Tag: புவனா கோவிந்த்

  • கண் பேசும் வார்த்தைகள்

    புவனா கோவிந்த்

    “என்னங்க, நெக்ஸ்ட் வீக் எங்க சித்தப்பாவும் சித்தியும் அவங்க பொண்ணுக்கு மாப்ள பாக்கற விஷயமா ஊர்ல இருந்து வராங்க. நாமளும் கூட போகணும், லீவ் சொல்லிடுங்க” என்றவள் கூற

    “ஐயையோ… புதன்கிழமையா மட்டும் இருக்கக்கூடாது கடவுளே” என வேண்டியபடியே “எப்போ?” என்றான்

    “புதன்கிழமை” என குண்டை வீசினாள்

    “ஓ நோ… எனக்கு புதன்கிழமை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவ் போட முடியாது” என்றான்

    “ஆமா… எங்க வீட்டு சொந்தம் வராங்கனு சொன்னாலே உங்களுக்கு மீட்டிங், டெட்லைன், கோ-லைவ் எல்லாம் வந்துடும்” என சண்டையை துவங்கினாள்

    “ஏன் புரியாம பேசற? நீயும் வேலைக்கு போறவ தான, தெரியாதா?” என புரியவைக்க முயன்றான்

    “போன மாசம் உங்க அக்கா வந்தப்ப மட்டும் மூணு நாள் லீவ் போட்டீங்க, என்னையும் போட வெச்சீங்க. எனக்கு கூட தான் வேலை இருந்தது, உங்களுக்காக செய்யலையா?”

    “எங்கக்கா ரெண்டு மாசம் முன்னாடியே வர்றத பத்தி இன்பார்ம் பண்ணினா, சோ பிளான் பண்ண வசதியா இருந்தது” என நியாப்படுத்தினான்

    “ஓஹோ… உங்க சொந்தமெல்லாம் ரெம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க, எங்களுக்கு அவ்ளோ பத்தாதுன்னு சொல்ல வரீங்க, அப்படி தானே” என அவள் கோபமாய் சீற

    “ஸ்டாப் இட், டோண்ட் புட் வோர்ட்ஸ் இன் மை மௌத்… உன்கிட்ட பேச முடியாது ச்சே” என சலிப்பாய் நகர்ந்தான்

    “ஆமா என்கிட்டயெல்லாம் பேச முடியாது. உங்க டீம்ல இருக்காளே அவ பேரென்ன… நின்னாவோ உக்காந்தாவோ, அவகிட்ட பேசறதுன்னா மட்டும் இனிக்கும்” என கழுத்தை நொடித்தாள்

    “அது நின்னாவும் இல்ல உக்காந்தாவும் இல்ல… நீனா” என பற்களை கடித்தான் எரிச்சலில்

    “அது ரெம்ப முக்கியம் இப்ப… நீங்க லீவ் போட முடியுமா முடியாதா?” என அவள் பிடிவாத குரலில் கேட்கவும்

    “அட்ஜஸ்ட் பண்ண பண்ண ஓவரா டாமினேட் பண்றா, திமிரு” என மனதிற்குள் எரிச்சல்பட்டவன் “முடியாது” என ஒரே வார்த்தையில் எழுந்து சென்றான்

    அதன்  பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரவு உணவின் போது கூட மௌனமே ஆட்சி  செய்தது

    பின்  அவன் இருப்பையே உணராதவள் போல் ஒரு புத்தகத்தை எடுத்து  கொண்டு அறைக்குள் செல்ல, “நானும் உனக்கு சளைத்தவனல்ல” என்பது போல் அவன் முன்னறையில் லேப்டாப் சகிதம் இல்லாத வேலையில் மூழ்கினான்

    நடுஇரவில் அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் பாவனையில்  கண் மூடினாள். மெல்லிய  படலம் போல் அவன் அவளை பார்ப்பதை  உணர்ந்தும் கண் திறக்காமல் இருந்தாள்

    மெல்ல அவளருகே குனிந்தவன் “ராட்சசி… பேசறதெல்லாம் பேசிட்டு கொழந்த மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு தூங்கரத பாரு” என மெல்ல  முணுமுணுத்தபடி, அவளை எழுப்பி விடாவண்ணம் மெல்ல நெற்றியில் இதழ் ஒற்றினான்

    “உறங்குவது போல் நடித்தேன்

    உன்ரகசிய நாடகத்தை ரசிக்க”

    என  இன்ஸ்டன்ட் ஹைக்கூ உதித்தது அவள் மனதில்

    திறக்க  துடித்த இமைகளை அடக்கி நாடகத்தை தொடர்ந்தாள், அப்படியே உறங்கியும் போனாள்

    காலையில்  கண் விழித்தவளுக்கு அவனின் முகதரிசனம் முன்னிரவை நினைவூட்ட “வெவ்வவெவே” என பழித்தபடி, செல்லமாய் அலுங்காமல் அவன் கேசத்தை கலைத்தாள்

    அடுத்த  நாள் இரவும் இதே நாடகம் தொடர்ந்தது. ஆனால் பகலில் ஜென்ம விரோதிகள்  போல் முகத்தை திருப்பி கொண்டனர்

    மூன்றாம்  நாள் கண் விழித்ததும் இரு  நாளின் வழக்கம் போல் தனிச்சையாய்  அவன் முன்னுச்சி கேசத்தை  கலைத்துவிட்டு விலகியவளின்  கரம் பற்றினான் அவன்

    “அய்யோ நாடகம் அம்பலமாகி விட்டதே” என வெட்கமும், கூடவே சிறு கோபமும் சேர “கைய விடுங்க, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்” என கையை உதறினாள்

    “நான் கூட ரெம்ப கோவமாத்தான் இருக்கேன்” என்றான் அவனும்

    “எதுக்கு?” என முறைத்தாள்

    “ம்… தூங்கற மாதிரி நடிச்சு ஏமாத்தினதுக்கு” என்றான் கேலியாய் சிரித்தபடி

    “அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே” என அவள் மனதிற்குள் புலம்ப

    “ஆமா, அதுவும் தெரிஞ்சு போச்சு” என்றான் அவள் மனதை படித்தது போல்

    “எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு” என அவன் பிடியில் இருந்து ஓட விழைந்தவளை அருகே இழுத்தவன்

    “இன்னிக்கி நீ வொர்க் ப்ரம் ஹோம்னு எனக்கு தெரியும்… அதான் நானும் வொர்க் ப்ரம் ஹோம் சொல்லிட்டு வந்துட்டேன்” என கண் சிமிட்டினான்

    “ஐயோ கடவுளே… நேத்து சாயங்காலம் அந்த நீனா என்னை பாத்து ‘என்ஜாய் வொர்கிங் ப்ரம் ஹோம்’னு சிரிச்சது இதுக்கு தானா, ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?” என பொய்யாய் சலித்தாள்

    “ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றதுல கூட சில அட்வான்டேஜ் இருக்கு இல்லடி”

    “எனக்கு ‘டி’ போட்டா கோபம் வரும்”

    “அப்ப காபி போடட்டுமா?” என சிரிக்க, அதற்கு மேல் நடிக்க இயலாமல் தானும் சேர்ந்து சிரித்தாள்

    “ஏய்… ஒரு நியூ இயர் ரெசல்யூசன் எடுக்கலாமா?” என்றவன் கேட்க

    “என்ன? இனிமே அடிக்கடி வொர்க் ப்ரம் ஹோம் பண்றதுனா?” என்றவள் சிரிக்க

    “எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல” என சீண்டியவன் “இன்னொன்னும் கூட” என்றான்

    “என்ன?” என அவள் புரியாமல் பார்க்க

    “இந்த 2013 வருசத்துல நானும் நீயும் சண்டையே போடாம இருக்கணும். டீல்?” என அவன் கை நீட்ட

    “நோ டீல்” என அவன் கையை தட்டி விட்டாள்

    “அடிப்பாவி… ஏன்?” என விழிக்க

    “சண்டையே இல்லைனா என்ன லைப் அது, செம போர். மாசத்துக்கு நாலு சண்டை போடணும், ரெண்டு நாள் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு யார் மொதல்ல பேசுவாங்கனு தவிக்கனும், ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் ரசிக்கணும். சண்டைய சாக்கா வெச்சு உங்ககிட்ட நாலு கிப்ட் தேத்தணும், இதெல்லாம் இல்லைனா என்ன சுவாரஷ்யம் இருக்கு லைப்ல” என அவள் அபிநயத்துடன் கூற, அதை கண்ணெடுக்காமல் ரசித்தவன்

    “பொண்ணுங்க எல்லாம் பிளான் பண்ணிதான் பண்றீங்க… இது புரியாம பசங்க நாங்க பீலிங்க்ல பீஸ் பீஸா போறோம்… ஹ்ம்ம்” என பாவமாய் அவன் கூற, அதை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட சத்தமாய் வாய் விட்டு சிரித்தாள்

    சிரிப்பு  ஓய்ந்ததும் “ஹாப்பி நியூ இயர்… ரெண்டு நாள் அட்வான்சா  சொல்றேன், ஏன்னா என்னோட விஷ் தான் உங்களுக்கு முதல் விஷ்ஷா இருக்கணும்” என்றாள் தன் உரிமையை பறைசாற்றுவது போல்

    அதையும் ரசித்தவன் “ஐ லவ் யு” என்றான், அவளை விட்டு பார்வையை விலக்காமல்

    “ஹாப்பி நியூ இயர் சொன்னா திருப்பி ஹாப்பி நியூ இயர் தான் சொல்லுவாங்க, ஐ லவ் யு சொல்ல மாட்டாங்க… இது கூட தெரியாதா?” என்றாள் வேண்டுமென்றே

    “ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு டூ சொல்லுவாங்க, சண்டை போட மாட்டாங்க… இது கூட தெரியாதா?” என்றான் அவனும் வேண்டுமென்றே

    “இப்ப யாரு சண்டை போட்டா?” என அவள் முறைக்க, மீண்டும் அங்கு ஒரு சண்டை (!) ஆரம்பமாகியது.

    (முற்றும்)

    Share
  • மௌன ராகம்

    புவனா கோவிந்த்

     

    1962

    “மைதிலி, பூ இப்படி தழைய தழைய வெச்சா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதும்மா, மடிச்சு வெய்யி” 

    “சும்மா அண்ணா அண்ணானு பூச்சாண்டி காட்டாதே மன்னி… நேக்கு தெரியும் எப்படி வெக்கணும்னு. நான் அழகா இருக்கேனு நோக்கு பொறாமை..ஹம்ம்” என கழுத்தை ஒடித்து சென்றாள் மைதிலி. 

    அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த அவளின் அண்ணன் கிருஷ்ணன் “என்ன மைதிலி ரெடியா? உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போணும்”.

    “இதோ ரெடிண்ணா” என்றபடி கைபையை எடுத்து கொண்டு வந்தாள். 

    ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன் “ஏய் மைதிலி நில்லு, என்னடி இது வேஷம் கட்றவ மாதிரி ஜடை தாண்டி பூ தொங்கறது. என்ன பழக்கம் இது?” என கோபமாய் கேட்க,

    அண்ணனின் கோபத்தை அறிந்த மைதிலி “இல்லைணா…நான் அப்பவே சொன்னேன்…மன்னி தான்…” எனவும், மன்னி என்றழைக்கபட்ட ராதா செய்வதறியாது திகைத்தாள். 

    ராதா உண்மையை கூற முயல, கை உயர்த்தி பேசவேண்டாம் என்பது போல் முறைத்த கிருஷ்ணன் “கூத்தாடி குடும்பம் தான உன் மன்னியோடது, வேற எப்படி இருக்கும் புத்தி. நீ சரியா போட்டுண்டு வா” என தங்கையை ஒட்டி பேசினான், புது மனைவி என்ற கரிசனம் கூட இல்லாமல். 

    தன் பாட்டனார் மேடை நாடக நடிகராய் இருந்தவர் என்பதை குத்தி காட்டி தன் கணவன் பேசியதும், நடிகர் என்றால் கேவலமா என கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தினாள் ராதா. 

    சீர் செனத்தி எதுவும் இன்றி உறவு என்பதால் மட்டும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த சில மாதங்களில் எல்லோரின் உதாசீனமும் ராதாவுக்கு பழகித்தான் போனது. 

    ஆனாலும் இது போன்ற உண்மை சிறிதுமற்ற குற்றசாட்டுகளின் போது மனம் மிகவும் வேதனையுற்றது. 

    கிருஷ்ணனின் வசதியான மாமன் மகள் ரஞ்சனி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இருந்ததை தடுத்த அவன் தந்தை. தூரத்து உறவான ராதாவை குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் என கொண்டு வந்தது எல்லோர் மனத்திலும் ராதாவின் மேல் நிரந்தர கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. 

    அதிலும் ரஞ்சனியிடம் சிறு வயது முதல் உற்ற தோழி போல் இருந்த மைதிலி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் அண்ணி ராதாவை பழி வாங்குவாள். 

    “கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்” அதுவே இல்லை எனும் போது வேறு என்ன என ராதாவும் அப்படியே வாழப் பழகி விட்டாள். 

    மற்றொரு நாள்….

    “சொன்னா கேளு மைதிலி, இவ்ளோ எண்ணை விடாதே… உங்கண்ணாக்கு பிடிக்காது. இல்லேனா உன் சிநேகிதி சொல்லி குடுத்ததை உனக்கு அளவா செய்துக்கோ. உங்க அண்ணாக்கு நான் தனியா சமைச்சுடறேன்” என ராதா கூற, 

    “இங்க பாருங்க மன்னி… இதொண்ணும் உங்காத்துல இருந்து கொண்டு வந்ததில்ல, எங்க அண்ணா சம்பாதிக்கற காசுல வாங்கினது. என் இஷ்டத்துக்கு செய்வேன். இன்னைக்கி நான் செய்யறது தான் அண்ணா சாப்பிடணும், எனக்கு தெரியாம நீங்க சமைச்சா அண்ணாகிட்ட இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி சிக்க வெப்பேன்” என்றாள் மிரட்டலாய். 

    செய்வதறியாமல் மௌனமானாள் ராதா. தாயில்லா பெண் என தன் மாமனாரும் கணவனும் சேர்ந்து மைதிலிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே, போகிற இடத்தில என்ன சொல்வார்களோ என வருந்தினாள். 

    அன்று மதியம்…

    “என்னடி கருமம் இது… வாய்ல வெக்க வெளங்கல… ஒரே காரம் புளிப்பு த்தூ. இப்படி எண்ணைய கொட்டினா சீக்கரம் பரலோகம் போக வேண்டியது தான். எல்லாத்தையும் நீயே கொட்டிக்கோ” என எழுந்த கணவனை “இல்லங்க… அது … ” என ராதா விளக்கம் சொல்ல வர, 

    அதற்குள் மைதிலி “நான் அப்பவே சொன்னேண்ணா… அதுக்கு மன்னி என் ஆத்துகாரர் சம்பாதிக்கறார் நான் கொட்றேன் எண்ணைய நீ யார் கேக்கனு சொல்றா” என வழக்கம் போல் பழியை ராதாவின் போல் போட்டாள். 

    “காசு பணத்த சம்பாதிச்சா தானே அதோட அருமை தெரியும், மூக்கு பிடிக்க மூணு வேளையும் சாப்டுட்டு தூங்கற ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது” என தன் மனைவி மீதே குற்றம் சாட்டினான் கிருஷ்ணன். 

    தான் என்ன சொன்னாலும் தன் கணவன் நம்பபோவதில்லை என உணர்ந்ததினால் எப்போதும் போல் மௌனமானாள் ராதா.

    __________________________________

     

    1972

    “மைதிலி இந்த பைல பழம், பூ, பலகாரம் எல்லாம் வெச்சுருக்கேன், துணிக கூட சேக்காம தனியா வெச்சுக்கோ”

    “எதுக்கு மன்னி இப்படி அடுக்கறேள்? எங்க மாமி சும்மாவே ‘பொன்ன வெக்கற எடத்துல பூ’ங்கறது உங்காத்து மந்திரமானு கேலி பேசறா” என நொடித்தவள், பழங்கள், பூ, இனிப்பு இருந்த பையை எடுத்து வெளியே வைத்தாள். 

    “மைதிலி கிளம்பிட்டயா” என கிருஷ்ணமூர்த்தி வர “போலாம்’ண்ணா” என்றாள். 

    “என்னமா இது வெறும் துணிப்பை தான் இருக்கு போல, தோட்டத்துல இருந்து பழம் எல்லாம் கொண்டு வர சொன்னனே, என்ன ஆச்சு ராதா?” என வழக்கம் போல் மனைவியை முறைக்க, 

    ராதா ஏதோ சொல்ல முற்படுமுன் “நான் கேட்டே’ண்ணா, மன்னி அவா அம்மா ஆத்துக்கு எடுத்து வெச்சுட்டாளாம்” என கூசாமல் பழி சுமத்தினாள் மைதிலி. 

    எரித்து விடுவதை போல் மனைவியை பார்த்தான் கிருஷ்ணன். 

    சில மாதங்களுக்கு பின்…

    “மைதிலி, நீ ஏம்மா இதெல்லாம் செய்யற. கல்யாணம் ஆகி ரெம்ப நாள் கழிச்சு இப்ப தான் உண்டாகி இருக்க, ஓய்வா இரு. உனக்கு மாங்காதானே வேணும், நான் நறுக்கி தரேன் தள்ளு” என ராதா உண்மையான அக்கறையுடன் கூற,

    “ரெம்ப அக்கறை இருக்கறா மாதிரி வேஷம் போடாதேள் மன்னி. நீங்க பத்தாம் மாசமே பெத்துகிட்டதை மறைமுகமா குத்தி காட்றேளா? வருசத்துக்கு ஒண்ணா நாலு பெத்துகிட்டத தவிர என்ன சாதிச்சு இருக்கீங்க… ஹ்ம்ம்” என விஷமாய் வார்த்தைகளை கக்கினாள். 

    “ஏன் மைதிலி இப்படி பேசற. உன் நல்லதுக்கு தானே…”

    “ஆஹா… சினிமால நடிக்கரவா தோத்து போய்டணும் உங்கள்ட்ட…. என் ஆத்துக்காரர் என் மேல உசுரா இருக்கார்னு உங்க பொறாமயால தான் நேக்கு கரு தங்காம இருக்கு. இன்னும் உங்கள வேலை வேற வாங்கினா சபிச்சுடமாட்டீங்க… ஹ்ம்ம்” என சலித்து கொண்டவளை, ஒரு கணம் மௌனமாய் பார்த்த ராதா, அந்த இடத்தை விட்டு அகன்றாள். 

    சற்று நேரத்தில் “ராதா… ஏய் ராதா… என்ன பண்ணிட்ருக்க” என்ற கணவனின் கத்ததில் நடந்ததை யூகித்தவளாய் பெருமூச்சுடன் முன்னறைக்கு வந்தாள் ராதா.

    மௌனமாய் வந்து நின்றவளை முறைத்த கிருஷ்ணன் “ஏண்டி, உன்னால இந்த மாங்காய நறுக்கி தர முடியாதா? பாரு மைதிலி விரல வெட்டிண்டு இருக்கா” என கோபத்தில் கத்தினான். 

    மைதிலி வழக்கம் போல் “நான் கேட்டேண்ணா… மன்னி நேக்கு நெறைய வேலை இருக்குனுட்டா” என வருந்துவது போல் பாவனை செய்தாள். 

    “என்னடி முழிச்சுண்டு நிக்கற, வாய்ல என்ன கொலுகட்டயா பதில் சொல்லு” என கிருஷ்ணன் கேட்க, தான் பதில் சொல்வதால் எதுவும் மாறபோவதில்லை என புரிந்தவளாய் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள் ராதா. 

    “அப்பா, அத்தை பொய் சொல்றாப்பா. அம்மா நறுக்கி தரேன்னு தான் சொன்னா” என ராதாவின் கடைக்குட்டி வைஷ்ணவி சொல்ல, 

    “கேட்டியாண்ணா, உன் பொண்ணு கூட அவ அம்மாவுக்கு சாதகமாத்தான் பொய் பேசறா… இதுவே நம்ப அம்மா உயிரோட இருந்துருந்தா… ” என இல்லாத கண்ணீரை மறைக்க கண்ணை கசக்கினாள் மைதிலி.

    கிருஷ்ணனின் கோபத்தை தூண்ட அது போதுமாய் இருந்தது “வாய மூடு கழுத… மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள பொய் சொல்றியா” என மகளை அடித்து துவைத்தான். அதை தடுக்க சென்ற ராதாவின் மேலும் சில அடிகள் விழுந்தன.

    _________________________________

     

    2012

    காலில் முக்காலி இடித்து கொண்டதில் நகம் பெயர்ந்து சுரீல் என வலி கிளம்ப “ஸ்ஸ்…” என முனகியவர் “யார் இந்த முக்காலிய இங்க போட்டு தொலைச்சது” என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன். 

    அதே சமயம் வந்த மைதிலி “நான் அப்பவே சொன்னேன்’ண்ணா மன்னி தான்….” என தொடங்கியவள், தன் அண்ணனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, தான் செய்த தவறு புலப்பட, என்ன செய்வதென தெரியாமல் நிறுத்தினாள். 

    ரேழியில் இருந்து வந்த கைதட்டல் ஒலி கேட்டு மைதிலியும் கிருஷ்ணனும் திரும்பி பார்த்தனர். அங்கு ராதாவின் இளைய மகள் வைஷ்ணவி நின்றிருந்தாள். 

    “சபாஷ் அத்தை… நீ இப்படி வாயடைச்சு போய் நிக்கறது பாக்க கண் கொள்ளா காட்சியா இருக்கு” என்றவள் தன்  தந்தை புறம் திரும்பி “ஏம்ப்பா நீங்க கூட வாயடைச்சு போய் நிக்கறேள். உங்க அருமை தங்கையோட பேச்சை கேட்டுண்டு, தொண்ட கிழிய அம்மாவையும் எங்களையும் வெரட்டுவேளே, இப்ப என்ன ஆச்சு… பேசுங்கப்பா  பேசுங்கப்பா” என கோபமாய் தன் தந்தையை பற்றி உலுக்கினாள் வைஷ்ணவி. 

    தங்கை மேல் உள்ள பாசத்தில் தன்னை நம்பி வந்த ஜீவனை வதைத்ததை முதல் முறையாய் உணர்ந்தான் கிருஷ்ணன். ஐம்பது வருட  இல்வாழ்க்கையின் தருணங்கள் மனதில் படமாய் ஓட, ராதாவின் அன்பும் சகிப்புதன்மையும், காதலும் தியாகமும், உழைப்பும் பொறுப்பும் கண் முன் விரிந்தது. 

    அந்த புரிதலோடு சேர்ந்து கண்ணில் நீரும் பெருகியது. பத்து நாட்களுக்கு முன் மனைவியின் உடலுக்கு சிதை மூட்டிய போது கூட இரும்பாய் நின்றவர், இன்று உணர்ந்த இழப்பில் கட்டுப்படுத்த இயலாமல் ராதாவின் மாலையிட்ட படத்தின் முன் மண்டியிட்டு கதறினார்.

    ஆம்… ஐம்பது வருடங்கள் கிருஷ்ணனின் மனைவியாய், அந்த வீட்டின் மருமகளாய், நான்கு பிள்ளைகளுக்கு தாயாய் தன் கடமையை செவ்வனே செய்த நிறைவில் எழுபது வயதில் இயற்கை மரணம் எய்தினாள் ராதா. 

    தந்தையின் கதறலில் பிள்ளைகள் நால்வரும் சிலையாய் நின்றனர். அதுவரை பெற்றவரை  சிம்ம சொப்பனமாய் மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு அவரின் இந்த நிலை காண சகியாமல் கண்ணில் நீர் கோர்த்தது. 

    முதலில் சுதாரித்தவன் மூத்தவன் ரவீந்திரன் தான். “நீ சும்மாவே இருக்க மாட்டியா வைஷு” என தங்கையை கடிந்து கொண்டான். 

    “அப்பா என்னப்பா இது. அவ தான் புரியாம ஏதோ பேசறானா அதை போய் நீங்க பெருசா எடுத்துகிட்டு… ப்ளீஸ்ப்பா, அழாதீங்கோ” என சமாதானம் செய்தான். 

    “அப்பா சாரி’ப்பா, நான் உங்கள அழ வெக்கணும்னு அப்படி பேசலப்பா. அம்மா இல்லாம போனப்புறம் கூட அத்தை எப்பவும் போல பேசவும் என்னால தாங்கமுடியாமத்தான் அப்படி சொல்லிட்டேன்’ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்’ப்பா” என கெஞ்சலில் தொடங்கி அழுகையில் முடித்தாள் வைஷ்ணவி. 

    ஒன்றும் பேசாமல் மகளை அணைத்து கொண்டார் கிருஷ்ணன். கதறல் நின்றிருந்த போதும் கண்ணில் நீர் வற்ற மறுத்தது அவருக்கு. 

    அந்த நிலையில் தன் தமயனை பார்த்ததும் “இதற்கெல்லாம் தான்தானே காரணம். பெற்றவளை இழந்த பின் எல்லாமுமாய் இருந்த அண்ணன், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் தவறு செய்து விட்டோமே” என உறுத்த, கிருஷ்ணனின் காலில் மன்னிப்பு வேண்டி  விழுந்தாள் மைதிலி. 

    பத்து நாட்களுக்கு முன் ராதாவின் உயிர் பிரிந்த தருணத்தில் தன்னில் ஒரு பகுதியை இழந்ததை கூட கிருஷ்ணனால் உணரமுடியவில்லை. 

    சிறுவயதிலேயே அன்னையை இழந்து, இழப்புக்கு மனம் பழகியதும் ஒரு காரணமோ என இப்போது தோன்றியது.

    எது எப்படி இருப்பினும் வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றுவிட்டாள் என நினைத்தார் கிருஷ்ணன். 

    தன்னையும் அறியாமல் அவரின் விரல்கள் புகைப்படத்தில் இருந்த அவளின் கண்களை வருடியது. இந்த கணம் அவருக்கு தேவை தனிமை என உணர்ந்தவர்கள் போல் பிள்ளைகள் நால்வரும் விலகி சென்றனர். 

    தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்கு, அதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது.

    (முற்றும்)

    Share