Tag: சீதாலட்சுமி

  • நினைவுகளுடன் ஒருத்தி – 3

     சீதாம்மா

     

      “Kindly be brave and fight the battle of daily life.

     Be strong in mind.  Be joyful and calm at all times. 

     Have faith in the Lord  at anycost.

    He gives you some more experiances to give more strength and will to face the life more bravely.

    Be sure of His Divine Living presence at all times with you.

    He will guide you “

    சுவாமி சிவானந்தா எனக்கு எழுதிய கடைசி கடிதத்தில் சில வரிகள்

    ஆம், நான்கு ஆண்டுகளுக்கும்  மேலாக எங்களுக்குள் கடிதங்கள் பரிமாற்றம் இருந்தது. என்னை உருவாக்கியவர்களில்  ஒருவர்.   இந்தத் தொடரில் பின்னர் விளக்கமாக எழுதுகின்றேன். ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கல்லூரி மாணவியாக இருக்கும் பொழுது எனக்கு கிடைத்த வழிகாட்டிகளில் ஒருவர்.

    இவரால்தான் திசைமாறிப் போகாமல் காப்பாற்றப்பட்டேன். சுவாமிஜி எழுதியதுபோல் என் வாழ்வில் இன்றளவும் போராட்டம் தொடர்கின்றது.. படிப்பினைகளும் பெற்று வருகின்றேன். . என்னுடன் என் இறைவனும் தொடர்ந்து வருவது உணர்கின்றேன். தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய அனுபவங்களை நான் சந்தித்தாக வேண்டுமென்பது அன்றே நிர்ணயப்படுத்தப்பட்டுவிட்ட ஒன்றாகும்.

    கட்டுரையாளரின் ஆதங்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

    கடவுளின் தவிப்பு.        

    கடவுளானாலும் அவருக்கும் அமைதி வேண்டுமே!

    அவர் படைப்புகளில் மனிதன் அவரை அமைதியாக இருக்க விடவில்லை.

    எப்பொழுதும் துரத்திக் கொண்டே இருக்கின்றான். அவன் ஆசைகள் நிறைவேற வேண்டும்.   வேண்டியன  உடனே கிடைக்க வேண்டும்.   ஆசை வளர்ந்து பேராசை, அதன் குட்டிகளான பொறாமை, வன்மம், , பகைமை, ஒன்றா இரண்டா, ஒவ்வொரு துர்க்குணமாக வளர்ந்து அத்தனைக்கும் ஆண்டவன் உதவ வியாபாரமே பேச ஆரம்பித்துவிடுகின்றான். ஒரு கோயில் , பிறகு இன்னொருகோயில் இப்படி அவரை எங்கும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. இப்படி ஒரு கூட்டம் !

    இன்னொன்றைப் பார்த்தால் நினைத்தது கிடைக்கவில்லையென்றால், திட்டித் தீர்க்க விரட்டல்.

    இன்னொரு கூட்டமும் உண்டு. ஆற்றாமையில் அலறல்.” எப்பொழுதும் கெட்டவனுக்கு நினைப்பது நடக்கின்றது, நல்லவன் தான் கஷ்டப்படுகின்றான் “

    ( இப்படி  பல மனித குணங்களைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார் )

    கடவுளின் நிலை பரிதாபமாகி விடுகின்றது. யாரும் அன்புடன், அவரை அவருக்காக அணுகவில்லை. எங்குதான் ஓடி ஒளிய முடியும். ?! மனிதன் எட்டிப் பார்க்காத ஓர் இடத்தில் ஒதுங்க நினைக்கின்றார்.

    மனம்

    மனிதன் எட்டிப்பார்க்காத இடமாம் !

    மனத்தில் கடவுளை அமர்த்திவிட்டு நின்று விடுகின்றார் கட்டுரையாளர்.

    என் மனமோ இறைக்கைகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தது.

    :நான் யார் ? “என்று எத்தனை பேர்கள் நினைத்துப் பார்க்கின்றனர். !

    தன்னிடம் இருக்கும் குறைகளை சிறிதளவேணும் புரிந்து கொண்டால் அவனுடைய பல பிரச்சனைகளுக்கு அவனே வழி கண்டுபிடிக்க இயலுமே!

    அதிகம் பேசுவோம்  — பக்கம் பக்கமாக எழுதுவோம்

    நம்மை நாம் அறிவோமா?

    எனக்கும் பல முகங்கள் உண்டு. பல குறைகளும் உண்டு. அனுபவங்கள் பல படிப்பினைகள் கற்றுக் கொடுத்தும் நான் பூரணமாக திருந்த முடியவில்லை.

    கட்டுரையாளர் என்னை சுவாமி சிவானந்தரின் கடைசி மடலை எடுத்துப் பார்க்க வைத்துவிட்டார்    ஆமாம் ஓர் புதுப் படிப்பினை பெற்றேன் . அதைப்பற்றி எழுதும்  முன்னர் ஒன்றைக் குறிக்க விரும்புகின்றேன்.

    மனம்  என்பதற்குப் பதிலாக ஆழ்மனம் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

    மனித மனம் குரங்கைவிட மோசமானது. குரங்கு ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும்பொழுது சில விநாடிகள்தான் இரண்டையும் பிடித்து தொங்கும்.  உறுதி தெரிந்தவுடன் ஒன்றை மட்டும் பற்றிக் கொள்ளும். மனிதனோ இரண்டையும் பிடித்துக் கொண்டு தொங்குவான்.

    தரமற்ற எண்ணங்களால் மனத்தைக் குப்பைத் தொட்டியாக வைத்திருக்கின்றோம்.

    ஆழ் மனத்தில் தான் பிரபஞ்ச சக்தி அமைத்திருக்கின்றது.

    அதனை உணர்வது அவ்வளவு எளிதல்ல.

     உன் வீட்டில் தங்கக் கட்டிகள் நிறைந்த ஒரு பெட்டி இருக்கின்றது என்று   யாராவது கூறினால் எப்படி தேடுவோம் ? களைப்பு என்று உட்கார்ந்து விடுவோமா?

    முயன்றால் முடியாதது இல்லை.

    நினைவொன்று மனத்தில் நிழலாடியது .அதிலும் சிந்தனைக் குளத்தில் தள்ளிய ஓர் சம்பவம்.

    download

    எழுத்தாளர் ஜெயகாந்தன் இறந்த செய்தி கேள்விப்படவும் துன்பத்தில் துடித்துவிட்டேன். என்வரையில் அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. . பிரச்சனைகளால் துரத்தப்படும் பொழுதெல்லாம் என் மனக் குமுறல்களைத் தாங்கும் ஓர் சுமைதாங்கி.   ஓர் நல்ல நண்பர்.. அவர் உடல் நிலை மோசமாகி வருவது தெரியும். விரைவில் அவர் மரணிப்பார் என்பதும் உணர்வேன். ஆனால் உண்மை தெரிந்தவுடன். மனத்தில் விழுந்த அடி மிகவும் வலித்தது.. அவர்கள் குடும்பத்தாருடன் பேச நினைத்தேன். ஆனால் வீட்டு தொலைபேசி எண் இல்லை.. விசாரித்து அவர்களுடன் பேச ஒரு வாரம் ஆயிற்று.

    முதலில் எடுத்தது கவுசல்யாதான். . அவர் குரல் கேட்டவுடன் தேம்பித் தேம்பி அழுதேன். அவர்கள் என்னை  சமாதானம் செய்தார்கள். . . பின்னர் அவருடைய முதல் மனைவியிடம் பேசினேன்.. அவர்களும் என்னைச் சமாதானம் செய்தார்கள்

    சமாதானம் சொல்ல வேண்டியவள் நான். ஆனால் அங்கே என்னைச் சமாதானம் செய்தனர். அவர்கள் கொடுத்த விளக்கங்கள் எனக்குக் கிடைத்த படிப்பினை. அனைவரும் அறிந்து கொள்வது மட்டுமல்ல சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஓர் நிகழ்வு.

    நாமும் அலசிப் பார்ப்போமே!

    (என் உடல் நிலை காரணமாகத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. —   பொறுத்தருள்க.)

    Share
  • நினைவுகளுடன் ஒருத்தி – 2

                          சீதாம்மா

    மனச்சிமிழைத் திறந்தவுடன்  நினைவலைகள் சுற்றிச் சுழன்று சுனாமியாக

    என்னை மிரட்ட ஆரம்பித்தன. பயம் வரவில்லை . நான் சிரிப்பதைப் பார்த்து அவைகள்தான் மிரண்டு அடங்கின. என் வாழ்க்கைப் பயணமே ஒரு த்ரில்லர்

    பயணம். என் மனத்திரையில்  ஒரு காட்சி நிழலாடியது.

    கண்ணகிக் கோட்டம் பார்க்கச் சென்றவர்கள் ஒன்பது பேர்கள். வாகனம் ஒரு ஜீப்.   திரும்பும்பொழுது அந்த வண்டி கட்டுப்பாடு இழந்து, மலையில் உருள ஆரம்பித்தது. ஒரு பாறையில் மோதிய வண்டி அப்படியே சாய்ந்து நின்றது. நான்தான் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவள்.  உடம்பில் அடிபட்டிருந்தும் மன வலிமையினால் கீழே குதித்து எல்லோரையும் வெளிக் கொண்டு வந்தேன்

    இரவு முழுவதும் அந்தக் காட்டில் தங்க வேண்டிய நிலை.

    தேக்கடி காட்டில் யானைகளின் கூப்பாடு –   புலிகளும் கரடிகளும் இன்னும் பல மிருகங்களும் நடமாட ஆரம்பித்தன . விழுந்தவர்களில் ஒருவருக்கு கால் ஒடிந்துவிட்டது. மற்றவர்களுக்கோ எலும்பில் அடி. அதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் முன் உயிருடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். இத்தகைய அனுபவங்கள் ஒன்றா, இரண்டா?

    விபத்துக்களில் என் உடம்பு பாதிக்கப்பட்டது ஒரு புறம். எத்தனை வரப்புகளில் நடந்திருக்கின்றேன். கால்களில் தேய்மானம்.  காட்டு அனுபவங்கள் கூட பரவாயில்லை. இந்த சமுதாயத்தில் போராடியதுதான் கடுமை. நான் ஒரு அரசு ஊழியர்தான். வெறும் கையெழுத்து போட்டு ஊதியம் பெற்று உற்சாகமாக வாழ்ந்தவள் இல்லை நான். என் அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். பொருளுக்கும், புகழுக்கும் என்றும் ஆசைப்பட்டவள் இல்லை.   உங்கள் சிந்தனைக்கு சில செய்திகள்.. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பரிசீலனை செய்து கொள்ளட்டும். நாம் வாழ்ந்த முறை என்ன,  நம் எண்ணங்களின் தன்மை என்ன என்று சில நிமிடங்களாவது நினைத்துப் பார்ப்போம். மனித நேயத்தின் மகத்துவம் உணர்வோம். நல்ல எண்ணங்கள் நமக்கே நல்லது. இதுபற்றி நாம் நிறையவே இத்தொடரில் பார்க்கப் போகின்றோம்.

    நேற்று கணினியில் வலம் வரும் பொழுது ஒருவரின் படைப்பு கண்ணில் பட்டது . படித்துப் பார்க்கும் பொழுதே மனம் பறக்கத் துடித்தது. அதனைக் கொஞ்சம் அடக்கி முழுவதும் படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் . எழுதியவரின் ஆதங்கம் புரியவும் என் மனத்தில் ஓர் தவிப்பு…… நினைவலைகளில் மிதக்க ஆரம்பித்தேன்

    அது கடவுளைப் பற்றிய ஓர் கற்பனைப் படைப்பு

    ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி வெளிவந்த கதைகள் நினைவிற்கு வந்தன.

    பரமனும் தேவியும் பூலோக யாத்திரை வருகின்றார்கள்

    எந்த சூழ்நிலையிலும் தங்கள் சக்தியைப் பிரயோகிப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் வருகின்றார்கள்.

    முதலில் ஓர் கிராமம். அங்கேயே  எத்தனை ஏற்றத் தாழ்வுகள்?! எத்தனை பிரிவுகள்?! தேவி கணவனிடம் பல கேள்விகள் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் “ நான் மனிதனைப் படைத்தேன். அவனோ எதை எதையோ படைத்துவிட்டு அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றான் என்றார்.

    எவ்வளவு உண்மை! சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் மனிதன் தன்னைப்போல் பணியாற்ற ரோபோட்டுகள் கண்டு பிடித்தான் இப்பொழுது அவைகளால் பலருக்கு வேலை போகப் போகின்றது.

    மீண்டும் ரயில் பயணம் அதில் சில இளைஞர்கள். கற்பைப் பற்றி வாக்குவாதம்.  சிவன் உடலில் வெப்பம் கூடியது. நல்ல வேளையாக அம்மனின் குளிர்ந்த கை சூட்டைத் தணித்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

    எப்பொழுதும் அவர் திருவிளையாடலுக்கு மதுரைதானா?!. கோயிலுக்குள் சென்றவுடன் தேவி கூட்டத்தைக் கண்டு மெய் சிலிர்க்கின்றாள். ஆனால் அய்யனோ அங்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் அலசிப் பார்க்கின்றார்.

    இறைவனுக்காக வந்தவர்கள் எத்தனை பேர்கள்?! ஏமாற்றம்  வேதனை.

    இன்னும் கைலாயம் திரும்ப மனம் வரவில்லை. அவர்கள் வெளித்தோற்றமும் தயக்கமும் அங்கு உலாவிக் கொண்டிருந்த போலீஸ் மக்களுக்கு சந்தேகம் வர பல கேள்விகள் கேட்டனர். கடவுள் பொய் சொல்ல முடியுமா? மேலும் தயக்கம்.  பலன் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றனர். இவர்கள் அங்கு சென்ற சில நிமிடங்களில்  கோட்டு, சூட்டுடன் ஒரு வாலிபன் வந்தான். உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் எழுந்து நின்று வரவேற்றார். ஆடைக்குத்தான் மனிதன் எத்தகைய மதிப்பு கொடுக்கின்றான்.  காணாமல் போன பெற்றவர்களைத் தேடி திருப்பரங்குன்றத்திலிருந்து வந்தவன் சுப்பிரமணியன்.

    ஆம் வந்தவன் வடிவேலன்.

    பெற்றவர்களைக்  கூட்டிப் புறப்படும் பொழுது இன்ஸ்பெக்டர் வேலனின் காதில் சொன்னது “உங்கப்பாவுக்கு  கொஞ்சம் மைண்ட் சரியில்லே. அம்மாவை உடன் அனுப்பாதீங்க” . இது பரமனுக்குத் தேவையா?

    நல்ல வேளை, அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. அம்மை இவைகளைக் கவனிக்காமல் மகனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

    கோவணாண்டி மகன் கோட்டு சூட்டில் எவ்வளவு அழகாக இருக்கின்றான்!

    சுவாமிமலையில் உபதேசம்   இப்பொழுது மதுரையில் உபதேசம்.

    ஆறு ஆண்டுகள்வரை  என் கதைகள் பத்திரிகைகளில் வந்தன. விகடனில் முத்திரைக் கதையும் வந்தது. எல்லாம் உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டவை.  ஏனோ திடீரென்று எழுதுவதை நிறுத்தினேன்.

    unnamedஎன் முதல் கதை “கதிரேசன் மலை” பன்னிரண்டுவயதில் எழுதினேன். ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அதனை ஓர் பிரபலமான கதாசிரியரிடம் நேரில் கொடுத்தேன் அவரை உங்களுக்கும் தெரியும்.  “ கல்கி”

    பாரதிக்கு மணிமண்டபம் கட்ட சில ஆய்வுகள் செய்ய திரு ராஜாஜி அவர்களும், திரு கல்கி அவர்களும் எட்டயபுரம் வந்திருந்தார்கள். அவர்களை நமஸ்காரம் செய்தேன். பின்னர் கல்கியைப் பார்த்து  “ நீங்க கதை எழுதுவீங்களாமே ? “என்று கேட்டேன். “ஆமாம், நீ படிச்சிருக்கியா?” என்று கேட்டார் (நான் எட்டயபுரத்துக்காரி }

    “இன்னும் படிக்கல்லே, இனிமே படிக்கறேன். நானும் கதை எழுதிக் கொடுக்கறேன். நீங்களும் படிங்க என்றேன்” அப்பொழுது எனக்கு எட்டு வயது.

    சொன்ன வாக்கை காப்பாற்ற கதை எழுதி அவரிடம் கொடுக்கும் பொழுது எனக்கு பன்னிரண்டு வயது.

    கதைகள் படிக்க ஆரம்பிக்கவும் பத்திரிகைகள் படிக்கும் குணம் வந்தது. இதனால் என்னிடம் தமிழும் வளர்ந்தது.

    பத்திரிகைகள் என்றவுடன் விமர்சனங்கள் நினைவிற்கு வருகின்றன.

    அர்த்தமுள்ள விமர்சனங்கள் அவசியம் தேவை. ஆனால் காலம் மனிதனை அதிலும் மாற்றி விட்டது. விமர்சனம் செய்தால் பிரபலமாகி விடலாம் என்ற நினைப்பும் வளர ஆரம்பித்தது. அடுத்தவரைக் குறை கூறினால் அவனை அறிவாளி என நினைப்பார்கள் எனற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அளவுக்கு மீறினால் அது நஞ்சாகிவிடும் என்பதை மனிதன் மறந்து விட்டானே. இருந்த மதிப்பையும் இழப்பதை மனிதன் உணரவில்லையே! நம்மில் எத்தனை பேர்கள் இருக்கின்றோம். ஒவ்வொருவரும் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று.  நம்மை நாமே நமக்குள் விமர்சனம் செய்து பார்ப்போம்.

    படித்த கட்டுரை பற்றி அடுத்து பேசுவோம்.

    Share
  • நினைவுகளுடன் ஒருத்தி

                      ———சீதாம்மா————————————–

    பொங்கல் திருநாள்

    pongal4-25

    ஒருவருக்கொருவர்  வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்வோம்

    இயற்கையின் சீற்றத்தில் இழந்தது எத்தனை எத்தனை?!

    பயிர்களும் தவித்து துவண்டதே

    ஆனால் இப்பொழுது எல்லோர் முகங்களிலும் ஓர் மலர்ச்சி

    மனத்தில் வாட்டமிருப்பினும் சொந்த பந்தங்களுடன் கூடியிருப்பது மகிழ்ச்சி

    இதுதான் வாழ்க்கை

    இது பொங்கல் வாழ்த்து மடல்மட்டுமல்ல. ஓர் மூதாட்டியின் மனக்குரலின் ஓசையும் கூட.    ஆம்   … ஓர் புதிய தொடரின் தொடக்கம்

    எழுதுவதை நிறுத்தி ஏறத்தாழ இரண்டாண்டுகள்  ஆகப் போகின்றன

    ஏன் இப்பொழுது எழுதத் தொடங்கினேன்?

    அது ஓர் தீவு. ஏரிகள் சூழ்ந்த ஓர் திடல் அங்கு நான்கு வீடுகள்.

    அத்திடலிலும் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஓர் பெரிய மரவீடு. அதன் பின்னும் ஓர் சின்ன ஏரி. ஓர் நீச்சல்குளமும் உண்டு. எத்தனை பறவைகள். கொக்குகள் வந்து கொஞ்சும். அணில்கள் துள்ளி விளையாடும்.  இவைகள் மட்டுமா? விதம் விதமான பாம்புகள். முதலையும் அவ்வப்பொழுது வரும்.  அந்த வீட்டில் ஒர் அறை. அதற்குள் ஒருத்தி. இயக்கங்களின் இயலாமை. உலகமெல்லாம் சுற்றிப் பறந்த ஓர் பறவை தங்கக் கூண்டில் அடைப்பு.

    அப்பப்பா, கொடுமை! முதுமை இவ்வளவு கொடியதா?  வாழ்வியலில் பன்முகம் தெரிந்தவள். அவளே திணறினாள். சுருண்டாள். அழுதாள்  ஒடுங்கிப் போயிருந்த அவளை மனக்குரல் தட்டி எழுப்பியது. அனுபவங்களின் சக்தி அவள் மனச் சிமிழைத் திறந்தது.. சிறிது சிறிதாக அவளிடம் ஓர் புத்துணர்வு.  அவள் துவண்டு போக மாட்டாள்.   மரணத்தையும் வரவேற்கும் வலிமை பிறந்துவிட்டது.

    முதுமையில் துணையிருப்பது நினைவுகள்

    உண்மை

    வாழ்வியல் தத்துவம்

    முயற்சிகளில் ஒன்றாக உங்கள்முன் வந்திருக்கின்றேன். என் நினைவுகளைப் பதிகின்றேன். எந்தப் பதிவிலும் ஓர் செய்தி இருக்கும். அதை உங்கள் ஆழ்மனத்தில் வைத்து பூட்டி வையுங்கள். உங்களுக்கும் பின்னால் உதவும்.

    அடிக்கடி சந்திப்போம்.

    ( கண்பார்வை மங்கிவிட்டது. விரல்கள் நடுங்குகின்றன எனவே எழுத்துப் பிழையைப் பொருத்தருள வேணடிக் கொள்கின்றேன்.)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 17, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  சமூகசேவகி சீதாலட்சுமி அவர்கள் 

    DSC_0021

     

    சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் இவ்வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் பாராட்டப்படும் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் (Seethaalakshmi Subramanian) அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் எண்பது வயதைக் கடந்த சீதாலட்சுமி அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் மற்றும் இலக்கிய எழுத்தாளரும் வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். சுவாமி சிவானந்த மகரிஷியின் வழிகாட்டுதலில் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்த சீதம்மா அவர்கள் கலப்புத்திருமணம், காதல் திருமணம் போன்றவற்றின் நெடுநாள் ஆதரவாளர். குழந்தை கருவில் உருவாவது முதல் ஆறு வயது வரை அதன் வளர்ச்சிகள் பற்றிய சிறப்புக்கல்வியும் பயிற்சியும் பெற்றவரான சீதாம்மா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூகசேவகியாகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஓர் பன்னாட்டு அமைப்பில் ஆசிய நாட்டுப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார், சமூகப்பணியின் பொருட்டு உலகவங்கித் திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார்.

    தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, வேலையில் ஊதியமில்லாமல் தற்காலிக விடுப்பெடுத்து அவரது நாற்பதாவது வயதிலும் கல்லூரியில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணியிலும் எழுத்திலும் இவரது கவனம் சமுதாயத்தின் மேல் இருப்பதால் இவருடைய ஆய்வுகள், “பெண்” மற்றும் “சமுதாயம்” இவைகளைப் பற்றியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக “பாரதிகண்ட புதுமைப் பெண்” என்று மறைந்த பெண்ணிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

    இந்தப் புதுமைப் பெண்ணும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி படித்த பள்ளி அதே பள்ளியிலும் படித்து, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது ஒரு வியப்பைத் தரும் ஒற்றுமை. அக்காலச் சூழலில் பாரதி ஊரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் பெண்ணும் சீதாம்மாவே.

    எழுதப்படிக்கத் தெரிந்த நாள் முதலாய்ப் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதுடன் நில்லாமல் அப்பொழுதே கதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்ததுடன் இவரை பத்திரிகை உலகுக்குச் செல்ல வைத்தவர் திரு. ருத்ர துளஸிதாஸ். மனிதன் தன் எண்ணங்களைப் பதியச் செய்யும் இடமான பத்திரிக்கையும் பதிப்பகமும் இவருக்கு மிகவும் பிடித்தமான உலகம். சீதாம்மா 1958 ல் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். இவரது 63 சிறுகதைகள் வாரப் பத்திரிக்கைகளிலும், மாதப் பத்திரிக்கைகளும் வெளிவந்துள்ளன. இரு புத்தகங்கள் வெளியிட்டதுடன், ஒரு சிறு கதைத் தொகுப்பினை நா. பார்த்தசாரதி உள்ளிட்ட மதுரை எழுத்தாளர்களுடனும் சேர்ந்து வெளியிட்டுள்ளார். ஆனந்த விகடனில் இவரது முத்திரைக்கதை வெளி வந்திருக்கின்றது. சீதாலட்சுமி என்ற பெயரில் பெரும்பாலான கதைகளும், சிறுகதைத் தொகுப்பும், வைதேகி என்ற பெயரில் சில கதைகளும், மேழிச்செல்வி என்ற பெயரில் இவரது கவிதைப் புத்தகமும் வெளிவந்துள்ளன.

    ஒரு வீட்டில் பெண்படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும்படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாட்டையும் அழிப்பது பெண் விடுதலையல்ல. ஆணுக்குப் பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல என்பது பெண்களின் உரிமையையும் முன்னேற்றதையும் பற்றி சீதாம்மா கொண்டிருக்கும் கொள்கை.

    இக்கருத்தை விளக்கும் வகையில் பெண்ணை முதன்மைப் படுத்தி சீதாம்மாவே கதை, வசனம் எழுதி, அவரே நாயகியாகவும் நடித்த நாடகம் கலைவாணர் அரங்கத்தில் அரங்கேறிய பொழுது, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைஞர் கருணாநிதி, “இவர் ஏன் அரசாங்கத்தில் வேலை பார்க்கணும் சினிமாவிற்குச் சென்றிருக்கணும்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார். தமிழக திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய “பராசக்தி” கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் கதை வசனம் எழுதிய கலைஞர் இவர் நடிப்பைப் பார்த்து இவ்வாறு சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது போன்ற பெருமை தரும் பாராட்டு.

    drama-5drama-10

    இன்றும் தொடர்ந்து இணையக் குழுமங்களிலும், திண்ணை போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர் சீதாம்மா. மின்தமிழ்க் குழுமத்தில் எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் – மலரும் நினைவுகள் என்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    காலங்கள் மாறுகின்றன
    ரசனைகள் மாறுகின்றன
    மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
    மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
    சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
    சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
    மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
    காலம் ஆற்றிவிடும்
    இதுதான் வாழ்க்கை

    என்று வாழ்வின் யதார்த்தத்தை அழகாகக் குறிப்பிடுகிறார் சீதாம்மா.

    என் குணங்களில் “தேடல்“ உணர்வு அதிகம், அத்துடன் சமுதாயம் முதன்மையானது என்று கூறி ஓய்வு பெற்ற பிறகும் சமூக அக்கறையுடன் தனது எழுத்து மூலம் சமூகப்பணியைத் தொடர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்படும் சீதாம்மாவை வல்லமையாளராக பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share