Tag: பவளசங்கரி

  • ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    ஆசிரியர் பவளசங்கரி பிறந்த நாள்

    அண்ணாகண்ணன்

    இன்று பிறந்த நாள் காணும் வல்லமை நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் நீடூழி வாழ்க.

    தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது பெற்றவர், 20க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், கிம் யாங் ஷிக் கவிதைகளைக் கொரிய நாட்டுக் கவிக்குயில் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர், லெஸ்லி டவுனர் எழுதிய கெய்ஷா நூலைத் தமிழில் பெயர்த்தவர், கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், கொங்கு நாட்டு வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தமிழ் கொரியத் தொடர்புகள் குறித்த ஆய்வறிஞர், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையை நிறுவி நடத்துபவர், வல்லமை மின்னிதழை வழிநடத்தும் ஆதார சக்தி, திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிப்பவர், ஆற்றல் வாய்ந்த பேச்சாளர், ஆளுமை மிகுந்த நிர்வாகி, அயராத உழைப்பாளர் பவளசங்கரி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க

    இந்தப் படம், 2011ஆம் ஆண்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. பின்னணியில் எழுத்தாளர் சுபாஷினி திருமலை

    Share
  • எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 7 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, சாந்தி மாரியப்பன், முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

    vallamai_8th_year

    8ஆம் ஆண்டில் நுழைந்துள்ளதை முன்னிட்டு, வாசகர்களுக்கு ஓர் இனிய பரிசாக, வல்லமையின் ஆண்டிராய்டு செயலியை வெளியிட்டுள்ளோம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android இனி, ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். இதனைக் குறுகிய காலத்தில் உருவாக்கிய கலீல் ஜாகீருக்கு நன்றி.

    சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வாரந்தோறும் வல்லமையாளர் விருதுகளை வழங்கி வருகிறோம். முனைவர் செ.இரா.செல்வக்குமாரைத் தொடர்ந்து, முனைவர் செல்வனின் ஒத்துழைப்புடன் 222ஆவது வாரமாக வல்லமையாளர் விருதினை வழங்கியுள்ளோம். வாசகர்களின் பேராதரவுடன் படக் கவிதைப் போட்டி, 112ஆவது வாரத்தை எட்டியுள்ளது. கடினமான இப்பணியை மேகலா இராமமூர்த்தி செம்மையாக ஆற்றி வருகிறார்.

    கிரேசி மோகனின் புதுமையான கோணத்தில் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் இரட்டை விருந்தாக, ஓவியமும் கவிதையுமாகத் தினந்தோறும் வெளியாகி வருகிறது. முனைவர் சுபாஷிணியின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம், 87 வாரங்களை எட்டியுள்ளது. இன்னம்பூரானின் நாளொரு பக்கம், இசைக்கவி ரமணனின் சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள், அண்ணாமலை சுகுமாரனின் வரலாறுகளின் வேர், க. பாலசுப்பிரமணியனின் கற்றல் ஒரு ஆற்றல், திருமந்திரத்தில் தேன் துளிகள், நிர்மலா ராகவனின் நலம் .. நமறிய ஆவல், மீனாட்சி பாலகணேஷின் இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் என ரங்கோலிக் கோலமாகப் படைப்புகள் அணி வகுக்கின்றன.

    சி. ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எழிலரசி கிளியோபாத்ரா , உமர் கயாம் ஈரடிப் பாக்கள் என ஒவ்வொன்றும் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்தவை. எளிய தமிழில் இவ்வளவு விரிவான விண்ணியல் / அறிவியல் ஆக்கங்கள், அச்சிதழ்களில் வெளிவருவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மலர்சபாவின் நான் அறிந்த சிலம்பு, சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்களாய்… என அடுக்கடுக்கான படைப்புகள், வாசகர் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    தொடர்கள் மட்டுமல்லாது தனிப் படைப்புகளும் தங்கள் தனி முத்திரையைப் பதித்து வருகின்றன. இவ்வகையில் வையவன், விப்ரநாராயணன், பழமைபேசி, ஒரு அரிசோனன், எஸ்.வி.வேணுகோபாலன், மீ.விசுவநாதன், மு. இளங்கோவன், எம். ரிஷான் ஷெரீப், தமிழ்த்தேனீ, கவிஞர் ஜவஹர்லால், ஜெயராமசர்மா, முல்லை அமுதன், மணிமுத்து, வேதா. இலங்காதிலகம், ராஜகவி ராகில், நா. பார்த்தசாரதி, கருமலைத்தமிழாழன், பெருவை பார்த்தசாரதி, கவியோகி வேதம், சுபாஷிணி திருமலை, சரஸ்வதி ராஜேந்திரன், உமாஸ்ரீ, பொன்.ராம், நாகினி, பா.ராஜசேகர் உள்ளிட்ட பலரின் பங்களிப்புகளும் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்த்து வருகின்றன.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பு, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் விரைவில் நூல்வடிவம் பெறுகிறது. வல்லமையாளர்களின் தொகுப்பும் விரைவில் மின்னூலாக வெளிவர உள்ளது.

    வல்லமையில் இன்று வரை 12,363 இடுகைகளை வெளியிட்டுள்ளோம். 12 ஆயிரம் பின்னூட்டங்களைப் பெற்றுள்ளோம். பல்லாயிரம் வாசகர்கள், உலகெங்கும் இருந்து வல்லமையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். வல்லமையின் கூகுள், பிளிக்கர், பேஸ்புக், வாட்சாப் குழுமங்கள், தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்குக் களம் அமைத்துள்ளன. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற இலக்குடன் திடமாக, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றி வரும் வல்லமையை வாழ்த்துங்கள். தொடர்ந்து வாசியுங்கள். படைப்புகளை அனுப்புங்கள். ஆர்வமுள்ளோர், ஆசிரியர் குழுவுடன் இணைந்து செயல்படலாம். உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.

    இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அவற்றைச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இணைந்திருங்கள், இன்னும் சாதிப்போம்.

    Share
  • ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

    Vallamai_6th_year_300x1251

    கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

    வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

    இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

    இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

    கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

    வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

    வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

    Share