Tag: முனைவர் பா. ஜெய்கணேஷ்

  • புள்ளக்குட்டிக்காரி!

    -முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “இது எத்தனாவது”

    “ஏழு மா”

    “உங்க வீட்டுக்கார் என்ன வேல செய்யறார்”

    “லாரியில கம்பி ஏத்தற வேலதாங்க”

    “அந்த ஆளுகிட்ட சொல்லுமா. இத்தோட குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிரலாம்னு”. கவுர்மண்ட்டு ஆஸ்பத்திரி நர்ஸ், ராஜேஸ்வரிகிட்ட சொன்னப்பா அவளோட முகம் வெளிறிப் போச்சு.

    “என்ன நர்ஸம்மா சொன்னீங்க. அத்தோட அந்த ஆளு என்ன நடுரோட்டுலயே வச்சி வெட்டிருவான். நல்ல வேள அந்த ஆளு இங்க இல்ல. இல்லனா உங்ககிட்ட இந்நேரம் மல்லுக்கு நின்னிருப்பான்”.

    “என்னமோ போங்க எனக்கு என்ன? நீதான் நாளைக்கு அவஸ்த படப்போற. அந்த ஆளுக்கு என்ன? படுத்தானா? எந்திரிச்சு போனானான்னு போயிடப் போறான். வருஷா வருஷம் சாகிறது நீ தான. திருந்தவே மாட்டீங்கன்னு” நர்ஸ் அம்மா சொல்லிக்கிடே டாக்டர் கூப்பிட உள்ள போச்சு.

    “சின்ன வயசுலயே புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. எங்க அப்பன் ஒரு குடிகாரன். எங்க அம்மா மட்டும் என்ன பண்ணும். அதுவும் அஞ்சும் பொண்ணுங்க நாங்க. எல்லாரையும் கரையேத்தறதுக்குள்ள எங்க அம்மா போய் சேர்ந்துருச்சு. எனக்கு வாய்ச்சவன் இவன்தான். ஆறு பெத்து கீழ இறக்கிட்டன். வயித்துல இருக்கற இது ஏழாவது. எல்லாம் என் தலையெழுத்துன்னு” பக்கத்துல இருந்த ஆயாகிட்ட புலம்பிக்கிட்டுக் கிடந்தா ராஜேஸ்வரி.

    “எனக்கு முதல்ல பொண்ணுதான் பொறந்துச்சி. ஆஸ்பத்திரியில உயிர கையில புடிச்சி படுத்துக்கிட்டு இருந்தன். இந்த ஆளுக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருந்தாங்க. வேக வேகமா உள்ள வந்தான். என்ன கத்தப்போறானோன்னு ஈரக்குலலாம் நடுங்கி கிடந்துச்சு. கையில தூக்கினான். நான் அவனையே பாத்தான். அப்ப அவன் ஒன்னு சொன்னான்.

    “புள்ளையில என்ன பொம்பள புள்ள ஆம்பள புள்ள. எங்க ஆத்தா பொம்பளதான. என்கூட பொறந்ததுங்கள்ல நாலு பொம்பள புள்ள தான. உன்னை எதுக்கு கல்யாணம் பண்னன். உங்க வீட்டுல அஞ்சும் பொம்பள புள்ளைங்க. உங்க ஆத்தா என்ன பாடு பட்டிருப்பான்னுதான் உன்ன பண்ணிக்கிட்டன். மகாலட்சுமிய பெத்துத் தந்திருக்க. அதனால இவ பேரு மகாலட்சுமின்னு வைக்கலாம்னு” அவன் சொல்லிட்டு நின்னப்ப,

    “எனக்கு அவன் மேல வந்த மரியாதைக்கே அளவில்லாமப் போச்சு. இவனுக்காக என் உடம்பு என்ன ஆனாலும் பரவாயில்ல. எத்தன புள்ள வேணா பெத்துத் தரலாம்ணு தோணுச்சு. அதுக்கப்பறம் எனக்குப் பொறந்தது எல்லாமே ஆம்பள புள்ளைங்கதான்னு” ராஜேஸ்வரி எதிர்ல இருந்த இன்னொரு கர்ப்பிணிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கறப்ப அவ கண்கள்ல இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிஞ்சுது.

    “சரி ஆத்தா நான் கிளம்பறன். புள்ளைங்க வீட்டுல தனியா கிடக்கும். அவ அக்காவும் இவரோட அம்மாவும்தான் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. நான் வேலையோட போய் சேரன்னு” அங்கிருந்து கிளம்பினா ராஜேஸ்வரி.

    ஓட்டு வீடுதான். ஒரே ஒரு அறைதான். ஒரு சமையல்கட்டு. மொழுவன அடுப்பு. கொஞ்சமான பாத்திரங்கதான். ராஜேஸ்வரிக்கு மீனுனா உசுரு. ஒவ்வொரு புள்ளயும் பொறந்த அஞ்சாம் நாளே புள்ளைய கிழவிகிட்ட விட்டுட்டு, தன்னோட நீண்ட முடிய வாரி எடுத்து ஒரு கொண்டைய போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குப் போய் குழம்பு மீனையும் வறுக்கற மீனையும் வாங்கியாந்து கால நீட்டிப்போட்டு அருவாமனையில உக்காந்து ஆஞ்சியெடுத்து சட்டியில தெருவே மணக்க மணக்க குழம்ப வைச்சு கவல மீன மொறு மொறுன்னு வறுத்து எடுத்து சூடா சோத்தப் போட்டு வக்கணையா வாயில ஒரு உண்டைய போடறப்பதான் அவளுக்கு உசுரே வந்த மாதிரி இருக்கும்.

    ”ஏண்டி ராஜேஸ்வரி. பச்ச உடம்புக் காரி. இப்படியா மார்க்கெட்டுக்குப் போய் வருவ. அப்படி என்னதாண்டி அந்த மீன்ல வச்சிருக்கன்னு” எதிர்த்த வீட்டுக்காரி கேக்கறப்ப,

    “அடப் போக்கா. இதல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அது மூக்க துளைச்சி, நாக்குல வழிஞ்சி உள்ள போற விஷயம். அத அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு” ராஜேஸ்வரி சொல்லிட்டு போயிருவா.

    நல்ல உயரம். சிகப்பிதான் அவ பட்டபேரு. ரோட்டுல நடந்தா நாலு கண்ணு இல்ல நானூறு கண்ணுங்க அவமேல படும். அப்படி ஒரு அழகு. ஒருமுறை ரோட்டுல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல வைஜெயந்தி மாலா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அந்த ஷூட்டிங்க ராஜேஸ்வரி வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்தம்மாவோட கண்ணு இவ மேல பட்டுச்சு. ராஜேஸ்வரிய கிட்ட கூப்பிட்டவங்க “நீ ரொம்ப அழகா இருக்க. உன் கூட ஒரு போட்டோ எடுத்துக்கவான்னு கேட்டாங்கலாம். ராஜேஸ்வரிக்கு கையும் ஓடல காலும் ஓடல. பதற்றத்துலயும் கூச்சத்துலயும் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா. அன்னைக்கு சாயங்காலமே ஒரு பிரிண்ட் போட்டு ராஜேஸ்வரிக்கு ஒரு போட்டோவை வீடு தேடி வந்து கொடுத்துட்டு போச்சாம் அந்த அம்மா”.

    கொஞ்சா நாட்கள்லயே ஏழாவது புள்ளயும் பொறந்துச்சு. ஹாஸ்பத்திரியில அன்னைக்குப் பெரிய சண்டையே நடந்துச்சு. கிருஷ்ணன் யார் சொல்லியும் கேக்கல. “இதல்லாம் பேச உங்க யாருக்கும் உரிமை இல்ல. அவ என் பொண்டாட்டி. நான் சொல்றததான் கேப்பான்னு” கோவமா கத்திக்கிட்டே வெளியில போனான்.

    பதினோராவது புள்ள பொறக்கவரைக்கும் ஆஸ்பத்திரியில இதே தகராறுதான். ஏழு வருஷம் கடந்தும் அவன் மனசுல எந்த மாற்றமும் இல்ல.

    “மகாலட்சுமிக்கு இப்ப பதினாறு வயசு ஆயிருச்சு. பக்கத்து தெருவுல ராம்குமார்னு  ஒரு பையன் இருக்கான். இவளதான்  கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கானாம். குடும்பம் கூட நல்ல குடும்பம்னு கேள்விப்பட்டன். கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு”
    ராஜேஸ்வரி கிருஷ்ணன் கிட்ட சொன்னப்ப  “அதுக்கென்ன பண்ணி வச்சிட்டாப் போச்சுன்னு” கிருஷ்ணன் சொல்ல பெருமூச்சு விட்டா ராஜேஸ்வரி.

    “வீட்ட மாத்தணுங்க. ரெண்ரு ரூம் இருக்க வீடாப் பாருங்க. மருமகன்லாம் வந்தா அவங்களுக்குன்னு தனியா ஒதுக்கணும்னு” ராஜேஸ்வரி சொன்னப்ப “ஆமா ஆமா மாத்தணும். சீக்கிரமே மாத்திடறன்னு சொல்லிட்டு” வெளிய கிளம்பினான் கிருஷ்ணன்.

    கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த அன்னைக்கு ராத்திரி முதல் இரவு.

    “புள்ளைங்க எல்லாம் தூங்கிருச்சாடின்னு” கிருஷ்ணன் கேட்டான்.

    “ஏங்க எதுக்க இப்ப கேக்கறிங்க. பொண்ணயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அவளுக்குப் புள்ள பொறக்க நேரத்துல எனக்கும் புள்ள பொறக்கணுமான்னு” சொல்லி முடிக்கற நேரத்துல விழுந்த அடியில அலற ஆரம்பிச்சா ராஜேஸ்வரி. எல்லாரும் முழிக்க மாப்பிள்ளையும் பொண்ணும் அலறி ஓடிவர அன்னைக்கு ராத்திரி எல்லாருக்கும் சிவராத்திரிதான்.

    “என்னடி நினைச்ச என்ன? ஆம்பளடி நானு. எனக்கு என்ன வயசாயிருச்சா? இல்ல உனக்குதான் வயசாயிருச்சா? இன்னும் பத்து பெத்துக்குவண்டி. என்ன யார் கேக்க முடியும்னு” கிருஷ்ணன் பேசின பேச்சுல அடுத்த நாளே பொண்ணும் மாப்ளையும் ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

    மாசம் ஓடிப்போச்சு. ஒருநாள் ராஜேஸ்வரிக்கு ஒரு போன் வந்துச்சுன்னு கடைகாரன் கூப்பிட போன கையில எடுத்தப்ப “அம்மா நான் மகாலட்சுமி பேசறன். நீ எப்படி இருக்க. உன் கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னுதான் பண்ணன்”னு அவ சொல்றப்பவே ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிச்சுருச்சு. மவராசியா இருடின்னு அவள வாழ்த்திட்டு திரும்பி வந்த ராஜேஸ்வரி எதையோ ஒன்ன மென்னு முழுங்கிக்கிட்டே வீட்டுக்கு வந்து சேந்தா.

    ஏழாம் மாசம் வீட்டுக்குள்ள மகாலட்சுமி நுழையறப்பவே கத்த ஆரம்பிச்சிட்டா. “ஏன்மா உனக்கு அசிங்கமாவே இல்லையா? அந்த ஆளுக்குதான் அறிவு இல்ல. உனக்குமா. என்னதான் ஜென்மங்களோ?”

    “என்ன என்னடி பண்ண சொல்ற. அந்த ஆளப்பத்திதான் உனக்குத் தெரியுமே. இங்க பாரு அந்த ஆளு என் புருஷன். அவன் நீ பொறந்தப்ப என்ன தெரியுமா சொன்னான்.”

    “நிறுத்துமா. நீ இதச் சொல்லியே பன்னிரண்டு பெத்துட்ட. இப்ப பதிமூணாவது. பொண்ணும் ஏழாம் மாசம். அம்மாவும் ஏழாம் மாசம். மாத்தி மாத்தி வளைகாப்பு செஞ்சிக்குவோம். நல்லா இருக்குமா தாயின்னு” மகாலட்சுமி சொல்றப்பவே மூலையில உக்காந்து அழுதுகிட்டு இருந்தா ராஜேஸ்வரி.

    ராஜேஸ்வரிக்குப் பதிமூணாவதா பொறந்தது பொண்ணு. மகாலட்சுமிக்கும் பொண்ணு. மகாலட்சுமியோட புருஷன் அமைதியா இருக்கறதாலயும் அவங்க வீட்டுல மகாலட்சுமிய எல்லாருக்கும் புடிச்சுப் போனதாலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பாவோட முரட்டு குணம் தெரிஞ்ச பொண்ணும் அமைதியாயிட்டா.

    ஒரு  வருஷம் கழிச்சு மகா போன் பண்ணா அம்மாவுக்கு. என்னடின்னு ராஜேஸ்வரி கேக்கறப்பவே “நீ எத்தனாவது மாசம் சொல்லுன்னு சொன்னா?”

    ராஜேஸ்வரி வெக்கப்பட்டுக்கிட்டே “இது நாலாவது மாசம்டின்னு” சொன்னா.அதான் தெரியும்மே அதுக்குதான் கேட்டன்.

    “நான் இப்ப மூணு. ஏழாம் மாசம் வரன் பாத்துக்கோன்னு” போன வச்சிட்டா.

    ஆஸ்பத்திரியே அன்னைக்கு அரக்க பரக்க கிடந்துச்சி. கிருஷ்ணன் துள்ளிக் குதிச்சிட்டுக்கிட்டு இருந்தான். “ ஏய் ஆத்தா எனக்கு ரெட்ட புள்ள. எப்படி சிங்கங்க மாதிரி இருக்காணுங்க பாருன்னு” எல்லாருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துட்டு இருந்தான்.

    மகாலட்சுமி வயித்த தள்ளிக்கிட்டு ராஜேஸ்வரி இருந்த அறைக்குள்ள நுழைஞ்சப்ப வெக்கத்துல கண்ண மூடிக்கிட்டுப் படுத்து இருந்தா அவ.

    “இந்த வெக்கத்துல ஒன்னும் குறைச்சல் இல்ல உங்களுக்கு. வெக்கத்தப்பாரு வெக்கத்த. காலம் போன காலத்துல ரெட்ட புள்ள வேற. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வன் நானுன்னு” அவ புலம்பிக்கிட்டே தன்னோட தம்பிங்க கன்னத்த கிள்ளி முத்தம் தந்துக்கிட்டு இருந்தா. ஓரமா நின்னுக்கிட்டு இருந்த மாப்பிள “அத்த உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு” ஆரம்பிச்சார்.

    “சொல்லுங்க மாப்பிளைன்னு” ராஜேஸ்வரி கேக்க, “உங்களுக்கு இப்ப பதினாலு புள்ள ஆயிருச்சு. எனக்குப் பொறக்கப் போறது ரெண்டாவது. நானும் மகாலட்சுமியும் ரெண்டு போதும்னு முடிவுக்கு வந்துட்டோம். அவ குழந்தை பொறக்கறத நிறுத்திக்கிட்ட பிறகும் நீங்க புள்ள பெத்துக்கிட்டு இருந்திங்கனா எங்க எல்லாருக்கும் அசிங்கம். அதனால ஆபரேஷன் பண்ணிருங்க அத்தன்னு” தயங்கித் தயங்கி அவர் சொல்லி முடிச்சப்ப ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சிருச்சு.

    மகாலட்சுமிக்குப் பையன் பொறந்தான். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்குத் தயார் ஆயாச்சு. பக்கத்துப் படுக்கையில ராஜேஸ்வரியும் படுத்து இருந்தா அதே ஆபரேஷனுக்கு.

    “அத்த ஒன்னும் கவலப் படாதீங்க. மாமா ஊருல இருந்து வரதுக்குள்ள எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும். அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம்னு” மருமகன் சொல்லி முடிக்கறதுக்குள்ளயே அவ ஒடுங்கியும் நடுங்கியும் படுத்து இருந்தா.

    எதிர்த்த வீட்டுக்காரி வேகமா ஓடி வந்தா. “அண்ணி அண்ணி உள்ள போய் கதவ சாத்திக்கோங்க. அண்ணனுக்கு யாரோ தகவல் சொல்லிட்டாங்க. கத்திய எடுத்துக்கிட்டு ஓடி வரார். மாப்ள நீங்களும் எங்கயாவது போயிருங்க. அந்த ஆளு கொல கூட பண்ணத் தயங்க மாட்டான்னு” சொல்லி முடிச்சா.

    ராஜேஸ்வரி சின்னப்புள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு உள்ள போய் கதவ சாத்திக்கிட்டு அழுதுகிட்டே கிடந்தா. வெளியில பயங்கர சத்தம். கிருஷ்ணனோட குரல் தெரு முழுக்கக் கேட்டுச்சு. நல்லா தண்ணி அடிச்சு இருந்தான்.

    “எவன்டா என்ன கேக்காம என் பொண்டாட்டிக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணது. மருமகன்னா என்ன வேணா பண்ணலாமா? என் பொண்ணதான் அவனுக்குக் கட்டிக் கொடுத்தன். அவன் பொண்டாட்டிக்கு அவன் பண்ணது சரி. என் பொண்டாட்டிக்கு ஏன் பண்ணான்.

    பெரியவங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன சொன்னாங்க. பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்னு. அதுவும் அத சொன்னது எங்க அப்பத்தா. அது வாக்க காப்பாத்ததாண்டா இவ்ளோ போராடினன். பதினாலுதாண்டா பெத்தன். பதினாறு பெத்துமுடிக்கறதுக்குள்ளயே இப்படி பண்ணிடிங்களேடா. பாவிப்பயலுகளா?ன்னு” கிருஷ்ணன் போட்ட கூப்பாடு, அவனோட அழுகை, கோபம், வெறி எல்லாம் சேந்து காத்துல கரைஞ்சிக்கிட்டு இருந்துச்சு.

    “மாமா வந்து அத்த முகத்த பாருங்க. நான் பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க. எந்திரிச்சு வாங்க. ஒருமுறை பாருங்க. இத்தன வருஷம் தான் பேசாமலே இருந்துட்டீங்க. கடைசியா ஒருமுறை பாக்கவாவது செய்யலாம்லன்னு” மருமகன் சொல்றப்ப கைய உதறிட்டு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டார்.

    “எத்தன முறையா உன் கிட்ட சொன்னன். ஏழாவது புள்ள அப்பவே ஆபரேசன பண்ணிரு பண்ணிருன்னு தலப்பாடா அடிச்சுகிட்டன். கேட்டியா நீ. அன்னைக்குப் பண்ணியிருந்தா இந்தக் கற்பப் பையில பாழாப் போன கேன்சர் வந்திருக்குமா? அவளும்தான் இவ்வளவு சீக்கிரமா செத்து இருப்பாளா. நீங்கலாம் திருந்தவே மாட்டிங்கையா?ன்னு அந்த ஆஸ்பத்திரி நர்ஸ் சொன்ன வார்த்தைகள் கிருஷ்ணனனோட காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு.

    சேகண்டி சத்தம் எழுப்ப, சங்கு தெருவெங்கும் முழங்க, பறை இசை காதுகளைத் தொலைத்து கால்களை ஆடவைக்க ரெண்டு பெண்களும் அழுது புலம்ப புள்ளைங்க எல்லாம் பாடையைத் தோளில் ஏந்த பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் சுற்ற கிளம்பினாள் ராஜேஸ்வரி.

    “புள்ளக்குட்டிக்காரிடா? எப்படி கம்பீரமா போறான்னு” எதிர்த்த வீட்டுக்காரியின் பேச்சு ராஜேஸ்வரியின் காதில் உள்நுழைய எத்தனித்த படியே கிடந்தது.

    *****

    கதாசிரியர் – துறைத்தலைவர், தமிழ்த்துறை,
    அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
    காட்டாங்குளத்தூர் – 603203

     

    Share
  • நிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “முடிதான் இப்ப உன் பிரச்சனையா? வயசு முப்பது ஆயாச்சு. படிக்கிறேன்ற பேர்ல காலத்த ஓட்டிட்டு இப்ப வந்து நின்னுகிட்டு மாப்ள அப்படி வேணும் இப்படி வேணும்னு கேட்டா நாங்க என்ன பண்றது? இத்தோட ஐஞ்சி ஆறு பாத்தாச்சு. வரவன் மூஞ்சிய பாத்தா பரவால்ல. அவன் மண்டையதான் பாப்பன். அதுவும் டி.ஆர். மாதிரி முடி வேணும்னு சொல்ற. உங்க அப்பா கூடதான் கல்யாணத்துக்கு முன்னடி மண்ட முழுக்க முடி வச்சி இருந்தார். இப்ப பாரு பின்னடி இருந்து வழிச்சு விட்டாதான் முன்னடி வந்து நாலு விழுது. நான்லாம் குடும்பம் நடத்தல. அதுக்காக விட்டுட்டா போயிட்டன்னு” கலா சத்தமா பேசிக்கிட்டு இருந்தா.

    “அம்மா நிறுத்தும்மா. சும்மா ஏன் இப்படி கத்துற. நான் என்ன சொத்துபத்து வேணும், கார் வேணும், நல்ல வேல வேணும்னா கேட்டன். மண்டையில முடி இருக்கறவனாதான் கேட்டன். ஒன்னு முன் மண்ட வழுக்க, இன்னொன்னு பின் மண்ட வழுக்க, அப்புறம் ஒன்னு கூட்டிட்டு வந்தீங்களே அதுக்கு ரெண்டு பக்கம் பட்டயான்னு ஏறிக்கிட்டு கிடக்கு. அதல்லாம் கூட பரவா இல்ல இப்ப வந்துச்சே அது வழுக்க இல்ல மொட்ட. இப்படியா கூட்டிட்டு வந்து நிறுத்தி கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன்” அப்படின்னு கோபத்துல கொப்பளிச்சா நிலா.

    “ஆவோன்னா அப்பா கல்யாணத்துக்கு முன்னடி எப்படி இருந்தாரு, இப்ப எப்படி இருக்காரு, பாரு பாருன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன். அவர் என் அப்பா. அவர் மண்டையில முடி இருந்தாலும் இல்லனாலும் பிரச்சன இல்ல. ஆனா நான் கட்டிக்கப்போறவன் மண்டையில நிச்சயமா முடி இருந்தே ஆகணும்.

    அதுவும் என் தலைவர் டி.ராஜேந்தர் மாதிரி இருந்தே ஆகணும். ஏன்னா அப்பதான் கல்யாணம் ஆயி, புள்ள பெத்து, வயசான கிழவியானாலும் அவருக்கு முடிகொட்டாது. நீ அப்பா தலைய சரியாப் பாக்கல. ஆனா நான் ரொம்ப விவரம்ல. முடி முன்னடி வந்து சரியணும். அப்படி இருக்கற மாப்பள எவன்னா இருந்தா கூட்டிக்கிட்டு வாங்க. இல்லனா  போய் வேலய பாருங்க”.

     “இது என்னடா வம்பா இருக்கு. ஊருல அந்தந்த அம்மாக்கு ஆயிரம் பிரச்சினைனா ஏன் பிரச்சன முடி பிரச்சனையா இருக்கே. ஊருல இருந்து சென்னைக்கு வர மாப்பிளலாம் முடியோடதான் வரானுங்க. ஆனா இங்கு வந்து உப்பு தண்ணியில குளிச்சாலே முடிலாம் தண்ணியோட வழிஞ்சி வழிஞ்சி ஓடிருதாம். இவ ஊரு பக்கம் எவனாவதுன்னு சொன்னா வேணாம்னு சொல்றா. சென்னை செட்டில்னா இந்தப் பிரச்சன.

    “முப்பத்தைஞ்சி வயசுக்காரன் கூட இருபத்தைஞ்சி, இருபத்தெட்டுனா சொல்லுங்க. அதுக்கு மேல வயசான பொண்ணுலாம் வேணாம்னு சொல்றானுங்கன்னு இந்த புரோக்கர் சொல்லிட்டுப் போறாரு. எனக்கே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறன். போன மாசம் கூட நியூஸ்ல படிச்சன் ஒரு பையன் முடி வளக்கறன்னு போயி தப்பான சிகிச்சையால செத்துப்போனத. பாவம் இந்தப் பசங்க மட்டும் என்ன பண்ணுவானுங்க. முடிவளக்கறதுக்காக உயிரயே விட்டுடறானுங்கன்னு” புலம்பிக்கிட்டே பாத்திரங்கள கழுவி அடுக்கிவைச்சுக்கிட்டு இருந்தா கலா.

    “நீ என்ன வேணா சொல்லு. ஆனா நான் சொல்றதுதான் நடக்கணும்… சரிசரி நீ ஏதாவது தனியாப் பேசிக்கிட்டே இரு. நான் புவனா வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறன்”னு தன்னோட வண்டிய தள்ளிக்கிட்டு கிளம்பினா நிலா.

    இரு பக்கங்களிலும் சீராக நின்றிருக்கிற புளியமரங்களின் இடையே ஓடும் சாலையைக் கடந்து புவனா வீட்டு வாசலில் போய் நின்ற வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக நிலா உள்ளே நுழைந்த போதே “என்னடி நிலா எங்க ஆளயே காணோம். ஊருக்கு வந்து நாளுநாள் ஆச்சாம். பாக்கவே முடியல” என்றாள் புவனா.

    “அத ஏண்டி கேக்கற எங்க அப்பாவும் அம்மாவும் மாப்ள பாக்கறன்ர பேர்ல உயிர எடுக்கறாங்க. மண்டையில முடி இல்லாதவங்களா கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினா? நான் என்ன பண்ணுவன். அதான் வந்ததுல இருந்து ஒரே சண்ட. சண்ட போடவே நேரம் சரியாப் போச்சுடி” என்று சொல்லியபடியே அருகிலிருந்த சோபாவின் மீது அமர்ந்தாள்.

    “ஏண்டி மண்டையில முடி இருக்கறவனதான் கட்டிக்குவன்னு அடம்பிடிக்கற. முடிலாம் ஒரு பிரச்சனையா.அதான் உன் உயிர் நண்பன்னு ஒன்னு இருந்துச்சே அதுக்கு மட்டும் என்ன மண்டையில முடியா இருந்துச்சு. அததான ஆறு வருஷமா கட்டிக்கிட்டு அழுத.

    ஆமாம் இப்ப எங்கடி அவன ஆளயே காணோம். போன்ல கூட பேசறதா தெரியலயே. நான்லாம் உனக்கு பேருக்குத்தான் பிரெண்டு” என்று புவனா தொடங்கும்போதே,

    “இப்ப உனக்கு பேசறதுக்கு வேற எதுவுமே இல்லயா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் நிலா.

    “இல்ல எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். உங்களுக்குள்ள என்னதான் பிரச்சன. அந்த கதைய எனக்கு நீ முழுசா இதுவரை சொன்னதே இல்ல” என்று புவனா கேட்டுக்கிட்டே ஒரு ஆப்பிளை இரண்டு துண்டாக நறுக்கிவைத்தாள்.

    “ ஏண்டி ஆப்பிள். இன்ட்ரெஸ்டிங்கா திங்க நொறுக்குத்தீனி வேற எதுவுமே இல்லையா” என்று நிலா கேட்க கொஞ்சம் சலிப்புடன் “ஆப்பிள்தான் இருக்கு. அதயே தின்னு. இன்ட்ரெஸ்டிங்கா நீ உன் ‘நட்புக்காக’ கதையச் சொல்லு” என்றாள் புவனா.

    “அத இங்க சொன்னா யாருக்குமே புரியாதுடி. காலேஜ்ல நான் எம்.பில். படிச்ச சமயம். ஒருநாள் காலேஜோட பின்பக்கம் ஒரு அணில் அடிபட்டு கிடந்துச்சு. நான் பாத்துட்டு பதறியடிச்சு ஓடிப்போய் தூக்கிப் பாத்தான். மூச்சுவிடமுடியாம உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல அது செத்தும் போயிருச்சு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்ப அங்க ஒல்லியா கருப்பா ஒரு உருவம் வந்து நின்னு இங்கதாங்கன்னு வாங்கி அத பத்தரமா பள்ளம் தோண்டி பொதச்சு மனுசங்களுக்கு சடங்கு பண்ற மாதிரியே பண்ணுச்சு.

    எங்கயோ அந்த அணில் நிம்மதியா தூங்குன உணர்வு கிடச்சி அது இறந்த உணர்வே இல்லாம ஆயிருச்சு எனக்கு. அப்புறம்தான் விசாரிச்சன் அது யாருன்னு. எம்.ஏ. படிக்கறாங்கன்னு சொன்னங்க. அடுத்தநாள் வராண்டவுல பாத்தன். கொஞ்சநாள்லயே பேச ஆரம்பிச்சு நல்லாப் பழகவும் ஆரம்பிச்சுருச்சு. இதோட வகுப்புலயே இருக்கற இன்னொருத்தனுக்கும் என்ன பிடிக்கும் போல. படிப்புலயே இதுக்கும் அவனுக்கும்தான் போட்டியாம்? அவனும் என் பின்னடியே திரிஞ்சான். இதால தாங்கிக்க முடியல போல. என்மேல இருந்த பாசம் கூட ஆரம்பிச்சுருச்சு.

    ஒருநாள் வந்து ஏன்கிட்ட நான் உன்ன விரும்பறன். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுச்சு.

    அந்த ஒரு கணம் அதிர்ச்சியா இருந்தாலும் கேட்டது அதுவா இருந்ததால என்னால மறுக்க முடியல.

    நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒருவாரம் ரொம்ப சந்தோஷமா இருந்தன். ஆனா எனக்குள்ள இருந்த அந்தக் குற்றஉணர்வு என்ன இயல்பா இருக்கவிடல. அத நான் சொல்லாம போனா பாவம் பண்ணவளா ஆயிருவன்னு அன்னைக்கு சொல்ல முடிவுபண்ணன்”.

    “என்னடி அப்படி ஒரு குற்ற உணர்ச்சி” என்று புவனா இடைமறித்துக் கேக்க “அதுவா இரு சொல்றன்னு” நிலா தொடர்ந்தா…

    “எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கற இதயப் பிரச்சன உனக்குத் தெரியும்ல. அதத்தான் அதுகிட்ட அன்னைக்கு சொன்னன். பின்னடி குழந்த பெத்துக்கறதுலயும் பிரச்சன இருக்கலாம்னு டாக்டர் சொன்னத சேத்தே சொன்னன். அந்த நிமிஷம் அது அந்த அணிலுக்குக் காட்டின இரக்கமும் பரிவும் என் கண்ணுக்கு முன்னடி வந்து நின்னுச்சு.

    கொஞ்சநேரத்துல வரன்னு எந்திரிச்சு போனதுதான் ஆளயே காணோம். அப்புறம் மாலையில போன் பண்ணுச்சு.“இங்க பாரு நிலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீயில்லாம நான் இல்ல. என்ன மாதிரி ஒரு ஆள இந்த உலகத்துலயே உன்னாலதான் பாத்துக்க முடியும்.ஆனா பொண்டாடியா இல்ல. ஒரு தோழியான்னு சொல்லுச்சு”.

    “எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னு கூட கேக்கல. காரணம் தெரிஞ்சதுதான். வாரிசு எவ்ளோ முக்கியம் ஒவ்வொருத்தருக்கும்னு நாம பாக்காததா. அத தர சக்தி இல்லாத நான் ஏன் அவ்ளோ ஆசப்படணும்னு நினைச்சன்.

    ஒண்ணும் சொல்லாம “பரவா இல்ல இந்த ஒரு வாரக் காதல் போதும் என் வாழ்க்கையில. யாரையும் காதலிக்கிற தகுதியும் எனக்கு இல்ல. நான் ஒரு தோழியாவே இருக்கன்னு” அன்னையில இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அப்படியே தான் இருந்தன்.

    “அவன் பிரெண்டுன்னு சொன்னதும் பல்ல இளிச்சிக்கிட்டு போய் ரெண்டு வருஷம் முன்னடி வரைக்கும் உயிரக் கொடுத்த. அப்பறம் எப்படி ஒனக்கு ஞானம் பொறந்து அத விட்டுத் தொலைச்ச. அது பண்ணத நினைச்சா எனக்கே கடுப்பா வருது. நீ எப்படிதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியோ” என்று புவனா புலம்பினாள்.

    “எல்லா மனுஷங்களுக்கும் சுயநலம் இருக்கும். அதுக்காக நான் பொதுநலமா யோசிக்கறன்னு சொல்லல. ஒரு உயிரு என்னால வலி அனுபவிச்சிரக்கூடாதுன்னு மட்டும்தான் நினைச்சன். அதனாலதான் அத்தன வருஷமும் நான் ஒரு தோழியாவே இருந்தன். தோழின்னு மட்டும் இல்ல அதக் கடந்து சில நேரங்கள்ல ஒரு அம்மாவா, ஒரு சகோதரியாலாம் என்ன நானே கற்பனை பண்ணிக்குவன்”.

    ஏன் அப்படியெல்லாம் நான் யோசிச்சேன்னா அது என்ன விரும்பிட்டு இதயப் பிரச்சினையாலதான வேணாம்னு சொல்லுச்சு. அந்த குற்றவுணர்ச்சிக்காகத்தான் என்ன அது ரொம்ப பத்தரமா பாத்துக்கிறன்னும் பாத்துக்கிச்சு. எனக்கும் இந்த காதல் மேலலாம் நம்பிக்க இல்ல. நான் நினைச்ச எல்லாக் கதாப்பாத்திரங்களாகவும்  இருந்து அதோட துக்கங்கள்ல சந்தோஷங்கள்ல பங்கெடுத்துக்கறன்ற திருப்தி மட்டும் இருந்துச்சு.

    “சரி அவ்ளோ நம்பிக்கையில போன உங்க உறவுக்குள்ள வந்த சிக்கல் என்னதான்”. சொல்லண்டி மண்டையே வெடிச்சுரும் போல இருக்கு” எனக்குன்னு புவனா ஆர்வமாக கேட்டாள்.

    “அதுக்கு குழந்தைனா உயிரு. அதுவும் அழகான குழந்தையாத்தான் வேணும்னு தேடித் தேடி அழகான பொண்ணுங்களா காதலிச்சுகிட்டு இருந்துச்சு. ஆனா அதுங்களுக்கு எதுவும் இதப் பிடிக்கல”.

    “ஆமா ஆமா எல்லாம் உன்ன மாதிரி மூஞ்சியவே பாக்காம சரின்னு சொல்லிருங்களா? அணில பாத்தன், ஆட்டுக்குட்டிய பாத்தன்னு வேற ஒரு காரணம். மூஞ்சிய விட முழு மண்டையிலயும் முளைச்ச புல்லு, பூண்டெல்லாம் எப்ப போச்சுனே தெரியல. அப்புறம் எப்படி யாருக்கும் பிடிக்கும்னு” புவனா கடுப்பில் சொல்ல,

    “அதான் அதோட பிரச்சனையே. ஆனா தான் பிரச்சனைய அது புரிஞ்சிகிட்டதே கிடையாது. ஒவ்வொரு முறையும் நான் இத காதலிக்கறன், அத காதலிக்கறன்னு விதவிதமான பொண்ணுங்களோட போட்டாவா அனுப்பும். அதுல ஒரு பொண்ண இதுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அந்தப் பொண்ணுக்கும் இத கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. அன்னையில இருந்து எப்ப பாத்தாலும் அந்தப் பொண்ணு உன்னவிட  ரொம்ப அழகு, அவ அவ்ளோ நல்லவ, அவள மாதிரி மனிதாபிமானம் இங்க யாருக்கும் இல்லன்னு ஒப்பிட்டுப் பேசிக்கிட்டே இருக்கும்.

    ரொம்ப பொறுக்க முடியாம ஒருநாள் சொல்லிட்டன். “இங்க பாரு நான் உனக்கு ஒரு தோழி அவ்ளோதான். யாரோடயும் என்ன ஒப்பிட்டுப் பேசாதன்னு சொன்னன்”.

    அப்போ அது சொல்லுச்சு. “உனக்குப் பொறாம. அந்தப் பொண்ணு எனக்குக் கிடச்சிட்டான்னு”.

    “எனக்கு என்ன பொறாம. எது கிடைச்சாலும்தான் நீ எப்படியும் தூக்கிப் போட்டுடப் போறன்னு” நான் சொல்ல அதுக்கு அது, “ உன்ன நான் வேணாம்னு சொன்ன மாதிரி அவள நான் வேணாம்னு சொல்லவேண்டி அவசியம் இருக்காது. ஏன்னா அவ எனக்கு அழகான குழந்தையப் பெத்துத் தரதுல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல”ன்னு சொல்லுச்சு.

    “அதுக்கு நீ என்னடி சொன்ன. வச்சி வாங்கி இருக்கக்கூடாது” என்று புவனா கோபத்தோடு கேட்டாள்.

    “கேட்டா மட்டும் என்ன ஆகப்போகுது. எனக்கு ஒன்னு மட்டும் அப்ப விளங்குச்சு. அப்படி ஒரு வெள்ள மனசோட எங்கிட்ட அது பழகலன்றது. அப்பதான் முடிவு பண்ணன். அதோட இனியும் பேசினா நான் பைத்தியமா ஆயிருவன்னு.

    மொத மொதலா  இது என் கிட்ட காதல வந்து சொன்னப்ப பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு சொன்னா அக்கா இவர் மண்டையில முடியே இல்லன்னு”. ஆனா அப்ப அது எனக்குப் பெருசாத் தெரியல. அப்படிப்பட்ட இது என்னோட குறைய என்ன காயப்படுத்தற மாதிரியே என்கிட்ட வந்து சொல்லுதுனா என்ன பத்தி இத்தன நாளா என்ன நெனச்சி இருந்திருக்கும்னு எனக்கு அப்பதோணுச்சு. “நட்பும் கிடையாது, நான் தோழியும் கிடையாதுன்னு அப்ப முடிவு பண்ணன்”.

    ஆனா அதுகிட்ட நான் வெளிக்காட்டிக்காம “உனக்குன்னு ஒருத்தி கிடைச்சிட்டா. இனி நான் உன் கிட்ட பேசனா அது உனக்கு நல்லது இல்லன்னு சொல்லிட்டு அதுக்கப்பறம் பேசறதையே விட்டுட்டன்.இதுவரை அதுவும் என்கிட்ட பேசறதே இல்ல” அப்படின்னு நிலா சொல்லி முடிச்சப்ப புவனா ஏதோ ஒரு மிருகத்த பாக்கற மாதிரி வித்தியாசமா பாத்துக்கிட்டு இருந்தா.

    “எப்படி இத்தன வருஷம் பொறுத்துகிட்டு இருந்தடி. காதலிக்கறன்னு சொல்லி ஒரே வாரத்துல தோழியா மாத்துன ஒரு ஆளுக்காக அதோட அவ்ளோ வலியையும் உள்ள வாங்கிட்டு இருந்திருக்க… அப்பாடா ஒரு வழியா ஓச்சியே அதன்னு” புவனா அத ஒரு சாதனையா சொல்லிக்கிட்டு இருந்தப்ப நிலா எந்த உணர்வும் இல்லாம திண்ணையில உக்காந்து காலாட்டிக்கிட்டே இருந்தா.

    “பாத்தியா இதுக்குதான் இந்தக் கதைய நான் யார்கிட்டயும் சொல்றதே இல்ல.எனக்கு இருந்த இதயப் பிரச்சினையும் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சரிபண்ணியாச்சு. அதல்லாம் தான் உனக்குத் தெரியுமே”.

    “ஆமா ஆமா தெரியும். ஹோ அதுக்காகத்தான் இப்படி முடியோட மாப்பிளை தேடிக்கிட்டு இருக்கியா?”

    “அய்யோ பழி எடுக்கலாம் இல்லடி. சின்னவயசுல இருந்தே அப்படி இருக்கறவங்க எனக்குப் பிடிக்கும். முடி இல்லனாலும் மனசு இருக்கேன்னு இத எனக்குப் பிடிச்சுது. ஆனா அதோட மனசுல என்ன எவ்ளோ மோசமா நினைச்சி வச்சிருந்திருக்கு. தான் ஒரு பொண்ண ஏமாத்திட்டோமேன்ற குற்ற உணர்ச்சியில இருந்து தப்பிக்க அது என்ன சுமையா தூக்கிட்டு திரிஞ்சிதா எனக்கு இப்ப தோணுது. எனக்கே அருவருப்பாவும் கஷ்டமாவும் இருந்துச்சுடி. என்னமோ போது.

    ஆனா அதுக்காகலாம் முடியோட மாப்ள தேடல. நல்ல மனசு எதுன்னு தேடிக்கண்டு பிடிக்க இங்க கஷ்டம். இனி யாரையும் காதலிக்கவும் விருப்பம் இல்ல. வரவன் மனச ஒரேநாள்ல புரிஞ்சிக்கவும் முடியாது. குறைஞ்சபட்சம் முடியோடாவது இருக்கட்டுமேன்னு இருக்கு. அதனாலதான் இப்ப முடி இருக்கறது என்னோட லட்சியமா ஆயிருச்சு”.

    “நல்ல லட்சியம்டி. உனக்கு பின்னடி இவ்ளோ பெரிய கதை இருக்கும்னு பாத்தா முடிக்குப் பின்னடி இருக்கற ஒரு கதைய சொல்லிட்டுப் போற”.

    “சரி எனக்கு ஒரு சந்தேகம் நிலா”.

    “என்னடி சந்தேகம்”

    “ஆம்பளைக்கு முடி இல்லனா சொத்து வீடு வாசல் வேலன்னு ஏதேதோன்னு சொல்லி சம்மதிக்க வச்சிராங்க. பொண்ணுங்க சொட்டையா இருந்த எந்த ஆம்பளையாவது கட்டிக்குவானாடி”ன்னு புவனா கேட்டா.

    “முடி கீழ வரைக்கும் தொங்கணும்றதுதான் ஆம்பளைங்களோட ஆசையே. அப்படி இருக்கறப்ப எந்த ஆம்பளடி கட்டிக்குவான். ஆம்பளை பொம்பளை இன்றதே இங்க ஒரு சிந்தனைதான். எல்லாமே ஆம்பளைங்களால உருவாக்கப்பட்டது. முடி இருந்தாலும் இல்லனாலும் அவன கட்டிக்கணும். முடி இல்லாம போன வாழ்நாள் பூரா ஒரு பொண்ணோட நிலமை”…

    “யோசிக்கவே முடியலடி. சரி விட்டுருவோம்”. புவனா நான் வந்து ரொம்பநேரம் ஆச்சு. அம்மா தேடுவாங்க கிளம்பறன்.

    சிலநாட்கள் கழிச்ச பிறகு நிலாக்கிட்ட அவ அம்மா கலா “என்னடி இப்ப சந்தோஷமா. முடி நல்லா நெத்தி வரைக்கும் வந்து விழுற மாப்பளையாவே கிடைச்சிட்டான். பொதுவா முடி இல்லனாதான் அறிவு அதிகம்னு சொல்லுவாங்க. ஆனா நீ அறிவு வேணாம். முடிதான் வேணும்னு அடம்பிடிச்ச பாரு. என்னமோ போ”.

    “இப்ப ஒனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு நம்புறன். தட்டுலாம் மாத்தியாச்சு. கல்யாணத்தோட முதல்நாள்லயே மண்டபத்துல நிச்சயம் வச்சிகலாம்ல. இல்ல தனியா நிச்சயம் வக்கணுமான்னு”கலா கேட்டப்ப போம்மா “அவரோட நான் வாழவே ஆரம்பிச்சுட்டன் மனசுல. இப்ப போய் நிச்சயம் கிச்சயம்னு பேசிக்கிட்டிருக்கன்னு சொல்லி அப்படியே தூங்கிப் போனா”.

    காலையிலலேயே நிலாவுக்கு அவன்கிட்ட இருந்து ஒரு போன். “நிலா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்”.

    “என்ன சொல்லுங்க”.

    “இல்ல நேத்து இரவு ஒரு கனவு”.

    “என்ன கனவு ஏன் இவ்ளோ பொறுமையா பேசறீங்க”..

    “திடீர்னு ஒருநாள் நான் தூக்கத்துல இருந்து முழிச்சு பாக்கறன். மண்டையில இருந்த ஒரு பக்கம் முடி தலைக்காணி மேல கிடக்குது. பதறியடிச்சு எந்திரிச்சுப் போயி பாத்ரூம்ல வாஷ்பேசின்கிட்ட நின்னு தலையில அள்ளி தண்ணி ஊத்தினா மிச்ச முடியும் கீழ கொட்டுச்சு. முக்கா வழுக்க தலை. ஏன் இப்படி எனக்குக் கனவு வரணும். ஒன்னுமே புரியல”.

    ”என்னது மண்ட வழுக்கையான கனவா”? என்று நிலா அதிர்ச்சியடைந்து கேட்க…

    “அது மட்டும் இல்ல இன்னோன்னு”.

    ”இதுவரைக்கும் நான் கண்ட கனவு எதுவுமே எனக்குப் பலிக்காம போனதே இல்ல நிலா”….

    Share
  • குமரேசன் என்னும் கூத்தாடி

    முனைவர் பா. ஜெய்கணேஷ

    துறைத்தலைவர்,

    தமிழ் அறிவியல் மற்றும் கலையியல் புலம்

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

    காட்டாங்குளத்தூர் – 603203

     

    “பொம்பள வேஷம் போட்டுடலாம். ஆனா ஒரு பொம்பளையா நடிக்கிறதுதான் கஷ்டம். ஏன்னா பொம்பளைக்கு இருக்குற நெளிவு சுளிவு வரலனா கல்லுவிட்டு எறிவானுங்க. கேவலமா திட்டுவானுங்க. ஆனா எனக்கு அந்தப் பிரச்சன இருந்தது இல்ல. என்னைக்கு நான் பொம்பள வேஷம் போட்டு நடிக்கணும்னு ஆரம்பிச்சனோ அன்னையில இருந்தே ஒரு பொம்பளைக்கு இருக்கக்கூடிய எல்லா உடல்அசைவும் எனக்கு வந்திருச்சு” அப்பிடின்னு தான் பையன் கிட்ட கூத்தாடி குமரேசன் சொல்லிக்கிட்டு இருந்தான்.

    ”அப்பா எனக்கு உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்”

    ”கேளுடா மகனே… ஊருல அவன் அவன் கேக்காததையா நீ கேட்டுறப் போற”

    ”இல்லப்பா கூத்துல ராமன், பீமன், அருச்சுனன், இராவணன்னு இப்படி எத்தனையோ கதாப்பாத்திரம் இருக்க நீ மட்டும் ஏன்ம்பா பாஞ்சாலி, சீதைன்னு பொம்பளைங்களா நடிக்கணும்னு விருப்பப்பட்ட”.

                “சின்ன வயசுல கூத்துப் பாக்க எங்க அம்மா கூட போவண்டா. அம்மாவே தூங்கிரும். ஆனா நான் மட்டும் தூங்கவே மாட்டன். எவ்வளவு பெரிய ஆம்பள நடிகருங்க வந்தாலும் அங்க பெருசா கைத்தட்டல் இருக்காது. இப்ப நீ சொன்னியே பொம்பளைங்க அவங்க மாதிரி வேஷம் போட்டு ஆம்பளைங்க வந்து நிக்கறப்ப அந்த இடமே அதிரும்டா.

    காசு கொண்டு போய் குடுப்பாங்க நிறைய அவங்களுக்குதான். எல்லாரும் பாராட்டுவாங்க அவங்கள. இத பல ஊருக்காரங்க கூத்துலயும் பாத்துக்கிட்டே இருந்த நான் மெது மெதுவா என்னையும் மாத்திக்க ஆரம்பிச்சன். நான் பேசறது சாதாரணமாவே பொம்பள மாதிரிதான் இருக்கும். அதுவும் சேர்ந்து ஊருல போறவன் வரவன்லாம் உசுப்பேத்த எனக்கும் கூத்துல பொம்பளையா நடிக்கணும்னு ஆச வந்துருச்சுடா”.

    ”அதுக்கு என்ன பண்ண? எப்படி நடிக்க வந்த”?

    “எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கறப்ப அம்மா கிட்ட சொன்னன். அம்மா முதல்ல சொன்ன வார்த்தையே அடி செருப்பாலன்னுதான். ஆம்பள பையன சிங்கம் மாதிரி பெத்து வச்சிருக்கன்னு ஊருலலாம் சொல்லிட்டு திரியுறன் நானு. நீ என்னடான்னா பொம்பளையா வேஷம் போட்டு நடிக்கப்போறன்னு வந்து நிக்கிற அப்படின்னு” திட்டோட அடியும் சேர்ந்துதான் விழுந்துச்சு.

    ரெண்டுநாள் நான் கொலப்பட்டினி. அன்னைக்கு இரவு தூங்கறப்ப அம்மா தலமாட்டாண்ட வந்து உக்காந்து “டேய் பொம்பளயா நடிக்கிறதுல இருக்கற சிக்கல்லாம் உனக்கு தெரியாதுடா. சொன்னா புரிஞ்சிக்கோடான்னு” எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சு. நான் அப்பயும் அழுது அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதானமா “என்னமோ பண்ணுடான்னு” சொல்லிட்டுப் போயிருச்சு.

    அம்மா சொன்னதுல இருந்து முதல்ல நீளமா முடி வளக்க ஆரம்பிச்சன். மீசை, தாடி கொஞ்சம் வளந்தாக்கூட வழிச்சு விட்டுருவன். நான் கொஞ்சம் மாநிறம் வேறயா. அதனால எப்பவும் பாக்க அழகா இருக்கணும்னு மேக்கப் போட்டுக்கிட்டே இருப்பன்.

    ”ஏன்ம்பா பொம்பளைங்க யாரும் நடிக்காம ஆம்பளைங்க அவங்க வேஷம் போட்டு நடிச்சாங்க”…

    “அடேய் இந்தக் காலத்துலயே பல வீட்டுங்கள்ல பொம்பளைங்க நடிக்கறதுன்னா அவ்ளோதான். அந்தக் காலம்னா சொல்லவா வேணும். பொம்பளைங்க வீதியில இறங்கி நடிச்சாங்கன்னா வீட்டோட மானமே காத்துல பறந்த மாதிரி. அதனால நடிக்கவே விடமாட்டாங்க. அதுக்காகத்தான் என்ன மாதிரி பொம்பள வேஷம் போடத் தயாரா இருக்க ஆம்பளைங்கள நடிக்க வச்சாங்க”.

    ”சரி சரி நீ உன் கதைய சொல்லு”…

    “டேய் கதைகேட்டது போதும் உங்க அப்பா ராஜா தேசிங்கு கதைய… எந்திரிச்சி வந்து கஞ்சி குடிக்கற வழி பாருடா. அடுத்த வேள கஞ்சிக்கே வழி இல்லையாம். கதயப் பாரு கதய”…

    ”அம்மா இரும்மா… வரன். நானும் ரொம்பநாளா கேக்கனும்னு நினைச்ச கதை. கேட்டுட்டு வந்து கஞ்சி குடிக்கறன் இரு”.

    ”உங்க ஆத்தா அப்படித்தாண்டா. அவளுக்கு எப்பவுமே என்ன கண்டா எலக்காரம் தான்”

    ”அதவிடுப்பா நீ வா கதைக்கு…”

    ”பக்கத்து ஊருல இருக்கற ராவணன் கூத்துக் குழுவுக்கு நடிச்சு வந்த பொம்பள ஆளு கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்காம தற்கொலை பண்ணி செத்துருச்சாம். அந்த சமயத்துல ஆள் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்பதான் நான் போய் பாத்தன். முன்னடி இருந்தவ நல்லா சிவப்பா இருப்பாளாம். நான் மாநிறம்ல. ரொம்ப யோசிச்சாங்க. ஒருவாரம் கழிச்சு வரச் சொன்னாங்க. ஒரு வாரம் வரைக்கும் வேற ஆள் கிடைக்கல. என்னையே சேத்துக்கிட்டாங்க.

    மூனுமாசம் பயிற்சி. எனக்கு இயல்பாவே உடல்மொழியும் குரலும் இருந்ததால என் குருவுக்கு சிக்கல் இல்லாம போயிருச்சு. நல்லாவே கத்துக்கிட்டன் எல்லாத்தையும்”…

    ”அப்புறம் முதல்நாள் முதல் கூத்து எங்க நடந்துச்சு. உனக்கு அந்தநாள் நினைவு இருக்காப்பா”

    ”அது மறக்கக்கூடிய நாள் இல்லடா? என் வாழ்க்கையவே புரட்டிப்போட்ட நாள் அது.  என்னோட வாழ்நாள் கனவு ஈடேறப்போற நாள்னு மேக்கப்லாம் போட்டுகிட்டு மேடையில போய் நின்னன். மேக்கப் போடறப்பவே விடல பசங்க என்ன டிரஸ் மாத்தவிடாம தொல்ல பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நான் மேடைக்கு வரதுக்குள்ளயே அங்கங்க சீண்டிக்கிட்டே இருந்தாங்க. இது என்னடா இம்சன்னு மேடைக்கு போய் நின்னப்ப ஊரே ஒரே கைத்தட்டல். பெருமையா இருந்துச்சு.”

    ”அப்புறம் என்ன? உனக்கு”…

    ”டேய் நடிக்கறப்ப காசுகுடுக்கறன்ற பேர்ல நான் ஆம்பள வேஷம் போட்ட பொம்பளன்னு தெரிஞ்சி கூட கண்ட இடத்துலயும் வந்து தொட்டானுங்க. வாய்க்கு வந்ததலாம் பேசினானுங்க. நான் நடிச்சு முடிக்கிறதுக்குள்ளயே ஒருவழி ஆயிட்டன்”.

    ”ஆனா அதல்லாம் பொறுத்துக்கிட்டுதாண்டா நடிச்சன் அதுக்கப்பறமும்”.

    ”சரி ஊருல உன்ன எல்லாரும் எப்படி பாத்தாங்க”…

    ”எல்லாரும் என்ன ஒன்பது, அலி, உஸ்ன்னே கூப்பிட ஆரம்பிச்சாட்டானுங்க. நான் எவ்ளோ சொல்லிப்பாத்தன். ஆம்பளையா இருந்து பொம்பளையா நடிக்க வந்த என்னையே இப்படி விரட்டறாங்கன்னா, உண்மையாவே பொம்பளையா மாறவங்க கதி என்னன்னு யோசிச்சன். அதுல இருந்து இன்னைக்கி வரைக்கும் அவங்கள கையெடுத்து கும்பிட ஆரம்பிச்சிட்டண்டா”…

    ”எனக்கு எங்க ஊருல ஒரு பொண்ண ரொம்ப பிடிக்கும். அழகா இருப்பா அவ. அவ பின்னடியே திரிஞ்சன்… அவளும் சிரிப்பா, ஆனா பேச மாட்டா. ஒருநாள் அவ பின்னடியே போய் நின்னனா”…

    ”என்ன நின்னனா, சொல்லு சீக்கிரம்”

    அவ திரும்பன சமயம் பாத்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன கல்யாணம் கட்டிக்கிறிங்களான்னு கேட்டன். அவ்ளோதான். அவ விழுந்தடிச்சு சிரிச்சா என்ன பாத்து. ”என்னது காதலிக்கிறிங்களா, கல்யாணம் பண்ணிக்கணுமான்னு கேட்டா”

    ”ஆமாம்னு சொன்னன். அடுத்து அவ கேட்டா பாரு”.

    “உங்களால புள்ள பெத்து தரமுடியுமான்னு. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்ககூட நடந்து வந்தா நீங்க நடக்கற நடய பாத்து இந்த ஊரு என்ன சொல்லும். ஐயா சாமி நான் உங்கள பாத்து சிரிச்சது எல்லாம் உங்க நடையையும் குரலையும் கேலி பண்ணிதான். மூதேவிக்கு பாரு ஆசய கல்யாணம் கட்டிக்கணுமா நானு. போய் வேலயபாருன்னு” சொல்லி அனுப்பிட்டா…

    ”அப்பறம் எப்படி அம்மா மட்டும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிச்சு. அத நீ சொல்லவே இல்ல”…

    “காதல் ஆச காணாம போனதுல இருந்து கல்யாண ஆச வந்துச்சு. உங்க ஆயா எந்தெந்த ஊருலயோ போய் பொண்ணு பாத்துச்சு. அப்பன் ஆத்தாங்க ஒத்துக்கிட்டாலும் பொண்ணுங்க ஒத்துக்கல. வயசும் ஆயிருச்சு. ஒருத்தி கூட என்னக் கட்டிக்கில. வரவ எல்லாமும் என்னயும் சேத்து கிண்டல் பண்ணிட்டுதான் போனாளுங்க.

    ”அப்பறம் அம்மா மட்டும் எப்படிப்பா”

    “உங்க அம்மாவோட அப்பா ஒரு பெண் வேஷம் போடற கூத்தாடி. அந்த ஆளும் இறந்துபோயிட்டான். அநாதையா இருந்த உங்க அம்மா கிட்ட எங்க அம்மா பேச உங்க அம்மாவும் ஒத்துகிட்டா. அதனால இன்னைக்கு என்கூட அவ. எங்களுக்கு நீ.

    ”சரி அம்மா கூட உன்கூட எங்க போனாலும் கூடவே நடக்க மாட்டுது. உன்ன முன்ன போவவிட்டுட்டுப் பின்னதான் நடந்து வருது. அவங்க அப்பாவும் அப்படித்தான. அப்பறம் என்ன?”

    “நானும் அததாண்டா நினைச்சன். ஆனா இவ சொன்னா பாரு… ”பொம்பள வேஷம் போடற கூத்தாடிக்கு மட்டும் வாக்கப்பட்டுற கூடாதுன்னு என் வாழ்நாள்ல நினைச்சன். ஆனா என் விதி எங்க அப்பன் செத்து இவன கொண்டு வந்து விட்டுருச்சுன்னு இன்னைக்கும் திட்டிக்கிட்டு இருப்பாடா”. உனக்கு இதல்லாம் சொன்னா புரியாதுடா. சரி பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகலயா. நீ கிளம்பு முன்னடி போ. நான் பின்னடியே வந்து உங்க வாத்தியாரப் பாக்கணும்.

    ”அப்பா ஒன்னு சொல்லவா”?

    ”என்னடா”?

    ”நீ பள்ளிக்கூடம் பக்கம் மட்டும் வந்துராத. அம்மாவ நான் வரச்சொல்லிட்டன். பசங்கலாம் என்ன வெறுப்பேத்துறாங்க.. ஒன்பது பையன் ஒன்பது பையன்னு…

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளமாறன்) தற்போது காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இலக்கணம், இலக்கியம், பதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல நிகழ்த்தி நூல்கள் பல வெளியிட்டுள்ளார்.

    தமிழ் இலக்கண உரை வரலாறு : யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு , தொல்காப்பியம் – பன்முக வாசிப்பு , ஏழாம் இலக்கணம், அறியப்படாத தமிழ் உலகம், தமிழ் நூல் தொகுப்பு வரலாறு முதலான நூல்களை எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்னும் கவிதை நூலையும், கலியுகக்கிழவியும் ஓநாய்க்குட்டிகளும் என்னும் மொழிபெயர்ப்பு நாவலையும் 2018 இல் வெளியிட்டுள்ளார்.

    மொழி நிறுவனத்தின் வழியாக வெளியிடப்பெற்ற தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி வெளியீட்டுப் பணியிலும் ஆய்வாளராகச் செயல்பட்டுள்ளார். மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இதழ்களிலும் கருத்தரங்கங்களிலும் வெளியிட்டுள்ளார். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வழி சுவிட்சர்லாந்து சென்று அங்கு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்துள்ளார்.

    பொதிகைத் தொலைக்காட்சியில் ஓராண்டு கடந்து போய்க்கொண்டிருக்கும் தமிழின் பெருமையையும் சிறப்பையும் பறைசாற்றி வரும் “ழகரம்” என்னும் நேரலை நிகழ்வின் வல்லுநராகவும், நெறியாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

    இவர் பெற்ற விருதுகள்:

    செம்மொழி நிறுவனம் வழியாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் இளம் ஆய்வறிஞர் விருது (1, 00,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2015)

    எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் – வளர்தமிழ் விருது (1,50,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2014)

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் – சிறந்த ஆய்வாளர்க்கான விருது ( 2013)

    Share
  • தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    தொல்காப்பியரின் பொருளிலக்கண உருவாக்க முறை

    தொல்காப்பியம் எழுதப்பட்டது எவ்விலக்கியங்களின் வரையறையை வைத்து என்று முழுமையாகக் கூறமுடியவில்லை என்றாலும் தொகுக்கப்படாத பல சங்க இலக்கியப் பாடல்களின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்று கூறமுடியும். தொகுக்கப்படாத சங்க இலக்கியப் பாடல்களின் முதல் ஆய்வாளராக இன்று அறியப்படுபவர் தொல்காப்பியரே. இவர் வாசகர் என்ற நிலையினைக் கடந்து சங்கப் பாடல்களைத் தொடக்கக் காலங்களில் மதிப்பிட்டறிந்த முதன்மை இலக்கணியாகவும் அறியப்படுகின்றார்.

    இவர் காலத்தில் தனிநிலைச் செய்யுள் உருவாக்க முறையே அதிகம், தொடர் நிலைச் செய்யுள் பாடல் உருவாக்கமுறை என்பது குறைவு. எனவே இவரது பொருளதிகார இலக்கணமும் தனிநிலைச் செய்யுளை முதன்மைப்படுத்திப் பெரிதும் வரையறுக்கப்பட்டது என்று கூறமுடியும்.

    தொல்காப்பியப் புறத்திணையியல்

    சங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல்கள் எண்ணிக்கை அதிகளவு இருப்பதுபோல் தொல்காப்பியத்தில் அதற்கேற்ப இயல் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது. புறப்பாடல் எண்ணிக்கை குறைவு என்பதால் அதற்கேற்பப் புறத்திணையியல் மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒவ்வோர் இயலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகின்றார்.

    குறிப்பாக அகத்தையும், புறத்தையும் தனித்துப் பிரித்து அவர் பார்க்கவில்லை. இரண்டையும் பொருளிலக்கணம் என்ற ஒரே இணையில் ஒன்றுக்கொன்று தொடர் புடையதாக வலுவாகக் கருதுகிறார்.

          ”அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்,
          புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்…” (புறத்திணையியல்  -நூ. 1)

    இத்தொடர்பு இன்னும் வலுவாக இயங்குவதை இளம்பூரணர் தன்னுடைய அகத்திணையியல் அறிமுக உரையில் விரிவாக விளக்குகிறார். மேலும் ஒருபடி சென்று, அகத்திணை யியலுக்குப் பிறகு அதனோடு தொடர்புடைய களவியல் கற்பியல்தானே வரவேண்டும் ஏன் புறத்திணையியலை வைத்தார் என்ற கேள்வியெழுப்பும் மாணவனுக்குப் பதிலாக,

    இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்னும் மாட்டேறு பெறாதாம். அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க ( களவியல் முகப்பு).

    தொல்காப்பியர் வகுக்கும் புறத்திணைகள்

    தொல்காப்பியர் புறத்திணையியலை அமைத்துள்ள முறை குறித்து,

    தொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்தில் (களவியல், கற்பியல்) நிகழ்ச்சி முறையாக இலக்கணத்தைக் கூறிச் செல்லாமல் கூற்றுகளுக்கே முதன்மை கொடுத்து இலக்கணம் இயம்பியுள்ளார். ஆனால் புறத்திணையியலில் திணை வாரியாக இலக்கணத்தைத் தொகுத்துத் துறைகளாக அமைத்துள்ளார். இது தொல்காப்பிய அமைப்பின் முக்கியப் பகுதியாகும்.( தமிழ் இலக்கண மரபுகள், ப. 175)

    என்னும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது. தொல்காப்பியர் அகத்திணைகளை ஏழு என்று வரையறை செய்வது போன்று புறத்திணைகளையும் ஏழு என்றே வரையறை செய்கின்றார்.

    வெட்சி     –  நிரை கவர்தல், நிரை மீட்டல்

    வஞ்சி      –  மாற்றாரை நோக்கிப் பகைமேற் செல்வது

    உழிஞை   –  பகைவர் கோட்டையை முற்றுகை இடுவது

    தும்பை    –  இருவர்க்கிடையிலான போர்

    வாகை     –  முதலில் போர் வெற்றி, பின்னர் ஒருவர் தம் திறன்களால் வாழ்விலுறும் வெற்றியைக் கொண்டாடுவது

    காஞ்சி     – முதலில் போரின் துயரங்களையும் பின்னர் வாழ்வின்              நிலையாமையைக் கூறுவது.

    பாடாண் – முதலில் வெற்றிப்புகழ், பின்னர் குறிக்கோள் வாய்ந்த மனிதன், அவன் வாழ்க்கை ஆகியவற்றைப் பாடுவது.

    இவ்வாறு வரையறை செய்வதோடு மட்டுமல்லாமல் அவை இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்றார்.

    வெட்சி தானே குறிஞ்சியது புறனே, (புறத்திணையியல்  -நூ. 1)

    வஞ்சி தானே முல்லையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 6)

    உழிஞை தானே மருதத்துப் புறனே, ( புறத்திணையியல்  -நூ. 8)

    தும்பை தானே நெய்தலது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 12)

    வாகை தானே பாலையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 15)

    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே,( புறத்திணையியல்  -நூ. 18)
    பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே ( புறத்திணையியல்  -நூ. 20).

    ஆனால் இத்தொடர்பு எவ்வகையில் எல்லாம் அமைந்தது என்று எந்த விதமான விளக்கமும் தொல்காப்பியரால் வழங்கப்படவில்லை. உரையாசிரியர்களே இதற்கான விளக்கத்தை அளிக்கின்றனர்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறனாம். (புறத்திணையியல், நூ. 1, இளம்பூரணர் உரை)

    களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுங் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். (புறத்திணையியல், நூ. 1, நச்சினார்க்கினியர்உரை)

    இவ்விணைவில் இறுதியாக இருக்கக்கூடிய காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் சிக்கல்களைத் தமிழண்ணல்:

    உரையாசிரியர்கள் காஞ்சித்திணை என்பது பெருந்திணையின் புறமென்றும், பாடாண் கைக்கிளையின் புறமென்றும் இலக்கணம் கூறுவதை விளக்குகின்றனர். எனினும் தொல்காப்பியரும் அவர்க்கு முற்பட்டோரும் இவ்விரு அகத்திணைகளைப் புறத்திணையியலில் இறுதியாக அமைந்த இருதிணைகளோடு ஏன் இணைத்தனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. அகத்திணைகள் ஏழாக வகுத்தபின் புறத்திணைகளையும் ஏழாக வகுக்க முயன்றிருக்க வேண்டும். இவ்வகத்திணைகளும் புறத்திணைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்வன என அவர்கள் கருதியிருக்கின்றனர். எனவே இயற்கைக் காரணங்களின்றிச் செயற்கைக் காரணங்களும் இவற்றை இணைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். (சங்க மரபு – 135)

    இவ்வாறு உரையாசிரியர்கள் சொல்கின்ற காரணங்களைத் தமிழண்ணல்,

    உரையாசிரியர்கள் அகத்திற்கும் புறத்திற்குமான தொடர்பு குறித்து இசையத்தக்க விளக்கங்களைத் தர முயன்றுள்ளனர். அவர்கள் விளக்கங்களிற் சில பொருந்துவன; சில செயற்கையும் கற்பனையும் உடையன.  (சங்க மரபு – 133)

    இந்தக் காரணங்களில் கற்பனை இருந்தாலும் தொல்காப்பியர் உருவாக்கிய இணைவு என்பது பொருளதிகாரம் என்ற அவரின் இலக்கண உருவாக்க முறைக்கு நியாயம் சேர்ப்பதாகவே உள்ளது. (இன்றைய நவீன இலக்கிய விமர்சகர்களும் பெண்ணியச் சிந்தனையாளர்களும் இவ்விணைவின் விளக்கத்தை வேறொரு நிலையில் அளிக்கின்றனர்.)

          தொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப தனித்தனித் இலக்கணங்களாக உருவாக்கம் பெறத் தொடங்கின, அல்லது நெகிழத் தொடங்கின. இந்த மரபு மாற்றம் எல்லா நிலையிலும் நிகழத் தொடங்கியது. தனி அகப்பொருள் இலக்கண நூல்கள், யாப்பிலக்கண நூல்கள் என்ற வரிசையில் புறப்பொருளுக்கென்றும் இலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின.

    இத் தனிநூல் உருவாக்க முறைகள் பெரிதும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியும் சமகால இலக்கிய உருவாக்கத்திற்கேற்பவும் அமைந்தன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற தனிநூல்களில் புறத்திணையியல் சார்ந்து அமைந்தவை பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையுமே ஆகும்.

    பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை

    பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு நூல்களில் பன்னிருபடலம் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைக்கக்கூடிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை மட்டுமே. புறப்பொருள் வெண்பாமாலை நூல் உருவாக்க முறையில் பன்னிருபடலத்தைப் பின்பற்றியுள்ளது என்பதைப் பல சான்றுகளின் வழி அறியமுடிகிறது. அதே சமயம் பல இடங்களில் விலகியும் இருப்பதோடு தொல்காப்பியத்தையும் பல நிலைகளில் முதல் நூலாக இந்நூல் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. பன்னிருபடலத்தில் அகப்புறம் என்று சொல்லப்பட்டவற்றைப் புறப்பொருள் வெண்பாமாலை அவ்வாறே பின்பற்றாமல் அதை வேறு நிலையில் அணுகுகிறது.

    தொல்காப்பியத்திலிருந்து இந்நூல்கள் மாறிய தன்மை:

    • தொல்காப்பியர் வகுத்தளித்த பொருளிலக்கண மரபிலிருந்து புறத்திணையியலைப் பிரிப்பது.
    • அகத்தோடு அவற்றைத் தொடர்புபடுத்தாதது.
    • ஏழு என்ற எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்று விரிப்பது முதலானவை இந்நூல்களில் நிகழ்ந்த மாற்றங்களாகும்.

    தொல்காப்பியர் வகுத்தளித்த ஏழோடு புதியதாகச் சேர்ந்தவை ஐந்து

    கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

    தொல்காப்பியப் புறத்திணையியலிலேயே இருந்தவை இரண்டு

          கரந்தை – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று), (நிரை மீட்டல்)

          நொச்சி – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று),

    கோட்டையைக் காத்தல் என்னும் தனித்துறையாகத் தோற்றம் பெறல்

    தொல்காப்பியரின் வேறொரு திணையிலிருந்து இடம்பெயர்ந்தவை

    கைக்கிளை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

    பெருந்திணை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

    கைக்கிளையும் பெருந்திணையும் இவ்வாறு புறத்திணையியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்துத் தமிழண்ணல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

    ஐந்து திணைகளில் இயற்பெயர்கள் இடம்பெறக்கூடா என்பது தொல்காப்பியர் வகுத்த விதியாகும். இது கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் விரிவுபடுத்தப் பெற்றது. கைக்கிளை பெருந்திணையில் இயற்பெயர்கள் இடம்பெறுமாயின் அவை அகத்திணை வகுப்புள் இடம்பெறா. எனவே பிற்கால வளர்ச்சியை அவர்கள் கருத்திற் கொண்டு, அவர்கள் இவ்விரண்டையும் புறத்திணையின் இறுதியிற் சேர்த்தனர். (சங்க மரபு – 149)

    தொல்காப்பியரின் பலதுறைகளில் இருந்து சேர்த்து உருவாக்கப்பட்டது

    பொதுவியல்  – புதியதாகச் சேர்க்கப்பட்ட திணை. தொல்காப்பியத்தின் வெட்சி, காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது துறைகள் இப்புதுத் திணைக்குரியனவாகச் சேர்க்கப்பெற்றன.

    பொருள்வகையில் மாற்றம் பெற்றவை, வேறோர் இலக்கணம் பெறல்     

    காஞ்சி –  தொல்காப்பியத் திணையில் நிலையாமை குறித்துப் பேசிய காஞ்சி பிற்கால இலக்கண நூல்களில் வஞ்சியின் இன்னொரு பிரிவாக மாற்றம் பெற்று எதிரூன்றல் காஞ்சி என அமைந்தது.

    இந்நூல்களில் ஒவ்வொரு திணைக்கும் இடையே ஓர் இணை உருவாக்கப்பட்டது.

    வெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி

    இவ்வாறு இணை உருவாக்கப்பட்டதோடு ஒவ்வொரு திணைக்கும் இடையே ஒரு தொடர்ச்சியும் உருவாக்கப்பட்டது.

    சில ஆய்வாளர்கள் தொல்காப்பியத் திணைகளையும் இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொண்டனர். இந்தக் கருத்து தொல்காப்பியப் புறத்திணையியலைப் பொறுத்தவரை தவறான கருத்து என்றும் அவ்வாறு கட்டமைப்பது திணைச் செய்யுளுக்கு எதிரானது என்றும் தமிழண்ணல் கூறுகிறார்.

    புறத்திணைகள் ஒன்றற்கொன்று உறவுடையன அல்ல; தலைவன் தலைவியின் காதல் தொடர்பில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை அகத்திணைகள் குறிப்பது போலவே புறத்திணைகளிலும் போரில் ஒரு வீர நிகழ்வைக் குறிக்கின்றன. ஒரு கதைத்தொடர்ச்சி போலவோ ஒழுங்கான நிகழ்ச்சிகளின் கோவையான ஒரு நாடகம் போலவோ செய்யுட்களை இயற்றுவது திணைச் செய்யுளின் மரபுக்கு அடிப்படையிலேயே மாறுபட்டதாகும். (சங்க மரபு, ப. 147)

    தொல்காப்பிய உரையாசிரியர்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவற்றைத் தனித்தனித் போர்களாகவே காட்டுவர். ஆனால் பிற்காலத்தில் இவை ஒரே போரின் நான்கு வேறுநிலைகளாகக் கருதப்பட்டு விட்டன. உண்மையில் இப்போர்கள் தமக்கெனக் குறித்த நோக்கையும் போரிடும் பாங்கையும் உடையன. (சங்க மரபு, ப. 143)

    இனக்குழுச் சமூகத்தில் வெவ்வேறு போர்முறைகளாக இருந்தவற்றைத் தொல்காப்பியர் வரிசைப்படுத்திய முறையிலிருந்து, அரண்மனையும் அரசமரபும் தோற்றம்பெற்ற காலத்தில் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் முயற்சியினைப் பிற்கால இலக்கண நூல்களான பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையும் மேற்கொண்டன. இவ்வித்தியாசத்தை அறியாத ஆய்வாளர் பலரும் தொல்காப்பியத்திலேயே போரின் தொடர்ச்சி இருப்பதாக விளக்கத் தொடங்கிவிட்டனர். இது தவறான பொருள் கோடல் முறையாகும் என்பதைத் தமிழண்ணலின் மேற்சொல்லப்பட்ட கூற்றுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

    பன்னிருபடலத்தைப் பின்பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை இத்திணைகளை மூன்றாகப் பகுக்கிறது: புறம், புறப்புறம், அகப்புறம்

    புறம்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை

          புறப்புறம்: வாகை, பாடாண், பொதுவியல்

    அகப்புறம்: கைக்கிளை, பெருந்திணை

    என்று வகைப்படுத்த அவிநயமோ ஒருசார் கூற்றாக அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை என்று வரையறை சொல்கிறது. இவ்விரண்டைத் தொடர்ந்து வீரசோழியம் வகைப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது.

    புறப்பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் போல பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருந்த போதிலும் புறத்திணை இலக்கணம் சொல்லிய முறையில் பிற்கால மரபுகளையே பின்பற்றுகிறது. புறமும், புறப்புறமும் புறப்பொருள் வெண்பா மாலையை அப்படியே பின்பற்றியிருந்த போதிலும் அகப்புறத்திணையில் மட்டும் மாறுபடுகிறது. இது பன்னிருபடலத்தைப் பின்பற்றுகிறது.

    வீரசோழியத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை ஆகியவற்றிற்கே துறைகள் கூறப்பட்டுள்ளன. நொச்சி, தும்பை ஆகியவற்றிற்குத் துறைவிளக்கம் இல்லை. துறைகளும் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள அளவுக்கு இல்லாமல் குறைவாகவே உள்ளன. விளக்கம் உரையிலேயே உள்ளது. (தமிழ் இலக்கண மரபுகள் – ப.171)

    இவற்றிலிருந்து தொல்காப்பியரின் புறத்திணை இலக்கணம் பிற்காலங்களில் எவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்தது என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    தொல்காப்பிய உரையாசிரியர்கள்

    இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணர் உரையும், நச்சினார்க்கினியர் உரையும் கிடைக்கின்றன.

    இவ்விருவரும் ஏழு புறத்திணைகள் பன்னிரெண்டு திணைகளாக வளர்ச்சி பெற்ற காலத்திலும், பல பகுப்புகளாக அவை மாறிய காலத்திலும், துறைகள் வளர்ந்தும் வீழ்ந்தும் முறைமாறிய தன்மையில் அமைந்த காலத்திலும் தமது உரைகளை எழுதுகின்றனர். இதே தன்மையைச் செய்யுளியல் உரை எழுதும் போதும் காணமுடிகிறது.

    • பலநிலைகளில் புறப்பொருள் மரபு மாற்றமடைந்த காலத்தில் உரை எழுதும் இவ்வுரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமது உரையை வகுக்கின்றனரா? அல்லது பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனரா?
    • பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கின்றனரா? அல்லது மறுக்கின்றனரா?
    • இளம்பூரணருக்கும் நச்சினார்க்கினியருக்கும் புறத்திணையியலை விளக்குவதில் மாறுபாடு உள்ளதா? இல்லையா?

    என்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்கும்போது சிலவற்றை நாம் கண்டறிய முடிகின்றது.

    இளம்பூரணரும் புறத்திணையியலும்

    இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு உரைஎழுதும் போது தொல்காப்பியரின் இலக்கண உருவாக்க முறைக்குப் பல நிலைகளில் வலுசேர்க்கிறார். அவரின் பின்வரும் விளக்கங்கள் அதற்குச் சான்று:

    பொருளதிகார அறிமுக உரையில், புறப்பொருளை உரிப்பொருள் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழுப்பி அதற்கு,

    புறமாவது, நிரை கோடற் பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும் வென்றி வகையும் நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்,

          வெட்சி தானே குறிஞ்சியது புறனே

    எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின் அவையும் உரிப்பொருள் ஆம் என்க (அகத்திணையியல் அறிமுகம்).

    என்று விளக்கமளிக்கின்றார்.

    தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வகையில் பயனுடையது என்பதை விளக்க வந்த இளம்பூரணர் அவ்விலக்கணம் உறுதிப்பொருட்கள் நான்கையும் விளக்குகிறது என்று கூறுகிறார்.

    அஃதற்றாக அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினும் அடங்கும் என்னை? வாகைத்திணையுள்,

    ”அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (புறத்.16)என இல்லறத்திற்கு உரியவும்,

    ”காமம் சான்ற கடைக்கோட் காலை” (கற்பு. 51)என நான்கு வருணத்தார் இயல்பும்,

          ”நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்‘’ (புறத். 17) எனவும்,

          ”காமம் நீத்த பாலினானும்’‘ (புறத்.17)

    எனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள் இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒருசாரனவும் காஞ்சிப் படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின் பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம். அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.

    இதே பகுதியை நச்சினார்க்கினியரின் பின்வரும் விளக்கமும் உறுதிசெய்கிறது.

    அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. ( அகத்திணையியல் நூ. 1)

    வெட்சி முதலா வாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார். இந்நிலையாமையானும் பிறவாற் றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று.( அகத்திணையியல் நூ. 1)

    இவ்விருவரும் தம் உரை வழி தொல்காப்பியப் பொருளதிகார உருவாக்கம் ஒரு பயனுடைய இலக்கணம் என்று கூறுகின்றனர். அதில் புறத்திணையியலே மூன்று உறுதிப் பொருள்களையும் விளக்கும் இலக்கணம் என்பதை இவர்கள் தம் உரைகளின் வழி உறுதிப்படுத்துகின்றனர்.

    இளம்பூரணர் புறத்திணையியலில் தொல்காப்பியரின் இலக்கண வரையறைப்படி ஏழு என்பதைக் கூறியிருந்த போதிலும் வெட்சியையும் உழிஞையையும் பிற்கால மரபுப்படி இரண்டிரண்டாகப் பிரிக்கிறார்.

    அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க அவை:-

    மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும்.

    காடுறையுலகாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும்.

    புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும்.

    பெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோம்திறப்பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும். (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை )

    இவ்விளக்கத்தில் வஞ்சி, காஞ்சியை அவர் இணையாகப் பார்க்கவில்லை, வெட்சி, கரந்தை, உழிஞை, நொச்சி என அவர் இரண்டு கூறாகப் பகுத்தாலும் அவை குறிஞ்சி, மருதம் என்ற ஒரே திணைக்கண் நிகழ்வதால் அவற்றையும் அதனுள் அடக்க முடியும் என்று கூறுகிறார். இவரைப் பொறுத்தவரை திணை ஏழு என்பதில் உறுதியாக நிற்கிறார்.

    இதனை மேலும் வலியுறுத்தும் விதமாகப் பன்னிரண்டு என்று பிற்காலத்தார் திணை கூறுவதை மறுக்கிறார்.

    புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண் டாகில்,

    ‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்” (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி

          “மிகைபடக் கூறல்”:

    தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்” (மரபு. 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாதலானும், பொதுவியல் என்பது,

          ”பல் அமர் செய்து படையுள் தப்பிய
    நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
    திறப்பட மொழிந்து தெரிய விரித்து
    முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே’‘ எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற் கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க. (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை)

    பன்னிருபடலத்தை எழுதியவர்களுள் தொல்காப்பியர் ஒருவர் என்னும்  கருத்தை இளம்பூரணர் மறுக்கிறார். இதனை,

    பன்னிருபடலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இரு வகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால் அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது.

    என்று கூறி,

    ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – மரபு, 100

    சிதைவெனப் படுபவை வசையற நாடின் – மரபு, 110

    என்ற நூற்பாக்களை எடுத்துக்காட்டி,

    எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (புறத்திணையியல் நூ. 2, இளம்பூரணர் உரை)

    என்ற விளக்கத்தின் வழி அறியலாம். இவ்விளக்கத்தை நச்சினார்க்கினியர் எங்கும் தம் உரையில் முன்வைக்கவில்லை.

    ”தும்பை தானே நெய்தலது புறனே” எனத் தொடங்கும் புறத்திணையியல் நூற்பா உரையில் இதனானே எதிரூன்றல் காஞ்சி ( பிங்க. அநுபோக :1474) என்பாரை மறுத்தவாறு அறிக. (புறத்திணையியல் நூ. 12, இளம்பூரணர் உரை ).

    என்று இளம்பூரணர் மேலும் தம் மறுப்பை வலியுறுத்துகிறார்.

    நச்சினார்க்கினியரும் புறத்திணையியலும்

    இளம்பூரணர் போலவே நச்சினார்க்கினியரும் தம் விவாதங்களைப் புறத்திணையியல் உரையில் நிகழ்த்துகிறார்.

    நூற்பா வைப்புமுறை

    ”தும்பைதானே நெய்தலது புறனே” என்னும் நூற்பாவை எஞ்சா மண்ணசை எனவரும் வஞ்சித்திணை நூற்பாவிற்கும், உழிஞைதானே என்னும் உழிஞைத்திணை நூற்பாவிற்கும் அடுத்து வைத்த காரணத்தை,

    இதுவும் மைந்து பொருளாகப் ( புறத் – 15) பொருளாதலின், மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும், மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார். (புறத்திணையியல் நூ. 14, நச். உரை ).

    ”காஞ்சிதானே பெருந்திணைப் புறனே” என்னும் நூற்பா வைப்புமுறையை,

    இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது என்கின்றது. இதனை வாகைக்குப்பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (புறத்திணையியல் நூ. 22, நச். உரை). என்று விளக்கம் தருகின்றார்.

    துறை என்பதற்கான சிறப்பு விளக்கம்

    நச்சினார்க்கினியர் துறை என்பதற்கு சிறப்பு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். இவ்விளக்கம் குறிப்பிடத்தக்க விளக்கமாக அமைகின்றது.

    மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறை போலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகும் மார்க்கமாதலிற் துறையென்றார்:

    அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார்.

    புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார்.

    இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுள் பலபொருள் விராய் வரினும், ஒரு துறையாயினாற்போலப், புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறை யாதலும், ஒரு செய்யுள் பலதுறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.(புறத்திணையியல் நூ. 1, நச். உரை ).

    என்று விளக்கமளித்துச் செல்கின்றார்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறன் என்பதன் சிறப்பு விளக்கம்

    நச்சினார்க்கினியர் வெட்சித்திணை குறிஞ்சித்திணைக்குப் புறனாக எவ்வாறு அமைகின்றது என்று விளக்கமளிக்கின்றார்.

    வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை ஏழற்குங் களவு நிகழுங்கொலென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

    நச்சினார்க்கினியர் பிற்கால மரபுகளை மறுத்துக்கூறும் இடங்கள்

    நச்சினார்க்கினியர் பிற்கால மரபுப்படி திணைவகை பன்னிரண்டு என்பதை மறுக்கின்றார். இம்மறுப்பிற்குச் சிறந்ததோர் பழமொழியையும் காட்டுகின்றார்.

    பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள வென்றாவாறாயிற்று. எனவே இப் பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. அகப் புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று ( அகத்திணையியல் நூ. 1)

    ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னை யெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாய வாறுபோல, அகத்திணை யேழற்குப் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைத்தாயிற்று.எனவே அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமை யாதவாறாயிற்று. ( அகத்திணையியல் நூ. 1)

     இளம்பூரணர் கரந்தை என்று சொல்வதை மறுத்தல்

    இளம்பூரணர் புறத்திணையியலில் வரக்கூடிய வெட்சித்திணைக்குத் துறையாகக் கூறிய இரண்டு நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாவை (வெறியறி சிறப்பின் ) கரந்தை என்று கூற நச்சினார்க்கினியரோ அதை எல்லாத் திணைகளுக்கும் உரிய வழுவமைதி என்று கூறி மறுக்கிறார்.

    கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின் வேறு திணையாகாது.

    இருவர்க்குங் கோடல் தொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

    என்று கூறுவதன் மூலம் நச்சினார்க்கினியர் வெட்சித் திணையின் முதல் துறைசார் (படையியங்கு அரவம்) நூற்பாவையே நிரை கோடலுக்கும் நிரை மீட்டலுக்கும் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சித்திணை மறுப்பு

    நச்சினார்க்கினியர் காஞ்சித்திணை என்பது நிலையாமையை பற்றியே கூறுவது. எனவே அது வஞ்சியின் இணையாக மாறாது என்று கூறுகின்றார். இதேபோல் புறப்புறம் என்னும் பிற்கால வகைப்பாட்டையும் மறுகின்றார்.

    ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின் காஞ்சியென்பது நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மையாற் கூறலாகாமை உணர்க (புறத்திணையியல் நூ. 7, நச். உரை ).

    புறப்புறம் மறுப்பு

    கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய், ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு (பெருந்திணைக்கு) இது (காஞ்சி) புறனாவதன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (புறத்திணையியல் நூ. 22, நச். உரை ).

    துறைகள் பிற்கால இலக்கண நூல்களில் விரிவதை மறுத்தல்

    திணைகளைத் தொடர்ந்து துறைகள் பிற்காலங்களில் பலநிலைகளில் விரிவதையும் மறுக்கின்றார்.

    இத்திணைக்கும் (வஞ்சி) பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங் கொள்க. அவை – கொற்றவை நிலையும், குடைநாட்கோலும், வாணாட்கோலும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். (புறத்திணையியல் நூ. 8, நச். உரை ).

    இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் தமிழ் கூறு நல்லுலகத்தன அல்லனவென மறுக்க. இனி முரசுவுழிஞை வேண்டுவாருளர் எனின் முரசவஞ்சியும் கோடல் வேண்டுமென மறுக்க. இனி ஆரெயிலுழிஞை முதலரணம் என்றதன்கண் அடங்கும் (புறத்திணை யியல் நூ. 22, நச். உரை ).

    இது போன்று பல இடங்களில், பிற்கால நூல்களில் குறிப்பாகப் புறப்பொருள் வெண்பா மாலையில் விரித்துக் கூறப்பட்ட துறைகளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் துறைகளுக்குள் அடக்கி அவற்றை மறுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிறைவாக

    • இளம்பூரணரின் விளக்கங்கள் வழியாக அவர் தொல்காப்பியப் புறத்திணை யியலைத் தம்சமகால வாசிப்பிற்கேற்றவாறு எளிமைப்படுத்துவதோடு பிற்கால இலக்கணக் கொள்கைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்பதை அறியமுடிகிறது.
    • நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் காலத்திற்கே சென்று தம் உரையை வகுக்க முற்பட்டிருப்பதோடு (அல்லது முற்படுவதாக அவர் நினைத்தல்) இளம்பூரணரைக் காட்டிலும் பல இடங்களில் விரிவான விளக்கங்களை அதிகம் தருகின்றார். மறுப்புரை வழங்குமிடங்களில் பிற்கால இலக்கண நூல்களின் கோட்பாடுகளை மறுப்பதோடு தொல்காப்பியரின் இலக்கண நூலாக்கத்திற்கு அவை எந்த விதத்திலும் இடையூறாக இல்லாதவாறு தமது உரையை வகுத்துச் சென்றுள்ளார்.
    • தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரை எழுத வந்த இவ்வுரையாசிரியர்கள் அதற்கு மட்டும் உரிய பொருளை எழுதாமல் பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனர். பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கவில்லை, அவற்றைத் தொல்காப்பியத்திலிருந்து விலக்கி மறுக்கின்றனர்.
    • இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலை விளக்குவதில் சிறிதளவே மாறுபாடு கொள்கின்றனர். இவ்விரு உரையாசிரியருமே புறத்திணை யியலைப் பொறுத்தவரையில் தொல்காப்பியரின் சிந்தனை வழிப்பட்டே தமது உரையை வகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
    • இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கும் பிற்காலப் புறப்பொருள் மரபுகள் வளர்ச்சி பெற்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட திணை, துறைகள் குறித்துப் பல விவாதங்கள் உரையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
    • நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வழிப்பட்டே துறை வகுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதனை “தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாற் துறைகூற வேண்டுமென்றுணர்க.”( நச்சினார்க்கினியர் உரை, நூ.35) என்னும் கூற்றின் வழி அறியலாம்.
    • இதனாலேயே இளம்பூரணர், நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடல்களின் துறைகளுக்கும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள துறைகளுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    துணைநூற் பட்டியல்

    1. இந்திரா மனுவேல், செவ்வியல் ஆய்வுக்களங்கள், கிரேஸ் – வேதம் பதிப்பகம், திருச்சி, 2009
    2. சண்முகம், செ.வை., இலக்கண உருவாக்கம் – 1, (பல்லவ – பாண்டியர் காலம்) மணிவாசகர் பதிப்பகம், சென்னை,  மு.ப., 1994.
    3. சீனிவாசன், இரா., தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800 – 1400, இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், சென்னை, மு.ப., 2000.
    4. தமிழண்ணல், சங்க மரபு ( தமிழாக்கம், கு.வெ. பாலசுப்பிரமணியன்), சிந்தாமணிப் பதிப்பகம், மதுரை, 2009.
    5. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு, சென்னை, 1969.
    6. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் முன்னைந்தியல்களும், நச்சினார்க்கினியர் உரையும் (முதல் பாகம்), கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.

    *****

    கட்டுரையாளர்- துறைத்தலைவர்,
    தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603203
    ilamarantamil@gmail.com
    9884277395, 9566197141

     

    Share