Tag: சேசாத்திரி பாஸ்கர்

  • அப்பா

    சேசாத்திரி பாஸ்கர்

    பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான் விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி பள்ளிநாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புதுஇடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும், பணமும் , கொடுக்க முடியாதது.சின்ன சட்டை , அதில் பிய்ந்த பொத்தானை தைய்க்க வேண்டாம். அதனை அப்பாவோ , அம்மாவோ உள் வழியாக பின்னை வைத்து குத்தி ( தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

    இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும்.எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத செயல்

    .இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தக கடை மிக பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனை கட்டு கட்டாய் வைத்து கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை.என் தந்தை புத்தககங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனை சோற்று பருக்கை வைத்து ஒட்டி அதனை வெயிலில் காய வைத்து அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை கூர்ப்பான பௌண்டைன் பேனாவில் எழுதி துணிப்பையில் போட்டு கொடுப்பார் எனக்கு எந்த பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை . அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது. இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தக கடைக்கு சென்ற போது அந்த கடை வாசம் என் நினைவுகளை பள்ளிக்கு அனுப்பியது ஒரு புது புத்தகம் எடுத்து அதனை அழகாய் மடித்து சீட்டுகட்டு போல பக்கங்கள் புரட்டி வாசக்காற்று முகர்ந்தேன்.என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

    Share
  • கொடுத்த அல்வா போதும்!

    சேசாத்திரி பாஸ்கர்

    தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெருங்க முடியவில்லை .ஒன்று தமிழக அரசு இதில் ஞாயம் பார்த்து காவல் துறையை பணித்து கைது செய்து இருக்கலாம் .பா ஜ க வினர் அரசியல் நேர்மையை கருதி அவரை சரண் அடைய சொல்லியிருக்கலாம் .குறைந்த பட்சம் சட்டத்தின் மாண்பினை மதித்து சேகராவது நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கலாம் . இதை எல்லாம் தாண்டி அவர் பழைய மோடியுடன் ஆன சந்திப்பை- நிகழ்வை கணினியில் உலவ விட்டு தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டிகொண்டு சிறையை தவிர்க்க நினைப்பது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது .நேற்று கூட ஒரு வழக்கில் பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து இருக்கிறது . ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் சரண் அடைய வேண்டும் என்று ஒரு விதியை நீதிபதி சொல்லிருக்கிறார்.–கடைசி வரை அவர் சிறைக்கு செல்லாமல் ஏதேனும் ஒரு வழியில் தன்னை விடுவித்து கொள்ள நினைப்பது பெரிய தவறு . ஒரு பிரபல நடிகர் , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இப்படி செய்வது அடுத்தவர்க்கு முன் உதாரணமாகி விடும் சட்டத்தின் முன் பிரியா , சூர்யா , சேகர் எல்லாம் சமம்.சட்டம் அதை செய்யாமல் அவர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறது .ஒரு சாமான்யனுக்கு இதை எல்லாம் பார்த்தால் ஏன் கோபம் வராது ?இது பற்றி அவருக்கு மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பினேன் . இரண்டு முறை பதில் சொன்ன அவர் மூன்றாம் முறை பதில் அளிக்கவில்லை — சட்டத்திற்கு பயந்து அல்ல , மதிப்பளித்து அவர் சரண் ஆகியிருந்தால் அவர் மேல் இருக்கும் மதிப்பு அதிகமாகி இருக்கும் .அவர் கொடுத்த அல்வா போதும் .அல்லது அவர் தனது அலுவலக இருக்கைக்கு பின் உள்ள “When God is with me why there should be fear” என்ற வாசகத்தை எடுத்து விட்டால் குறைந்த பட்சம் என்னை போன்ற அரை குறைகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் .

    Share
  • தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலை

    சேசாத்திரி பாஸ்கர்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலையைக் காட்டுகிறது. போராட்டம் உச்ச நிலையை எட்டிய நிலையில் காவல்துறை சுதாரித்துக் கொண்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறியது பெரும் தவறு . இரண்டு சாமானியன் சண்டையிட்டுக் கொள்ளும்போது உணர்ச்சி மேலோங்கி வன்முறை நிகழலாம் . ஆனால் காவல் துறையினர் சட்டென உணர்ச்சி வசப்பட்டு பதிலுக்குப் பதில் வன்மத்தில் இறங்கியது கொடூரம் .போரட்டக்காரர்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவர்களா என்ன ? இராணுவத்தில் தான் எதிரி சுடப்பட்டு கீழே வீழ்ந்து மடிய வேண்டும் என்ற நியதி உண்டு . இவர்கள் எல்லோரும் மண்ணின் மைந்தர்கள் .இவர்கள் கோபத்தில் எடுத்த ஆயுதம் கற்களும் பாட்டில்களும் தான் . சில இடங்களில் பெட்ரோல் குண்டு . அவர்கள் செய்ததை ஞாயப்படுத்தவில்லை .அவர்களைச் சமாளிப்பது பெரிய காரியமில்லை என எல்லோருக்கும் தெரியும் . ஆனாலும் உணர்ச்சி மேலோங்கி காவல்துறை இயங்கியது மிகத் தவறு. ஒரு வன்முறை கூட்டத்தில் முதல் பிரயோகம் தடியடி .அதுவும் கால்களில் தான் நிகழ்த்த வேண்டும் . மிஞ்சிப் போனால் பிருஷ்டத்தில் அடிக்கலாம்சே. வன்முறையைக் கட்டுப்படுத்தச் செய்ய வேண்டிய முதல் பாடம் இது . அப்போதும் கூட்டம் கலையவில்லையெனில் டியர் காஸ் என சொல்லப்படும் கண்ணீர் புகைக்குண்டை பிரயோகம் செய்ய வேண்டும் . இதில் பெரும்பாலும் கூட்டம் கலைந்து விடும் . அல்லது பலகீனம் ஆகி விடும் . இதுவும் செய்து வன்முறை அடங்கவில்லை எனில் தான் துப்பாக்கிச் சூட்டை பிரயோகம் செய்ய வேண்டும் . அப்போது கூட ஒலி பெருக்கியில் அறிவித்து விட்டு அதனைச் செய்ய வேண்டும் . அப்படிச் சுடும்போது கூட கால்களை நோக்கித் தான் சுட வேண்டும் . இதை எந்தச் சூழலிலும் கடை பிடிக்க வேண்டிய நிர்பந்தம் காவலர்க்கு என்றும் உண்டு . கலவர பூமியில் இதை எல்லாம் பற்றி அவர்கள கவலைப்படவில்லை . ஒரு பெரிய அதிகாரிகளின் படை இருந்திருப்பின் ஒரு வழிகாட்டுதல் இருந்து இருக்கும் . இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு என்று யார் காதில் பூ சுற்றுகிறார்கள் ? கால்களை நோக்கிச் சுட வேண்டிய காவலர்கள் ஏன் வண்டியின் மேல் நின்று குறி பார்க்கிறார்கள் ? தீய சக்தியும், எதிர்கட்சிகளும் செய்த சதியெனில் அந்த மாப்பிள்ளை இளைஞன் என்ன நக்சல்பாரியா? வாயில் சுடப்பட்டு இறந்த அந்த இளம் பெண் எந்த கட்சி ? மற்ற எல்லா நேரத்திலும் காவல்துறை எல்லா நிகழ்வுகளிலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள காமிராப் பதிவை ஆராயுமே ? அதை ஏன் செய்ய முனையவில்லை ? முடிவுக்கு வந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சரி, ஆலையின் நூறு நாள் போராட்ட நிகழ்விலும் சரி காவல்துறை சகிக்காமல் செய்த ஒரு காரியம் தான் இந்த எதிர் வினை. எனக்கு என்னவோ இந்த காவல் வன்முறைக்கும் அந்த ஆலைக்கும் சம்பந்தம் இருக்கும் எனத் தோன்றுகிறது .இல்லாவிட்டால் சுமார் அஞ்சாயிரம் கூடிய கூட்டத்தைக் கூட சமாளிக்க முடியாத அளவுக்கா காவல்துறை பலகீனமாக இருக்கிறது ?இந்த வன்முறையை நினைத்துப் பார்க்கும் போது ஒரு வேளை இதே மனப்பான்மை தான் அவர்களுக்கு ஜல்லிக்கட்டிலும் இருந்திருக்கக் கூடும் என நினைக்கத் தோன்றுகிறது. அதிகாரிகளை மாற்றினால் சம்பவம் மறந்தா போய்விடும் . ஒன்று நிச்சயம் .இந்த அரசின் காவல்துறை க்ஷீன நிலையை எட்டி நாளாகி விட்டது . இவர்களுக்குத் தங்க வீடு , சீருடை தொகை, அதிகாரம் , போக்குவரத்துக்கான வண்டி, இவர்களின் ஷூக்களுக்கு பாலிஷ் தொகை எனப் பெரிய கௌரவம் கொடுத்தும் கூட இவர்கள் மக்கள் நண்பர்களாக இன்னும் மாற முடியவில்லை. Tamilnadu has Become a state of Police Raj.

    Share
  • என்னையா ஊர் இது .?

    சேசாத்திரி பாஸ்கர்

    ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ருபாய் .வெளியே வாங்கிய தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை . முன்பு கபாலி காமதேனு தியேட்டர்களில் கூட ஒரு எவர்சில்வர் அண்டா போல பாத்திரத்தில் குடிநீர் இருக்கும் .ஒரு டம்ப்ளரில் நீரை பிடித்து குடிக்க வேண்டும் .களவு போகாமல் இருக்க டம்ப்ளரில் ஒரு செயின் கட்டி இருப்பார்கள் .தலையை கீழே குனிந்து குடிக்க சட்டையெல்லாம் வீணாகும் .அது பரவாயில்லை போல்இருக்கிறது . இப்போது இந்த பெரிய கொட்டகையில் பாட்டில் தண்ணீர் தான் .நாற்பது ருபாய் .சின்ன பாப்கார்ன் பொட்டலம் என்பது ரூபாயாம் . அடப்பாவிகளா ? என்னை போல் ஆசாமிகள் உள்ளே சென்றால் சண்டை தான் .இத்தனைக்கும் கிட்டத்தட்ட எல்லா சினிமாவுக்கும் இப்போது வரிவிலக்கு.இவ்வளவு வசதிகள் அரசிடம் இருந்து பெற்று கொண்டு விடுமறை நாளில் பத்து காட்சிகள் வரை திரையிட அனுமதி பெற்றும் இவர்கள் ஆசை அடங்கவில்லை .ஒரு சின்ன கணக்கு நேற்று இரவு போட்டு பார்த்தேன் . ஒரு காட்சியில் ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் முந்நூறு பேர் இரு சக்கர வண்டியில் வருவோர் என்றால் அவர்கள் தரும் தொகை சுமார் ஒன்பது ஆயிரம் ருபாய் .இது ஒரு காட்சிக்கு .ஒரு நாள் வசூல் சுமார் இருபத்தி ஏழாயிரம் என்றால் வருஷம் கிட்டத்தட்ட ஒன்பது கோடி .தனி மனித ஒழுக்கம் , நேர்மையான வியபாரம் , தொழில் தர்மம் எல்லாம் போதித்தவர்கள் எல்லாம் முட்டாளா ?இந்த சமூகம் நல்லவர்களை நகர்த்தி கொண்டிருக்கிறது .எல்லாம் நியாயம் என்றால் என்னையா ஊர் இது .? காந்தி நீதிமன்றம் வந்த போது நீதிபதியே எழுந்து நின்ற இந்த தேசத்தில் இப்படியா ?மனசு ஆறவில்லை …….Agitated .

    Baskar CS
    Chennai 4

    Share