Tag: மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா

  • காலமெலாம் நெஞ்சில் சுமக்கும் அப்பா!

    காலமெலாம் நெஞ்சில் சுமக்கும் அப்பா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    பெற்றிடுவாள் அன்னை பெரிதுவப்பார் அப்பா
    உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா
    கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
    காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா

    கைப்பிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
    கற்பவற்றைக் கற்க கையணைப்பார் அப்பா
    கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
    கற்றவரின் அவையில் அமர்கவென்பார் அப்பா

    வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
    தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா
    விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
    விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா

    பொய்யென்னும் கருவைப் பொசிக்கிடுவார் அப்பா
    பொறாமையெனும் நினைப்பைப் போக்கிடுவார் அப்பா
    மெய்யென்னும் கருவை விதைத்திடுவார் அப்பா
    மேதினியில் வாழ்வின் விளக்காவார் அப்பா

    நல்லநட்பை நாளும் நாடச்செய்வார் அப்பா
    நல்லறிஞர் பெருமை நயந்துரைப்பார் அப்பா
    எல்லையில்லா அன்பை ஈந்துநிற்பார் அப்பா
    இனிமையிலா நட்பை எடுத்தெறிவார் அப்பா

    வறியநிலை கண்டால் வதங்கிடுவார் அப்பா
    நெறிபிறழ்ந்த வாழ்க்கை நினைவிருத்தார் அப்பா
    அறமுரைக்கும் வள்ளுவம் அகநிறைப்பார் அப்பா
    அரைக்கணமும் வரம்பைக் கடந்துவிடார் அப்பா

    இலக்கியத்தை இங்கிதத்தை எனக்குரைப்பார் அப்பா
    இலக்குவிட்டுப் போகாது காத்திடுவார் அப்பா
    சமயநெறி, தத்துவங்கள் போதிப்பார் அப்பா
    சன்மார்க்க வழியினிலே கூட்டிச்செல்வார் அப்பா

    நான்விரும்பும் அத்தனையும் செய்திடுவார் அப்பா
    தான்விரும்பும் நல்லவற்றை எனக்களிப்பார் அப்பா
    வானிறங்கும் மழைபோல வழங்கிடுவார் அப்பா
    வாழ்நாளில் தெய்வமாய் விளங்குகிறார் அப்பா

    நோய்நொடிகள் அணுகாமல் வைத்தியராய் இருப்பார்
    நோய்வந்தால் அதைத்தீர்க்கும் மருந்தாயும் இருப்பார்
    உண்ணுகின்ற அத்தனையும் ஒழுங்காக்கி நிற்பார்
    உடலுளத்தை மனமிருத்தி ஒழுங்கமைப்பார் அப்பா

    வரமாக வாய்த்திட்ட மகவென்று சொல்வார்
    வாழ்வினிலே பெற்றிட்ட செல்வமெனப் புகழ்வார்
    நிலமீது மலர்ந்திட்ட பெருவாழ்வே என்பார்
    நெஞ்சினிலே எனையிருத்திக் கொஞ்சிடுவார் அப்பா

    பட்டம் நான்பெற்றேன் பலபதவி வகித்தேன்
    பலபேரும் மதித்திடவே பாங்குடனே வாழுகிறேன்
    பக்குவமாய் என்னைப் பாதுகாத்தார் அப்பா
    பக்கத்தில் இல்லாமல் படமிருந்தே பார்க்கின்றார்

    அப்பாக்கள் அனைவருக்கும் அருமருந்து ஆவர்
    அவரிளமை அத்தனையும் அர்ப்பணித்தார் எமக்கு
    அப்பாக்கள் வாழ்வினிலே ஆண்டவனே ஆவார்
    அவரன்பை அவர்பணியை அகமிருத்தி வாழ்வோம்

    Share
  • பாடவா இசைநிலவே

    பாடவா இசைநிலவே

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே
    பாடல்தர விரைவாக வந்திடுவாய் பாலுவே
    ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கு
    அழகான சிரிப்புடனே பாடவா இசைநிலவே

    உன்னிசை கேட்பதற்கு உலகமே காத்திருக்கு
    உணர்வுடனே உந்தனிசை ஒட்டியே இருக்குதையா
    செந்தமிழை உச்சரித்துச் சிறப்பாகப் பாடிடுவாய்
    வந்திருந்து பாடுதற்கு வாபாலு விரைவாக

    இளையராஜா இசைபெருக என்றுமே துணையானாய்
    ஏஆர் ரகுமானின் இசைக் கோலம் உட்புகுந்தாய்
    விஸ்வநாதன் இசையினிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய்
    விரைவாக ஓடிவா வெள்ளித்திரை காத்திருக்கு

    டிஎம்எஸ் பின்னாலே யார்வருவருவார் பாடவென
    காத்திருக்க வைக்காமல் கலக்கலுடன் வந்துநின்றாய்
    உன்வரவால் திரையிசைக்கு உத்வேகம் பிறந்ததையா
    எழுந்தோடி வந்திடுவாய் எங்கள்பாலு பாடுதற்கு

    சுந்தரத் தெலுங்கானாலும் சொக்கவைத்தாய் தமிழிசையை
    மந்திரமாய் உந்தனிசை மயக்குதையா கடவுளையே
    சொந்தமுடன் எல்லோரும் கொண்டாடும் இசைமன்னா
    சுகம்பெற்று எழுந்துவர இறைவனிடம் வேண்டுகிறோம்

    பாலுநீ பாடவேண்டும் பலபேரும் மகிழவேண்டும்
    தாள லயத்துடனே தரவேண்டும் தமிழிசையை
    வாழவைக்கும் இசைதந்தாய் வாழ்ந்திடுவாய் பாலுவையா
    ஆழநிறை அன்புடனே அழைக்கின்றோம் வந்திடையா

    Share
  • கொரோனா ஏன் வந்தது?

    கொரோனா ஏன் வந்தது?

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஸ்திரேலியா

    இயற்கை யெனும் பெருமரணை
    நொறுக்கி நிற்கும் வகையினிலே
    எடுத்து வரும் பொருத்தமிலா
    முயற்சி யெலாம் பெருகுவதால்
    இயற்கை அது சீற்றமுற்று
    எல்லை இலா வகையினிலே
    கொடுத்து வரும் தண்டனையே
    கொரோ நோவாய் வந்திருக்கு!

    இயற்கை யெனும் பெருவரத்தைப்
    புறக்கணிக்கப் பல வகையில்
    செயற்கை எனும் வழியினிலே
    இறக்கை கட்டிப் பறந்ததனால்
    பயன் உடைய அத்தனையும்
    பயன் அற்ற தெனும்மாயை
    உலகினிலே வந்தமைந்து
    உலகை இப்போ உலுக்கிறதே  !

    விஞ்ஞானம் எனும் பெயரால்
    விந்தை பல விளைந்ததுவே
    அளவுக்கு மிஞ்சி விடில்
    அவை அனைத்தும் ஆபத்தே
    எஞ்ஞான்றும் விஞ்ஞானம்
    உதவிவிடும் எனும் எண்ணம்
    மண்ணுள்ளார் மன மேறி
    மரண வாசல் பார்க்கின்றார்!

    செயற்கை தனைச் சேர்க்கின்ற
    செயல் களைய முன்வருவோம்
    இயற்கை தனை இறுகணைக்க
    இதயம் அதைத் திறந்திடுவோம்
    அவசரமாய் நாம் அனைத்தும்
    ஆக்கி விடும் மனநிலையை
    அகற்றி நிற்க எண்ணிவிடின்
    அகிலம் அதைக் காத்திடலாம் !

    Share
  • நலம்விளைப்பாய் சித்திரையே!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)

    புத்தாடை வாங்கிடுவோம்
    புத்துணர்வு பெற்றிடுவோம்
    முத்தான முறுவலுடன்
    சித்திரையைக் காத்திருப்போம்
    எத்தனையோ சித்திரைகள்
    எம்வாழ்வில் வந்தாலும்
    அத்தனையும் அடிமனதில்
    ஆழமாய்ப் பதிந்திருக்கும்!

    சொத்துள்ளார் சுகங்காண்பர்
    சொத்தில்லார் சுகங்காணார்
    எத்தனையோ துயர்வாதை
    இருந்தேங்க வைக்கிறது
    அத்தனையும் பறந்தோட
    சித்திரைதான் உதவுமென
    நம்பிடுவார் வாழ்வினிலே
    நலம்விளைப்பாய் சித்திரையே!

    வெள்ளப் பெருக்காலே
    வேதனைகள் ஒருபக்கம்
    உள்ளத்தை வதைக்கின்ற
    உணர்வற்றார் ஒருபக்கம்
    கள்ளத்தை விதைக்கின்ற
    கயவரெலாம் ஒருபக்கம்
    கழன்றோடக் காத்துள்ளோம்
    கைகொடுப்பாய் சித்திரையே!

    அரசியலில் அறமிப்போ
    அருகியே போகிறது
    ஆண்டவனின் சன்னிதியில்
    அநியாயம் நிகழ்கிறது
    அறமுரைப்போர் அனைவருமே
    அடக்கமாய் ஆகிவிட்டார்
    அடங்கிநிற்பார் தனையெழுப்பி
    அழைத்துவா சித்திரையே!

    புலம்பெயர்ந்து வந்தவர்கள்
    புலனெல்லாம் பிறந்தமண்ணின்
    நலம்பற்றி நினைப்பதிலே
    நாளதனைப் போக்குகின்றார்
    வந்தவர்கள் சிலபேர்கள்
    வம்புகளை வாங்குகின்றார்
    அந்தநிலை அகற்றுவிட
    வந்துவிடு சித்திரையே!

    ஈழத்தில் தமிழ்மக்கள்
    இடர்களின்றி வாழவேண்டும்
    ஆளுகின்ற அரசமைப்பில்
    அவரமைதி பெறவேண்டும்
    வாழுகின்ற இடத்திலவர்
    வாழ்வாங்கு வாழுதற்கு
    வகைநல்கும் பாங்கினிலே
    வந்திடுவாய் சித்திரையே!

    வாழ்வளிக்கும் நாடதனில்
    வழிமுறைகள் மாற்றுகிறார்
    ஈனமுடை செயலனைத்தும்
    எண்ணியெண்ணி ஆற்றுகிறார்
    பிறந்தமண்ணின் துயரங்களை
    பிய்த்தெறிந்து நிற்குமவர்
    மனந்திருத்தும் மருந்துடனே
    வந்திடுவாய் சித்திரையே!

    சன்மார்க்கச் சாலையெல்லாம்
    சரிவையொட்டிப் போகிறது
    பொல்லாத கூட்டமொன்று
    பொறுப்பேற்று நிற்கிறது
    நல்லவல்ல நாட்டினிலே
    நாளும்வாழ்க்கை போராட்டம்
    அல்லலெல்லாம் அகற்றிவிட
    அமைந்திடுவாய் சித்திரையே!

    எத்தனைதான் இடர்வரினும்
    இறைவனே துணையென்னும்
    எண்ணமதை மனங்களிலே
    இருத்திவிடு சித்திரையே
    இன்பமொடு சுகவாழ்வு
    எல்லோர்க்கும் கிடைக்கவென்று
    எண்ணமுடன் எழுச்சிபெற்று
    எழுந்துவா சித்திரையே!

    Share