Tag: சரஸ்வதி இராசேந்திரன்

  • உணர்ச்சி சிதையாதே

     

    சரஸ்வதிராசேந்திரன்

     

    அருமை மகனே அன்புருவே

    ஆசைமகனே கேளாயோ

    உடலில் பலமே இருந்தென்ன

    உள்ளத்தில் திறமே வேண்டுமடா

    நடையில் பணிவுடன் நற்குணமும்

    நாவில் நற்சொல் நல்மனமும்

    கொண்டால் அல்லவா நீ மனிதன்

    உறக்கம் போக்கு வையத்தில்

    ஊக்கம் பிறக்க பாடுபடு

    தேடும் வாழ்வில் வெற்றிதனை

    சேர்க்கும் மணக்கும் நல்லுணர்வே

    நல்லோர் ஏற்க நன்மைசெய்

    உயர்ச்சிஅடைய வழி சொன்னேன்

    உணர்ச்சி சிதைந்தால் வாழ்கையில்லை

    சரஸ்வதிராசேந்திரன்

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சரஸ்வதி இராசேந்திரன்

     

    என் பார்வையில்  கண்ணதாசன்

     

     

    Kannadasanஎன் பார்வையில்  கண்ணதாசன்   குறை  நிறைகளுடைய  ஒரு சராசரி மனிதன், படிப்பறிவு   இல்லாவிட்டாலும்  பட்டறிவால்  வாழ்க்கை அவலங் களையே  பாடல்களாகப் புனைந்தவர்.  வெளிப்படையானவர், ஒரு நாத்திகனாக இருந்து ஆத்திகமானவர். அவர் ஒரு பலகோண கவி என்றால் மிகையில்லை. அதுவும் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலே பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி மக்கள் மனதிலே  நீங்காத இடத்தை பிடித்து  சிம்மாசனமிட்டவர்.

    போன தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை அவரது பாடல்களை விரும்பிப் பாடுவதிலிருந்தே இதுபுலப்படும்.  வாழ்க்கை நிதர்சனங்களையே பாடல்களாகப்  புனைந்ததினால் அவருக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் கூட அவை பொருந்தியிருக்கின்றன. அவர் பாடல்கள் பாமரனும் புரிந்து கொள்ளும் அளவில் எளிமையாக இருந்தன. என் வாழ்க்கையில் எற்பட்ட சில சிக்கலான நேரங்களில் ‘’அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தாலாடும்” பாட்டு மன அமைதியை தந்திருக்கின்றது அவரது.

    கருவிலேயே திருவுடைய கவி கண்ணதாசன்.  ஞான சம்பந்தர், குமர குருபர் போன்று ஒரு பிறவிக் கவி. குடும்பக் கஷ்டம் ஏற்படும் போது சொந்த அண்ணன் தம்பி கூட உதவாத காரணத்தால் விளைந்ததுதான் “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான  உலகத்திலே’’ பாடல்.  இந்தபாடல் நமக்கும் பொருந்தும் தானே?

    நம் நெருங்கிய உறவினர் நம்மை விட்டுப்போகும் போது மனம் விட்டுப்போயிடும். அந்த நேரத்தில் உண்மையை விவரிக்கும் ‘’போனால் போகட்டும் போடா இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?’’ பாடல் எத்தனை கருத்துச்செறிவான பாடல். இதை கேட்டதும் தன்னாலேயே மனம் அமைதியாயிடும். “வீடு வரை உறவு  வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ?”  மனிதனை தெளிய வைக்கும் பாடல்கள்.

    கனி பிழிந்த சாரங்களினால் காதல் கவிதை களையும் புனைந்தவர். “ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்”, “பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்”, “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே …நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் குயிலே”  எத்தனை நாசுக்கான காதல் பாடல்கள்.

    மனிதனின் குண நலன்களை படம் பிடித்துக்காட்டுவதில் அவருக்கு இணை அவரே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே, அதில் பொய்யும், புரட்டும், திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே’’,  “இறந்தவனை சுமந்தவனும்   இறந்திட்டான் அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்”, “இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்,  உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்”,’ அவர் தன் குறைகளை என்றுமே மறைத்ததில்லை. மதுத்தண்ணீர் விட்டேதான் தன் கவிதைகளை வளர்த்தியிருக்கிறார். அதன் விளைவுதான் ‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு  ஒரு கோலமயில் என் துணையிருப்பு”.  அவரைப்பொறுத்தவரையில் கெட்டபின்புதான் ஞானி ஆகியிருக்கிறார். அதையும் கூட பாட்டாக வரித்துள்ளார் “கெட்டபின்பு ஞானி” என்று.

    நகைச்சுவையையும் அவர் விட்டு வைக்கவில்லை “பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு  கண்பார்வை போடுதே சுருக்கு”, “வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நான் வாரி அணைச்சா வழுக்கிறியே  நீ அலேக்”. அரசியல் அவலங்களையும்  அலசியிருக்கிறார் ‘’சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது”. கண்டனக்கார்கள் கூட அவர் கூட கை கோர்த்து நடந்தார்கள் அவரின் நகைச்சுவையைக்கண்டு.

    “தமிழே அமுதே அழகிய மொழியே’’ என்ற பாடல் அவரின் தமிழ்ப் பற்றைக் காட்டியது. அவர் எழுதிய  தத்துவ  பாடல்களிலேயே அவரைக்கவர்ந்தது “பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது”,  என்ற பாடல். எனக்குமட்டுமில்லை எல்லோருக்கும் பிடித்த பாடல் அது. எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய பாடல்கள் ஏராளம். அவர் ஒரு தெய்வீக கவி.  அவரொரு  காதல் கவி. அவரொரு  தத்துவக்கவி. அவரொரு தமிழ்க்கவி. அவர் ஒரு சீர்திருத்தக் கவி … இப்படி அவரை சொல்லிக்கொண்டேபோகலாம்.

    அர்த்தமுள்ள இந்து மதம் எழுதி அவர் ஒரு முழுமையான ஆன்மீக வாதி என்பதை நிரூபித்து விட்டவர். ஏசு காவியம் பாடி  எம்மதமும் சம்மதம் என்பதை காட்டியுள்ளார். அவரைப்பற்றி எழுத தாள்போதாது, நாள்போதாது  ஆகவே இத்துடன் முடிக்கிறேன்.  தமிழ்த்திரை உலகம்  உள்ள வரை  அவர் புகழ் ஓங்கிக்கொண்டேதான் போகும்.  எங்கள் இதயம் இயங்கும் வரை உன்   பாடல்கள்  ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் கண்ணதாசா உன் புகழ் எண்ணதாசா.

     
     
     
     
     
     
     
     
    மன்னை சதிரா (சரஸ்வதி இராசேந்திரன்)
    51,வடக்கு ரத வீதி  ,மன்னை
    sathiramannai@gmail.com

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — சரஸ்வதி இராசேந்திரன்

    என் பார்வையில் கண்ணதாசன்

    Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன்  கருவிலேயே திருவுடைய  ஒரு பிறவிக் கவிஞன். பல கோணப்பாடகன். அவர் வெறும் கவிகளில் மட்டும் அழகொழுகப் பாடிப்போகவில்லை,  அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே சான்றாக்கித் தந்திருக்கிறார். பாமரனும் அறிந்து, புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக  பாடல்களை தந்தவர்.  தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு தனி இடத்தை பெற்றவர்.  இயற்கைப் பொருள்களை சுவைத்து  இயற்கையை இயல்பிற் பாடிய அவர் ஒரு இயற்கை கவிஎனலாம்   ( உதாரணம் ;  இது ஒரு பொன்மாலைப்பொழுது )    தெய்வ அருள் பெற்றுப் பாடிய தெய்வப்பாடல்கள் பல பாடியதால் அவர் ஒரு தெய்வீகக் கவி எனலாம்.

    தத்துவப்பாடல்களைப்பாடியதால்  தத்துவக்கவி (உதாரணம் ; பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது )  தெள்ளத்தெளிவுற  தமிழ் பாடல்கள் பல எழுதியுள்ளதால் தமிழ்க்கவி. காதல் பாடல்கள் பல எழுதியுள்ளதால்  காதல் கவி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அவர் ஒரு பலகோண கவி என்று. அது மட்டுமா, உணர்ச்சியூட்டும் பாக்களும், எழுச்சியூட்டும் கட்டுரைகளும், கிளர்ச்சியூட்டும் பேச்சும்  என நல் விதைகளைத் தூவிச்சென்றவர். அவர் வெளிப்படையானவர், வெளி வேஷம் கொண்டவரில்லை, அரசியல் வாதிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இருந்தாலும் கண்டனக்காரர்களும் கூட அவருடன் கைகோர்த்து நின்றனர். நாத்திகத்திலிருந்து  ஆத்திகத்திற்கு வந்தவர், அவருடைய  அர்த்தமுள்ள இந்துமதமே இதற்கு சாட்சி. ஏசு காவியம் பாடி   இதயத்தில் நின்றவர். வாழ்க்கை பாடத்தையே  பல நேரங்களில்    பாட்டாகப்பாடியர்.

    கவிஞர் கண்ணதாசனை அறியாத மக்களில்லை, பேசாத நாவில்லை, அவர் பாடலை பாடாத நாவில்லை. வையத்துள் அவர் பாடல்களால் வாழ்வாங்கு வாழ்ந்து  அமர நிலை எய்திய அமரர் கண்ணதாசனை  நாளும் வாழ்த்துவோம். எண்ணிக்கை இல்லா பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வர் ‘என்னைப்பொ றுத்தவரையில்  என் பார்வையில் கண்ணதாசன் ஒரு தெய்வப்பிறவி என்றால் மிகையில்லை.

     
     
     
     
    சரஸ்வதி இராசேந்திரன் ,
    51 ,வடக்கு ரத வீதி ,மன்னார்குடி  614001

    sathiramannai@ gmail.com

    Share