Tag: தொல்காப்பியம்

  • (Peer Reviewed) லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்

    முனைவர் ச. காமராஜ்,
    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம்

    லீலாதிலகம் பாட்டிலக்கணமும் இராமசரிதம் பாட்டும்

    முன்னுரை:

    மலையாளக் கவிதையின் அடிவேர் குறித்துச் சிந்திக்கும் ஒருவருக்கு கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இருபெரும் இலக்கிய வடிவங்கள் வழங்கி வந்தமையை லீலாதிலகம் குறிப்பிடுகிறது. அவை ஒன்று பாட்டு, மற்றொன்று மணிப்பிரவாளம் ஆகும். மணிப்பிரவாளத்தின் வடிவத்தை விரிவாக விளக்கி அதன் உள்ளடக்கத்தை உறுதி செய்வதே லீலாதிலகத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்து
    வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதற்கிடையில் மணிப்பிரவாளத்திற்கும் முன்னர் வழங்கி வந்த பாட்டு வடிவம் குறித்து லீலாதிலக ஆசிரியர் குறிப்பிட்டு, அதன் உருவத்தையும் வரையறை செய்கிறார். இங்கு பாட்டு என்பது இன்று நாம் சாதாரணமாக வழங்கும் பொருளில் இல்லை, அன்று பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதும் கவனத்தில் கொள்வேண்டியுள்ளது. அது, மலையாளத்தின் முதல் இலக்கிய
    வகையாகும். மணிப்பிரவாளத்தை விடப் பழமையும் மிகுந்த இலக்கியச் செல்வாக்கும் கொண்டதாகப் பாட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே மலையாளத்தின் தனித்தன்மை நிறைந்து நிற்பது பாட்டு வடிவத்திலும், இலக்கியத்திலுமே ஆகும்.

    பாட்டு விளக்கம்:

    செய்யுளியலில் இலக்கியத்தின் புற வடிவம் குறித்துப் பேசுகின்ற தொல்காப்பியம் யாப்பு என்னும் செய்யுள் உறுப்புகளைக் கூறுகையில் சில இலக்கிய வகைகளைத் தருகிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (தொ.செ.1336) என யாப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ஏழு வகைகளில் பாட்டு தவிர எஞ்சியவை அளவியல் பகுதிகளில் எடுத்துரைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் இலக்கிய வகையில் பாட்டையே முதன்மையாகச் சிறப்பித்துக் கூறுகிறார். செய்யுளியலில் பாட்டு குறித்த விளக்கங்களே பெரும்பான்மையாகவும், விளக்கமாகவும் இடம் பெற்றுள்ளது. பாட்டே இலக்கியத்தின் சாரமாக விளங்குகிறது.

    பாட்டில் தான் இலக்கியத்தின் முழுத்தன்மையும் அனுபவத்தை உணர்த்தும் ஆற்றலும் செறிவாக உள்ளன என்று ஆபர்கிரோம்பி, பாட்டின் ஆற்றல் மிக்க தன்மையை எடுத்துக் கூறுகிறார் (Abar Gromphy – Principles of Literary criticism). பாட்டின் ஒவ்வோர் அடியும் சிறப்பாக அமைய வேண்டும் என்பார் தொல்காப்பியர் ”அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” (தொ.செ.1292).

    பாட்டிற்குரிய அடிகளை அவர் ஐந்து வகைகளாகக் கூறுகிறார். அவை, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி (தொ.செ.1293, 94, 95, 96, 97) போன்றவையாகும். நான்கிலிருந்து ஆறெழுத்துகளைக் கொண்டது குறளடி. ஏழிலிருந்து ஒன்பது எழுத்துகளைப் பெற்று வருவது சிந்தடியாகும். பத்திலிருந்து பதினான்கு எழுத்துகளைக் கொண்டது அளவடி. பதினைந்திலிருந்து பதினேழு எழுத்துகளைக் கொண்டது நெடிலடியாகும். பதினெட்டிலிருந்து இருபது எழுத்துகளை உடையது கழிநெடிலடியாகும். இவ்வரையறைக்குப் பொருந்திய அடிகளால் ஆனதே பாட்டு என்பதும் தொல்காப்பியரின் கருத்தாகும்.

    மேலும் தொல்காப்பியர் வெண்பாவின் வகைகளைக் கூறுமிடங்களில் அங்கதப் பாட்டு, இடைநிலைப் பாட்டு, நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு என்றும் (தொ.செ.1375) உரை வகை பற்றிக் கூறுமிடத்தில், பாட்டிடை வைத்த குறிப்பினானும் எனவும் ( 1429), பண்ணத்தி பற்றிக் கூறும் போது, பாட்டிடைக் கலந்த பொருளவாகிப் பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே என்றும் (1436), வண்ணம் பற்றிப் பேசுமிடத்தில் அகப்பாட்டு, புறப்பாட்டு வண்ணம் எனவும் பயன்படுத்துகிறார்.

    இங்குப் பாட்டு என்னும் சொல்லைப் பயன்படுத்தும் இடங்களில் ஏன் அனைத்து இடங்களிலும் பா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது? பாட்டு, பா (ஆசிரியம், வெண்பா ஆகியவற்றைக் குறிக்க) என்ற இரு சொற்களை அவர் ஏன் பயன்படுத்த வேண்டும்? இந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஏன் பயன்படுத்தியிருக்கக் கூடாது? இந்த இரண்டிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகள் நம்முள் எழுகின்றன. எனவே பாட்டு என்பதற்கும், பா என்பதற்கும் வேறுபாடு இருப்பதாலேயே தொல்காப்பியர் இவ்விரு
    சொற்களையும் பயன்படுத்தியுள்ளார் எனச் சிந்திக்கத் தோன்றுகிறது. அவ்விரண்டிற்குமான வேறுபாடு தான் என்ன? எதுகை, மோனை முதலிய தொடை முதலானவையே அவ்வேறுபாட்டிற்கான காரணமாக அமைகின்றது.

    அகவல் என்பது ஆசிரியம்மே – இதில் வரும் அகவல் என்பது அகவன் மகள், அகவலன், வேலன் போன்றோருடன் தொடர்புடையது. இவர்களுடைய பாட்டில் எதுகைக்கு அவ்வளவு கட்டாயமில்லை. அது போகிற போக்கில் தானாக வந்தால் உண்டு. ஆனால் அதில் வரும் ஆசிரியம் என்பது புலவர் மரபோடு தொடர்புடையது. இங்குப் புலவர் மரபையும் கூறும் முதல் நூலாகத் தொல்காப்பியம் விளங்குகிறது. கூர்ந்து நோக்கினால் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளி, தமிழ்ப் பாட்டைப் பாவாக மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பாட்டு என்பது தொல்காப்பியத்தில் பழங்காலச் சொல்லின் எச்சமாகவே பதிவாகியுள்ளது. அது பாட்டு, பாவாக மாறிக்கொண்டிருந்த காலக்கட்டம்.

    பாட்டு வரலாறு

    தமிழ்ப் பாட்டு வடிவங்களின் வரலாற்றை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. முதன் முதலில் அகவல் என்னும் பாவகையே தோன்றியுள்ளது (அகவல் என்பது ஆசிரியம்மே) அகவலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றது வெண்பாவாகும். இதனுடைய ஓசை என்பது செப்பலோசையாகும். இசையோடு பாடுவதற்குப் பெரிதும் உறுதுணையாக நிற்பது. வெண்பாவிற்குப் பின்னர் தோன்றியது கலிப்பாவின் ஒரு பகுதியான தாழிசை பாடுவதற்காகவே அமைந்ததாகும். தாழிசை என்னும் பெயரே இதனைச் சுட்டுகிறது.

    தேவாரம் முதலான திருப்பாட்டுகள் அனைத்தும் பண்களுக்கு எனப் பட்டவையே. பிற செய்யுள் வகைகளும் கூட இசையோடு இனிமையாகப் பாடுவதற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று அக்கால ஆசிரியர்கள் கொண்டார்கள்.

    இதனாலேயே ஆசிரிய விருத்தம் முதலிய செய்யுள் வகைகள் தமிழ்ப் பெரியோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீவக சிந்தாமணி முதலிய காவியங்களின் விருத்தங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.

    இசையின் இனிமைக்கும் செய்யுளின் இனிமைக்கும் பொருளின் இனிமைக்கும் பேரெல்லையாகக் கம்பராமாயணம் விளங்குகிறது. அதில் உள்ள விருத்தப்பாக்கள் செம்மையான நடையில் சென்று தமிழ் மக்களுடைய பேச்சில் இயற்கையாகவுள்ள ஒத்திசையோடு அமைந்திருக்கின்றன. அக்காலத்துப் பெரும்பான்மை மக்கள் வழங்கிய சொற்களை இவ்விருத்தங்களில் மிகுதியாகக் காணலாம் என்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் பாட்டும் இசையும், பக்.113-114) விளக்குவார்.

    எனவே இன்ன பாவினத்தைப் பாடுவதில் மிகவும் வல்லவர் என்று அவரை அந்தப் பாவுடன் இணைத்துப் பேசும் சிறப்பு காணப்படுகிறது.

    ”வெண்பாவில் புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்த மெனும்
    ஒண்பாவிற்கு உயர்கம்பன் கோவைஉலா
    அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் பாடிக்காசலால்
    ஒருவர் பகரொணாதே”

    இதனால் பா வகைகளைப் புனைவதில் வல்லவர் தம் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாட்டிலக்கியம் – இலக்கண வரையறை :

    திராவிட மொழிகளுக்குரிய உடைமையே பாட்டு ஆகும். லீலாதிலகம் பாட்டின் இலக்கணத்தை ,

    ”த்ரமிட சம்காதாட்சர நிபந்தமெதுக மோன
    வ்ருத்த விசேச யுக்தம் பாட்டு” (லீ.தி. சிற்பம் ஒன்று. சூத்திரம்11)

    பாட்டு என்பது திராவிட எழுத்துகள் மட்டும் உடையதாய், எதுகை, மோனையுடன் விருத்தச் சிறப்பொடு பொருந்துமாறு அமைவது. அதாவது மணிப்பிரவாள விருத்தங்களிலிருந்து வேறுபட்டுத் திராவிட விருத்தங்களில் அமைவதே விருத்த விசேசம் ஆகும்.

    லீலாதிலகம் குறிப்பிடும் பாட்டு என்பது, சங்க இலக்கியப் பாட்டு மரபோடு அதிகம் பொருத்தப்படுவதில்லை. லீலாதிலகத்தின் பாட்டு என்பது, விருத்தம். இதில் எதுகை மோனை என்னும் இரு தொடைகள் மட்டுமே பெற்றுவரும். அதிலும் எதுகை என்பது, அடி எதுகை மட்டுமே வரும். நான்கு அடிகளிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ( பக்.41.பேரா.இளைய பெருமாள் மொழிபெயர்ப்பு) விருத்தம் அல்லது பாட்டின் இலக்கணத்தைத் தழுவி ஏ.ஆர்.இராஜராஜ வர்மா மலையாள விருத்த மஞ்சரியில்,

    ”பத்தியம் வார்க்குந்ந தோதல்லோ
    வ்ருத்த மென்னிக சொல்வது
    சந்தஸ்ஸென்னால் அட்சரங்ஙளில்
    எத்தர யெந்நுள்ள க்னுல்பத்தியம்”. (வி.ம.3)

    சொற்கோவையின் ஒருங்கிணைப்பை விருத்தமென்று சொல்கிறோம். ஒரு பாட்டில் ஓர் அடியில் எத்தனை எழுத்துகள் வரவேண்டுமென்ற விதி வரையறை உள்ளது. தொல்காப்பியருடைய அடியின் சிறப்பை ஏ.ஆர்.இராஜராஜ வர்மாவும் மேற்கொள்கிறார். ஆனால் இருபது எழுத்துகளுக்கும் மேலாக இருபத்தாறு வரையுள்ள எழுத்துகள் வரலாமென்பது அவர் கொள்கை. அதற்கும் மேலான எழுத்துகள் ஓர் அடியில் வருவது பாட்டல்ல என்பது அவரது கருத்தாகும்.

    தொல்காப்பியர் இருபது எழுத்துக்களுடய கழிநெடில் அடிகளுக்கு மேலாக வரலாகாது என்று குறிப்பிடுவது, செய்யுளுக்கு. எழுத்து எண்ணும் போது மெய்யெழுத்துகளும் என்ணப்படலாம். இது பொது விதியாகும். தொல்காப்பியம் பாட்டு என்று கூறியதைப் போன்று மலையாள யாப்பிலக்கண நூலான விருத்த மஞ்சரி, கிளிப்பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு முதலான வகைகளைக் கூறுகின்றது.

    The word Pattu means only song. But here it is used to signify a school of poetry with certain definite rules. This is different from songs and folklore in M. which are also called pattu sometimes. Ex. Vattakan Pattukal, Krisna pattu etc. – K.M George. P.101.

    மலையாள மொழியில் பாட்டு வகைகள் குறித்து எஸ்.சுப்பிரமணியன் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இராமகதப் பாட்டு, கிளிப் பாட்டு, துள்ளல் பாட்டு, வஞ்சிப் பாட்டு அல்லது தூணிப் பாட்டு, பாணப் பாட்டு, குறத்திப் பாட்டு, மாற்றான் பாட்டு, ஞானற்றுப் பாட்டு, வேடன் பாட்டு, தாராட்டுப் பாட்டு, குட்டிகளுடே பாட்டு, அய்யப்பன் பாட்டு, காணிப் பாட்டு, இடநாடன் பாட்டு, வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு, கிருஷிப் பாட்டு, படப் பாட்டு, ஓணப் பாட்டு, மாப்பிள்ளைப் பாட்டு, அடச்சுதுறப் பாட்டு…. (பக்.1977, The Commenness in the Metre of the Dravidian languages,D.L.A)

    திராவிட எழுத்துகள்: ( த்ரமிட சம்காதாட்சர நிபந்தம்)

    இது பாட்டின் மிகவும் முக்கியமான பகுதியாகும். பாட்டானது திராவிட எழுத்துகள் (உயிரெழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும்) கொண்டு மட்டும் எழுதப்பட வேண்டும்.

    திராவிட எழுத்துகளிலுள்ள எழுத்துகள் கலந்து வருகின்ற வடமொழிச் சொற்களைத் தற்சமமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லாதவற்றைத் தற்பவமாக்கிப் பயன்படுத்தலாம்.

    ’தரதலம் தானாளந்தா பிளந்தா பொன்னன்
    தனகசெந்தார் வருந்தாமல் வாணன் தன்னெ
    கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
    கரளெரிந்தா புரானே முராரி கணா’ (இராம சரிதம்)

    இங்கு முராரி, கரம் முதலான வடமொழிச் சொற்கள் தற்சமங்களாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், இவை திராவிட எழுத்துகளால்
    அமைந்ததாலேயாகும். தரதலம்(dhara), தானவன்(danava) முதலான வடமொழிச் சொற்கள் திராவிட எழுத்துகளில் இல்லாததால் அவற்றை முறையே தரதலம், தானவன் எனத் தற்பவங்களாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சொற்களைப் பெயர்த்துப் பாட்டில் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. (எ-கா) ஹ்ரண்யன் என்னும் சொல் பொன்னன் என்று பெயர்த்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

    எதுகை:

    த்வீதியாக்சரப் பிராசத்தினு இணையான ஒரு பிராசமே எதுகையாகும். மாத்திரைகளில் ஒலியமைப்பில் ஒரே போன்ற தன்மையை அதாவது எதுகை அதே போன்று கவனத்தில் கொள்கின்றது. அதாவது ஒரோ சொல்லிலும் இரண்டாவது எழுத்தும் அதுபோல முதல் எழுத்தின் ஒலியமைப்பும் ஒன்று போல வருவது எதுகையாகும். கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் ’தரதலந்தானளந்தா’என்று தொடங்கும் ஒன்றாவது வரியின் இரண்டாவது எழுத்தும் அடுத்த வரியின் ’ கரமிரிந்தா’ என்னும் சொல்லின் இரண்டாவது எழுத்தான ’ர’ மீண்டும் ஒன்று போல் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முதல் எழுத்தானது மாத்திரையில் ஒன்று போல் வரவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ”கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
    கரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)

    மோனை:

    மோனைக்கு பாதார்த்தாதிப் பிராசமென்று பெயர். ஒரு அடியின் முதல் சொல்லிலுள்ள முதல் எழுத்தும் இரண்டாவது அடியின் முதல் சொல்லிலுள்ள முதல்
    எழுத்தும் ஒன்று போல வருவது மோனை. எடுத்துக்காட்டாக, ’கரமரிந்தா’ என்னும்
    சொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும், இரண்டாவது அடியில் ’கரளெரிந்தா’ என்னும்
    சொல்லின் முதல் எழுத்தாகிய ’க’வும் ஒன்று போல வருவது.

    ”கரமரிந்தா பொருந்தானவன்மாருடெ
    கரளெரிந்தா புரானே முராரி கணா” (இராம சரிதம்)

    அந்தாதி அமைப்பு:

    பாட்டானது, மோனை, எதுகை என்னும் இரண்டோடு நின்று விடாமல் அந்தாதிப் பிராசத்தையும் உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது. ஒரு பாட்டின் இறுதிச் சொல் கொண்டு அடுத்த பாட்டைத் தொடங்குகின்ற அந்தாதி முறை அச்சாக்கம் அவ்வளவாகப் பிரபலமில்லாத அக்காலத்தில் பாட்டை நினைவில் வைத்துக்கொள்வதற்கு அந்தாதி அமைப்பு முறையும் கையாளப்பட்டு வந்துள்ளது.

    1.நடந்திடமுறைந்த வனுணர்ந்தளவில் நாசம்
    துடங்கினது கடரிய தும்பமுள்ளிலேறி
    அடங்கியங்க சென்றரசனெத்தொழுதுசொல்லத்-
    துடங்கினன் விபீழண்ந்து துயரெல்லாம்.

    2.அணைந்துயரம் தன்னெயறிந்தசியிணைக்கீ
    ழிணங்கியறியிக்கு மடியனோடெளுதாயும்
    பிச்சங்கமதொல்லா பிழை முழுக்கிலும்;நறுந்தா-
    ரணிந்த குழலாளை யரசன்னு கொடு மன்னா,”

    3.மன்னவர் பிரானொடு வழக்கினு துனிந்தா-
    லென்ன கருமம் வருமதெ”ன்ற விடமெல்லாம்
    பின்னயமவன் துயர்ந்து பேசுமளவேவந்-
    துன்னதனி சாசரரொழ்க்கணம் நிறைந்தார்

    4.நிறைந்தளவில் நீலமிகிலெப்பழி செய்யும் மெய்-
    நிறம் கிளர்ந்த கும்ப கர்ணன் நிகில லோகம்
    நிறைந்து முழங்கின்ற மொழியால் த்தமயனுள்ளம்
    நிறந்து வருமாறு நிவிரத்தொழுதுரைத்தான்.

    5.உரைத்தருளொல்லா சபலனாயலகில்யானிந்-
    றொருத்தனுளனாகில் வந்துளைக்குமவர் தம்மெ
    கருத்தருமல்லே பெரியகாரியங்கள் தாமே
    வருத்துமவரென்றிக மந்திரிகள் வேறாய்
    (இராம சரிதம் விருத்தம்- 6)

    விருத்த விசேசம்:

    மணிப்பிரவாளத்தில் பிரபலமான வசந்த திலகம், மந்த்ராக்ராந்தா முதலான வடமொழி விருத்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திராவிட விருத்தங்களையே
    விருத்த விசேசம் என்று அழைக்கப்படுகிறது. மாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுத்த திராவிட விருத்தங்களையே பாட்டுக் கவிகள் தம் படைப்பிற்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலின் ஆசிரியர் திராவிட விருத்தத்தையே தம் நூலில் கையாண்டுள்ளார்.

    இன்று பயன்பாட்டிலுள்ள பல்வேறு விருத்தங்களின் முந்தையே வடிவமே இராம சரிதத்தில் காணப்படுகின்றது. இவ்வாறாக விருத்த விசேசம் யுக்தம் என்னும் விதியும் இராம சரிதத்தில் பொருந்தி வருகின்றது. மலையாளத்தில் யாப்பின் உறுப்புகளான சீர், தளை போன்றவற்றிற்குக் கட்டுப்பாடு இல்லை. மாறாக நேர், நிரை, அசை போலக் கணங்களின் கோவை இடம் பெறுகின்றது. தொல்காப்பியம், விருத்த மஞ்சரி, மலையாள நெறிகளில் விருத்தம் எழுத்தெண்ணி அடிகள் அளவிடப்படுகின்றன.

    நாற்சீர் கலிவிருத்தம்:

    ஓர் அடியில் நான்கு சீர்கள் கொண்டு நான்கு அடிகளால் அமைவது. பதினான்கு எழுத்துகள் வரையிலான அளவடிகளால் அமைந்தவை. இராம சரிதத்தில் நாற்சீர் கலிவிருத்தமானது மூன்று, ஆறு, பதினொன்று, பதினைந்து, இருபத்தொன்று, இருபத்தெட்டு முதலான ஆறு படலங்களில் அமைந்துள்ளன.

    (எ-கா)
    இருந்த வண்ணமேயிருள் மறைந்திட துர-
    ப்பரந்தகுடையும் தழையும் வெண் சவரி மற்றும்
    கரைந்துமடவார் துதிசெய்யக்கனிவில் வந்தா-
    நிருண்டமுகில் போலெழுமிராவணனித்த்தான்
    (இராம சரிதம் விருத்தம்-3.1)

    ஐஞ்சீர் கலிவிருத்தம்:

    பதினேழு எழுத்துகள் வரையுள்ள நெடிலடி நான்கால் அமைவது. படலம் நூற்றியஞ்சில் கட்டளைக் கலித்துறையாகப் பதினொன்றாவது பாட்டு அமைந்துள்ளது.

    (எ-கா)
    மன்னவனே, மனம் மைதிலிதன்னி லலிந்தோ நீ
    யென்னொடு முன்னமியங்ஙுமதொன்னு மிளக்குன்னு?
    என்னது காரண மிந்திரசித்தினு மாதாவென்
    னென்னெயறிந்தருளாதொழியின்னதினிக்காலம்
    (இராம சரிதம் விருத்தம்-105.1)

    அறுசீர் ஆசிரிய விருத்தம்:

    இருபது எழுத்துகள் வரை பெற்று அறுசீர்க்கழி நெடிலடி நான்கால் வருவது. இவை ஈரசைச் சீர் பெற்று வரும்.

    (எ-கா)
    அரசர்கோனே! மேன்மேலரும் துயர்பிடித்தீவண்ணம்
    புரிகுழலாழெனண்ணிப்போக்கும தொல்ல காலம்;
    இருபது கரங்கள் தங்கமிலங்கைவேந்தனெயொரிக்கால்
    க்கருதுக;களகசோகம் கைக்கொள்க கோபமிப்போள்!
    (இராம சரிதம் விருத்தம் -2.2)

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:

    இருபத்திரண்டு எழுத்துகளான எண்சீர்க் கழிநெடிலடி நான்கினால் வருவது.

    (எ-கா)
    ஒக்கெங்கும ரிந்திட்டவ யெல்லாம்நிரவே வீழ்
    ந்தொப்புள்ளச மைப்போடிட கெட்டித்தம்மில் விம்மி
    த்திக்கெங்குமு லைக்கின்றவனு ற்றொன்றுள வாகி
    த்திழ்க்கின்று தலைப்பந்திம லைப்பந்தி கனக்கே
    தக்கம்வரு மிப்போரிலி லங்கைக்கர சன்றன்
    சட்டற்றசி ரம்பத்தும றுத்தாலென்று மேடம்
    கைக்கொண்டும னத்தினுக னத்தோரு விவேகம்
    கைவந்தர சன்பண்டுக ழிந்தேடம்நி னைந்தான்.
    (இராமசரிதம். விருத்தம் -100.1)

    பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:

    இருபத்து நான்கு எழுத்துகள் வரை பெற்றுப் பதின்சீர்க் கழிநெடிலடி நான்கினால்
    வருவது.

    (எ-கா)
    “பிரியருதாத நீயிங்ஙனபி தாவுவெடிந்து நாடும்
    பிழுகியிரந்து காடுமுரைந்து போந்தவனோட கன்றான்,
    உருகுமல்லீநி னக்குடனுள்க்கு ருந்து விருந்த ல்லீவ
    ந்தொளிவுள்ளிலங்க புக்கது போரும் நிந்திறம் நில்க்கதெல்லாம்
    ஒருதுடநாங்கள் நின்னுடல்வெட்டி யொக்கனுகர்ந்தி தம்பெ-
    ற்றுளவிளயாட்ட மாடுவுதென்று சென்றணையின்ற நேரம்
    திரிசடகண்டு கொண்டுகனாவுதான றியித்த போதே
    திரிந்தகலும்நி சாசரிமார டங்கியுறங்கி னாரே”
    (இராம சரிதம். விருத்தம்- 4.1)

    முடிவுரை

    பாட்டின் வடிவத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கின்ற ஒரு நூலே இராம சரிதம் ஆகும். இராம சரிதத்தின் முக்கியத்துவத்தைப் பண்டிதர்களுக்கு இடையில் முதன் முதலாகக் கவனத்தில் கொண்டு வந்தவர் பேரா.ஹெர்மன் குண்டர்ட்டாகும். இந்நூல்
    கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு இடையிலோ அல்லது 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராம சரிதத்தின் ஆசிரியர் சீராமன் என அந்நூலின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்நூல் எழுதப்பட்ட காலம், ஆசிரியர் முதலானவற்றில் மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன. இந்நூலில் மொத்தம் 1814 பாட்டுகள், 164 படலங்களாகப் பகுத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளன. லீலாதிலகம் கூறும் பாட்டின் இலக்கணத்தை முழுமையாகப் பின்பற்றுகின்ற நூலே இராம சரிதம் என்பதில் ஐயமில்லை.

    துணைநூல் பட்டியல்

    1. இராம சரிதம், பி.வி. கிருஸ்ணவாரியார், சாகித்திய பரிசத் சி.எஸ். லிமிடெட்,
    எர்ணாகுளம், முதல் பதிப்பு 1956, விலை.10
    2. இளங்குளம் குஞ்சன்பிள்ளை, லீலாதிலகம் குறிப்புகளுடன், நேசனல் புக் ஸ்டால்,
    கோட்டயம், 1962
    3. எருமேலி, மலையாள சாகித்தியம் காலக்கட்டங்களிலுடே, முதல் பதிப்பு, மே 1996, விலை.475.
    4. தொல்காப்பியம், பொருள் (இளம்பூரணர் உரை) கழகவெளியீடு, சென்னை, 1973
    5. பிரபாகரன், ம. தமிழ் மலையாளப் பாட்டு மரபுகள், EFEO, பாண்டிச்சேரி.
    6. பிரபாகரன், ம. பாட்டும் தொடையும்: திராவிட மொழிகளுக்கிடையேயான தொடர்பு EFEO, பாண்டிச்சேரி.
    7. மினாட்சிநாத பிள்ளை, ச.கம்பராமாயணமும் இராம சரிதமும் ஓர் ஒப்பாய்வு
    8. ராஜராஜ வர்மா, எ.ஆர். விருத்த மஞ்சரி, நேசனல் புக் ஸ்டால், கோட்டயம்,1974.
    9.வையாபுரிப்பிள்ளை, எஸ். தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம், மயிலாப்பூர், சென்னை,1949
    10. Abar Gromphy , Principles of Literary criticism, High Hill Published,1960
    11. George,K.M. Ramacaritam and the study of Early Malayalam, , National Book stall, Kottayam, 1956
    12. Subramanyan,S. The Commenness in the Metre of the Dravidian languages, D.L.A 1977

    ==========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளரின் முயற்சி பாராட்டிற்குரியது. ஆனால் கட்டுரையில் கருத்துத் தொடர்பு இல்லை. முன்னுரையில் லீலாதிலகம் பற்றித் தொடங்கி, தொல்காப்பியம் பற்றி விளக்கம் கொடுத்து, இராம சரிதத்தில் முடிவுரை அமைந்துள்ளது. ஆய்வின் நோக்கம் என்ன, ஆய்வுச் சிக்கல் என்ன, அதற்குத் தீர்வு என்ன என்ற முறைப்படி கட்டுரையை அமைக்கவில்லை. லீலாதிலகம், இராமசரிதம் குறித்த தெளிவான அறிமுகமும் விளக்கமும் காலமும் இல்லை. “லீலாதிலகத்தின் பாட்டிலக்கணப்படி இராமசரிதம் பொருந்தியுள்ளது” என ஆய்வாளர் காட்டியுள்ளார். ஆனால், லீலாதிலக ஆசிரியர், பாட்டிலக்கியத்திற்கு இராம சரிதத்தை மேற்கோள் காட்டியிருப்பதாக மலையாள இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் பரமேச்வரன் நாயர் குறிப்பிடுகிறார். எந்த நூல் முதலில் தோன்றியது? எதற்கு எது எடுத்துக்காட்டாக அமைகிறது என்ற தெளிவு, ஆய்விற்குத் தேவை. இராம சரிதத்தையும் லீலாதிலகத்தையும் தொல்காப்பியத்தையும் ஒப்பிட்டிருப்பது நன்று. எனினும் கட்டுரையில் இலக்கண வரையறைகளை மட்டும் விளக்காது, ஆய்வாளர் புதிய முடிவுகளைக் கண்டறிய முயன்றிருக்க வேண்டும்.

    ==========================================================

     

    Share
  • தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    தொல்காப்பியரின் பொருளிலக்கண உருவாக்க முறை

    தொல்காப்பியம் எழுதப்பட்டது எவ்விலக்கியங்களின் வரையறையை வைத்து என்று முழுமையாகக் கூறமுடியவில்லை என்றாலும் தொகுக்கப்படாத பல சங்க இலக்கியப் பாடல்களின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்று கூறமுடியும். தொகுக்கப்படாத சங்க இலக்கியப் பாடல்களின் முதல் ஆய்வாளராக இன்று அறியப்படுபவர் தொல்காப்பியரே. இவர் வாசகர் என்ற நிலையினைக் கடந்து சங்கப் பாடல்களைத் தொடக்கக் காலங்களில் மதிப்பிட்டறிந்த முதன்மை இலக்கணியாகவும் அறியப்படுகின்றார்.

    இவர் காலத்தில் தனிநிலைச் செய்யுள் உருவாக்க முறையே அதிகம், தொடர் நிலைச் செய்யுள் பாடல் உருவாக்கமுறை என்பது குறைவு. எனவே இவரது பொருளதிகார இலக்கணமும் தனிநிலைச் செய்யுளை முதன்மைப்படுத்திப் பெரிதும் வரையறுக்கப்பட்டது என்று கூறமுடியும்.

    தொல்காப்பியப் புறத்திணையியல்

    சங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல்கள் எண்ணிக்கை அதிகளவு இருப்பதுபோல் தொல்காப்பியத்தில் அதற்கேற்ப இயல் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது. புறப்பாடல் எண்ணிக்கை குறைவு என்பதால் அதற்கேற்பப் புறத்திணையியல் மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒவ்வோர் இயலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகின்றார்.

    குறிப்பாக அகத்தையும், புறத்தையும் தனித்துப் பிரித்து அவர் பார்க்கவில்லை. இரண்டையும் பொருளிலக்கணம் என்ற ஒரே இணையில் ஒன்றுக்கொன்று தொடர் புடையதாக வலுவாகக் கருதுகிறார்.

          ”அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்,
          புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்…” (புறத்திணையியல்  -நூ. 1)

    இத்தொடர்பு இன்னும் வலுவாக இயங்குவதை இளம்பூரணர் தன்னுடைய அகத்திணையியல் அறிமுக உரையில் விரிவாக விளக்குகிறார். மேலும் ஒருபடி சென்று, அகத்திணை யியலுக்குப் பிறகு அதனோடு தொடர்புடைய களவியல் கற்பியல்தானே வரவேண்டும் ஏன் புறத்திணையியலை வைத்தார் என்ற கேள்வியெழுப்பும் மாணவனுக்குப் பதிலாக,

    இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்னும் மாட்டேறு பெறாதாம். அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க ( களவியல் முகப்பு).

    தொல்காப்பியர் வகுக்கும் புறத்திணைகள்

    தொல்காப்பியர் புறத்திணையியலை அமைத்துள்ள முறை குறித்து,

    தொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்தில் (களவியல், கற்பியல்) நிகழ்ச்சி முறையாக இலக்கணத்தைக் கூறிச் செல்லாமல் கூற்றுகளுக்கே முதன்மை கொடுத்து இலக்கணம் இயம்பியுள்ளார். ஆனால் புறத்திணையியலில் திணை வாரியாக இலக்கணத்தைத் தொகுத்துத் துறைகளாக அமைத்துள்ளார். இது தொல்காப்பிய அமைப்பின் முக்கியப் பகுதியாகும்.( தமிழ் இலக்கண மரபுகள், ப. 175)

    என்னும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது. தொல்காப்பியர் அகத்திணைகளை ஏழு என்று வரையறை செய்வது போன்று புறத்திணைகளையும் ஏழு என்றே வரையறை செய்கின்றார்.

    வெட்சி     –  நிரை கவர்தல், நிரை மீட்டல்

    வஞ்சி      –  மாற்றாரை நோக்கிப் பகைமேற் செல்வது

    உழிஞை   –  பகைவர் கோட்டையை முற்றுகை இடுவது

    தும்பை    –  இருவர்க்கிடையிலான போர்

    வாகை     –  முதலில் போர் வெற்றி, பின்னர் ஒருவர் தம் திறன்களால் வாழ்விலுறும் வெற்றியைக் கொண்டாடுவது

    காஞ்சி     – முதலில் போரின் துயரங்களையும் பின்னர் வாழ்வின்              நிலையாமையைக் கூறுவது.

    பாடாண் – முதலில் வெற்றிப்புகழ், பின்னர் குறிக்கோள் வாய்ந்த மனிதன், அவன் வாழ்க்கை ஆகியவற்றைப் பாடுவது.

    இவ்வாறு வரையறை செய்வதோடு மட்டுமல்லாமல் அவை இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்றார்.

    வெட்சி தானே குறிஞ்சியது புறனே, (புறத்திணையியல்  -நூ. 1)

    வஞ்சி தானே முல்லையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 6)

    உழிஞை தானே மருதத்துப் புறனே, ( புறத்திணையியல்  -நூ. 8)

    தும்பை தானே நெய்தலது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 12)

    வாகை தானே பாலையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 15)

    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே,( புறத்திணையியல்  -நூ. 18)
    பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே ( புறத்திணையியல்  -நூ. 20).

    ஆனால் இத்தொடர்பு எவ்வகையில் எல்லாம் அமைந்தது என்று எந்த விதமான விளக்கமும் தொல்காப்பியரால் வழங்கப்படவில்லை. உரையாசிரியர்களே இதற்கான விளக்கத்தை அளிக்கின்றனர்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறனாம். (புறத்திணையியல், நூ. 1, இளம்பூரணர் உரை)

    களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுங் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். (புறத்திணையியல், நூ. 1, நச்சினார்க்கினியர்உரை)

    இவ்விணைவில் இறுதியாக இருக்கக்கூடிய காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் சிக்கல்களைத் தமிழண்ணல்:

    உரையாசிரியர்கள் காஞ்சித்திணை என்பது பெருந்திணையின் புறமென்றும், பாடாண் கைக்கிளையின் புறமென்றும் இலக்கணம் கூறுவதை விளக்குகின்றனர். எனினும் தொல்காப்பியரும் அவர்க்கு முற்பட்டோரும் இவ்விரு அகத்திணைகளைப் புறத்திணையியலில் இறுதியாக அமைந்த இருதிணைகளோடு ஏன் இணைத்தனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. அகத்திணைகள் ஏழாக வகுத்தபின் புறத்திணைகளையும் ஏழாக வகுக்க முயன்றிருக்க வேண்டும். இவ்வகத்திணைகளும் புறத்திணைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்வன என அவர்கள் கருதியிருக்கின்றனர். எனவே இயற்கைக் காரணங்களின்றிச் செயற்கைக் காரணங்களும் இவற்றை இணைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். (சங்க மரபு – 135)

    இவ்வாறு உரையாசிரியர்கள் சொல்கின்ற காரணங்களைத் தமிழண்ணல்,

    உரையாசிரியர்கள் அகத்திற்கும் புறத்திற்குமான தொடர்பு குறித்து இசையத்தக்க விளக்கங்களைத் தர முயன்றுள்ளனர். அவர்கள் விளக்கங்களிற் சில பொருந்துவன; சில செயற்கையும் கற்பனையும் உடையன.  (சங்க மரபு – 133)

    இந்தக் காரணங்களில் கற்பனை இருந்தாலும் தொல்காப்பியர் உருவாக்கிய இணைவு என்பது பொருளதிகாரம் என்ற அவரின் இலக்கண உருவாக்க முறைக்கு நியாயம் சேர்ப்பதாகவே உள்ளது. (இன்றைய நவீன இலக்கிய விமர்சகர்களும் பெண்ணியச் சிந்தனையாளர்களும் இவ்விணைவின் விளக்கத்தை வேறொரு நிலையில் அளிக்கின்றனர்.)

          தொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப தனித்தனித் இலக்கணங்களாக உருவாக்கம் பெறத் தொடங்கின, அல்லது நெகிழத் தொடங்கின. இந்த மரபு மாற்றம் எல்லா நிலையிலும் நிகழத் தொடங்கியது. தனி அகப்பொருள் இலக்கண நூல்கள், யாப்பிலக்கண நூல்கள் என்ற வரிசையில் புறப்பொருளுக்கென்றும் இலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின.

    இத் தனிநூல் உருவாக்க முறைகள் பெரிதும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியும் சமகால இலக்கிய உருவாக்கத்திற்கேற்பவும் அமைந்தன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற தனிநூல்களில் புறத்திணையியல் சார்ந்து அமைந்தவை பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையுமே ஆகும்.

    பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை

    பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு நூல்களில் பன்னிருபடலம் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைக்கக்கூடிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை மட்டுமே. புறப்பொருள் வெண்பாமாலை நூல் உருவாக்க முறையில் பன்னிருபடலத்தைப் பின்பற்றியுள்ளது என்பதைப் பல சான்றுகளின் வழி அறியமுடிகிறது. அதே சமயம் பல இடங்களில் விலகியும் இருப்பதோடு தொல்காப்பியத்தையும் பல நிலைகளில் முதல் நூலாக இந்நூல் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. பன்னிருபடலத்தில் அகப்புறம் என்று சொல்லப்பட்டவற்றைப் புறப்பொருள் வெண்பாமாலை அவ்வாறே பின்பற்றாமல் அதை வேறு நிலையில் அணுகுகிறது.

    தொல்காப்பியத்திலிருந்து இந்நூல்கள் மாறிய தன்மை:

    • தொல்காப்பியர் வகுத்தளித்த பொருளிலக்கண மரபிலிருந்து புறத்திணையியலைப் பிரிப்பது.
    • அகத்தோடு அவற்றைத் தொடர்புபடுத்தாதது.
    • ஏழு என்ற எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்று விரிப்பது முதலானவை இந்நூல்களில் நிகழ்ந்த மாற்றங்களாகும்.

    தொல்காப்பியர் வகுத்தளித்த ஏழோடு புதியதாகச் சேர்ந்தவை ஐந்து

    கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

    தொல்காப்பியப் புறத்திணையியலிலேயே இருந்தவை இரண்டு

          கரந்தை – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று), (நிரை மீட்டல்)

          நொச்சி – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று),

    கோட்டையைக் காத்தல் என்னும் தனித்துறையாகத் தோற்றம் பெறல்

    தொல்காப்பியரின் வேறொரு திணையிலிருந்து இடம்பெயர்ந்தவை

    கைக்கிளை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

    பெருந்திணை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

    கைக்கிளையும் பெருந்திணையும் இவ்வாறு புறத்திணையியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்துத் தமிழண்ணல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

    ஐந்து திணைகளில் இயற்பெயர்கள் இடம்பெறக்கூடா என்பது தொல்காப்பியர் வகுத்த விதியாகும். இது கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் விரிவுபடுத்தப் பெற்றது. கைக்கிளை பெருந்திணையில் இயற்பெயர்கள் இடம்பெறுமாயின் அவை அகத்திணை வகுப்புள் இடம்பெறா. எனவே பிற்கால வளர்ச்சியை அவர்கள் கருத்திற் கொண்டு, அவர்கள் இவ்விரண்டையும் புறத்திணையின் இறுதியிற் சேர்த்தனர். (சங்க மரபு – 149)

    தொல்காப்பியரின் பலதுறைகளில் இருந்து சேர்த்து உருவாக்கப்பட்டது

    பொதுவியல்  – புதியதாகச் சேர்க்கப்பட்ட திணை. தொல்காப்பியத்தின் வெட்சி, காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது துறைகள் இப்புதுத் திணைக்குரியனவாகச் சேர்க்கப்பெற்றன.

    பொருள்வகையில் மாற்றம் பெற்றவை, வேறோர் இலக்கணம் பெறல்     

    காஞ்சி –  தொல்காப்பியத் திணையில் நிலையாமை குறித்துப் பேசிய காஞ்சி பிற்கால இலக்கண நூல்களில் வஞ்சியின் இன்னொரு பிரிவாக மாற்றம் பெற்று எதிரூன்றல் காஞ்சி என அமைந்தது.

    இந்நூல்களில் ஒவ்வொரு திணைக்கும் இடையே ஓர் இணை உருவாக்கப்பட்டது.

    வெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி

    இவ்வாறு இணை உருவாக்கப்பட்டதோடு ஒவ்வொரு திணைக்கும் இடையே ஒரு தொடர்ச்சியும் உருவாக்கப்பட்டது.

    சில ஆய்வாளர்கள் தொல்காப்பியத் திணைகளையும் இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொண்டனர். இந்தக் கருத்து தொல்காப்பியப் புறத்திணையியலைப் பொறுத்தவரை தவறான கருத்து என்றும் அவ்வாறு கட்டமைப்பது திணைச் செய்யுளுக்கு எதிரானது என்றும் தமிழண்ணல் கூறுகிறார்.

    புறத்திணைகள் ஒன்றற்கொன்று உறவுடையன அல்ல; தலைவன் தலைவியின் காதல் தொடர்பில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை அகத்திணைகள் குறிப்பது போலவே புறத்திணைகளிலும் போரில் ஒரு வீர நிகழ்வைக் குறிக்கின்றன. ஒரு கதைத்தொடர்ச்சி போலவோ ஒழுங்கான நிகழ்ச்சிகளின் கோவையான ஒரு நாடகம் போலவோ செய்யுட்களை இயற்றுவது திணைச் செய்யுளின் மரபுக்கு அடிப்படையிலேயே மாறுபட்டதாகும். (சங்க மரபு, ப. 147)

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவற்றைத் தனித்தனித் போர்களாகவே காட்டுவர். ஆனால் பிற்காலத்தில் இவை ஒரே போரின் நான்கு வேறுநிலைகளாகக் கருதப்பட்டு விட்டன. உண்மையில் இப்போர்கள் தமக்கெனக் குறித்த நோக்கையும் போரிடும் பாங்கையும் உடையன. (சங்க மரபு, ப. 143)

    இனக்குழுச் சமூகத்தில் வெவ்வேறு போர்முறைகளாக இருந்தவற்றைத் தொல்காப்பியர் வரிசைப்படுத்திய முறையிலிருந்து, அரண்மனையும் அரசமரபும் தோற்றம்பெற்ற காலத்தில் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் முயற்சியினைப் பிற்கால இலக்கண நூல்களான பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையும் மேற்கொண்டன. இவ்வித்தியாசத்தை அறியாத ஆய்வாளர் பலரும் தொல்காப்பியத்திலேயே போரின் தொடர்ச்சி இருப்பதாக விளக்கத் தொடங்கிவிட்டனர். இது தவறான பொருள் கோடல் முறையாகும் என்பதைத் தமிழண்ணலின் மேற்சொல்லப்பட்ட கூற்றுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

    பன்னிருபடலத்தைப் பின்பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை இத்திணைகளை மூன்றாகப் பகுக்கிறது: புறம், புறப்புறம், அகப்புறம்

    புறம்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை

          புறப்புறம்: வாகை, பாடாண், பொதுவியல்

    அகப்புறம்: கைக்கிளை, பெருந்திணை

    என்று வகைப்படுத்த அவிநயமோ ஒருசார் கூற்றாக அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை என்று வரையறை சொல்கிறது. இவ்விரண்டைத் தொடர்ந்து வீரசோழியம் வகைப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது.

    புறப்பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் போல பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருந்த போதிலும் புறத்திணை இலக்கணம் சொல்லிய முறையில் பிற்கால மரபுகளையே பின்பற்றுகிறது. புறமும், புறப்புறமும் புறப்பொருள் வெண்பா மாலையை அப்படியே பின்பற்றியிருந்த போதிலும் அகப்புறத்திணையில் மட்டும் மாறுபடுகிறது. இது பன்னிருபடலத்தைப் பின்பற்றுகிறது.

    வீரசோழியத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை ஆகியவற்றிற்கே துறைகள் கூறப்பட்டுள்ளன. நொச்சி, தும்பை ஆகியவற்றிற்குத் துறைவிளக்கம் இல்லை. துறைகளும் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள அளவுக்கு இல்லாமல் குறைவாகவே உள்ளன. விளக்கம் உரையிலேயே உள்ளது. (தமிழ் இலக்கண மரபுகள் – ப.171)

    இவற்றிலிருந்து தொல்காப்பியரின் புறத்திணை இலக்கணம் பிற்காலங்களில் எவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்தது என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள்

    இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணர் உரையும், நச்சினார்க்கினியர் உரையும் கிடைக்கின்றன.

    இவ்விருவரும் ஏழு புறத்திணைகள் பன்னிரெண்டு திணைகளாக வளர்ச்சி பெற்ற காலத்திலும், பல பகுப்புகளாக அவை மாறிய காலத்திலும், துறைகள் வளர்ந்தும் வீழ்ந்தும் முறைமாறிய தன்மையில் அமைந்த காலத்திலும் தமது உரைகளை எழுதுகின்றனர். இதே தன்மையைச் செய்யுளியல் உரை எழுதும் போதும் காணமுடிகிறது.

    • பலநிலைகளில் புறப்பொருள் மரபு மாற்றமடைந்த காலத்தில் உரை எழுதும் இவ்வுரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமது உரையை வகுக்கின்றனரா? அல்லது பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனரா?
    • பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கின்றனரா? அல்லது மறுக்கின்றனரா?
    • இளம்பூரணருக்கும் நச்சினார்க்கினியருக்கும் புறத்திணையியலை விளக்குவதில் மாறுபாடு உள்ளதா? இல்லையா?

    என்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்கும்போது சிலவற்றை நாம் கண்டறிய முடிகின்றது.

    இளம்பூரணரும் புறத்திணையியலும்

    இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு உரைஎழுதும் போது தொல்காப்பியரின் இலக்கண உருவாக்க முறைக்குப் பல நிலைகளில் வலுசேர்க்கிறார். அவரின் பின்வரும் விளக்கங்கள் அதற்குச் சான்று:

    பொருளதிகார அறிமுக உரையில், புறப்பொருளை உரிப்பொருள் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழுப்பி அதற்கு,

    புறமாவது, நிரை கோடற் பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும் வென்றி வகையும் நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்,

          வெட்சி தானே குறிஞ்சியது புறனே

    எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின் அவையும் உரிப்பொருள் ஆம் என்க (அகத்திணையியல் அறிமுகம்).

    என்று விளக்கமளிக்கின்றார்.

    தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வகையில் பயனுடையது என்பதை விளக்க வந்த இளம்பூரணர் அவ்விலக்கணம் உறுதிப்பொருட்கள் நான்கையும் விளக்குகிறது என்று கூறுகிறார்.

    அஃதற்றாக அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினும் அடங்கும் என்னை? வாகைத்திணையுள்,

    ”அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (புறத்.16)என இல்லறத்திற்கு உரியவும்,

    ”காமம் சான்ற கடைக்கோட் காலை” (கற்பு. 51)என நான்கு வருணத்தார் இயல்பும்,

          ”நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்‘’ (புறத். 17) எனவும்,

          ”காமம் நீத்த பாலினானும்’‘ (புறத்.17)

    எனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள் இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒருசாரனவும் காஞ்சிப் படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின் பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம். அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.

    இதே பகுதியை நச்சினார்க்கினியரின் பின்வரும் விளக்கமும் உறுதிசெய்கிறது.

    அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. ( அகத்திணையியல் நூ. 1)

    வெட்சி முதலா வாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார். இந்நிலையாமையானும் பிறவாற் றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று.( அகத்திணையியல் நூ. 1)

    இவ்விருவரும் தம் உரை வழி தொல்காப்பியப் பொருளதிகார உருவாக்கம் ஒரு பயனுடைய இலக்கணம் என்று கூறுகின்றனர். அதில் புறத்திணையியலே மூன்று உறுதிப் பொருள்களையும் விளக்கும் இலக்கணம் என்பதை இவர்கள் தம் உரைகளின் வழி உறுதிப்படுத்துகின்றனர்.

    இளம்பூரணர் புறத்திணையியலில் தொல்காப்பியரின் இலக்கண வரையறைப்படி ஏழு என்பதைக் கூறியிருந்த போதிலும் வெட்சியையும் உழிஞையையும் பிற்கால மரபுப்படி இரண்டிரண்டாகப் பிரிக்கிறார்.

    அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க அவை:-

    மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும்.

    காடுறையுலகாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும்.

    புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும்.

    பெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோம்திறப்பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும். (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை )

    இவ்விளக்கத்தில் வஞ்சி, காஞ்சியை அவர் இணையாகப் பார்க்கவில்லை, வெட்சி, கரந்தை, உழிஞை, நொச்சி என அவர் இரண்டு கூறாகப் பகுத்தாலும் அவை குறிஞ்சி, மருதம் என்ற ஒரே திணைக்கண் நிகழ்வதால் அவற்றையும் அதனுள் அடக்க முடியும் என்று கூறுகிறார். இவரைப் பொறுத்தவரை திணை ஏழு என்பதில் உறுதியாக நிற்கிறார்.

    இதனை மேலும் வலியுறுத்தும் விதமாகப் பன்னிரண்டு என்று பிற்காலத்தார் திணை கூறுவதை மறுக்கிறார்.

    புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண் டாகில்,

    ‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்” (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி

          “மிகைபடக் கூறல்”:

    தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்” (மரபு. 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாதலானும், பொதுவியல் என்பது,

          ”பல் அமர் செய்து படையுள் தப்பிய
    நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
    திறப்பட மொழிந்து தெரிய விரித்து
    முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே’‘ எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற் கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க. (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை)

    பன்னிருபடலத்தை எழுதியவர்களுள் தொல்காப்பியர் ஒருவர் என்னும்  கருத்தை இளம்பூரணர் மறுக்கிறார். இதனை,

    பன்னிருபடலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இரு வகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால் அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது.

    என்று கூறி,

    ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – மரபு, 100

    சிதைவெனப் படுபவை வசையற நாடின் – மரபு, 110

    என்ற நூற்பாக்களை எடுத்துக்காட்டி,

    எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (புறத்திணையியல் நூ. 2, இளம்பூரணர் உரை)

    என்ற விளக்கத்தின் வழி அறியலாம். இவ்விளக்கத்தை நச்சினார்க்கினியர் எங்கும் தம் உரையில் முன்வைக்கவில்லை.

    ”தும்பை தானே நெய்தலது புறனே” எனத் தொடங்கும் புறத்திணையியல் நூற்பா உரையில் இதனானே எதிரூன்றல் காஞ்சி ( பிங்க. அநுபோக :1474) என்பாரை மறுத்தவாறு அறிக. (புறத்திணையியல் நூ. 12, இளம்பூரணர் உரை ).

    என்று இளம்பூரணர் மேலும் தம் மறுப்பை வலியுறுத்துகிறார்.

    நச்சினார்க்கினியரும் புறத்திணையியலும்

    இளம்பூரணர் போலவே நச்சினார்க்கினியரும் தம் விவாதங்களைப் புறத்திணையியல் உரையில் நிகழ்த்துகிறார்.

    நூற்பா வைப்புமுறை

    ”தும்பைதானே நெய்தலது புறனே” என்னும் நூற்பாவை எஞ்சா மண்ணசை எனவரும் வஞ்சித்திணை நூற்பாவிற்கும், உழிஞைதானே என்னும் உழிஞைத்திணை நூற்பாவிற்கும் அடுத்து வைத்த காரணத்தை,

    இதுவும் மைந்து பொருளாகப் ( புறத் – 15) பொருளாதலின், மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும், மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார். (புறத்திணையியல் நூ. 14, நச். உரை ).

    ”காஞ்சிதானே பெருந்திணைப் புறனே” என்னும் நூற்பா வைப்புமுறையை,

    இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது என்கின்றது. இதனை வாகைக்குப்பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (புறத்திணையியல் நூ. 22, நச். உரை). என்று விளக்கம் தருகின்றார்.

    துறை என்பதற்கான சிறப்பு விளக்கம்

    நச்சினார்க்கினியர் துறை என்பதற்கு சிறப்பு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். இவ்விளக்கம் குறிப்பிடத்தக்க விளக்கமாக அமைகின்றது.

    மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறை போலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகும் மார்க்கமாதலிற் துறையென்றார்:

    அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார்.

    புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார்.

    இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுள் பலபொருள் விராய் வரினும், ஒரு துறையாயினாற்போலப், புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறை யாதலும், ஒரு செய்யுள் பலதுறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.(புறத்திணையியல் நூ. 1, நச். உரை ).

    என்று விளக்கமளித்துச் செல்கின்றார்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறன் என்பதன் சிறப்பு விளக்கம்

    நச்சினார்க்கினியர் வெட்சித்திணை குறிஞ்சித்திணைக்குப் புறனாக எவ்வாறு அமைகின்றது என்று விளக்கமளிக்கின்றார்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை ஏழற்குங் களவு நிகழுங்கொலென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

    நச்சினார்க்கினியர் பிற்கால மரபுகளை மறுத்துக்கூறும் இடங்கள்

    நச்சினார்க்கினியர் பிற்கால மரபுப்படி திணைவகை பன்னிரண்டு என்பதை மறுக்கின்றார். இம்மறுப்பிற்குச் சிறந்ததோர் பழமொழியையும் காட்டுகின்றார்.

    பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள வென்றாவாறாயிற்று. எனவே இப் பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. அகப் புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று ( அகத்திணையியல் நூ. 1)

    ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னை யெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாய வாறுபோல, அகத்திணை யேழற்குப் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைத்தாயிற்று.எனவே அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமை யாதவாறாயிற்று. ( அகத்திணையியல் நூ. 1)

     இளம்பூரணர் கரந்தை என்று சொல்வதை மறுத்தல்

    இளம்பூரணர் புறத்திணையியலில் வரக்கூடிய வெட்சித்திணைக்குத் துறையாகக் கூறிய இரண்டு நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாவை (வெறியறி சிறப்பின் ) கரந்தை என்று கூற நச்சினார்க்கினியரோ அதை எல்லாத் திணைகளுக்கும் உரிய வழுவமைதி என்று கூறி மறுக்கிறார்.

    கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின் வேறு திணையாகாது.

    இருவர்க்குங் கோடல் தொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

    என்று கூறுவதன் மூலம் நச்சினார்க்கினியர் வெட்சித் திணையின் முதல் துறைசார் (படையியங்கு அரவம்) நூற்பாவையே நிரை கோடலுக்கும் நிரை மீட்டலுக்கும் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சித்திணை மறுப்பு

    நச்சினார்க்கினியர் காஞ்சித்திணை என்பது நிலையாமையை பற்றியே கூறுவது. எனவே அது வஞ்சியின் இணையாக மாறாது என்று கூறுகின்றார். இதேபோல் புறப்புறம் என்னும் பிற்கால வகைப்பாட்டையும் மறுகின்றார்.

    ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின் காஞ்சியென்பது நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மையாற் கூறலாகாமை உணர்க (புறத்திணையியல் நூ. 7, நச். உரை ).

    புறப்புறம் மறுப்பு

    கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய், ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு (பெருந்திணைக்கு) இது (காஞ்சி) புறனாவதன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (புறத்திணையியல் நூ. 22, நச். உரை ).

    துறைகள் பிற்கால இலக்கண நூல்களில் விரிவதை மறுத்தல்

    திணைகளைத் தொடர்ந்து துறைகள் பிற்காலங்களில் பலநிலைகளில் விரிவதையும் மறுக்கின்றார்.

    இத்திணைக்கும் (வஞ்சி) பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங் கொள்க. அவை – கொற்றவை நிலையும், குடைநாட்கோலும், வாணாட்கோலும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். (புறத்திணையியல் நூ. 8, நச். உரை ).

    இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் தமிழ் கூறு நல்லுலகத்தன அல்லனவென மறுக்க. இனி முரசுவுழிஞை வேண்டுவாருளர் எனின் முரசவஞ்சியும் கோடல் வேண்டுமென மறுக்க. இனி ஆரெயிலுழிஞை முதலரணம் என்றதன்கண் அடங்கும் (புறத்திணை யியல் நூ. 22, நச். உரை ).

    இது போன்று பல இடங்களில், பிற்கால நூல்களில் குறிப்பாகப் புறப்பொருள் வெண்பா மாலையில் விரித்துக் கூறப்பட்ட துறைகளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் துறைகளுக்குள் அடக்கி அவற்றை மறுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிறைவாக

    • இளம்பூரணரின் விளக்கங்கள் வழியாக அவர் தொல்காப்பியப் புறத்திணை யியலைத் தம்சமகால வாசிப்பிற்கேற்றவாறு எளிமைப்படுத்துவதோடு பிற்கால இலக்கணக் கொள்கைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்பதை அறியமுடிகிறது.
    • நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் காலத்திற்கே சென்று தம் உரையை வகுக்க முற்பட்டிருப்பதோடு (அல்லது முற்படுவதாக அவர் நினைத்தல்) இளம்பூரணரைக் காட்டிலும் பல இடங்களில் விரிவான விளக்கங்களை அதிகம் தருகின்றார். மறுப்புரை வழங்குமிடங்களில் பிற்கால இலக்கண நூல்களின் கோட்பாடுகளை மறுப்பதோடு தொல்காப்பியரின் இலக்கண நூலாக்கத்திற்கு அவை எந்த விதத்திலும் இடையூறாக இல்லாதவாறு தமது உரையை வகுத்துச் சென்றுள்ளார்.
    • தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரை எழுத வந்த இவ்வுரையாசிரியர்கள் அதற்கு மட்டும் உரிய பொருளை எழுதாமல் பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனர். பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கவில்லை, அவற்றைத் தொல்காப்பியத்திலிருந்து விலக்கி மறுக்கின்றனர்.
    • இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலை விளக்குவதில் சிறிதளவே மாறுபாடு கொள்கின்றனர். இவ்விரு உரையாசிரியருமே புறத்திணை யியலைப் பொறுத்தவரையில் தொல்காப்பியரின் சிந்தனை வழிப்பட்டே தமது உரையை வகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
    • இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கும் பிற்காலப் புறப்பொருள் மரபுகள் வளர்ச்சி பெற்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட திணை, துறைகள் குறித்துப் பல விவாதங்கள் உரையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
    • நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வழிப்பட்டே துறை வகுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதனை “தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாற் துறைகூற வேண்டுமென்றுணர்க.”( நச்சினார்க்கினியர் உரை, நூ.35) என்னும் கூற்றின் வழி அறியலாம்.
    • இதனாலேயே இளம்பூரணர், நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடல்களின் துறைகளுக்கும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள துறைகளுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    துணைநூற் பட்டியல்

    1. இந்திரா மனுவேல், செவ்வியல் ஆய்வுக்களங்கள், கிரேஸ் – வேதம் பதிப்பகம், திருச்சி, 2009
    2. சண்முகம், செ.வை., இலக்கண உருவாக்கம் – 1, (பல்லவ – பாண்டியர் காலம்) மணிவாசகர் பதிப்பகம், சென்னை,  மு.ப., 1994.
    3. சீனிவாசன், இரா., தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800 – 1400, இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், சென்னை, மு.ப., 2000.
    4. தமிழண்ணல், சங்க மரபு ( தமிழாக்கம், கு.வெ. பாலசுப்பிரமணியன்), சிந்தாமணிப் பதிப்பகம், மதுரை, 2009.
    5. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு, சென்னை, 1969.
    6. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் முன்னைந்தியல்களும், நச்சினார்க்கினியர் உரையும் (முதல் பாகம்), கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.

    *****

    கட்டுரையாளர்- துறைத்தலைவர்,
    தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603203
    ilamarantamil@gmail.com
    9884277395, 9566197141

     

    Share
  • திருக்குறள், தொல்காப்பியம், சங்கத் தமிழ் – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

    தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

    செய்தி வெளியீடு எண்:538  | நாள் : 07.10.2013

    செய்தி வெளியீடு

    திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம்

    இயல், இசை, நாடகம் என்ற மூன்று கலைகளையும் உள்ளடக்கிய இலக்கிய வளம் வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும். இத்தகைய தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சென்ற நூல், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளாகும். தனி மனித ஒழுக்கம், குடும்ப அமைதி, அரசாட்சியின் மேன்மை, சமூக வாழ்வியல் போன்றவை குறித்த நல்ல அறிவுரைகள் இன்றைய உலக சமுதாயத்தின் உயர்வுக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க நூலாகிய திருக்குறளில் உள்ள அரிய வாழ்வியல் கருத்துக்களை எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் காட்சிப்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    திருக்குறள் ஓவியக் கூடத்தில், திருக்குறளை விளக்கும் ஓவியங்களைக் காட்சிப்படுத்தல், ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல், திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள் மற்றும் உயிரூட்டுப் படங்கள் சேகரித்துக் காண்பித்தல், அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்டு திருக்குறள் கூறும் அறநெறிக் கருத்துகளை நிகழ்கால ஓவியங்களாக தீட்டப்படுதல், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களை சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் வட்டெழுத்து மற்றும் கல்லெழுத்தில் உள்ள திருக்குறளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் ஆகியன செயல்படுத்தப்படும்.

    உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம்

    உலகமெல்லாம் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்களை ஒருங்கிணைக்கவும், அவர்கள் நேரில் கண்டு கேட்டு இன்புறுவதற்கும், இலக்கியம் சார்ந்த பண்பாட்டு பயணம் மேற்கொள்கையில் அனைத்துத் தகவல்களும் ஒருங்கே கிடைக்கவும், ஒரு மையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தமிழ் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஒன்றினை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தொல்காப்பியர் ஆய்வு இருக்கை

    தமிழ் மொழியின் சிறப்பையும், இலக்கண வளத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நூல் தொல்காப்பியமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்திற்கு பல அறிஞர்கள் விளக்க உரைகள் எழுதியுள்ளனர். ஆனால் இவ்வுரைகள் அனைத்தும் ஒருங்கே கிடைக்காமல் அங்காங்கே சிதறி உள்ளது. தொல்காப்பியத்திற்காக வெளிவந்துள்ள அனைத்து உரைகளையும் கண்டெடுத்து, அவற்றை முறைப்படுத்துதல், தொல்காப்பியத்தில் இதுவரை வந்துள்ள மொழிபெயர்ப்புகளை ஒருங்கிணைத்து முறைப்படுத்துதல், இந்நூலை பிற மொழி இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தல், தொல்காப்பியம் விளம்பும் வாழ்வியல் இலக்கணங்களை இன்றைய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தல், மாணவர்கள் தொல்காப்பியம் நூலைக் கற்க ஊக்கப்படுத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை ஆற்றுவதற்காகத் தொல்காப்பியர் பெயரால் ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    எனவே தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தினை நினைவு கூறும் வகையில், தொல்காப்பியர் ஆய்விருக்கை ஒன்றினை உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கென 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    தொல்காப்பியர் ஆய்வு இருக்கையின் வாயிலாக 6 திங்களுக்கு ஒரு முறை இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், ஓராண்டுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும். மேலும் ஆண்டுக்கொரு முறை தொல்காப்பிய இலக்கணம் குறித்து மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்படும்.

    சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்

    பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினர் கண்டு பெருமைக் கொள்ளும் வகையில், சங்கத் தமிழ்ப் பாடல்களை ஓவியங்களாகவும், காணொலிக் காட்சிகளாகவும் அசைவுப் படங்களாகவும், எழிலார்ந்த சிற்பங்களாகவும் காட்சிப்படுத்தும் வகையில் நிரந்தர சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் ஒன்று 75 லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் அரசு அருங்காட்சியகத்திற்கு எதிரில் 58 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைக்கப்படும். இக்கூடத்தில் முதற்கட்டமாக பண்டைத் தமிழரின் பெருமைகளையும், சிறப்புகளையும் காட்சிப்படுத்தும் விதமாக, அருங்காட்சியக முகப்புச் சுவர்களில் ஓவியங்கள், காட்சிக் கூடத்திற்குள் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள், புகைப்படங்கள் ஆகியவை அமைக்கப்படும்.

    சங்கத் தமிழ்க் காட்சிக் கூடத்தில் எந்தெந்த இலக்கியக் காட்சிகளை ஓவியங்களாகவும், புடைப்பு சிற்பங்களாகவும், சிற்பக் காட்சிகளாகவும், புகைப்படங்களாகவும் அமைக்கலாம் என்பதை தெரிவு செய்திடவும், உருவாக்கியதை ஏற்பளிக்கவும் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அரசின் இந்த நடவடிக்கைள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டினை உலகறியச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share