பொருள்களை எல்லாம் இழந்தான். மாதவி சேர்க்கைக்குப் பின் கோவலன் வணிகர் கடமையாகிய பொருளீட்டல் தொழிலைச் சரிவரச் செய்யவில்லை. மன்னர்களுக்கே கடன் கொடுக்கக் கூடிய பணக்காரனாக இருந்த கோவலன் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழக்கின்றான்.

    பாடமை சேக்கையுட் புக்குத் தன்பைந்தொடி
    வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
    சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
    குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன

    என்று கூறிக் கோவலன் கண்ணகியை அடைகின்றான். இத்தனையும் அறிந்திருந்தும் கண்ணகி கோவலனுக்காகவே வாழ்ந்தாள். கோவலனைப் பிரிந்த வருத்தம் இருந்தாலும் அறச் செயல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், வாழ்ந்தாள்.

    அக்காலப் பெண்கள் அறம் செய்வதாக இருந்தாலும் கணவன் மனைவியுடன் இணைந்துதான் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இராமனும் சீதையும் வனவாசம் செய்த காலகட்டத்தில் இராமன் இல்லாத சமயத்திலே அறச்செயலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இராவணனால் சீதை கடத்தப்பட்டாள் என்று உரைக்கிறது இராமாயணக் காட்சி.

    காரைக்காலம்மையார் சிறந்த இலக்கியவாதியாக இருந்த போதிலும் கணவன் பரமதத்தனுடன் ஒன்றாக வாழ்ந்தாள். சிவபக்தர்களைப் போற்றும் பண்புள்ளம் கொண்ட காரைக்காலம்மையார் மாங்கனி விடயத்தில் கணவன் அறியாது சிவபக்தனுக்கு உணவளித்த அறச் செயலை மறைப்பதற்காக  இறைவனை வேண்டி மாங்கனி பெற்றாள். பரமதத்தனுடன் வாழ்ந்தாலும் மனதளவில் அவள் வாழ்க்கை எதனை நாடியது? ஒன்றாகவே வாழ்ந்தாள். ஆனால், ஒன்றாகவா வாழ்ந்தாள்?

    புத்தரைத் திருமணம் செய்த போதே தன்னை விட்டுப் பிரியப் போகின்ற ஒரு ஞானியுடனேயே நான் குடும்பம் நடத்துகின்றேன் என்று யசோதரை தெரிந்துதான் புத்தருடன் வாழ்ந்தாள். புத்தரை குடும்ப வாழ்க்கைக்குள் அமிழ்த்திவிட முயற்சி செய்தாள். ஆனால், புத்தர் ஒன்றாக வாழ்ந்தார். வாழ்க்கை முழுவதும் துறவற சிந்தனையுடன் வாழ்ந்தார். ஒன்றாகவா வாழ்ந்தார்? இறுதியில் 29 வயதிலேயே யசோதரையை விட்டுச் சென்று விட்டார்.

    நிடத நாட்டு மன்னன் நளனை கலி பிடித்து ஆட்டுகின்றது. அரசாட்சியைத் துறந்து தமயந்தியுடன் கானகம் போகின்றான். ஒன்றாக வாழந்தான். ஆனால், தன்னோடு தன் மனைவி தமயந்தி கானகத்தில் அவலங்களை அனுபவிப்பதை நாளும் பொழுதும் அவதானித்தான். கலியின் சூட்சியினால் தன் ஆடை இழந்த வேளையிலே தன் மனைவியினுடைய ஆடைக்குள் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றினான். இதனால், நடுநிசியில் ஆடையைக் கிழித்து இரவில் தனியே அவளை விட்டுச் சென்றான்.

    “கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்
    போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ – என்று
    சாற்றினான் அந்தவுரை தார் வேந்தன் தன்செவியில்
    ஏற்றினான் வந்தான் எதிர்”

    தான் இல்லாவிட்டால், தன் மனைவி தன்னுடைய தந்தையிடம் சென்றுவிடுவாள் என்று எண்ணம் கொண்டான். இங்கு கானகத்தில் நளன் தமயந்தியின் அர்ப்பணிப்பு எடுத்துக் காட்டப்படுகின்றது.

    இராமகிருஸ்ண பரஹம்ஸர் தன் மனைவி சாரதா அம்மையாருடன் ஒன்றாக வாழ்ந்தார்.  காமத்தின் சாயல் கூட இல்லாது இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.

    இவற்றைவிட மன்னன் தலைமையில் அவைக்களப் புலவர்களாக கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஒளவையார் சீத்தலைச் சாத்தனார் போன்ற புலவர்கள் ஒன்றாகவே அவையிலே வீற்றிருந்தார்கள். ஆனால், ஒன்றாகவா இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் இடையில் புலமைப் போட்டிகளும் அரண்மனை பஞ்சாயத்துகளும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

    தவறு கண்ட இடத்தில் எழுத்தாணியால் தன் தலையிலே குத்திக்கொள்ளும் சீத்தலைச்சாத்தனார் போலே எத்தனையோ பேர் பொருந்தாத உறவுக்குள், அமைப்புக்குள், குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு ஒன்றாகவே வாழுகின்றார்கள். இது எழுதப்படாத சட்டம்.

    Share
  • இலக்கியங்களில் உயிரினங்கள்

    இலக்கியங்களில் உயிரினங்கள்

    கௌசி, ஜெர்மனி

    மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. Olympian bats என்று சொல்லப்படும் வெளவாள்கள் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு 2018 கிலோ மீற்றர் பறந்து போயிருக்கின்றதாம். இவை காலநிலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன என அறிவியலாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஒரு பறவை மனிதன், விலங்குகளுடைய தலைமயிரை எடுத்து பிறக்கப் போகும்  குஞ்சுக்காக கூடு கட்டுகின்றது. பஞ்சுமெத்தை தேடிக் குஞ்சுக்குப் பஞ்சணை அமைக்கின்றது.  இதேபோல் புலி இறந்த உடலை உண்ணாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது. யானை பசித்தாலும் மாமிசம் உண்ணாது. சிங்கம் தன் பசிக்கு மேலதிகமாக வேட்டையாடிய மிருகத்தை உண்ணாது. மிகுதியை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடும். ஆனால், புலி வேட்டையாடி கொன்ற தன்னுடைய இரையை இழுத்துச் சென்று தன்னுடைய குகையில் வைத்திருந்து அழுகிப் புழுத்துப் போனாலும் திரும்பத் திரும்ப அதை உண்ணும்.

    “ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
     ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய
     இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
     நாம நல்லராக்  கதிர்பட உமிழ்ந்த
     மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
     வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
     உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி”  

    என்னும் அகநானூற்று 72 ஆவது பாடல் தெளிவுபடுத்துகின்றது.

    இவ்வாறு பண்புகள் கொண்ட உயிரினங்களை இலக்கியங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. புலவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு உவமையாக பிற பொருளை எடுத்துக் காட்டுவது வழக்கம். அவற்றில் பல இரசனைகளும், அறிவியல், தகவல்களும் காணக்கிடக்கின்றன.

    சங்க காலப் புலவர்களில் ஒருவர் சத்திமுத்தப் புலவர்;. சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று பாண்டியமன்னனை கண்டு அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற மதுரைக்கு வந்தார். வருகின்ற வழியிலே குளத்தங்கரையில் குளிரில் வாடிக் கொண்டிருந்தபோது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் சங்கப்பாடல்களில புறநானூற்றுத் தொகுப்பிலே காணக்கிடக்கிறது.

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
    வடதிசைக்கு ஏகுவீராயின்
    எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
    நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
    பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
    எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
    ஆடையின்றி வாடையில் மெலிந்து
    கையது கொண்டு மெய்யது பொத்தி
    காலது கொண்டு மேலது தழீஇப்
    பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
    ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

    முதலிலே ஒரு ஏவல் செய்ய வேண்டும் என்றால், அவர்களை புகழ்ந்து தள்ள வேண்டும். அந்தப் பாணியிலேயே நாரைக் கொக்கின் வாய் பனங்கிழங்கைப் போன்று நுனிப்பகுதி கூராக இருக்கின்றதாகவும் பவளம் போன்ற நிறத்தில் இருப்பதாகவும், கால்கள் சிவந்த நிறத்தில் அழகு செய்வதாகவும் புகழ்ந்து தள்ளுகின்றார். அதன் பின் நீ போகின்ற பாதை தானே என்பது போலவும் திருத்தல யாத்திரை செல்பவர்கள் தம்முடைய மனைவியுடன் தெப்பக் குளங்களிலே நீராடிச் செல்வது வழக்கம். அதனால், நீ உன் மனைவியுடன் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு வந்து காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வணங்கி தலயாத்திரை முடிக்கும் சமயத்திலே திரும்பும் போது மதுரையில் மழைநீர் வடிந்த ஓலை வீட்டுச் சுவரிலே பல்லி எப்போது நல்ல செய்தி சொல்லும் என்று காத்துக் கிடக்கின்ற என் மனைவியிடம் ஆடை இல்லாமல் வாடைக்காற்றிலே மெலிந்து கைகளால் உடம்பைப் பற்றிக் கொண்டு கால்களால் உடலைத் தழுவியபடி பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள். என நாரையைத் தூது அனுப்புவதாக இப்பாடல் வருகின்றது.

    பல்லி சொல்லுதல் நல்ல சகுனம் என்பது தமிழர்கள் நம்பிக்கை. இந்நம்பிக்கையையும், நாரை நீண்ட தூரப் பயணம் செய்யும் என்னும் செய்தியையும், சிறிய துளையூடாக பார்வையைச் செலுத்தக்கூடிய திறனை நாரைக் கொக்கு பெற்றிருக்கின்றது என்னும் அறிவியல் உண்மையையும் இப்பாடல் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  இதனாலேயே வீட்டினுள் கூரையைப் பார்த்திருக்கும் தன் மனைவியை இந்நாரை கண்டு கொள்ளும், இச்செய்தியைக் கொண்டு சொல்லும் என்று தூதாக நாரையை சத்திமுத்தப் புலவர் அனுப்புகின்றார்.

    குறிஞ்சி நிலத்திலே விலங்காக குரங்கும், பறவையாக மயிலும். முல்லைநிலத்திலே விலங்காக கரடி, முயல் போன்றனவும், பறவையாகக் கிளியும். மருத நிலத்து விலங்காக எருமை பறவையாக நாரை, நெய்தல் நிலத்து மீன், கடற்காகம், பாலை நிலத்து யானை, கழுகு போன்ற உயிரினங்களை வகைப்படுத்திய பாடல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. இதேபோல சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உயிரினங்களை தம்மிடம் பாடற்சுவையூட்ட பாவலர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

    நளன், தமயந்தியைக் காட்டில் விட்டுச் செல்கின்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைப் பாடப்புகுந்த புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக தற்குறிப்பேற்ற அணியிலே கூறுகிறார்.

    “தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
    கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
    வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
    கூவினவே கோழிக் குலம்”

    மூவேந்தர் சேர,சோழ, பாண்டியனைப் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைப் பாடியதாக முத்தொள்ளாயிரம் சொல்லப்படுகின்றது. இப்பாடல்கள் முழுவதும் வெண்பாக்களால் ஆனவை. அதில் ஒரு பாடல்

    “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!
    நச்சிலைவேற் கோக்கோதை நாடு!”

    சேர மன்னன் நாட்டிலே போரே ஏற்படுவதில்லை. ஒரு நாட்டுடன் போரிடும் வீரர்கள் அந்த நாட்டைக் கொளுத்தி அதாவது தற்போது அணுகுண்டு வீசி அழிப்பது போல் அந்நாட்டு ஊர்களை, வயல்களை அழித்து, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி ஆரவாரம் செய்ய வைப்பார். ஆனால், சேர மன்னன் ஆளுகின்ற நாட்டிலே இவ்வாறான ஆரவாரம் ஏற்படுவதில்லை. அம்மன்னன் நச்சுத் தோய்த்த இலைப்பரப்பை உடைய வேலேந்தியவன். அதனால், அவனுக்குப் பயந்த எதிரிகள், கொள்ளையர்கள் அந்நாட்டில் இல்லை. அதனால், அச்சத்தால் எந்தவித ஆரவாரமும் இருந்ததில்லை. ஆனால், அங்குள்ள வயல்நீரிலும், அதன் கரைகளிலும் வாழுகின்ற பறவைகள் அந்த வயல்களிலே பூத்திரிக்கும் ஆம்பல் மலர்களைக் கண்டு வயலிலே தீப்பிடித்து விட்டது என்று பயந்து ஆரவாரத்துடன் அலைந்தனவாம். அதுமட்டுமல்ல இதனால், தம் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தம்முடைய கை போன்ற சிறகுகளால் அணைத்து மறைத்துக் கொள்ளுமாம்.

    மனித இனங்கள் மட்டுமல்ல பறவை விலங்குகள் கூட தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றன. இங்கிலாந்தில் Dover என்னும் இடத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய தொடர்வீட்டு மாடியிலே ஒரு Gull என்னும் பறவை கூடுகட்டியிருந்தது. அந்த வீட்டை வாங்கிய மனிதர்களை வரவிடாமல் துரத்திக் கொத்தியபடி விரட்டியது. அங்குள்ள முட்டை குஞ்சி பொரித்து குஞ்சுப் பறவை பறந்த பின்தான் அங்கு செல்லக்கூடியதாக இருந்தது.

    குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. குரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்று பரிணாமக் கோட்பாடு கூறுகின்றது. ஜெர்மனி வூப்பற்றால் நகரத்து மிருகக்காட்சிச்சாலையிலே ஒரு குரங்கு தான் இருக்கும் இடத்திற்கு ஒரு சாக்குத் துணியை எடுத்துக் கொண்டு போய் போட்டு அதன்மேலேதான் இருக்கும். குரங்கு தன் குட்டிக்கு பேன் பார்க்கும் காட்சியை நாம் இலங்கையில் அதிகமாகக் கண்டிருக்கின்றோம். இக்குரங்குகள் பற்றிய பல இலக்கியச் சுவை மிகுந்து பாடல்கள் எம்மால் அறியக்கிடக்கின்றன.

    நற்றிணை 151 ஆவது பாடலிலே

    மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, பெண் குரங்கும், ஆண்குரங்குக்கும் புணரும் இடமாக சங்க இலக்கியத்திலே காட்டப்பட்டுள்ளது. ஆண்குரங்கும் மந்தியும் களவியில் ஈடுபட்டுக் கொண்ட பின் குரங்குக் கூட்டங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, மரத்தின் மீது ஏறி அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக் கலைந்து கிடக்கும் தன் தலை முடியைப் பெண்குரங்கு திருத்திக்கொள்ளுமாம். இக்காலப் பெண்கள் கண்ணாடி பார்க்கும் பழக்கத்தைப் போல் அக்காலப் பெண்குரங்குகள் சுனைநீரைக் கண்ணாடியாகப் பாவித்திருக்கின்றன.

    “கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
    கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
    செம்முக மந்தி செல்குறி கருங்காற்
    பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
    குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
    புன்தலைப் பாறு மயிர் திருத்தும்”

    காதல் கணவன் இறந்தால் தற்கொலை செய்கின்ற மனிதர்களைக் காணுகின்றோம். ஆனால், தன் கணவன் இறந்த பின் குட்டிகளைத் தன்னுடைய சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலையேறித் தற்கொலை செய்து கொண்ட ஒரு குரங்கு பற்றி குறுந்தொகை 66 ஆவது பாடலிலே காணுகின்றோம்.

    “கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
    கைம்மை உய்யாக் காமர் மந்தி,
    கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
    ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்”

    திருக்குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு பாடல் குரங்குகளின் காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண் குரங்குகள் பெண்குரங்குக்கு பழங்களைப் பறித்து வந்து கொடுத்துத் தழுவுகின்றன. இச்சமயத்திலே பெண்குரங்கு சில பழங்களை கீழே சிந்துகின்றன. அச்சிந்தும் கனிகளை தேவர்கள் கேட்பார்கள் வேடர்கள் தேவர்களை கண்களால் பார்ப்பார்கள். என்று இப்பாடல் செல்கின்றது.

    “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
    கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
    தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
    செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
    கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
    குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”

    இவ்வாறு மனிதர்களை விட பிற உயிரியங்கள் எவ்வாறு சிறப்புடையவை என்பதனை ஒளவையார் சோழ மன்னனிடம் பாடிய பாடல் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

    “வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
    தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
    வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”

    குருவியின் கூடு, கறையான் புற்று, தேன்கூடு, சிலந்திவலை போன்றவை யாராலும் செய்ய முடியாது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எனவே அறிவில் குறைந்தோர் என்று  எண்ணும் யாம் உயிரினங்களின் சிறப்புக்கள் பற்றி அறியப் புகுந்தால் எண்ணிலங்காத சான்றுகள் கடலிலும், வானிலும், தரையிலும் அறியக்கூடியதாக இருக்கின்றன.

    Share
  • புலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்

    புலமைக் காய்ச்சலும் பாய்ச்சலும்

    கௌசி, ஜெர்மனி

    உலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்காகவும் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றார்கள். போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது பொறாமையாக மாறும் போது மனங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்துகின்றது. அறிவும், ஆய்வுகளும் மனங்களின் வேற்றுமைகளை மாற்றிவிடும். காலம் ஒரு நாள் மாற்றும் என்பது கோட்பாடு. ஆனால் இக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும் இக்கோட்பாடு பிழைக்கின்றதே! புகழுக்காகப் போட்டியும் பொறாமையும், வித்துவச் செருக்கினால் போட்டி, அன்று பொன்னுக்கும் பொருளுக்கும் பொய்யுரைத்தல் என்று இலக்கிய உலகம் எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே.

    எழுத்தாளர்களிடம் போட்டி என்பது இன்று நேற்று வந்ததல்ல. அன்றும் இருந்திருக்கின்றது. அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள். திறமைகள் போட்டியிடுவது ஆரோக்கியம். ஆனால், திறமையுடன் போட்டியிட தயக்கம் தேவையல்லவா! சங்ககாலத்திலே வாழ்ந்த சீத்தலைச் சாத்தனார் என்னும் ஒரு புலவர் தான் எழுதும் பாடல்களிலே அல்லது பிறருடைய பாடல்களிலே குற்றங்களைக் கண்டுவிட்டால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் குத்திக் கொள்ளுவாராம். இதனால், தலையில் ஆங்காங்கே சீழ் பிடித்திருக்கும். சீழ்தலை சாத்தனார் என்பது மருவி சீத்தலை சாத்தனார் என்று அவர் பெயர் வழங்கப்பட்டது. பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அல்லது சொல்ல முடியாத இடத்தில் நமக்கு நாமே தலையில் அடித்து என்ன கருமம்டா என்று சொல்வோமே அதுபோலவேதான் சீத்தலைச் சாத்தனார், எழுத்தாணியால் தன்னுடைய தலையில் குத்தித் தமிழிலில் காணும் தவறுக்குத் தனக்குத் தண்டனை கொடுக்கின்றார். இங்கு தவறு விடுபவர்கள் குற்றத்தால் கூனிக்குறுகிப் போகின்றனர்.

    கம்பரும் ஒளவையும் சிறந்த போட்டியாளர்கள். ஒருமுறை ஒளவையார் குலோத்துங்க சோழன் அவைக்குச் செல்கின்றார். அவர் தமிழ் கேட்க ஆசை கொண்ட அரசன் அவரை பாராட்டி உபசரித்தான். இதைப் பொறுக்காத கம்பரும் தற்காலத்திலே அவரை மட்டும் ஏன் புகழ்கின்றார்கள். அவரிடம் என்ன இருக்கின்றது அவரை விட நாம் எவ்வளவு மேலானவர்கள் என்று புளுங்குபவர்களைப் போலவே கம்பரும் ‘நான் சொல்லுகின்ற ஒரு அடியிலே உள்ள பொருள் என்னவென்று கண்டு ஒரு பாடல் பாடவேண்டும்‘‘ என்று ஒளவையாரிடம் கேட்கின்றார். குலோத்துங்கன் சோழத்து ஆஸ்தான கவி அல்லவா கம்பர். ஒளவையும் அவர் வேண்டுகோளுக்குச் சம்மதிக்க

    ‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ‘‘

    என்று வரி கொடுத்தார். அதாவது ஒரு தண்டிலே 4 இலைகள் கொண்டுள்ள ஆரைக்கீரையைப் பொருளாகக் கொண்டு பாடினார். அடீ என்ற வார்த்தை ஒளவையை நாகரிகம் அற்ற முறையில் விளிப்பதாக ஒளவைக்குப் படுகின்றது. அந்தளவில் பொறாமை கம்பர் மனதுக்குள் இருந்தது. உடனே ஆத்திரம் கொண்ட ஒளவையும்

    ‘எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
    மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
    கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னா யடா’

    என்று பாடினார். எட்டு என்றால் தமிழ் எண் அ வைக் குறிக்கும். கால் (1/4) என்பது தமிழ் எண் வ என்று குறிக்கும். என்வே எட்டேகால் இலட்சணமே என்றால், அவலட்சணமே.

    எமனேறும் பரி எருமை என்பது யாவரும் அறிந்ததே

    பெரியம்மை என்பது மூதேவி. அவரின் வாகனம் கழுதை

    கூரையில்லா வீடு குட்டிச்சுவராகும்.

    இராமனின் தூதுவன் குரங்கு

    ஆரையடா சொன்னாயடா என்றால் ஆரைக்கீரையை நீ சொல்லியிருக்கின்றாய் என்று பாடினார். கம்பரும் வெட்கித்துப் போகின்றார். இதைக் கம்பருக்குச் சுடும் வண்ணம் சிலேடையாக தன்னை அடீ என்றாய் யாரையடா நீ என்று பாடி முடித்தார்.

    அவலட்சணமே, எருமையே, மூதேவியே, குட்டிச்சுவரே, குரங்கே ஆரைக்கீரையை நீ சொல்லியிருக்கின்றாய் என்று அவர் பாடிய ஒருவரிப் பாடலின் பொருளை அறிந்து உடனே பாடினார்.(ஒளவையார் தனிப்பாடல்கள் – புலியூர்க்கேசிகன்)

    குட்டு வாங்கினாலும், மோதிரக் கையால் வாங்க வேண்டும் என்னும் பழமொழி சொல்வார்கள். இங்கு போட்டி கூட ஆரோக்கியமாகவே பட்டது. கம்பருக்குச் சுட்டது. தமிழார்வலர்களுக்கு இனித்தது. இவ்வாறு போட்டி போடவும் தகுதி வேண்டுமல்லவா?

    தரமான படைப்பாளிக்குத் தலைக்கனம் இருப்பது இயற்கை. ஆனால், இது தவறு என்று வாதிடுவோரும் உண்டு. இங்கு இருவரைப் பார்ப்போம். ஒருவர் கம்பர் தலையில் கனம் மிக்கவர். மற்றையவர் கம்பர் காலத்து ஒளவையார். கூழுக்குப் பாடி என்று கம்பரால் அழைக்கப்படுபவர். ஒரு சமயம் சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தந்தால் கவி கிடைக்கும் என்று கம்பர் கூறினார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே உள்ளன என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். இப்பொன்னைப் பெற்றுக் கொண்ட கம்பர்

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே

    என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு ஐந்நூறுக்கு இது சரியாகிவிட்டது என்று அவ்வெண்பாவை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே பெண்ணாவாள்.
    அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு. (ஒளவையார் தனிப்பாடல்கள் – புலியூர்க்கேசிகன்)

    எனப் பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றாராம். இங்கு கம்பர் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு அச்சிலம்பியை உதாசீனப்படுத்தினார். ஒரு பெண்ணின் ஆசையை பெரிதாகக் கருதிய ஒளவையார் கம்பருக்குப் போட்டியாக அவள் ஆசையைத் தீர்த்து வைத்தார். இச்சம்பவம் நம் மத்தியில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கவிச்சக்கரவர்த்திக்குத் தலைக்கனம் வருவது இயற்கையானால், தற்போது தகுதியற்றோருக்குக் கூடத் தலைக்கனம் வருவதை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

    ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும், குலோத்துங்க சோழ மன்னனும் தனித்தனிப் பல்லக்கில் வீதி உலா வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் ஒட்டக்கூத்தர் வருகின்றார். நடுவில் மன்னனும், பின்னால் புகழேந்திப்புலவரும் பல்லக்கில் வருகின்றார்கள். இச்சமயம் ஒளவையார் அவர்கள் வரும் வழியிலுள்ள ஒரு திண்ணையில் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு அமர்ந்திருக்கின்றார். பல்லக்குகளைக் கண்ட ஒளவையார் முதலில் ஒட்டக்கூத்தர் வரும்போது இரண்டு கால்களையும் நீட்டியபடி அமர்ந்திருக்கின்றார். மன்னன் பல்லக்கு வரும்போது ஒரு காலை மடக்குகின்றார். புகழேந்திப் புலவர் வரும்போது இரண்டு கால்களையும் மடக்குகின்றார். மன்னன் ஒளவையாரிடம் ஏன் இப்படி ஒட்டக்கூத்தரை அவமானம் செய்தீர்கள் என்று கேட்க, மரியாதை செய்யும் அளவிற்கு ஒட்டக்கூத்தர் ஒன்றும் அறிவாளியில்லை என்று கூற, மன்னனும் நிரூபித்துக் காட்டும்படிக் கேட்கின்றார்ர். அதற்கு ஒளவையும் 3 முறை மதி வரும்படி பாடல் பாடவேண்டும் என்று கேட்கின்றார். அதற்கு

    ஒட்டக்கூத்தரும்

    ‘வெள்ளத்து அடங்காச் சின வாளை
    வேலிக் கமுகின் மீதேறி
    துள்ளி முகிலைக் கிழித்து மழை
    துளியோடு இறங்கும் சோணாடா!
    கள்ளக் குறும்பர் குலம் அறுத்த
    கண்டா! அண்டர் கோபாலா!
    பிள்ளை மதி கண்ட எம்பேதை
    பெரிய மதியும் இழந்தாளே‘‘

    அதாவது வெள்ளத்துக்கு அடங்காத வாளைமீன்கள் துள்ளி மேலெழுந்து கமுகு மரத்தின் மேலேறி, அங்கிருந்து துள்ளி முகிலேக் கிழித்து அந்த மேகம் பொழியும் மழையுடன் மீண்டும் பூமிக்கு வரும் நாட்டையுடைய சோழ மன்னனே! பகைவர் கூட்டத்தை அழிக்கும் வாளுக்குரியவனே என்று பாட

    “ஒட்டா ஒரு மதி கெட்டாய் என்று அவரின் பாடலில் ஒரு மதி இழந்திருப்பதைச் சுட்டிக் காட்டி அவருடைய ஆணவத்தை அடக்கினாள். ஆனால், புகழேந்தியோ

    ‘பங்கப் பழனத்து உழும் உழவர்
    பலவின் கனியைப் பறித்தொன்று
    சங்கிட்டு எறியக் குரங் கிளநீர்
    தனைக் கொண்டு எறியும் தமிழ்நாடா
    கொங்கார்க் கமரர் பதியளித்த
    கோவே! ராஜ குல திலகா!
    வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
    மெலிந்த பிறைக்கும் விழி வேலே!

    என்று பாடினார். குரங்குகள் பலாக்கனியை உண்கின்றன என்று வயலிலே உழுகின்ற உழவர்கள் சங்குகளை எடுத்து குரங்குகளை நோக்கி எறிய குரங்குகளும் இளநீர்க்காய்களை பறித்தெறியும் தமிழ்நாட்டவனே! கொங்கு நாட்டு மன்னனை வென்று தேவலோகம் செல்ல வைத்த இராஜகுல திலகா! வெண்மையான பிறைச்சந்திரன் ஒளியாலும், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதன் அம்பினாலும் உடல் தளிர்ச்சியுற்று வேல் போன்ற கண்களையுடைய இப்பெண் கண்ணீர் சிந்துகின்றாள் என்று 3 மதியும் வரும் வண்ணம் பாடலைப் பாடி ஒளவையார் புகழைப் பெற்றார். அக்காலத்தில் புலவர்கள் பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆணவத்தை அடக்கிய செயல்கள் இப்பாடலின் மூலம் புலப்படுகின்றது.

    பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு இன்று மட்டுமல்ல அன்றும் பணத்துக்காக தம் பெருமைகளை நிலைநாட்டிக் கொண்ட புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

    ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்

    குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
    சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங்
    கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
    இடாதோ நமக்கிவ் விடர்.

    பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது என்று பாடினார்கள். இவ்வாறே ஒளவையாரும் ஒரு இடத்தில்

    ‘கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
    காடேறித் திரிவானை நாடா என்றேன்
    பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
    போர்முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
    மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை
    வழங்காத கையணையான் வள்ளல் என்றேன்
    இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
    யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

    என்று பாடியுள்ளார். இவ்வாறு பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது. இக்காலத்திலும் தமது புகழுக்காக தகுதியற்றோரைப் புகழும் வழக்கம் இருக்கின்றது அல்லவா?

    இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டமாட்டாமல் புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்கும், புகழுக்கும் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். இதற்குப் பொறாமை என்ற அர்த்தமில்லை. செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும். போட்டியும் ஆரோக்கியமாக அமைய வேண்டும்.

    Share
  • காலந்தோறும் தமிழ்க் காதல்

    காலந்தோறும் தமிழ்க் காதல்

     -கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

    ”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு” என்று காதலுக்கு அழகான வரிவடிவம் தந்திருக்கின்றார் கவிஞர் வைரமுத்து. காதல் இல்லாது வாழ்க்கை ஏது! உறவுகள் ஏது! ஏன் உலகுதான் ஏது! வாழ்க்கை வட்டத்திலே உண்மையும், அழகும், அபூர்வமும், அற்புத உணர்வும் ஏற்படுத்தும் ஒரு உணர்வு உண்டென்றால், அது காதலே! மனிதன், விலங்குகள், பறவைகள் உயிர்கள் அனைத்திலும் இழையோடிக் காணப்படும் இவ்வுணர்வு வாழ்க்கை முழுவதும் தேவையானதாகவும் அகற்ற முடியாததாகவும் பெற்றோரின் பாசம் போல் தொடர்ந்து வரும் உணர்வாகவும் விளங்குகின்றது. காதல் என்றவுடன் காத்திருக்காமல் நம் முன்னே தென்படும் தாஜ்மஹாலும், வடமொழிக் காதல் மீராவும், தமிழ் மொழிக்காதல் ஆண்டாளும் ஆண்டாண்டுக் காலமாகக் காதலுக்கு அடையாளங்களாகக் காணப்படுகின்றனர்.

    கல்லும், மண்ணும், கடலும், மலையும், உலோகங்களும் எனத் தொடரும் இயற்கை வனப்புக்களை அழகு செய்ய இரத்தமும் சதையும் கொண்டு உணர்வுகளுடன் நடமாடிய மனிதன் தோன்றக் காரணமான உணர்வாக இது காணப்படுகின்றது. அதனாலேயே காதல், முதலில் சங்ககாலத்தில் காமமாகவே சொல்லப்பட்டது.

    ”ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பந்துய்த்து வாழ்தல்” என்று காதல் பற்றி நச்சினார்க்கினியார் அழகான விளக்கம் தந்துள்ளார். இவ்வுணர்வினைச் சங்கப்பாடல்கள் உணர்த்திய  அளவு வேறு எக்காலத்துப் பாடல்களும் உணர்த்தவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்காலப் பாடல்களில் கூட சங்கப்பாடல்களின் தாக்கத்தினை  அதிகமாகக் காண முடியும். காதலும் வீரமும் கலந்து கிடந்த சங்ககாலத்திலே அகத்திணைப் பண்பு தழுவிய காதல் பாடல்கள் மனதுக்குள் இனிமை பயப்பனவாகக் காணப்படுகின்றன. செம்புலப்பெயல் நீரார் எனப்படும் புலவர் குறுந்தொகையில்,

    “யாயும் ஞாயும் யாராகியரோ 
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    நீயும் யானும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர்போல
    அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”

    ”உன் தாயும் என் தாயும் யாரோ தெரியாது? எனது தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் இல்லை. ஆனால், செம்மண்ணில் மழை நீர் கலந்தால், அந்நீரும் செந்நீராய் கலத்தல் போல நம் இருவர் நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டன” எனக் காதலின் சிறப்பைப் புலவர் விளக்கும் பாங்கானது காதலுக்கு முகவரி தேவையில்லை. உறவுகள் பார்ப்பதில்லை. இரண்டு இதயங்கள் மட்டுமே போதுமானது இரண்டறக் கலப்பதற்கு என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

    குறுந்தொகையில் தலைவியின் நலத்தினைப் பாராட்டித் தலைவன் ஒரு வண்டினைப் பார்த்துக் கேட்பதாக இறையனார் படைத்திருக்கும் இப்பாடல்,

    “கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி!
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயற்
    செறி எயிற்று அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ? நீ அறியும் பூவே”

    அதாவது ”பூக்களிலே இருக்கின்ற தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற பண்புடைய அழகிய சிறகினைப் பெற்ற வண்டே! உண்மையைச் சொல், மயில் போன்ற மென்மையும், வரிசையான பற்களும் கொண்ட என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நறுமணம் கொண்ட பூவை நீ அறிந்ததுண்டா” என்று பாடுகின்றார். உலகின் எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் அவை அத்தனையும் காதலியின் கால் தூசுக்குச் சமம் என எண்ணத் தோன்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை காதல் உணர்வுக்கு உண்டு.

    மறைவாய்க் காதலித்து, யாரும் அறியாது உடன்போக்காய் உற்றார், சுற்றம் துறந்து, வசதி வாய்ப்புக்களை உதறித் தள்ளி  காதலனே துணை, அவனன்றி வேறு எதுவுமே தேவையில்லை என்று எண்ணத் தோன்றும் உணர்வு காதலுக்கு மட்டுமே உள்ளது. இந்த உணர்வினைச் சித்தரிக்கும் ஒரு குறுந்தொகைப் பாடலினை கூடலூர் கிழார் பாடியிருக்கின்றார்.

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
     கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
    குவளையுண் கண் குய்ப்புகை கழுமத்
    தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
    இனிதெனக் கணவ னுண்டலின்
    நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே”

    தமை விட்டுப் பிரிந்து சென்ற மகள் தன் காதலனுடன் எப்படி வாழ்கின்றாள் என்று அறிந்து வரும் படி செவிலித் தாயிடம் கூறி நற்றாய் அவளை அனுப்புகின்றாள். அதைப் பார்த்து வந்து செவிலித்தாய் கூறிய வார்த்தைகளே இப்பாடலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ”புளித்த தயிரைக் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்து தாளிதம் செய்யும் போது, அது கருகி விடாது பட்டுச் சேலை முந்தானையிலே கைகளைத் துடைத்துவிட்டுத் தாளிதத்தை முறையாகச் செய்து சமைத்த உணவினைக் கணவனுக்கு இடும்போது அவனும் இனிமை, இனிமை என்று சொல்லி உண்டான்” என்று நற்றாயிடம் கூறுகின்றாள்.

    காதலனின் சுவைக்காகவும் மகிழ்வுக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கக் கூடிய தன்மையை ஒரு பெண் காதல் வசப்படும் போது பெற்றுக் கொள்கின்றாள். இதற்காக பல்கலைக்கழகமோ, கல்லூரியோ சென்று கற்கவேண்டும் என்ற தேவையில்லை. நமக்குள்ளேயே சுரந்து, நமக்குள்ளேயே தொடர்ந்து, வேளை வரும்போது வெளிப்படும் இக்காதல் உணர்வு இப்பிரபஞ்சத்தின் பெருமைமிக்க சக்தியாகக் காணப்படுகின்றது.

    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலில், காதலின் தியாகத்தை ஒர் அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்.

    “சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்றெண்ணிப்
    பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான்தன்
    கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி”

    சுனையிலே சிறிதளவு நீரேயுள்ளது. ஒரு மானே அருந்தும் அளவுள்ளது. ஆண்மான் குடிக்காது விட்டால் பெண் மான் குடிக்காது. எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல் வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது. காதலிலே விட்டுக் கொடுத்தல்கள், தியாகங்கள், அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கு அதிகமாகவே பேணப்படுகின்றன.

    பல்லவர் காலத்துத் தோன்றிய ஆண்டாள் பாடல்களில் ஒருதலைக் காதல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் சிவபெருமானைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவம் கொண்டும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

    சோழர் காலத்தில் புகழேந்தி, செயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் போன்றோர் காதல் சுவை மிக்க பாடல்கள் மூலம் காதல் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அதேபோல் புகழேந்தி நளவெண்பாவில், நளன் தமயந்தி மேல் கொண்ட காதலை அழகாக விரித்துக் காட்டியுள்ளார்.

    நாயக்கர் காலத்திலே குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர்

    வாகனைக்கண் டுருகுதையோ – ஒரு
    மயக்கமதாய் வருகுதையோ
    மோகம்என்பது இதுதானோ – இதை
    முன்னமே நான் அறியேன்! ஓ!
    ஆகம் எல்லாம் பசந்தேனே – பெற்ற
    அன்னைசொல்லும் கசந்தேனே
    தாகம் அன்றிப் பூணேனே – கையில்
    சரிவளையும் காணேனே.

    எனக் காதலால் ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்.

    தற்காலக் கவிஞர்களின் அற்புதமான கவிதை வரிகள், காதலை வெகுவாக வெளிப்படுத்தியுள்ளன. கவிஞர் மீரா தம் புதுக்கவிதை ஒன்றில்,

    “ஒருமுறை நீ என்னைப் பார்த்தாய்
    நெஞ்சில் முள் குத்தியத
    முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்        
    மீண்டும் ஒருமுறை என்னைப் பார்”

    என்கிறார். கற்றறியாத பாமரர்கள் கூட நாட்டுப் பாடல்கள் மூலமாகத் தமது காதலை வெளிப்படுத்தியிருக்கின்ற பாங்கு, ரசித்து இன்புற வைப்பதுடன் இளைஞர்கள் உள்ளத்தில் காதல் என்னும் பயிருக்கு விதை ஊன்றுவதாக உள்ளன.

    “கண்டாங்கி பொடவை கட்டிக்
    கைநிறையக் கொசுவம் வச்சு         
    இடுப்பில சொருகிறியே முனியம்மா – அது        
    கொசுவம் அல்ல எம் மனசு முனியம்மா”

    முண்டாசுக்கவி பாரதி கூட,

    ”காதல் காதல் காதல்
    காதல் போயின் காதல் போயின்
    சாதல் சாதல் சாதல்” 

    என்கிறார். ஆனால், மனிதர் தோன்றியது தொடங்கி, தொடர்ந்து வரும் காதலுக்கு எதிர்ப்புகளும் தொடர்வது இயற்கையே. மரபு, கலாச்சாரம், சாதி, மதம் என மனிதனால் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டுக் கோப்புக்கள் காதலுக்குத் தடை போடுகின்றன. முறை தவறிய காதலால் தமது வாரிசுகள் வாழ்க்கை முறை தவறிப் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். இயல்பாகவே தோன்றுகின்ற மகிழ்ச்சியை இடையிலே முறிக்க முயற்சிக்கின்றனர்.

    நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
    ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
    பாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய் கின்றார்
    பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க

    என்று தற்போதைய நிலமையினை மகாகவி பாரதியார் தன் பாடல் வரிகள் மூலம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    பகட்டுக்காகவும், பொழுது போக்குக்காகவும், எதிர்கால சிந்தனை எதுவுமின்றி விளையாட்டாக காதலென்னும் போர்வையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் ஏங்க வைத்து ஏமாற்றும் காதல், காதலுக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுகின்றது. எனவே காதல் செய்வீர்! காதல் செய்வீர்! காலம் முழுவதும் இணைந்திருக்க கருத்தில் கொண்டு, உண்மை அன்பை முதலீடு செய்து, வாழ்வில் முயன்று காதலில் வெற்றி காண்பீர்!

    Share
  • சுதர்மம்

    சுதர்மம்

    -கௌசி (சந்திரகௌரி சிவபாலன்)

    ஆண்டவன் சிருஷ்டியின் அற்பதப் படைப்பு மனிதன். இறைவன் மனிதன் கையில் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு அமைதி காணுகின்றான். இப் பொறுப்புக்களில் ஒன்று உன்னத பண்பாகிய நன்மை செய்தல். நன்மை செய்தல் என்ற பதத்தினுள் அடங்கும் உதவி என்ற பதத்திற்குள் உள் நுழைவோம். கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி வழங்கும் கொடையும் உதவியே. ‘உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கு இடுக்கண் களைவதும்”உதவியே

    வாழ்க்கையிலே நிம்மதி இழந்து, உறவுகளைப் பறி கொடுத்து, அல்லல்பட்டு அடைக்கலம் எனப் புகுந்தவர்களை அந்நியநாடு, அன்புக்கரம் கொடுத்து ஆதரவு தந்து அடிப்படை தேவைகள் மட்டுமன்றி ஆடம்பர தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. சொந்தமா? பந்தமா? சொல்லிக் கொள்ளும் நட்பா? யாரென்று தெரியாத ஒரு அந்நியனை தன் உடன்பிறப்புப் போல் நினைத்து உதவுகின்றது. இங்குதான் உதவியின் உண்மைத் தன்மையை நாம் அடையாளம் காணமுடிகின்றது. இனவேறுபாடு, சாதிவேறுபாடு, மதவேறுபாடு என மனிதனை மனிதனே பங்கு போட்டுக் கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒரு எடுத்துக்காட்டாக நாம் புகுந்த மனை விளங்குகின்றது. அதைப் போற்றிப் பாடாவிட்டாலும் தூற்றாமல் இருக்க வேண்டியது எமது கடமை.

    உதவி பற்றி நாம் விரிவாக நோக்குவோமேயானால், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய பொதுமறை திருக்குறள் தந்த தெய்வப்புலவர், திருவள்ளுவர் தான் அநுபவித்து உதிர்த்த வார்த்தைகளான,

    “உதவி வரைத்தன்று உதவி உதவி
    செய்யப்பட்டார் சால்பின் வரைத்து”

    என்ற குறளை எடுத்து நோக்கினால், உதவியைப் பெறுபவர்க்கு நாம் செய்யும் உதவி எந்த அளவிற்கு பயன்படுகின்றதோ. அந்த அளவே உதவியின் அளவு அமையும். என்பதே அதன் உள்ளார்ந்த பொருள் ஆகும். நாம் உதவியை யாருக்குச் செய்கின்றோம் என்பது முதலில் அறியப்படல் வேண்டும். அதாவது “பாத்திரம் அறிந்து பிச்சை போடு”என்ற பழமொழியோடு இக்கருத்து ஒன்றி நிற்கின்றது. பசித்தவனுக்கு உணவு பரிமாறப்படல் வேண்டும். எனக்குப் பசியில்லை என்று கூறும் விருந்தாளியை நோக்கி இதுதான் சுதர்மம் என்று கூறி வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பது எந்தவகையில் நியாயமாகப்படும். கேட்டோமா? கொடுத்தார், பெற்றோம் என்று அவர் கூறும் நிலைதான் ஏற்படும். அவன் சால்பின் வரைத்துத்தானே உதவி அமைதல் வேண்டும். பழங்கள் இருக்கும் வரை பழமரத்தைப் பறவைகள் அண்மிப்பது போல ஒட்டி உறவாடிய சொந்தங்கள், வெறுமையாக வழியிழந்து நிற்கும் போது விட்டு விலகிவிடும். இது நடைமுறை வாழ்க்கை. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற கருத்துக்களே உலகுக்கு ஏற்ற பொதுமொழியாக அமைகின்றன. மனிதனிடம் கொடுக்கப்பட்டிருப்பது அட்சயபாத்திரம் அல்லவே, கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் இருக்க. எனவே ‘தனக்குண்டு தானம் வழங்கு”என்பதும் சுயபுத்தி கொண்டு சுயமாகச் சிந்திக்க வேண்டியதுதான். ஆனாலும், மனிதன் கர்மம் செய்யப் பிறந்தவன். ஏதோ ஒருவகையில் அவன் கர்மம் செய்தேயாக வேண்டும் என பகவத்கீதை கூறுகின்றது. தனது மகனுக்காவது ஒரு மனிதன் கருமம் செய்திருப்பான். எனவேதான் இறுதிமரியாதையில் மகன் அவனுக்குக் கர்மம் செய்கின்றான் என அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் விளக்கியுள்ளார். கர்மம் செய். பலனை எதிர்பாராதே என பகவத்கீதை கூறுவது போல் ஒளவையும்

    ‘நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
    என்று தருங்கொல்? என வேண்டா – நின்று
    தளரா வளர் தெங்குதாள் உண்ட நீரைத்
    தலையாலே தான் தருதலால்”

    என்று தன வாக்குண்டாம் என்றும் நூலில் கூறியிருக்கின்றார். அதாவது அடியிலேயிருந்து வேர் மூலமாகக் குடித்த நீரை இளநீராகத் திரும்பவும் தென்னைமரம் தருவதனால், அதேபோல் ஒருவருக்கு நன்றி செய்தால் அந்த உதவிக்கு எப்பொழுது பதில் உதவி புரிவாரோ என்று நினைக்க வேண்டியதில்லை.

    உதவி பற்றிக் கீதையும் வள்ளுவமும் முரண்பட்டு நிற்பது போல் தோன்றினாலும் வள்ளுவம் கூறுவது, நீங்கள் செய்யும் உதவியின் பயன் அதனைப் பெற்றுக் கொள்ளுபவனின் மனதைப் பொறுத்தது. என்பது மட்டுமே. அந்தப் பலனைத்தான் எதிர்பார்க்காதே என்று கீதை சொல்கின்றது. வள்ளுவம் கூட பலனை எதிர்பார் என்று கூறவில்லை. பலனானது உதவி பெற்றுக்கொள்பவர் மனதைப் பொறுத்தே அமையும் என்கிறது. இந்துமதத்தின் அடிப்படை பகவத்கீதை. பகவான் கிருஷ்ணபரமாத்மா மூலம் இறைவாக்காக அருளப்பட்டது. கீதையைத் தலைமேற்கொண்டால், ‘உன்னுடைய கர்மம் நன்மை செய்வதாக இருந்தால், அதை யாருக்கு வேண்டுமானாலும் செய் அதுவே சுதர்மம்|| என்பதை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இதை அடிப்படை வித்தாக மனதிலே ஆழமாகப் பதிக்க வேண்டும். நன்மை செய்வதாக இருந்தால், சொந்தமோ, பந்தமோ, உறவோ, பகையோ, யாருக்கு வேண்டுமானாலும் செய்ய வேண்டும். இதனையே ஒளவைப்பிராட்டியும்

     ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
      உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
      மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
      அம் மருந்து போல் வாரும் உண்டு”

    என்கிறார். உடன்பிறப்பு, சுற்றம் என்று உன் கவனத்தைக் குறுக்கி விடாதே. உறவினர்கள் தான் நன்மை செய்வார்கள் என்றிருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மருந்து உன் நோயைத் தீர்க்கின்றது. அந்த மருந்து போன்ற அந்நியர்களும் உதவிக்கு வருவார்கள் என்று அழகாகச் சொல்லியிருக்கின்றார். அதனால் எமது பார்வையானது விரிய வேண்டும். அகலக்கண் கொண்டு பார்க்க வேண்டும்.

    எனவே ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” “முடிவு இறைவன் கையில் இருக்கின்றது. நீ வெறுமனே செயற்படு” என்னும் வாக்கியங்களை அகங் கொண்டு ஆட்டி வைப்பவன் இருக்கின்றான். ஆவதைப் பார்ப்போம். எனத் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவோம். நாம் பெற்ற உதவிகளை மனதில் பதித்திருக்கும் என மனந்தெளிவோம். ஒரு கரம் வழங்க மறுகரம் அறியாதிருக்கும் எனத் தொழிற்படுவோம்.

    Share
  • ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம்

    கௌசி, ஜெர்மனி

    இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில்
    வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும். இந்த நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின.

    சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள். எனவே இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ண வண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த இலக்கியத்தைப் படைப்பார்கள்.

    நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா
    மலைமேலே ஏறி வா
    மல்லிகைப்பூ கொண்டு வா

    என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய
    கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப்
    பாடலுடன் சிறுவர் பாடல்கள் தொடங்கின.

    சிறுவர்களுக்கான கதைகள் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், சித்திரக் கதைகள், நீதிக் கதைகள், துணுக்குகள் எனச் சிறுவர் இலக்கியத்துள் அடங்குகின்றன. ஈழத்திலும் மிகச் சிறப்பான சிறுவர் இலக்கியத்தின் கர்த்தாவாக அநு.வை. நாகராஜன் (1933 – 2012) அவர்களைக் குறிக்கலாம். இவர் சிறுவர்களுக்காக,

    • தேடலும் பதிதலும் என்னும் சிறுவர் அறிவியல் நூல் – 1992
    • அவன் பெரியவன் என்றும் சிறுவர் குறும் நவீனம்
    • சிறுவர் சிந்தனைக் கதைகள் – 2002
    • சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள் 2005
    • சிறுவரும் அவர்கள் அறிவுசார் சாதனங்களும் – 2005
    • சிறுவர் பழமொழிக் கதைகள்

    போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

    இவ்வாறு சிறுவர்களுக்கான நூல்களை எழுதிய அநு.வை. நாகராஜன் போன்றே குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணியை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த ஆ.மு.ளு என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்கு உரியவர்.

    தொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும்
    முழுக்க முழுக்கச் சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர்
    மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாகும்.

    அத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும்
    மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத் தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகளே முதன்மைக் காரணங்கள்.

    இவர் மே மாதம் 14ஆம் திகதி, 1919ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் திரு.-திருமதி கந்தவனம் தம்பதியனருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும்
    சமூகத் தொண்டிலும் நேரத்தை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பரும் தொண்டுகள்
    ஆற்றி கல்விப் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உப தலைவராகவும் நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன் துறை ஆசிரியர் சங்கக் கிளையை ஆரம்பித்தவர்களில், இவர் முக்கியமானவர்.

    இவர் 1964ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ்ப் பாடசாலை
    தலைமை ஆசிரியராக இருந்தார். அப்போது அங்குப் பயின்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர், படிப்பை இடையில் நிறுத்தி, விவசாயத்திற்கு அழைத்துச் சென்றனர். அறுவடைக் காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும்.

    ஆர்வம் மிகுந்த மாணவர்கள் பலரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார். இவ்வாறு மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்தி வந்தார். அவ்வேளையில் மாணவர்கள் முன்னேற்றம் கருதி, யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார்.

    மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950ஆம் ஆண்டு வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க, வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார்.

    08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 எனப் பக்கங்கள் தேவைக்கேற்ப அதிகரித்த வண்ணம்
    இருந்தன. அதன்பின் 1954ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக வெற்றிமணி உருவெடுத்தது. மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளையில், அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றல் மிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுத வைத்தார்.

    வெற்றிமணியில் ஒரு சிறு மாணவன் மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு
    முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன்
    மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை? எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை
    கவர்ந்தது. அவன் சொன் பதில், மாடு பாவம், வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்குக் கவலையாக
    இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாய்ச்சியது. உடனே
    இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.

    மாடு
    மாட்டிற்கு 2 கொம்பு உண்டு.
    மாட்டிற்கு ஒரு வாலுண்டு.
    மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.

    இக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், “ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள்? என்று
    ஆசிரியரைக் கேட்டபோது “இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள்
    வரத் தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட, இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான்
    வெளியிட வேண்டும் என்பதில்லை. எழுத்தாளரைக் கிளர்ந்து எழச்செய்யும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும் என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.

    இதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக
    சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை
    மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம், எல்லோராலும்
    போற்றப்படக் கூடியவர்.

    இவருடைய இந்த நூற்றாண்டுக் காலப் பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன்
    பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது.

    சாதனையாளர்கள் என்றும் சாவதில்லை
    சாதனைகள் என்றும் மறைவதில்லை – மனிதன்
    வாழும்வரை மறக்கப்படுவதில்லை.

    Share