வாழ்த்தி வரவேற்கிறோம்!
பவள சங்கரி
நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளமாறன்) தற்போது காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இலக்கணம், இலக்கியம், பதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல நிகழ்த்தி நூல்கள் பல வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கண உரை வரலாறு : யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு , தொல்காப்பியம் – பன்முக வாசிப்பு , ஏழாம் இலக்கணம், அறியப்படாத தமிழ் உலகம், தமிழ் நூல் தொகுப்பு வரலாறு முதலான நூல்களை எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்னும் கவிதை நூலையும், கலியுகக்கிழவியும் ஓநாய்க்குட்டிகளும் என்னும் மொழிபெயர்ப்பு நாவலையும் 2018 இல் வெளியிட்டுள்ளார்.
மொழி நிறுவனத்தின் வழியாக வெளியிடப்பெற்ற தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி வெளியீட்டுப் பணியிலும் ஆய்வாளராகச் செயல்பட்டுள்ளார். மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இதழ்களிலும் கருத்தரங்கங்களிலும் வெளியிட்டுள்ளார். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வழி சுவிட்சர்லாந்து சென்று அங்கு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்துள்ளார்.
பொதிகைத் தொலைக்காட்சியில் ஓராண்டு கடந்து போய்க்கொண்டிருக்கும் தமிழின் பெருமையையும் சிறப்பையும் பறைசாற்றி வரும் “ழகரம்” என்னும் நேரலை நிகழ்வின் வல்லுநராகவும், நெறியாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.
இவர் பெற்ற விருதுகள்:
செம்மொழி நிறுவனம் வழியாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் இளம் ஆய்வறிஞர் விருது (1, 00,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2015)
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் – வளர்தமிழ் விருது (1,50,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2014)
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் – சிறந்த ஆய்வாளர்க்கான விருது ( 2013)
வருக வருக, முனைவர் ஜெய் கணேஷ். உங்கள் பங்கேற்பு, உற்சாகம் அளிக்கிறது.
கல்விப்புலம் சார்ந்த அறிஞர்கள் பலர் வல்லமையில் இணைவது வரவேற்கத்தக்கது. தமிழ் இலக்கிய உலகில் வல்லமை புதிய தடங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.வாழ்த்துகள் ஜெய்கணேஷ் சார்.