Tag: திருக்குறள் உரை

  • குறளின் கதிர்களாய்…(432)

    குறளின் கதிர்களாய்…(432)

    செண்பக ஜெகதீசன்

    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொற்றெரிதல் வல்லார் அகத்து.

    -திருக்குறள் -717 (அவையறிதல்)

    புதுக் கவிதையில்…

    சொல்லும் செற்களைச்
    சரியாய்ப் புரிந்தே
    அவற்றை
    ஆராய்ந்தறிந்திடும்
    ஆற்றல் மிக்கோர் நிறைந்த
    அவையில்
    கல்வி கற்றவர்
    ஆற்றும் உரையில்,
    அவரது கல்விச்சிறப்பு
    அனைவரும் அறிய
    ஒளிர்ந்திடும்…!

    குறும்பாவில்…

    வழுவின்றிச் சொற்களைப் புரிந்தே
    ஆராய்வோர் அவையில் கற்றறிந்தார் சொல்லிடும்
    சொல்லிலவர் கல்வித்திறன் ஒளிரும்…!

    மரபுக் கவிதையில்…

    சொல்லிடும் சொற்களைப் புரிந்தவற்றைச்
    சொந்தமாய்த் தெளிவுடன் ஆராயும்
    வல்லமை மிக்கவர் நிறைந்திருக்கும்
    வளமிகு மாந்தரின் அவையினிலே
    சொல்லிடும் சொல்லிலே கற்றறிந்தார்
    சொல்லதன் திறத்தினால் அன்னவரின்
    கல்வியின் சிறப்பெலாம் கண்கூடாய்க்
    கண்டிடும் வகையினில் ஒளிர்ந்திடுமே…!

    லிமரைக்கூ…

    சொல்லும் சொற்களைப் புரிந்தே
    ஆராய்வோர் அவையில் உரைக்கும் கற்றவரின்
    கல்வி ஒளிர்ந்திடும் தெரிந்தே…!

    கிராமிய பாணியில்…

    பேசணும் பேசணும்
    தெரிஞ்சிப் பேசணும்,
    பேசுற சபய நல்லாத்
    தெரிஞ்சிப் பேசணும்..
    சொல்லுற சொல்ல
    நல்லாப் புரிஞ்சி ஆராயிற
    தெறம உள்ளவுங்க இருக்கிற
    சப பாத்துப் பேசுற
    படிச்சவனோட
    படிப்புத் தெறமயெல்லாம்
    பளிச்சிண்ணு
    வெளிய தெரியுமே..
    அதால
    பேசணும் பேசணும்
    தெரிஞ்சிப் பேசணும்,
    பேசுற சபய நல்லாத்
    தெரிஞ்சிப் பேசணும்…!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 31

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    31.வெகுளாமை

    குறள் 301:

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கினென் காவாக்கா லென்

    எங்க தன் கோவம் பலிக்குமோ அங்க கோவப்படாம இருக்கவன் தான் கோவத்த கட்டுப்படுத்துதவன்.  எங்க பலிக்காதோ அங்க கோவத்த தடுத்தா என்ன? தடுக்காம விட்டாதான் என்ன?

    குறள் 302:

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்லதனின் தீய பிற

    நம்மள விட எளச்சவங்க கிட்ட கோவப்படுதது கெடுதல குடுக்கும். நம்மள விட பலசாலிகிட்ட கோவப்படுதது மாதிரி கேடும்  வேற இல்ல.

    குறள் 303:

    மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
    பிறத்தல் அதனான் வரும்

    யார் கிட்டயும் கோவப்படாம அத மறந்து விட்டுப்போடணும். ஏம்னா அதனால தீம தான் வெளையும்.

    குறள் 304:

    நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
    பகையும் உளவோ பிற

    மொகத்துல சிரிப்பாணியையும் மனசுக்குள்ளார சந்தோசத்தையும் கொல்லுத கோவத்த போல பகையாளி வேற உண்டா?

    குறள் 305:

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்

    ஒருத்தன் தன்னயத்தானே காக்க நெனச்சாம்னா அவன் கோவம் வராம பாத்துக்கிடணும். இல்லன்னா கோவம் அவன கொன்னு போடும்.

    குறள் 306:

    சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்

    கோவம் அது இருக்கவன அழிக்குததோட அவனோட சொந்த பந்தத்தையும் சேத்து அழிச்சுப்போடும்.

    குறள் 307:

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

    கையால ஓங்கி தரையில அடிச்சவனுக்கு அவன் கை தான் வலிக்கும் அப்டிதான் கோவப்படுதவங்களோட நெலமயும்.

    குறள் 308:

    இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று

    கொழுந்து விட்டு எரியுத தீ நம்ம மேல படுதது மாதிரி பெருந் தீமய ஒருத்தன் செஞ்சாலும்  கோவப்படாம இருக்க முடியும்னா அது நமக்கு நல்லது.

    குறள் 309:

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்

    மனசுக்குள்ள கோவப்படாம இருக்கணும்னு நெனக்கவனுக்கு அவன் நெனச்சது எல்லாம் கெடச்சு போடும்.

    குறள் 310:

    இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை

    பெருங்கோவக்காரன் செத்தவனுக்கு சமானம்.  கோவமே படாதவங்க துறவிக்கு சமானம்.

    Share