Tag: பாவலர் கருமலைத் தமிழாளன்

  • தாயும் தாரமும்

     

     

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    அன்பின்நல்   இலக்கணமே   தாய்தான் !   பாச

                —அணைப்பிற்கு   இலக்கியமாய்த்   திகழ்ப   வள்தாய்

    தன்வயிறு   பட்டினியில்    தகிக்கும்   போதும்

                —தன்குழந்தை   பசிதீர்த்து   மகிழ்ப  வள்தாய்

    தன்பிள்ளை    நோய்தனக்குத்    தான்து   டித்துத்

                —தன்னுணவு   பத்தியத்தில்   காப்ப  வள்தாய்

    வன்மம்தீக்    கயவனென்று    தூற்றும்   போதும்

                —வாஞ்சையுடன்    திருத்துதற்கே    முயல்ப   வள்தாய் !

     

    எங்கிருந்தோ    வந்தவள்தான்    என்ற   போதும்

                —எல்லாமும்    கணவனென்றே    தன்னை    மாற்றி

    பொங்கிவரும்    தாய்வீட்டு    நினைவ    ழித்துப்

                —பொழுதெல்லாம்    புகுந்தவீட்டின்    உயர்வை   எண்ணி

    மங்கலத்தை    மனையேற்றி    மடிய   ளித்து

                —மனந்தன்னில்    கொழுநனுக்கே    இடம   ளித்து

    செங்கதிர்போல்   குலம்ஒளிரக்   குழந்தை   பெற்றுச்

                —செவ்வாழ்வை    அளிப்பவளே    மனைவி   நல்லாள் !

     

    தன்குருதி    பாலாக   ஊட்டும்   அன்னை

                —தன்னுடலால்    இன்பத்தைக்   கொடுக்கும்    தாரம்

    தன்னுடைய    மகிழ்ச்சியினை    எண்ணி    டாமல்

                —தன்குழந்தை    கணவனுக்கே    வாழ்வர்   நாளும்

    அன்பான    தாயைப்போல்    அரவ    ணைக்கும்

                —அருமையான    தாரந்தான்    அமைந்து   விட்டால்

    இன்பந்தான்    வாழ்க்கையிங்கே !   இல்லை   யென்றால்

                —இவ்வுலகே    நரகந்தான்   நொடிகள்    தோறும் !

     

     

    Share
  • எதற்காய் நீதி நூல்கள்

     

     

    பாவலர் கருமலைத்தமிழாழன்

     

    திருக்குறளில்    சொல்கின்ற   கருத்தைப்  போன்று

                திகழ்நீதி   நூல்கள்இவ்   வுலகில்   உண்டோ

    அரும்நூல்கள்   பதினென்கீழ்க்   கணக்கில்   கன்னம்

                அறைந்தாற்போல்   சொலும்நீதி   வேறெங்   குண்டோ

    பெருமைமிகு   காப்பியங்கள்   உரைக்கும்   நீதி

                பெயர்சொல்லும்   வேற்றுமொழி   நூல்கள்   உண்டோ

    செருக்களமோ    இல்லறமோ   சங்க   நூல்கள்

                செப்பியப்போல்   நீதிகள்தாம்   எங்கே   உண்டு !

     

    வகைவகையாய்   நீதிகளைச்   சொல்லும்   நூல்கள்

                வரிசையாக     இங்கிருந்தும்   பயன்தான்   என்ன

    நகையாகும்   காட்சியாக    நெருப்பைத்   தொட்டால்

                நன்குசுடும்   என்றறிந்தும்    தொடுகின்   றார்கள்

    பகையாக்கும்    கடன்அன்பை   முறிக்கும்   என்று

                பார்த்தறிந்தும்    வாங்கிநட்பை   இழக்கின்   றார்கள்

    புகைஉயிரைக்    குடிக்குமென்று   தெரிந்தி   ருந்தும்

                புதுசுருட்டைப்   பற்றவைத்தே   இழுக்கின்   றார்கள் !

     

    வாழ்வுமதி    அழியுமென்னும்   கள்ளுண்    ணாமை

                வடித்தகுறள்    படித்தபடி    குடிக்கின்   றார்கள்

    தாழ்வில்லை   பிறப்பொக்கும்    குறளைக்   கற்றும்

                தமக்குள்ளே    சாதிகூறி    வெட்டு   கின்றார்

    ஊழ்வினைதாம்    ஏழ்மைக்கு   வித்தாம்   என்றே

                உழைப்புயர்த்தும்    என்றறிந்தும்   முடங்கு   கின்றார்

    வீழ்கின்றார்   அறிவிருந்தும்    அறிவற்   றாராய்

                விட்டிலென    இறப்பதற்கா   நூல்க   ளிங்கே !

     

     

    Share